பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில் பேரன்ட்ஸ் க்ளப்புக்காக எனது சில கருத்துக்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அக்கரையில் இருந்தபடி அக்கறையில் சொல்லும்...
அன்பு
ராமலக்ஷ்மி


-------------------------------------------------------------------------------------
உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான்.
ஆனால் அதுவே போட்டி என்ற பெய(போ)ரில் தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும் களமாக மாறிப் போக வேண்டுமா?


சமீபத்தில் கல்கத்தாவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பெண் அதன் நடுவர்களின்
கருத்துக்களால் அங்கேயே கண்ணீர் சிந்தி வருத்தத்துடன் வீடு திரும்பியவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பெற்றோரால் குற்றம் சாட்டப் பட்டு, பத்திரிகைகளில் பரபரப்பாக்கப் பட்டு பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆனார். பின்னர் ஏற்கனவே அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்ததால்தான் இத்தகைய மன உளைச்சல் ஏற்பட்டதென்றும் நிகழ்ச்சி நடுவர்கள் மேல் எந்தத் தவறுமில்லை எனவும் மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிரூபணமாகியதும் பலரும் அறிந்திருக்கக்கூடும். சேனல்,நிகழ்ச்சி, பெண்ணின் பெயர் எதுவும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.


பொதுவாகப் பார்த்தால் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் தோல்விகளை குழந்தைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வண்ணம் ஒரு ஸ்போர்டிவ் ஸ்ப்ரிட் இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் வெகு கவனமாக இருக்கிறார்கள். நமது காலத்தை விட இக்காலத்தில் அதைப் பல பள்ளிகள் ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளார்கள். ஐந்தாவது வகுப்பு வரை படிப்புக்கு கூட ரேங்கிங் சிஸ்டம் இருப்பதில்லை. அதுபோல ஒரு ஆண்டு விழா என்றால் குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவரவருக்கு ஏற்ற வேடங்களாகக் கொடுத்து அத்தனை பேரையும் மேடையேற்றி அழகு பார்க்கிறார்கள். இந்த மாதிரியான தளங்களையும் தாண்டி தனித் திறமை வாய்ந்த குழந்தைகளின் பெற்றோர் மேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளை நாடுவதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.


சில நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் தவறுகளை மென்மையாகச் சொல்கிறார்கள். சிலவற்றில் குழந்தைகள் சரிவரச் செய்யாமல் தடுமாறுகையில் அவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் மாறி மாறிக் காட்டி டென்ஷனை அதிகரிப்பார்கள். இது இரு சாராருக்கும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒரு பிரபல சேனலின் ஜூனியர் பாட்டுப் போட்டி முதல் கட்டத் தேர்வுச் சுற்றிலே தேர்வாகாத குழந்தைகள் தேம்பி அழுதபடி கீழிறங்க இந்தப் பக்கம் ஏங்கி அழுதபடி பெற்றோர். அவ்வளவு ஏன்? அதே சேனலில் பெரியவர்களுக்கான ஜோடி ஆட்டபாட்ட நிகழ்ச்சியில் கூட தன் மகள் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாது தாயார் நடந்து கொண்ட விதம் பலரும் அறிந்திருக்கக் கூடும்.


தோல்வியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தோற்று நின்றால் அதுவே "வெற்றிக்கு முதல் படி" எனச் சொல்லித் தேற்றி அரவணைக்கும் முதிர்ச்சி முதலில் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள் 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விடாமல். இந்தப் பக்குவமும் முதிர்ச்சியும் மிஸ்ஸிங் என்றால் இந்த நிகழ்ச்சிகளின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்.
ஒரு சென்சேஷனை உண்டு பண்ணுமாறு நிர்ப்பந்திக்கும் விளம்பரதாரர்களுக்காகவும் அவர்கள் மூலம் கிடைக்கிற வருமானத்துக்காகவும் சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது.


பி.கு: 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அளவுக்கு யாரும் இருப்பதில்லை என சிலர் சொல்லக் கூடும். விதி விலக்காய் இருக்கும் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படவே இப்பதிவு. மற்றொரு பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பமாக போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சுற்று பெற்றோரில் ஒருவர் க்ளூ கொடுக்க பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பதிலளிப்பார்கள். சில குழந்தைகள் தடுமாறி சரியான பதிலையும் கூடவே தங்கக் காசுகளையும் தவற விட்டு விட்டு குடும்பத்திடம் திரும்பி வருகையில் கடுகடு சிடுசிடுவென அவர்களை எதிர்கொள்ளும் தாய்மாரைக் காமிராக் கண்கள் கவரத் தவறியதில்லை. அவர்களுக்கு அவர்தம் வியாபாரம் முக்கியம் என்றால் நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல்

16 comments:

ஆஹா,

சூப்பர் மேட்டரைச் சொல்லியிருக்கீங்க.

ரியாலிட்டி ஷோ எனும் பெயரில்
அங்கே நடப்பது எல்லாம் பெரும் பயங்கரம்.

தங்களின் இந்தப் பதிவு இப்போதுள்ள சூழ்நிலைக்கு மிக மிக அவசியமானது.

இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தோல்விகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பெற்றோர்களுக்கே தோவிகளைத் தாங்கும் சக்தி இல்லை என்பதே வருத்தத்திற்குரிய விசயம்.

This comment has been removed by the author.

ராமலக்ஷ்மி said...
//தங்களின் இந்தப் பதிவு இப்போதுள்ள சூழ்நிலைக்கு மிக மிக அவசியமானது.//

நன்றி தென்றல்.

////இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

அவ்வ்வ்வெல்லாம் நாட் அக்ஸப்டட்.
அவ்வ்வ்வளவுக்கும் நீங்கதான் சொல்லப் போறீங்க. நல்லாவும் சொல்வீங்க.

////இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல் //

சரி...மொத கேள்வி

உங்களுக்கும் இராமலெஷ்மி அக்காவுக்கும் அப்படி என்ன பிரச்சனை? :)))

ராமலக்ஷ்மி மற்றும் விசயக்குமார் சொன்னது போலவே பல பெற்றோர்கள் அழுது பிள்ளைகளை பல்வீனப்படுத்துவது தான் நடக்கிறது... வெற்றியோ தோல்வியோ பங்களிப்பே சிறப்பு என்று பழக்குவதே நல்லது. மேலும் வெற்றி பெற்ற குழந்தையைப்பற்றி நெகட்டிவாக சொல்லிக்கொடுப்பதும் தவறு இல்லையா.. பெரும்பாலும் நீயும் ந்ல்லா செய்தே இருந்தாலும் அந்த குழந்தை இன்னும் நிறைய சாதகம் செய்திருப்பா போல ... என்று வெற்றிக்கு சரியான ஆள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொடுக்கவும் வேண்டும்..

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
////இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல் //

சரி...மொத கேள்வி

உங்களுக்கும் இராமலெஷ்மி அக்காவுக்கும் அப்படி என்ன பிரச்சனை? :)))////

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...:))!

எந்தப் பிரச்சனையும் இல்லை. பேரண்ட்ஸ் க்ளப்பில் மாற்றுக் கருத்துக்களுக்கு மிகத் தெளிவாக புதுகைத் தென்றல் பதிலளிப்பதை பல பதிவுகளில் கண்டதினால் அது ஒரு வேண்டுகோளாக வைக்கப் பட்டது. அவ்வளவுதான். உங்க மொத கேள்விக்கு மொதல்ல விடை சொல்லியாச்சு:). சரிதானா அப்துல்லா:))? அப்படியே மற்றவர்களுக்கும் சொல்லி விடுகிறேன்!

புதுகைத் தென்றல் said...
//தங்களின் இந்தப் பதிவு இப்போதுள்ள சூழ்நிலைக்கு மிக மிக அவசியமானது.//

உண்மைதான் தென்றல். பலகாலமாக என் மனதில் இருந்த இவ்விஷயத்தை பேரண்ட்ஸ் க்ளப்புக்கு நீங்கள் பதிவெழுத விடுத்த அழைப்புதான் வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

முத்துலெட்சுமி அவர்களே,
வெற்றியோ, தோல்வியோ பங்களிப்பே சிறப்பு
Golden Words

விசயக்குமார் said...
//தோல்விகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பெற்றோர்களுக்கே தோல்விகளைத் தாங்கும் சக்தி இல்லை என்பதே வருத்தத்திற்குரிய விசயம்.//

ஆமாம், மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் இது. இதை உணர்ந்து அப்படி இருக்கும் பெற்றோர் தங்களை மாற்றிக் கொண்டு குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டும். கருத்துக்கு மிக்க நன்றி விசயக்குமார்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//ராமலக்ஷ்மி மற்றும் விசயக்குமார் சொன்னது போலவே பல பெற்றோர்கள் அழுது பிள்ளைகளை பல்வீனப்படுத்துவது தான் நடக்கிறது... வெற்றியோ தோல்வியோ பங்களிப்பே சிறப்பு என்று பழக்குவதே நல்லது.//

ஆமாம் பங்களிப்பு...அதுவே பெரும் சிறப்பு. விசயக்குமார் சரியாகச் சொல்லிவிட்டார் முத்துலெட்சுமி,
//Golden Words// என.

இதே பதிவை 'வேண்டுவது தளமா இல்லை சோர்வைத் தரும் களமா' என்கிற தலைப்பில் எனது வலைப் பூவில் பதிந்த போது வந்த கருத்துக்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளுதல் பலருக்கும் உபயோகமாக இருக்கக் கூடும் எனக் கருதி அவற்றை இங்கு அளிக்கின்றேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//ராமலக்ஷ்மி மற்றும் விசயக்குமார் சொன்னது போலவே பல பெற்றோர்கள் அழுது பிள்ளைகளை பல்வீனப்படுத்துவது தான் நடக்கிறது... வெற்றியோ தோல்வியோ பங்களிப்பே சிறப்பு என்று பழக்குவதே நல்லது.//

ஆமாம் பங்களிப்பு...அதுவே பெரும் சிறப்பு. விசயக்குமார் சரியாகச் சொல்லிவிட்டார் முத்துலெட்சுமி, //Golden Words// என.

இதை உணர்த்தத்தான் இன்று அநேகமாக பல பள்ளிகளில்//"அத்தனை" பேரையும் மேடையேற்றி அழகு// பார்க்கும் நல்ல பழக்கம் இருந்து வருகிறது.

//மேலும் வெற்றி பெற்ற குழந்தையைப்பற்றி நெகட்டிவாக சொல்லிக்கொடுப்பதும் தவறு இல்லையா.. பெரும்பாலும் நீயும் ந்ல்லா செய்தே இருந்தாலும் அந்த குழந்தை இன்னும் நிறைய சாதகம் செய்திருப்பா போல ... என்று வெற்றிக்கு சரியான ஆள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொடுக்கவும் வேண்டும்..//

உண்மைதான். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி முத்துலெட்சுமி.


September 1, 2008 7:00 AM
------------------------------------------------------

Ramya Ramani said...
ராமலஷ்மி மேடம் நீங்க சொல்ற ஒவ்வொறு பாயிண்டோடவும் நான் ஒத்து போறேன்..

ரியாலிடி ஷோ மட்டுமல்லாது சில பெற்றோர் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்னோ, அவர்களின் திறமைகளோ.. ஒரு "Status Symbol" போல கருதுவது மாறினாலே..பிள்ளைகளின் இயல்பான திறமைகள் வெளிபடும்னு நான் நினைக்கிறேன்

\\தோற்று நின்றால் அதுவே "வெற்றிக்கு முதல் படி" எனச் சொல்லித் தேற்றி அரவணைக்கும் முதிர்ச்சி முதலில் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்
\\

Exactly :)

September 1, 2008 7:21 AM
-------------------------------------------------------


தமிழ் பிரியன் said...
பொதுவாக மக்களிடம் இருக்கும் தொலைக்காட்சியில் தோன்றும் பெருமைக்காக பெற்றோர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் தங்களது பிள்ளைகள் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மேடை பயத்தை போக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதற்காக இது போன்ற ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் நடக்கும் மக்களை முட்டாள்களாக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது சரியில்லை. இவைகளும் ஒரு மெகா சீரியல் போன்று ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகங்களே!

September 1, 2008 7:48 AM
---------------------------------------------------------


தமிழ் பிரியன் said...
ரியாலிட்டி ஷோ என்று நடத்தப்படும் அரட்டை அரங்கத்தின் பிராடுத்தனங்களை ஜெஸீலா அக்காவின் பதிவில் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.

September 1, 2008 7:49 AM
---------------------------------------------------------


தமிழன்... said...
நல்ல பதிவு...

September 1, 2008 7:54 AM
-----------------------------------------------------------


goma said...
WELL SAID RAMALASHMI

September 1, 2008 8:52 AM
----------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...

Ramya Ramani said...
//நீங்க சொல்ற ஒவ்வொறு பாயிண்டோடவும் நான் ஒத்து போறேன்..//

நன்றி ரம்யா.

//ரியாலிடி ஷோ மட்டுமல்லாது சில பெற்றோர் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்னோ, அவர்களின் திறமைகளோ.. ஒரு "Status Symbol" போல கருதுவது மாறினாலே..பிள்ளைகளின் இயல்பான திறமைகள் வெளிபடும்னு நான் நினைக்கிறேன்//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். Status symbol என்பதையும் தாண்டி எப்படி தங்கள் குழந்தைகளின் திறமைகளை வளர்க்கிறேன் என்கிற பெயரில் எப்போதும் அவர்களிடம் அதிருப்தி கண்டபடியே இருக்கிறார்கள் என்பதை ஆர்.செல்வக்குமார் அருமையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் தனது "ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கேட்டிங் கிளாஸ்ன்னு . . . " http://selvaspeaking.blogspot.com/2008/08/blog-post_30.html பதிவில்.

September 1, 2008 1:05 PM
-----------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
// குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மேடை பயத்தை போக்க வேண்டியது அவசியமான ஒன்று.//
அதை பள்ளிகள் பாங்குடன் செய்து வருகின்றன. நம் [சரி, சரி:)]எங்கள் காலத்தில் இருந்தது போலின்றி எல்லா குழந்தைகளையும் மேடையேற்றுகிறார்கள். நான் பள்ளியில் படித்த காலத்தில் நடனம் நாட்டியம் என்றும், கல்லூரி காலத்தில் கவியரங்குகளிலும் பேச்சுப் போட்டிகளிலும் பங்கு பெற்ற அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் மேடையேற சந்தர்ப்பங்களே வாய்க்கவில்லையே என வருந்திய நண்பர்களையும் அறிவேன். இப்போது அப்படி அல்ல. மேடை பயத்தைப் போக்குவதிலும், முத்துலெட்சுமி சொன்ன மாதிரி பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும் இன்று பல பள்ளிகள் அக்கறை காட்டி வருகிறார்கள்.

//அதற்காக இது போன்ற ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் நடக்கும் மக்களை முட்டாள்களாக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது சரியில்லை. இவைகளும் ஒரு மெகா சீரியல் போன்று ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகங்களே!//

உண்மைதான் பெரியவர்களுக்கான ஆட்ட பாட்ட நிகழ்ச்சியில் நடந்த கூத்துக்கள் அப்படித்தான் எண்ண வைத்தன. இங்குதான் நீங்கள் குறிப்பாக ஒன்றைக் கவனிக்க வேண்டும் தமிழ் பிரியன். அப்படியே ஒத்திகை நாடகமெனில் உண்மை போலக் காட்ட முயற்சிக்கும் இப்படியான நாடகங்களில் வளரும் குழந்தைகளை ஈடுபடுத்தினால் அவர்களிடம் என்ன மாதிரியான வேல்யூ சிஸ்டங்களை நாம் விதைக்க இயலும்? சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா?

September 1, 2008 1:18 PM
---------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
//ரியாலிட்டி ஷோ என்று நடத்தப்படும் அரட்டை அரங்கத்தின் பிராடுத்தனங்களை ஜெஸீலா அக்காவின் பதிவில் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.//

முடிந்தால் சுட்டி தரலாமே தமிழ் பிரியன்?

September 1, 2008 1:20 PM
------------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

தமிழன்... said...
//நல்ல பதிவு...//

கருத்துக்கு நன்றி தமிழன்.

September 1, 2008 1:20 PM
-----------------------------------------------------------
ராமலக்ஷ்மி said...

goma said...
//WELL SAID RAMALASHMI//

THANK YOU GOMA!

September 1, 2008 1:22 PM
-----------------------------------------------------------

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ராமலக்ஷ்மி,

மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
எனது ஆதங்கமும் இதே தான்.

முடிந்தால் இதே கட்டுரையை 'அவள் விகடன்', 'சினேகிதி', 'மங்கையர் மலர்' போன்ற இதழ்களுக்கும் அனுப்புங்கள்.

இந்த நல்ல கருத்துக்கள் அனைத்துப் பெற்றோரிடத்திலும் சென்றடைய வேண்டும் சகோதரி.

யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது !
அதற்காகத்தான் !

September 1, 2008 2:01 PM
--------------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...

எம்.ரிஷான் ஷெரீப் said....

//எனது ஆதங்கமும் இதே தான்.//

தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

//முடிந்தால் இதே கட்டுரையை 'அவள் விகடன்', 'சினேகிதி', 'மங்கையர் மலர்' போன்ற இதழ்களுக்கும் அனுப்புங்கள்.

இந்த நல்ல கருத்துக்கள் அனைத்துப் பெற்றோரிடத்திலும் சென்றடைய வேண்டும் சகோதரி.//

உண்மைதான் செய்யலாம். ஆனால் நமது வலைப்பூவில் வலையேற்றியவற்றைப் பத்திரிகைகளுக்குக் கொடுக்கலாமா எனத் தெரியவில்லையே.

//யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது !
அதற்காகத்தான் ! //

அதற்காகவே முயற்சிக்கிறேன். நன்றி ரிஷான்.

September 1, 2008 6:16 PM
---------------------------------------------------------

தமிழ் பிரியன் said...
என்னது பெண்ணீயத்தின் குரலாக தமிழ் மணத்தில் ஓங்கி ஒலித்து வந்த ஜெஸீல்லாக்காவின் பதிவு தெரியாதா ...... ஓஓஓஓஓஓ

http://jazeela.blogspot.com/

September 1, 2008 6:29 PM
---------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் said...
//என்னது பெண்ணீயத்தின் குரலாக தமிழ் மணத்தில் ஓங்கி ஒலித்து வந்த ஜெஸீல்லாக்காவின் பதிவு தெரியாதா ...... ஓஓஓஓஓஓ//

தெரியாதே..ஏஏஏ தமிழ் பிரியன். தமிழ் மணத்துக்குள் நான் நுழைந்து சரியாக மூன்றே ஏஏஏ மாதங்கள்தான் ஆகிறது. நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று பார்க்கையில் அவர் இந்தக் காலக் கட்டத்தில் (கடந்த 24 ஆகஸ்ட் தவிர்த்து) எந்தப் பதிவும் எழுதியிருக்கவில்லை. ஆகையால்தான் எனக்குத் தெரிய வாய்ப்பின்றி போயிற்று. சரி தெரியாதவற்றிற்கு தகவல் தர நீங்களெல்லாம்தான் இருக்கிறீர்களே:)!

சுட்டிக்கு நன்றி!

September 1, 2008 7:04 PM
-------------------------------------------------------

வருண் said...
நான் குழந்தைகளைவிட மோசம்.

போட்டிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க.

தோல்வி பிடிக்காது என்பது மட்டுமல்ல, வெற்றியை ரசிக்கவும் தெரியாது.

அதுவும் என்னுடன் சீரியஸா போட்டிபோட்டு (கேரம் போர்டில்) தோல்வியடைந்தவர்களை பார்த்தால் கஷ்டமா இருக்கும். அந்த மாதிரி சூழ்நிலையில் ஏதாவது காரணம் சொல்லி இடையிலேயே ஓடிவிடுவேன்.

இந்த மனநிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சாதிக்க முடியாது என்பதில்லைங்க!

September 1, 2008 7:18 PM
-------------------------------------------------------


கிரி said...
//யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது //

சரியாக கூறினீர்கள். தங்கள் குழந்தைகள் தொலைக்காட்சியில் வர வேண்டும் என் நினைப்பது அனைவருக்கும் இயல்பு தான், அதுவே தங்களின் குழந்தைகளுக்கு பிரச்சனை ஆகாமல் பார்த்து கொள்வது அவர்கள் பொறுப்பு.

//அவர்தம் பெற்றோர்களையும் மாறி மாறிக் காட்டி டென்ஷனை அதிகரிப்பார்கள். //

சரியாக கணித்து இருக்கிறீர்கள், இவர்கள் தங்கள் நிகழ்ச்சியின் TRP ரேடிங்க்ஸ் அதிகரிக்க இதை போல செய்து பரபரப்பூட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் அவமானப்படுவதை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.

//தோல்வியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். //

பெரியவர்களுக்கே இது இருப்பதில்லை, எனவே இது குறித்து நீங்கள் கூறுவது போல அவர்களுக்கு புரிய வைப்பது நல்லது.

//அவர்களுக்கு அவர்தம் வியாபாரம் முக்கியம் என்றால் நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.//

இதை உணராத பெற்றோர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

ராமலக்ஷ்மி சிறப்பான பதிவு, நீங்கள் கவிதை எழுதுவதோடு இதை போல பதிவுகளும் எழுதலாம், உண்மையிலேயே சூப்பராக எழுதி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

September 1, 2008 7:48 PM
----------------------------------------------------


ராமலக்ஷ்மி said...

வருண் said...
//தோல்வி பிடிக்காது என்பது மட்டுமல்ல, வெற்றியை ரசிக்கவும் தெரியாது.//

வித்தியாசமானவர்தான் நீங்கள்.

//அதுவும் என்னுடன் சீரியஸா போட்டிபோட்டு (கேரம் போர்டில்) தோல்வியடைந்தவர்களை பார்த்தால் கஷ்டமா இருக்கும். அந்த மாதிரி சூழ்நிலையில் ஏதாவது காரணம் சொல்லி இடையிலேயே ஓடிவிடுவேன்.
//

இது உங்கள் மென்மையான சுபாவத்தைக் காட்டுகிறதோ. விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்பதைத்தானே ஸ்போர்டிவ் ஸ்பிரிட் என்கிறோம்.

//இந்த மனநிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சாதிக்க முடியாது என்பதில்லைங்க!//

இருக்கலாம் வருண், இதை நானும் மறுக்கவில்லை. சூழ்நிலைகள் அனுபவங்கள் இவை புடம் போடாமலே தங்கமாக ஜொலிக்க முடிந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்தான். அதற்காக நம் குழந்தைகளை நாம் அப்படி விட்டு விட முடியாது. நமது வழிகாட்டல்கள் என்பது ஒரு காலக் கட்டம் வரைதான் அவர்களிடமும் செல்லும். அந்தக் கட்டம் வரை அதைச் சரிவர செய்ய வேண்டியதும் நம் கடமை அல்லவா?

September 1, 2008 10:21 PM
---------------------------------------------------------


தமாம் பாலா (dammam bala) said...
இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு பதிவை எழுதியிருக்கீங்க, ராமலக்ஷ்மி!

பெற்றோர்களே, எல்லா கல்யாண வீட்டிலேயும் தான் தான் மாப்பிள்ளையா இருக்கணுன்னு நினைக்கிற காலம் இது; குழந்தைகளையும் ஷேர்மார்க்கெட் ஸ்டாக் மாதிரிதான் பாக்கறாங்க.

தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துகிட்டு, ஆத்ம திருப்திக்கு செஞ்சா, வெற்றி தானே வரும்; காசுக்கு, பரிசுக்கு, கூலிக்கு மாரடிச்சா ஏமாற்றம்தான் வரும் என்பதே என் கருத்தும்.

வலைபதிவுல வந்ததை, வார பத்திரிகைக்கு அனுப்பக்கூடாதுன்னு.. ஒரு சட்டமும் இல்லையே.. :))
ரிஷான் சொன்னமாதிரி, எதாவது ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பித்தான் பாருங்களேன், ஆனால் ஒண்ணில் வருதான்னு உறுதிப்படுத்திதான் இன்னொண்ணுக்கு அனுப்பணும் அப்படின்னு மங்கையர்மலர் கேள்விபதிலில் போட்டிருந்தாங்க.

September 1, 2008 11:09 PM
----------------------------------------------------------


சதங்கா (Sathanga) said...

ராமலஷ்மி மேடம்,

ஆஹா, இப்ப குழந்தைகளையும் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்களா ? இங்கு வந்திட்டு, நல்ல வேளை நம்ம ஊரு டி.வி. பார்க்கும் பழக்கம் குறைந்து போனதால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை. உங்கள் எழுத்தில் இருந்து தெரிகிறது, எந்த அளவிற்கு கொண்டு போயிருக்கிறார்கள் என.

//யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது //

அழகான போல்ட் எழுத்து மட்டுமல்ல, நம்ம மக்களின் மனநிலை மாற வேண்டும்.

//நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.//

அருமையாக முடித்திருக்கிறீர்கள்.

September 2, 2008 12:31 AM
-------------------------------------------------------------


வருண் said...
****சூழ்நிலைகள் அனுபவங்கள் இவை புடம் போடாமலே தங்கமாக ஜொலிக்க முடிந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்தான். அதற்காக நம் குழந்தைகளை நாம் அப்படி விட்டு விட முடியாது. நமது வழிகாட்டல்கள் என்பது ஒரு காலக் கட்டம் வரைதான் அவர்களிடமும் செல்லும். அந்தக் கட்டம் வரை அதைச் சரிவர செய்ய வேண்டியதும் நம் கடமை அல்லவா***

இல்லைங்க நான் சொல்ல வந்தது, போட்டிமனப்பான்மை இல்லாதவர்கள் சாதிக்க முடியாது என்பதில்லைனு.

இந்த பாருங்க நம்ம பர்ஃபார்மெண்ஸ் நல்லாயிருக்கனும்னு உழைப்பது வேறு. ஆனால் நாந்தான் எல்ல்லோரைவிட நல்லாப் பண்ணனும் என்று நினைப்பது வேறு. இல்லையா?

நான் நல்லாப்படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கனும்னு நினைத்துப்படிப்பது ஒருவகை. ஆனால் நாந்தான் முதல் மதிப்பு வாங்கனும் என்பது வேறு.

நாம் எப்படி அடுத்தவர்கள் படிப்பையோ, பர்ஃபாமெண்ஸையோ கண்ட்ரோல் பண்ணமுடியும்?

நிச்சயம் நம் வழிகாட்டல் அவசியம்ங்க.
நான் பார்த்த வரைக்கும் -ve criticism குழந்தைகளால் எடுத்துக்க முடியாது. அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும்.

அவர்கள் தகுதி, திறமைக்கேற்ப (ஒவ்வொரு குழ்ந்தைக்கும் ஐ க்யு மாறுபடும்! சில குழந்தைகள் ஷார்ப். சில குழந்தைகள் அப்படிக்கிடையாது என்பது உண்மைங்க) அவர்களிடம் எதிர்பார்த்து அவர்களை பாஸிடிவா ஊக்குவிக்கனும்னு நினைக்கிறேன்.
நிறையவே பேசனும் அவர்களிடம்.

September 2, 2008 2:25 AM
-------------------------------------------------------


கவிநயா said...
அருமையான பதிவு ராமலக்ஷ்மி. பெற்றோர்களிடையேதான் போட்டியும் பொறாமையும் ஒப்பிட்டுப் பார்த்தலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அதனால் பாதிக்கப் படுவதென்னவோ குழந்தைகள்தான். நல்ல சமயத்தில் நல்ல பதிவு. நன்றி ராமலக்ஷ்மி.

September 2, 2008 2:44 AM
--------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

கிரி said...
// தங்கள் குழந்தைகள் தொலைக்காட்சியில் வர வேண்டும் என் நினைப்பது அனைவருக்கும் இயல்பு தான், அதுவே தங்களின் குழந்தைகளுக்கு பிரச்சனை ஆகாமல் பார்த்து கொள்வது அவர்கள் பொறுப்பு.//

இப்படி பலபேர் மத்தியில் கண்கலங்க நிற்க நேருவது அந்த வயதில் ஜீரணிக்க இயலாத ஒன்றாக இருக்கும்.

//இவர்கள் தங்கள் நிகழ்ச்சியின் TRP ரேடிங்க்ஸ் அதிகரிக்க இதை போல செய்து பரபரப்பூட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் அவமானப்படுவதை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.//

நன்றாகச் சொன்னீர்கள் கிரி.

//சிறப்பான பதிவு, நீங்கள் கவிதை எழுதுவதோடு இதை போல பதிவுகளும் எழுதலாம்,//

கவனத்தில் கொள்கிறேன் கிரி. உங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

September 2, 2008 8:47 AM
----------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

வருண் said...
//இல்லைங்க நான் சொல்ல வந்தது, போட்டிமனப்பான்மை இல்லாதவர்கள் சாதிக்க முடியாது என்பதில்லைனு.//

அதேதான் வருண். அதுமட்டுமின்றி 'போட்டி மனப்பான்மையை வளர்ப்பதற்காகப் போட்டிகளுமல்ல' என்பதைத் தெளிவு படுத்தத்தான் இந்தப் பதிவே. போட்டிகளில் பங்கேற்பது என்பது ஒரு உற்சாகமான அனுபவம் என்கிற ரீதியில் மட்டுமே போட்டிகள் பார்க்கப் பட வேண்டும்.

//இந்த பாருங்க நம்ம பர்ஃபார்மெண்ஸ் நல்லாயிருக்கனும்னு உழைப்பது வேறு. ஆனால் நாந்தான் எல்ல்லோரைவிட நல்லாப் பண்ணனும் என்று நினைப்பது வேறு. இல்லையா?

நான் நல்லாப்படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கனும்னு நினைத்துப்படிப்பது ஒருவகை. ஆனால் நாந்தான் முதல் மதிப்பு வாங்கனும் என்பது வேறு. //


நல்லாவே சொல்லியிருக்கீங்க வருண். இதைத்தான் கீதையிலே "கடமையைச் செய் பலனை எதிர் பாராதே" என்று சொல்லுகிறார் பரமாத்மா. "Do your best and leave the rest to Almighty" இதுவும் குழந்தைகளுக்கு உணர்த்தப் பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அத்தனை சின்ன வயதில் இவை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கும். ஆகவேதான் இதை நோக்கி அவர்களை நாம் பக்குவமாக இட்டுச் செல்ல வேண்டும்.

//நாம் எப்படி அடுத்தவர்கள் படிப்பையோ, பர்ஃபாமெண்ஸையோ கண்ட்ரோல் பண்ணமுடியும்?//

கண்டிப்பாக முடியாது. இதைத்தான் "போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக் கூடாது" என்பார்கள். நான் "பொறாமை" மாதிரியான நெகட்டிவ் வார்த்தைகளும் வேண்டாம், attitude-ம் வேண்டாம் எனக் கருதுகிறேன். "ஆரோக்கியமான போட்டி" என்பது கூடத் தவறுதான். முத்துலெட்சுமியின் பக்குவமான பதில் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்:
//வெற்றியோ தோல்வியோ பங்களிப்பே சிறப்பு என்று பழக்குவதே நல்லது. மேலும் வெற்றி பெற்ற குழந்தையைப்பற்றி நெகட்டிவாக சொல்லிக்கொடுப்பதும் தவறு இல்லையா.. பெரும்பாலும் நீயும் ந்ல்லா செய்தே இருந்தாலும் அந்த குழந்தை இன்னும் நிறைய சாதகம் செய்திருப்பா போல ... என்று வெற்றிக்கு சரியான ஆள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொடுக்கவும் வேண்டும்..//

//நிச்சயம் நம் வழிகாட்டல் அவசியம்ங்க.
நான் பார்த்த வரைக்கும் -ve criticism குழந்தைகளால் எடுத்துக்க முடியாது. அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும்.//

அதேதான் நான் சொல்ல வருவதும்.

//அவர்கள் தகுதி, திறமைக்கேற்ப (ஒவ்வொரு குழ்ந்தைக்கும் ஐ க்யு மாறுபடும்! சில குழந்தைகள் ஷார்ப். சில குழந்தைகள் அப்படிக்கிடையாது என்பது உண்மைங்க) அவர்களிடம் எதிர்பார்த்து அவர்களை பாஸிடிவா ஊக்குவிக்கனும்னு நினைக்கிறேன்//

ரொம்ப சரி. இது தனிப் பட்ட முறையில் ஒவ்வொரு குழந்தையின் இயல்பைப் பொறுத்தும் அமைகிறது.

//நிறையவே பேசனும் அவர்களிடம். //

ஆமாம் நிறையப் பேசுவது நிச்சயம் உதவும்.

தாங்கள் சொல்ல வந்ததை நானும் சரியாகப் புரிந்து கொண்டு விட்டேன் வருண். விளக்கங்களுக்கும் சொல்லியிருக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

September 2, 2008 8:58 AM
------------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

தமாம் பாலா (dammam bala) said...
//இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு பதிவை எழுதியிருக்கீங்க, ராமலக்ஷ்மி!//

நன்றி பாலா. நீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் இது.

//தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துகிட்டு, ஆத்ம திருப்திக்கு செஞ்சா, வெற்றி தானே வரும்;//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

பத்திரிகைக்கு அனுப்புவது குறித்து தாங்கள் தந்திருக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி. அவ்வாறே செய்து பார்க்கிறேன்.

September 2, 2008 2:27 PM
-----------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

சதங்கா (Sathanga) said...
//ஆஹா, இப்ப குழந்தைகளையும் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்களா?//

ஆமாம், அதுதான் நடக்கிறது.

//இங்கு வந்திட்டு, நல்ல வேளை நம்ம ஊரு டி.வி. பார்க்கும் பழக்கம் குறைந்து போனதால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை.//

அதுவும் நல்லதிற்கே!

//நம்ம மக்களின் மனநிலை மாற வேண்டும்.//

அந்த மாற்றம் விரைவில் வரட்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக நான் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்கையில்தான் பெற்றோரும் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.

September 2, 2008 2:34 PM


ராமலக்ஷ்மி said...
கவிநயா said...
//பெற்றோர்களிடையேதான் போட்டியும் பொறாமையும் ஒப்பிட்டுப் பார்த்தலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அதனால் பாதிக்கப் படுவதென்னவோ குழந்தைகள்தான்.//

சரியாகக் கணித்து வைத்திருக்கிறீர்கள் கவிநயா.

//நல்ல சமயத்தில் நல்ல பதிவு.//

நல்ல மாற்றங்களையும் எதிர் நோக்குவோம். கருத்துக்கு மிக்க நன்றி!

September 2, 2008 2:37 PM
----------------------------------------------------


அனுஜன்யா said...
நல்ல, இன்றைய பெற்றோர்களுக்கு மிக அவசியமான பதிவு. எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனித்து எழுதி உள்ள உங்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். பொதுவெளியில் குழந்தை/பெற்றோர் அழுவதைக் காண்பிப்பதும், அதனை மெல்ல மெல்ல பார்வையாளர்களை அனுபவிக்க பழக்குவதும் மிக மிக மலினமான செயல். வியாபார உத்திகளுக்கும் ஒரு எல்லை வேண்டும். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

September 2, 2008 3:02 PM
-----------------------------------------------------


ராமலக்ஷ்மி said...

அனுஜன்யா said...
// பொதுவெளியில் குழந்தை/பெற்றோர் அழுவதைக் காண்பிப்பதும், அதனை மெல்ல மெல்ல பார்வையாளர்களை அனுபவிக்க பழக்குவதும் மிக மிக மலினமான செயல்.//

சரியாகச் சொன்னீர்கள் அனுஜன்யா.

//வியாபார உத்திகளுக்கும் ஒரு எல்லை வேண்டும்.//

அந்த எல்லையைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு இல்லை.
ஆகையால் நாம் நமது எல்லையை என்றும் உணர்ந்து நடத்தல் உத்தமம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யா.

September 2, 2008 4:12 PM
----------------------------------------------------------


rapp said...
நீங்க சொல்றது ரொம்பச் சரிங்க. நானே இந்த மாதிரி சிறு தோல்வியைக் கூட தாங்கிக்க முடியாம பள்ளிக்காலத்தில் இருந்தேன். பத்தாங்கிளாசில் ஸ்கூல் பர்ஸ்ட் வரலைன்னு கெழவியாட்டம் சுவற்றில் எல்லாம் இடிச்சிக்கிட்டேன், என்னமோ என் வாழ்க்கை லட்சியம் தொலைஞ்சா மாதிரி ஒரு வெறுமையான பீலிங், நீங்க அழகா சொல்லி இருக்கீங்க

September 2, 2008 4:29 PM
-----------------------------------------------------


முத்துலெட்சுமி-கயல்விழி said...
ராமலக்ஷ்மி ... இரண்டு இடத்திலும் விவாதம் களைகட்டி..சக்கப்போடு போடுது பதிவு.. :)

நான் படிக்கையில் எனக்கு போட்டிகளுக்கான மேடை பற்றிய விவரங்களே தெரியாது. இப்பொழுதோ என் பெண்ணின் ஆசிரியை அவளுக்கு இருக்கும் திறமையை நீங்கள் நன்றாக வெளிப்படுத்த உதவுங்கள் என்று போட்டிக்கு அனுப்பும்படி வலியுறுத்துகிறார்கள்..

முதலில் அவளை போட்டிக்கு அழைத்துப்போகும் முன் எனக்கு தனியாக மனதுக்குள் ..சொல்லிக்கொள்வேன்.1. அவளை டென்சன் படுத்தக்கூடாது.
2.மற்ற குழந்தைகளை கிரிட்டிசைஸ் செய்யக்கூடாது.
3.நன்றாக செய்த குழந்தைகளைப்பற்றி மட்டும் நல்லாபாடினா .. (அ) நல்லா ஆடினா என்று கருத்தை பகிர்வது என்று..

September 2, 2008 4:51 PM
-----------------------------------------------------


goma said...
ராமலஷ்மியின் அத்தனை கருத்துக்களும் பலரும் வாசித்து உணர வேண்டியது அவசியம்.தொலைக் காட்சி நிறுவனத்தை மட்டும் நாம் முழுக்க முழுக்க சாட முடியாது.குழந்தைகளின் முன்னேற்றம் ,அவர்களின் வெற்றி ,என்று பல கனவுகளைச் சுமந்து கொண்டு அவர்களின் மேல் அளவுக்கு அதிகமாகப் பாரத்தை ஏற்றி ,குழந்தைகளையும் திணரவைத்துத் தாங்களும் அல்லல் படுகின்றனர் .பெற்றோர்கள் கொஞ்சம் நிதானித்தால், இது போன்ற ,இன்னல்களைத் தவிர்க்கலாம்.

September 2, 2008 5:04 PM
-------------------------------------------------------


சந்தனமுல்லை said...
வாவ்..ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு!! முதலில் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதே தவறு! அதிலும் மேடையில் இருப்பவர் எவரும் விமர்சிக்கலாம் என்று பெற்றோரே தம் குழந்தைகளை பலிகடா ஆக்குவது கொடுமை!! சரியா சொல்லியிருக்கீங்க..எல்லா பாயிண்ட்ஸூம்!!

September 2, 2008 6:39 PM
------------------------------------------------------


goma said...
"சொதப்பிட்டியேடா" என்று வெறுப்பேற்றும்,பெற்றோர்களுக்குப் புரியாது 'சொதப்பியது ,'யார் என்று.

September 2, 2008 7:53 PM
------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

rapp said...
//நீங்க சொல்றது ரொம்பச் சரிங்க. நானே இந்த மாதிரி சிறு தோல்வியைக் கூட தாங்கிக்க முடியாம பள்ளிக்காலத்தில் இருந்தேன்.//

அதெல்லாம் புரிஞ்சுதான் இன்று பெரும்பாலும் பள்ளிகளில் வெற்றிகளை ரொம்பத் தலையில் தூக்கிக் கொண்டாடுவதுமில்லை. தோல்விகள் முன்னேற்றத்துக்கு தடைக்கற்கள் அல்ல என்பதை உணர்த்தவும் தவறுவதில்லை.

//என்னமோ என் வாழ்க்கை லட்சியம் தொலைஞ்சா மாதிரி ஒரு வெறுமையான பீலிங்,//

எல்லாம் தாண்டி மேலே வந்திட்டீங்கதானே rapp:)! உங்கள் அனுபவத்தையே பகிர்ந்து கொண்டு கருத்துக் கூறியிருப்பதற்கு நன்றி!

September 2, 2008 8:27 PM
----------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//ராமலக்ஷ்மி ... இரண்டு இடத்திலும் விவாதம் களைகட்டி..சக்கப்போடு போடுது பதிவு.. :)//

இங்கு வந்த கருத்துக்களையும் அங்கு தொகுத்தளித்து விடலாமா?

//நான் படிக்கையில் எனக்கு போட்டிகளுக்கான மேடை பற்றிய விவரங்களே தெரியாது.//

எனக்கு நிறைய இருந்தது. தமிழ் பிரியனுக்கான பதிலில் கூறியிருக்கிறேன்.

//இப்பொழுதோ என் பெண்ணின் ஆசிரியை அவளுக்கு இருக்கும் திறமையை நீங்கள் நன்றாக வெளிப்படுத்த உதவுங்கள் என்று போட்டிக்கு அனுப்பும்படி வலியுறுத்துகிறார்கள்..//

அதுவும் சரிதான். அப்போது உங்கள் அணுகுமுறையைப் போலவே எல்லா பெற்றோரினுடையதும் இருந்து விட்டால் போதுமே!

//முதலில் அவளை போட்டிக்கு அழைத்துப்போகும் முன் எனக்கு தனியாக மனதுக்குள் ..சொல்லிக்கொள்வேன்.1. அவளை டென்சன் படுத்தக்கூடாது.
2.மற்ற குழந்தைகளை கிரிட்டிசைஸ் செய்யக்கூடாது.
3.நன்றாக செய்த குழந்தைகளைப்பற்றி மட்டும் நல்லாபாடினா .. (அ) நல்லா ஆடினா என்று கருத்தை பகிர்வது என்று..//

அருமையான அணுகுமுறை. உங்கள் பக்குவத்தைத்தான் வருணிடமும் சிலாகித்துக் கூறியிருந்தேன்.

September 2, 2008 8:37 PM
---------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

goma said...
//ராமலஷ்மியின் அத்தனை கருத்துக்களும் பலரும் வாசித்து உணர வேண்டியது அவசியம்.//

ஒவ்வொருவரும் அவரவர் கருத்தைக் கூறியதன் மூலமே மேலும் பல கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

//தொலைக் காட்சி நிறுவனத்தை மட்டும் நாம் முழுக்க முழுக்க சாட முடியாது.//

அதே!

//குழந்தைகளின் முன்னேற்றம் ,அவர்களின் வெற்றி ,என்று பல கனவுகளைச் சுமந்து கொண்டு அவர்களின் மேல் அளவுக்கு அதிகமாகப் பாரத்தை ஏற்றி ,குழந்தைகளையும் திணரவைத்துத் தாங்களும் அல்லல் படுகின்றனர் .//

"அளவுக்கு அதிகமான பாரம்"
ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள் கோமா! ஒட்டகத்தின் முதுகு உடைவதற்கு அதன் மேல் ஏற்றப் படும் அந்த கடைசி வைக்கோல் பிரி (last straw) மட்டுமே காரணமாவதில்லை. பிறந்ததிலிருந்து இவர்கள் ஏற்றிக் கொண்டே போகும் 'எதிர்பார்ப்புகள்' எனும் அத்தனை பாரங்களும்தான் காரணமாகின்றன.

//பெற்றோர்கள் கொஞ்சம் நிதானித்தால், இது போன்ற ,இன்னல்களைத் தவிர்க்கலாம்.//

நல்ல கருத்துக்களுக்கு நன்றி கோமா!

September 2, 2008 9:03 PM
--------------------------------------------------------


வருண் said...
////முத்துலெட்சுமி-கயல்விழி said...
ராமலக்ஷ்மி ... இரண்டு இடத்திலும் விவாதம் களைகட்டி..சக்கப்போடு போடுது பதிவு.. :)

முதலில் அவளை போட்டிக்கு அழைத்துப்போகும் முன் எனக்கு தனியாக மனதுக்குள் ..சொல்லிக்கொள்வேன்.1. அவளை டென்சன் படுத்தக்கூடாது.
2.மற்ற குழந்தைகளை கிரிட்டிசைஸ் செய்யக்கூடாது.
3.நன்றாக செய்த குழந்தைகளைப்பற்றி மட்டும் நல்லாபாடினா .. (அ) நல்லா ஆடினா என்று கருத்தை பகிர்வது என்று..////

***ராமலக்ஷ்மி said...

அருமையான அணுகுமுறை. உங்கள் பக்குவத்தைத்தான் வருணிடமும் சிலாகித்துக் கூறியிருந்தேன்.***

ராமலக்ஷ்மி & முத்துலக்ஷ்மி-கயல்விழி!

குழந்தைகளை பக்குவமாகவும் கவனமாகவும் ஊக்குவிக்கும் விசயத்தில் நம் எல்லோருடைய கருத்துமே ஒன்றாகத்தான் இருக்கிறதுங்க !:-)

Great minds think alike, they say! :-)

September 2, 2008 10:08 PM
------------------------------------------------------------


வல்லிசிம்ஹன் said...
ராமலக்ஷ்மி நல்லதொரு பதிவு.

இந்தப் போட்டிகளில் குழந்தைகள் ஆடும் ஆட்டமோ.இல்லை பாட்டோ பிரபலமாக இருக்க ,குத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுக்குஇறார்கள். மழலையின் குரலில் ஆபாசமான வார்த்தைகள் காதில் விழும்போது ஐயோன்னு இருக்கு. நாங்கள் வளர்ந்த போதும் போட்டிகள் உண்டு. அவை தேவாரமொ,திருப்பாவையோ ஏதாவது இருக்கும்.

இப்போது,:(பாவம் குழந்தைகள்....

September 3, 2008 10:55 PM
------------------------------------------------------------
-

ராமலக்ஷ்மி said...

சந்தனமுல்லை said...
//வாவ்..ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு!! முதலில் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதே தவறு!அதிலும் மேடையில் இருப்பவர் எவரும் விமர்சிக்கலாம் என்று பெற்றோரே தம் குழந்தைகளை பலிகடா ஆக்குவது கொடுமை!!//

உண்மைதான். வீட்டில் ஒப்பிட்டு பேசும் பெற்றோர் பலர் உள்ளனர். அதையே மேடையேற்றி மற்றவர் செய்ய அனுமதிக்கின்றனர். "பலிகடா" ....
சதங்காவும் இப்படித்தான் ஆதங்கப் பட்டிருக்கிறார். கருத்துக்கு நன்றி சந்தனமுல்லை.

September 4, 2008 11:28 AM
----------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...
goma said...
//"சொதப்பிட்டியேடா" என்று வெறுப்பேற்றும்,பெற்றோர்களுக்குப் புரியாது 'சொதப்பியது ,'யார் என்று.//

உண்மைதான் கோமா. நீங்கள் முன்னர் சொன்னது போல சற்றே "நிதானித்தால்" எல்லா பெற்றோருக்கும் புரியக் கூடியதுதான் இது. தொடர் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கோமா.

September 4, 2008 11:31 AM
-----------------------------------------------------------
ராமலக்ஷ்மி said...

வருண் said...
//குழந்தைகளை பக்குவமாகவும் கவனமாகவும் ஊக்குவிக்கும் விசயத்தில் நம் எல்லோருடைய கருத்துமே ஒன்றாகத்தான் இருக்கிறதுங்க !:-)//

ஆமாங்க. எந்தப் பெற்றோரும் தம் குழந்தைகளை விட்டுக் கொடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்வதில்லை. அவர்களை முன்னிறுத்திப் பார்க்க வேண்டும் என்கிற அதீத ஆர்வம், பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க இயலாத வண்ணம் செயல்பட வைத்து விடுகிறது.

September 4, 2008 11:37 AM
------------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...

வல்லிசிம்ஹன் said...
//ராமலக்ஷ்மி நல்லதொரு பதிவு.

இந்தப் போட்டிகளில் குழந்தைகள் ஆடும் ஆட்டமோ.இல்லை பாட்டோ பிரபலமாக இருக்க ,குத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுக்குஇறார்கள். மழலையின் குரலில் ஆபாசமான வார்த்தைகள் காதில் விழும்போது ஐயோன்னு இருக்கு.//

வாங்க வல்லிம்மா. யாரும் சொல்லாத ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதற்கு நன்றி. பாடல்களின் தேர்வில கவனமாக இருப்பது மிக மிக அவசியம். நீங்கள் சொல்லியிருப்பது போல பாவம் குழந்தைகள்தான்.

September 4, 2008 12:14 PM
------------------------------------------------------------


பிரேம்குமார் said...
ராமலட்சுமி, மிக முக்கியமான பதிவை இட்டதற்கு நன்றி. போட்டி மனப்பான்மையால் உயிர் போகும் அளவுக்கு விசயம் விபரீதமாகும் நிலைமைகள் வந்துவிட்டது. நானும் சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன்

http://premkumarpec.blogspot.com/2008/08/blog-post.html

September 4, 2008 7:53 PM
--------------------------------------------------------


கடையம் ஆனந்த் said...
நல்ல பதிவு...

September 5, 2008 9:57 AM
--------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...
பிரேம்குமார், உங்கள் பதிவுக்கான சுட்டிக்கு மிக்க நன்றி. "போட்டி மனப்பான்மையும் ஒரு தற்கொலையும்" என்கிற அந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வேதனைக்குரியது. தோல்விகளைச் சந்திக்கவும் அவற்றைப் பாஸிட்டிவாகக் கையாளவும் ஏன் நம் குழந்தைகளைத் தயார் செய்வது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது. எனது பதிவின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம்தான் என்னையும் இது பற்றி சிந்திக்க வைத்தது.

உங்கள் பதிவிலே நீங்கள் கூறியிருந்த ஒரு கருத்தையும் இங்கு மேற்கோளாக எடுத்துக் கொள்கிறேன்:

//எவ்வ‌ள‌வுக்கு எவ்வ‌ளவு நாம் 'வெற்றி'யை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோமோ அதே அளவு தோல்வியை ஒத்துக்கொள்ள‌வும், அடுத்த‌வ‌ர் வெற்றியை ம‌கிழ்ச்சியோடு வ‌ர‌வேற்க‌வும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்.//

நன்றி பிரேம்குமார்.

September 6, 2008 7:37 AM
----------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...
கடையம் ஆனந்த் said...
//நல்ல பதிவு...//

கருத்துக்கு நன்றி ஆனந்த்.

September 6, 2008 7:39 AM
---------------------------------------------------------

தமிழ்நெஞ்சம் said...
நேற்று (05/09/08) வெள்ளி இரவு 'விஜய்' தொலைக்காட்சியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்கிற நிகழ்ச்சியில் 'கோவையில்' தோல்வியடைந்த மகளை, மதுரைக்கு அழைத்து வந்து ஆடச்செய்து, மதுரையிலும் தோற்றபிறகு உள்ளம் நொந்து - மனம் கொதித்து - ஒரு கிறித்துவத் தாய் பேசிய பேச்சுகள் இன்னமும் எனது மனதில் எதிரொலிக்கின்றன. [ மக்களது ஆர்வம் விலை போகவில்லை எனில் என்னதான் கதி?]

September 6, 2008 11:42 AM
---------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...
தமிழ்நெஞ்சம், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டு போவதை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சி ஊர்ஜிதப் படுத்துகிறது.

//மக்களது ஆர்வம் விலை போகவில்லை எனில் என்னதான் கதி//

அதீத ஆர்வங்கள் அறியாமையால் ஒரு வித வெறியாகவே மாறி வருவது வருத்தமளிப்பதாக உள்ளது.

உணர்வுகள் எல்லாருக்கும் பொதுவானவை. இதில் தாயின் மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாமே.

கருத்துக்கு நன்றி தமிழ்நெஞ்சம்.

September 6, 2008 2:57 PM
-------------------------------------------------------


sury said...
//சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது.//

சரியாகத்தான் சொல்கிறீர்கள்.
டி.வி. சேனல்களில் நடக்கும் பல போட்டிகள் கோமாளித்தனத்தின் எல்லையும்
மீறியனவையாகத்தான் இருக்கின்றன. ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
கரைத்துக் குடித்தவர் போல் பேசும் சில நீதிபதிகள் ( performance appraisers to be
precise ) ஏதோ இந்தப் போட்டியிலே பரிசு பெறும் வாய்ப்பினை இழந்தவர்களது
வானமே இடிந்து விழுந்துவிட்டாற்போல் ஆறுதல் கூறுவதும் நகைச்சுவையாகத்தான்
இருக்கிறது.
May God Bless the participant-children and their parents with the right type of
attitude.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

September 7, 2008 10:14 PM
-----------------------------------------------------------


Thooya said...
அருமையான பொருள் கொண்ட பதிவு

September 8, 2008 7:17 AM
-----------------------------------------------------------
ராமலக்ஷ்மி said...

sury said...
//டி.வி. சேனல்களில் நடக்கும் பல போட்டிகள் கோமாளித்தனத்தின் எல்லையும்
மீறியனவையாகத்தான் இருக்கின்றன.//

உண்மைதான்.

//ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் கரைத்துக் குடித்தவர் போல் பேசும் சில நீதிபதிகள் ( performance appraisers to be precise ) ஏதோ இந்தப் போட்டியிலே பரிசு பெறும் வாய்ப்பினை இழந்தவர்களது
வானமே இடிந்து விழுந்துவிட்டாற்போல் ஆறுதல் கூறுவதும் நகைச்சுவையாகத்தான்
இருக்கிறது. //

"வானமே இடிந்து விழுந்துவிட்டாற்போல்" ....ரொம்பச் சரி. ஒன்று, குழந்தைகள் என்றும் பாராமல் தவறுகளைப் பெரிது படுத்திக் கூறுவார்கள் அல்லது நீங்கள் சொன்னாற்போல ஆறுதல் கூறுவதாக நினைத்து அபத்தமாக நடந்து கொள்கிறார்கள்.

//May God Bless the participant-children and their parents with the right type of attitude.//

பெரியவர் உங்கள் வாக்கும் பிரார்த்தனையும் பலிக்கட்டும்.

September 8, 2008 7:39 AM
-----------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

Thooya said...
//அருமையான பொருள் கொண்ட பதிவு//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா.

September 8, 2008 9:21 AM
----------------------------------------------------------


ஜீவி said...
தாங்கள் சொல்வது சரியே. இனிக்க இனிக்கச் சொல்லியிருப்பது சிறப்பு.
பலருக்கு பயனளிபதும் கூட.

September 10, 2008 10:38 AM
---------------------------------------------------------


புதுகை.அப்துல்லா said...
அக்கா! என் பொண்ணு ஸ்கூலில் எந்தப் போட்டியில் கலந்து கொண்டாலும் முடிவு அறிவிக்கப் படுவதற்கு முன்பே அந்த இடத்தில் இருந்து என் மனைவி அழைத்து வந்துவிடுவார். நான் காரணம் கேட்ட போது" முடிவிற்காக ஆவலோடு நாம் காத்து இருந்தாள் இதற்காகத்தான் நான் கலந்து கொள்கிறோம் என்ற எண்ணம் அவள் மனதில் வந்துவிடும்" என்றார். உங்க பதிவை படித்தவுடன் எனக்கு அதுதான் நினைவுக்கு வருகின்றது.

September 10, 2008 12:27 PM
----------------------------------------------------------


ராமலக்ஷ்மி said...
ஜீவி said...
//தாங்கள் சொல்வது சரியே.//
//பலருக்கு பயனளிபதும் கூட.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி.

//இனிக்க இனிக்கச் சொல்லியிருப்பது சிறப்பு.//

இதற்கும் நன்றி. மருந்தையும் தேனில் குழைத்துக் கொடுப்பதுதானே சிறப்பு.

September 10, 2008 8:53 PM
----------------------------------------------------------

ராமலக்ஷ்மி said...

புதுகை.அப்துல்லா said...
//முடிவிற்காக ஆவலோடு நாம் காத்து இருந்தால் இதற்காகத்தான் நான் கலந்து கொள்கிறோம் என்ற எண்ணம் அவள் மனதில் வந்துவிடும்" என்றார்.//

அட இது கூட நல்ல அணுகுமுறையாக இருக்கிறதே அப்துல்லா. இதைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

September 10, 2008 9:01 PM
----------------------------------------------------------

நெல்லை ஆசி said...
வணக்கம்

தங்களது படைப்பினை நானும் ஆதரிக்கிறேன்.

நீங்கள் சொல்லியது அனைத்தும் சத்ய உண்மை .

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் சங்கீத ப்பாட்டுப் போட்டி நடந்தது.

சங்கீதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இருந்தும் அன்று நான் அங்கு சென்று ரசித்து ப்பார்த்தேன் . ஏனென்றால் அன்று பக்கத்து வீட்டு குழந்தையும் பாடியது.

அன்று தலைமை தாங்கியவர் இன்றைய வெள்ளித்திரையில் அதிகம் போனால் மூன்று படங்கள்தான் பாடிஇருப்பார், இருந்தாலும் அவரை கூட்டி கொண்டு வந்து அமர வைத்து விட்டார்கள் . அவர் யார் மீது உள்ள கோவத்தில் வந்தாரோ தெரியவில்லை. அன்று கலந்து கொண்ட அனைத்து பிள்ளைகளையும் உண்டு இல்லை எனச் செய்து விட்டார். (பொதுவாகவே சங்கீதம் படித்தவர்களுக்கு சற்று தலைக்கனம் இருக்கும் என கேள்வி பட்டிருக்கிறேன்) ஆனால் அந்த நிகழ்ச்சியில்தான் நேரில் பார்த்தேன்.

இதில் வேடிக்கை என்னவெனில் நான் கூறிய அந்த குழந்தை சங்கீதமே படிக்காமல் நேரிடையாக வந்து கலந்து கொண்டது. இருந்தாலும் மிக அருமையாக பாடியது என்னை ஒரு நிமிடம் பிரமிக்க வைத்தது.

ஆனால் நடுவர் கூறிய பேச்சினை இங்கு வழங்குகிறேன்.

அவர் : "பாப்பா உனக்கு சங்கீதமே தெரியல, உன்னோட குரு யாரு"
பாப்பா: "நானே வானொலியில கேட்டு கேட்டு படிச்சிகிட்டேன்"
அவர் : "நீ இந்த மாதிரி சங்கீதம் தெரியாம வந்து இப்படி படிக்க கூடாது"
உன்னோட பாட்டை கேட்டு எனக்கே சங்கீதம் மறந்து போச்சு " அனைவரும் சிரிக்கின்றனர். தூரத்தில் இருந்த அந்த பாப்பாவின் அப்பா மட்டும் கண்ணீர் வடித்தார்.
பாப்பா : "உங்கள் அறிவுரைக்கு நன்றி, இவ்வளவு பெரிய மேடையில் இவ்வளவு சங்கீதம் படித்தவர்களுக்கு நடுவில் நான் வந்தது எனக்கு பெரிய விசயம்னு நான் நினைக்கிறேன் . நான் பாட்டு படிச்ச போது எல்லோரும் ரசிச்சாங்க, அது போதும் எனக்கு, எனக்கு இங்க வந்து முதல் பரிசு வாங்கணும்கறது எனக்கு முக்கியமில்லை , ஆனா என்னால எங்கப்பா தலைகுனியராருன்னு நினைக்கிறப்ப எனக்கு கொஞ்சம் வருத்தமாயிருக்கு , பரவாயில்ல நானும் சங்கீதம் கற்றுக்கொள்ள முயல்கிரேன்னு சொல்லி அங்குள்ள எல்லோரும் தடுத்தும் வெளிய வந்துருச்சு, இதுல என்ன ஆச்சரியம்னா அதுக்கு அடுத்த வாரம் நடந்த பள்ளி விழாவில பாட்டு போட்டில பெரிய பாடகர் கையால் முதல் பரிசு வாங்கினாள்.

இதில் எனக்கு மிகுந்த வருத்தம் என்னவெனில் வெளியே சொல்ல வேதனையாக இருக்கிறது. அந்த குழந்தை பேசிய அந்த தன்னம்பிக்கையான வார்த்தைகளை எல்லாம் அழித்துவிட்டு மற்றது எல்லாவற்றையும் போட்டு விட்டார்கள் . எங்கே அந்த வார்த்தைகளை போட்டு விட்டால் சின்ன குழந்தை முன் நாம் தோற்று விடுவோமோ என்று ஒரு பயம் அந்த நடுவருக்கும் , அந்த தொலைகாட்சி நிறுவனத்துக்கும் தான் , ஆனால் அந்த பிள்ளை இன்று வரை சிறப்பாக பாடுகிறாள். அந்த பெண் இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்.

September 12, 2008 11:51 AM

___________________________________

ராமலக்ஷ்மி said...

நெல்லை ஆசி, அக்கறையுடன் தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவலுக்கு மிக்க நன்றி. இப்படிப் பலரும் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் நாம் எதையும் மிகைப் படுத்தவில்லை என்பதையும் ஊர்ஜிதப் படுத்துகிறது.

//அதிகம் போனால் மூன்று படங்கள்தான் பாடிஇருப்பார்//

நீங்கள் குறிப்பிடும் நபர் யாரென்று தெரியாது. அது தேவையுமில்லைதான். ஆனால் நடுவர்களாக இருக்க யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில் சேனல்கள் அக்கறை செலுத்துவதில்லை. ஒரு சேனலில் பல்லாயிரக் கணக்கான பாடல்கள் பாடிய ஒரு ஜீனியஸ் நடுவராக எத்தனை அருமையாக குழந்தைகளைக் கையாளுகிறார் என்பதை மற்றவர்கள் கவனித்துக் கற்றுக் கொண்டால் நலம்.

//அடுத்த வாரம் நடந்த பள்ளி விழாவில பாட்டு போட்டில பெரிய பாடகர் கையால் முதல் பரிசு வாங்கினாள்.//

இதைத்தான் நான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். பள்ளிகள் குழந்தைகளின் தனிப்பட்ட அருமை பெருமை அறிந்து கொண்டாடத் தவறுவதில்லை. [எங்கேனும் விதிவிலக்குகள் இருக்கலாம்]அவை அமைத்துத் தரும் தளம் குழந்தைகளின் ஊக்கப் படுத்தும். ஸ்போர்டிவ்வாக போட்டிகளை எடுத்துக் கொள்ளும் பக்குவத்தையும் தரும்.

//அந்த தன்னம்பிக்கையான வார்த்தைகளை எல்லாம் அழித்துவிட்டு மற்றது எல்லாவற்றையும் போட்டு விட்டார்கள் .எங்கே அந்த வார்த்தைகளை போட்டு விட்டால் சின்ன குழந்தை முன் நாம் தோற்று விடுவோமோ என்று ஒரு பயம் அந்த நடுவருக்கும் , அந்த தொலைகாட்சி நிறுவனத்துக்கும் தான்//

இதுதான் நடக்கிறது. இதைப் புரிந்து பெற்றோர்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

நன்றி நெல்லை ஆசி.

September 12, 2008 6:52 PM
___________________________________

Amudha said...
இந்த செய்தியைப் படிக்க மிகவும் வருத்தமாக இருந்தது.

/* சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது*/
உண்மை. ஒருமுறை சேனலில் அழும் குழந்தையை ஏதொ இசையுடன் காட்டியது எனக்குப் பிடிக்கவிலலை. இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன்.

/* Do your best and leave the rest to Almighty" இதுவும் குழந்தைகளுக்கு உணர்த்தப் பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அத்தனை சின்ன வயதில் இவை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கும். ஆகவேதான் இதை நோக்கி அவர்களை நாம் பக்குவமாக இட்டுச் செல்ல வேண்டும்.*/

/*"போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக் கூடாது" /

இப்பதிவில் உள்ள ஒவ்வொரு கருத்தையும் அனைத்து பெற்றோரும் உணர்ந்து நடந்தால், குழந்தைகள் தெளிவான வழிகாட்டலுடன் ஜொலிப்பார்கள்.

September 25, 2008 2:04 PM
___________________________________
ராமலக்ஷ்மி said...

அமுதா உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
உங்களது http://nandhu-yazh.blogspot.com/2008/09/blog-post_15.html "கற்றுக் கொடுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்" பதிவிலே நீங்கள் இதே கருத்தைப் பற்றி கூறியிருந்த விதம் என்னைக் கவர்ந்தது. அதை அப்படியே இங்கு எடுத்தளிப்பதில் உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என நம்புகிறேன்.

அமுதாவின் தனது பதிவில்:

//நம்பிக்கை
---------------
பள்ளியில் போட்டி ஒன்று முடித்து வந்திருந்தாள். "என்ன பரிசு கிடையாதா?", என்றேன். "நீ தானம்மா சொல்லி இருக்க, ப்ரைஸ் வாங்குவது முக்கியம் இல்லை, பங்கெடுப்பது தான் முக்கியம்", என்றாள். அவள் ஆணித்தரமாக கூறியது, நான் கூறும் விஷயங்கள் அவள் மனதில் பசுமரத்தாணி போல் பதிகின்றன என்பதை பறை சாற்றின.

செய்யக்கூடாதது
--------------------------
மற்றொரு நாள், கீதை போட்டியில் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாள். கேட்ட டேப்பை வாங்கிக் கொடுத்தேன். கற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது, கற்றுக் கொடு என்றாள். என்னால் சமஸ்கிருத உச்சரிப்பைக் கற்று சொல்லித் தர முடியாது என்றேன். பின் அவள் ஆர்வத்துக்காக ஒத்துக் கொண்டேன். அலுவலக மற்றும் வீட்டு வேலைகளுடன் இதையும் இழுத்துச் செய்ததால் ஒரு நாள் விளையாட்டாக, "இவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுக்கிறேன், ஒழுங்கா பரிசு வாங்கிட்டு வரணும்", என்றேன். ஒரு நாள், தலைவலியுடன் வீட்டிற்கு வந்தாள், பரிசு கிடைக்கவில்லை என்றாள். நன்றாக சொன்னாய் அல்லவா , அது போதும் என்று கூறினேன். பின் ஒரு நாள் அவள் ஆசிரியையைக் காணச் சென்ற பொழுது, "தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள், அன்று முழுவதும் தலைவலி என்று அழுது கொண்டிருந்தாள்", என்றார். எனக்கு அதிர்ச்சி, அன்று அவள் ஆணித்தரமாகப் பேசிய மொழிகளை நான் எத்தனை முறை என் தோழியரிடம் கூறி
பெருமையுற்றேன். அவளுடன் பேசிய பின்பு தான் புரிந்தது, நான் அன்று விளையாட்டாகக் கூறிய மொழிகள் அவள் மீது இத்தனை அழுத்ததைக் கொடுக்கும் என்று நான் உணரவில்லை. நாம் விளையாடுகிறோமா அல்லது உண்மை கூறுகிறோமா என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணக்கூடாது. நாம் தான் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.//

கடைசி இரண்டு வரிகள் கருத்திலே நிறுத்திக் கொள்ள வேண்டியவை. நினைவிலே பொறுத்திக் கொள்ள வேண்டியவை.

நன்றி அமுதா.

September 25, 2008 8:33 PM

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்