பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

இளங்காலைப் பொழுது, மார்கழிக் குளிரிலும் வியர்வையில் குளித்த பசும்புற்கள். சற்றே அடர்ந்த காடு. ஆங்காங்கே பனங்கழி கொண்டு மரத்தினிடையிலும் இரவு நேரத்தில் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க மரத்தின் மேலும் கட்டப்பட்ட குடில்கள். காட்டுô புற்கள் கொண்டு வேயப்பட்ட கூரை. வெய்யில் காலத்திலும் மழை காலத்திலும் வெப்பமோ இல்லை குளிரோ அதிகம் தாக்காத வண்ணம் கட்டப்பட்டது. இயற்கையோடு இயைந்து வாழும் வேடுவர் குலம் வாழும் காடு.

"அப்பா! அப்பா!!"

தந்தையுடன் வேட்டைக்குச் சென்று கொண்டு இருந்த சிறுவன் குரல். இடையில் கட்டப்பட்ட மான் தோல். தோளில் அவன் வயதுக்கேற்றவாறு செய்யப்பட்ட வில் மற்றும் அம்பராத்தூளி.

"அங்க பாரேன் சாமி ஒருத்தர் உக்காந்து தூங்குறாங்க பகல்ல"

தந்தை சிறுவன் சுட்டிì காட்டிய இடத்தைப் பார்த்தார்.

ஒரு முனிவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். வெளுத்த தாடி, ஒட்டி உலர்ந்திருந்தாலும் ஆரோக்யமான உடல். முகத்தில் காணும் ஒருவித பிரகாசம் காணும் யாவரையும் வணங்க செய்யும் தோற்றம். "அவங்க தூங்கலை கண்ணு, அவங்க சாமி கும்புடுறாங்க வா போய் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்" அப்பா அவனை அழைத்து சென்றார்.

அவர் கண்விழிக்கும் வரை காத்திருந்தனர்

"ஏன் சாமி நீங்க கண்ணு மூடிட்டு என்ன பண்ணிங்க" சிறுவனின் கேள்வி

எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறுவனின் கண்களில் பளிச்சிட்டது. குவிந்த கை அவன் தந்தையை போலô பணிவு

"மகனே அதற்குப் பெயர் தியானம்.. கடவுளைச் சேரும் வழி"

"அப்படின்னா எனக்கும் சொல்லி தருவிங்களா சாமி?"

ஒரு முனிவர் ஆதரவாய் சிறுவனின் தலை தடவினார்.

"உன் ஆர்வத்திற்கு எதையும் நீ சீக்கிரமாகக் கற்று கொள்வாய்; இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்"

"அப்ப சாமி, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க"

வேடுவன் தன் மகனை அழைத்துìகொண்டு சொன்னார்

"கொஞ்சம் *பஞ்சாட்சரம் தாங்க சாமி. நாங்க கெளம்பறோம் சாமி"

*(பஞ்சாட்சரம் = விபூதி )
o o o

காலம் தன் கடமை மறக்கவில்லை. அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடங்கள் உருண்டோட சிறுவன் இப்போது இளம் காளை. வேடுவக் கூட்டம் கூட சற்று அதிகரித்திருந்தது.

"ஏகலைவா!". தந்தை அழைத்தார். சுற்றிலும் கவலை தோய்ந்த பல முகங்கள்.

"என்னப்பா?"

"எனக்கு.. வயசாய்டிச்சி.. இனிமே நீதான் என்னோட பொறுப்பெல்லாம் பார்த்துக்கனும்" மரணப்படுக்கையில் இருந்து கொண்டு அவன் தந்தை சொன்னார்.

"ஆனா எனக்கு எதுவுமே தெரியாதப்பா."

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்" தந்தையின் கடைசி வார்த்தை.

"சரிப்பா ஆன கடவுள் யாருப்பா?" அவன் சொன்னதைக் கேட்பதற்கு தந்தை உயிரோடு இல்லை. எல்லாம் முடிந்து விட்டது

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ஏகலைவன் தலைவன் பதவி வேண்டாம் என்று சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆகப்போகிறது.. ஊரெல்லாம் இதே பேச்சு

"ஏ புள்ளே, நம்ம தலைவரு பையன் ஏன் இப்படி இருக்குது.."

"அப்பா போன வருத்தம் புள்ளைக்கு இருக்காதா? எல்லாம் சரியாய்டும்.. நீ வா சாப்ட"

"நம்ம ஏகலைவன் பைத்தியம் மாதிரி திரியிறானே யாரு இனிமே தலைவரு?"

"அட நம்ம மருதப்பன் இருக்காருல்ல.."

"என்ன இருந்தாலும் இவருதாம்புள்ள வரணும்."

பல விமர்சனங்கள். ஏகலைவன் பித்தன் போல காடு மேடு எல்லாம் திரிந்தான். எதிர்வரும் எதையும் அறியவில்லை. யார் பேசியதையும் கேட்கவில்லை.

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்"

அப்பாவின் வார்தைகள் மட்டும் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் கடவுளை எப்படிப் பார்ப்பது?? எப்படிக் கேட்பது? அதுதான் புரியவில்லை.

"மரத்தடியில் உக்காந்திட்டு இருப்பாரே அந்த முனிவரைப் போய்ப் பார்த்தா என்ன?.."

மறுபடி கானகத்தை நோக்கி ஓடினான். முனிவரைத் தேடி அலைந்த்தான். அடடா அவரையும் காணலையே. அவர்கள் செய்தது போல நாமும் செய்தால் என்ன? அவர் இருந்த இடத்திலேயே கண்மூடி அமர்ந்து யோசித்தான்.

"அப்பாவின் பொறுப்பு மிகப் பெரியதாயிற்றே, அவர் பெரிய வேட்டைக்காரர்.. அவரை நம்பி பல குடும்பம் இருந்திச்சி.. இப்போ எல்லாம் நான் தானே பார்த்துக்கனும்.. எனக்கு அவ்வளவா வேட்டையாடத் தெரியாதே.. சே இந்த சாமி இங்க தானே இருந்தார், எங்க போனார் தெரியலை.. இருந்தா அவரையாவது கேக்கலாம்.. பல எண்ணங்கள் மனதுள் ஓட இன்னும் கண் மூடியே அமர்ந்திருந்தான்.

மனத்திற்க்கும் சுவாசத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. சுவாசம் கட்டுப்பட, சீரான மூச்சு மனதை கட்டுப்படுத்தும். கட்டுப்பட்ட மனதை தொடர்ந்து உற்று பார்க்க மனம் வெளி நினைவுகளில் இருந்து விடுபடும். வெளி நினைவுகள் விடுபட்டால் உள்ளே ஒரு அமைதி தோன்றும். குருவருள் இன்றி அது யாருக்கும் எளிதாக வராது. அவனுக்கு எந்த குருவின் உதவியும் இல்லாமல் தானாக வந்தது. அது கடவுளின் அருள். தான் தியானிப்பது தெரியாமலே தியானத்தில் ஆழ்ந்தான்.

அவன் எப்போது தன்னை மறந்தான், அவனுக்கே தெரியவில்லை. விழிப்பு வந்த போது பொழுது சாய்ந்து விட்டு இருந்த்தது. மனம் சற்று தெளிவாக இருப்பது அவனுக்கே புரிந்த்தது. ஏதோ ஒரு முகம் மட்டும் மனதில் வந்து போனது. அந்த முகம் தன்னை தலைமை ஏற்க சொன்னதாய் ஒர் உணர்வு இருந்தது அவனுக்கு. தினமும் அந்த இடத்தில் அமர்ந்து யோசிப்பது என முடிவு செய்தான். மெல்ல வீடு திரும்பினான்..

"எலே எங்க போன?.. இப்ப தான் ஊரு சனம் வந்து உன்னைத் தலைவரா தீர்மானமா முடிவு பண்ணிட்டு போனாங்க.. நீ பாட்டுக்கு நாளைக்கு எல்லார் முன்னாடியும் ஆவாதுன்னு சொல்லாதே.. இது பரம்பரை பரம்பரையா வர்றது. நீ மாத்திப்புடாதே.. அப்புறம் இந்தக் கிழவி சும்மா இருக்க மாட்டேன், ஆமாம்"

பாட்டியின் மிரட்டல் காதில் விழுந்தாலும் மனதில் விழவில்லை.

"சரி பாட்டி."

அவன் அறை நோக்கி சென்றான். அங்கே அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது எதோ ஒரு முகம் தெரிந்ததே.. யாருடையது.. சற்றே கரிய முகம் ஆனால் புன்னகையுடன் எளிதில் வசீகரிக்க கூடிய முகம்.. அந்தத் தலையில் கூட ஏதோ, ஆம்! மயில் இறகு இருந்தது.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அந்த முகத்தை நினைத்துக்கொண்டே உறங்கி விட்டான்.

ஏகலைவன் தலைவன் ஆகி இதோ பல மாதங்கள் ஆகி விட்டது. தந்தை சொல்லிக் கொடுத்த வில் பயிற்சி அவனுக்குப் போதாது போல் உணர்வு..

"எத்தனை பேர் என்னை நம்பிக்கினு இருக்கும் போது.. வெறும் வேட்டையாடறதுக்கா நானு? அதை இங்கு நெறைய பேர் செய்வாங்களே.. இவர்களைக் காப்பாத்த நான் நல்ல வில்லாளி ஆவணும். ஆனா யார் கிட்ட போய் கேட்கிறது? யார் சொல்லித் தருவாங்க... அடடா யோசிச்சிக்கினே ரொம்ப தூரம் வந்துட்டேன் போல் இருக்கிறது."

ஏகலைவன் திரும்ப எத்தனித்தான்..

நடுப்பகல், பசித்தது. எதிரே மாமரம் பொன்னிறத்தில் பழங்களுடன். அருகில் சென்று சில பழங்களை பறித்துச் சாப்பிட்டான். அந்த மரத்தின் பழம் ஓரளவு பசி தீர்த்தது.. அட இதென்ன ஆச்சர்யம்.. மரத்தின் அத்தனை இலைகளிலும் ஓட்டை? கீழே சிதறி கிடக்கும் அம்புகள்.. யார் செய்தது இந்த அதிசயத்தை.. யாரோ வருவது தெரிந்தது ...

"ஏன் சாமி இது என்ன புதுசா மாமரத்துல எல்லா எலையிலயும் ஓட்டை.. எப்படி வந்துச்சி?" எதிர்பட்டவரிடம் கேட்டான்..

"அதுவா.. நம்ம இளவரசர் அர்ஜுனன் இருக்காரில்லை அவர் பண்ணது.. இந்த வயசிலே வில்லு வச்சிட்டு என்ன ஒரு வேகம், தெகச்சி போய்ட்டேன் போ.. அவங்க குருவே அசந்துட்டாருன்னா" .. கேட்டதும் ஏகலைவன் மனம் குதூகலித்தது.

இவர் தான் என் குரு. இவரிடம் தான் நான் வில் கற்று கொள்ள வேண்டும்..

"ஏன் சாமி அவர் பேரு... "

"அட இது தெரியாதா தம்பி, நம்ம துரோணரப்பா, புது ஆச்சார்யார்"

"ரொம்ப நன்றிங்க சாமி!" உள்ளம் குதூகளிக்க துள்ளலுடன் நடந்து சென்றான்

o o o

அது அரச குமாரர்களுக்கான பாடசாலை. நிறைய மாணவர்கள். தயக்கத்துடன் வெளியே இருந்தான். அவனுடைய வித்யாசமான தோற்றம் உள்ளிருந்த்த மாணவர்களை கவர்ந்திருக்க வேண்டும். சிலர் பாடத்தை விட்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தனr. சில கண்கள் நகைத்தன. ஆச்சார்யாரின் பாடம் நின்றது.

"யாரப்பா நீ?"

"சாமி, எம்பேரு ஏகலைவன்"

"சொல்லப்பா, என்ன வேண்டும்?"

"சாமி நான் எங்க காட்ல இருக்கிற வேடர் தலைவனுங்க.. எங்க கும்பலை நான் காப்பாத்த எனக்கு நல்ல வில் பயிற்சி வோணும் சாமி, சாமி சாமி இங்க பாருங்க சாமிக்கு தட்சிணையா பாருங்க மலை தேனு .. ரொம்ப மேல இருந்துதுங்க சாமி.. உங்களுக்கா நானே எடுத்தேன் சாமி.. இங்க பாருங்க உயர்ந்த சாதி புள்ளி மான் தோலு, அப்புறம் இது ரொம்ப முத்துன சந்தனம், இது எல்லாம் எடுத்துகிட்டு எனக்கு வித்தை சொல்லித் தாங்க சாமி"

ஆச்சார்யார் அவனை உற்று பார்த்து கொண்டு இருந்தார்..

மிகுந்த வெகுளி முகம், உண்மை தவிர வேறொன்றும் பேசத் தெரியாத உள்ளம்.. மிகச்சிறிய வயது.. தனக்காக வித்தை கேட்காமல் தன் இனம் காக்க கேட்கிறான். இவன் வாழ வேண்டும்.. இவன் போன்றவர்கள் வாழத்தான் வேண்டும்.

"இல்லையப்பா... நான் இந்த அரச குமாரர்களுக்கு தவிர யாருக்கும் சொல்லி தருவதில்லை என்ற விரதம் கொண்டு இருக்கிறேன்"

"சாமி அப்படி சொன்னா எப்படி.. நான் உங்களை நம்பி வந்துட்டேன்.. நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும்"

அர்ஜுனன் முகத்தில் கனல் தெரித்தது... இருந்தும் சும்மா இருந்தான்.. ஆனால் துரியன்..

"குருவே.. அரகுமாரர்களுக்கு இணையாய் ஒரு வேடுவன் பயில்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" துரியோதனன் வெளிநடப்பு செய்யும் வேகத்தில் இருந்த்தான்..

காலை முதல் துரோணர் அர்ஜுனனை வாழ்த்திப் பேசியது ஏற்கனவே மனதை அரித்திருந்தது. துரோணர் மெளனமாய் இயலாமையுடன் அந்த வேடுவன் தலை தடவி கொண்டு இருந்தார்..

"மகனே என்னால் உனக்குக் கல்வி சொல்லித் தர இயலாது.. சென்றுவா.."

வருத்தம் தோய்ந்த முகத்துடன் துரோணர் சொன்னார்.

"சாமி..."

"கடவுளைக் கேள் மகனே.. உனக்கு வேண்டியது கிட்டும்.. இப்போது நீ புறப்படு.. நான் பாடத்தைத் தொடர வேண்டும்.. நீ கொண்டு வந்த தட்சிணையை எடுத்துச் செல்"

"இல்லை சாமி அது உங்களுக்காகக் கொண்டுவந்தது.."

கொண்டு வந்ததை அப்படியே வைத்துவிட்டு ஏகலைவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

"அர்ஜுனா எடு வில்லை.. அந்த மரத்தின் பின்னால் இருக்கும் பொம்மையை உன் ஒரு கணையால் வீழ்த்து!" பின்னால் குருவின் குரல் மெல்ல மெல்ல காதுகளில் ஒலி குறைந்து ஒலித்தது.

o o o

ஏகலைவன் தினமும் அமரும் மரத்தடி.. இப்போதும் கண் மூடி அமர்ந்திருந்தான். இப்போதெல்லாம் அந்த முகம் சற்று தெளிவாய் இருப்பதாய் உணர்ந்தான். தந்தையின் ஆணை மற்றும் குருவின் ஆணை.. கடவுளைக் கேட்க சொல்லி..

ஆனால் கடவுள் யாரென்று தெரியவில்லை. வெறும் சிலை வைத்து ஏதோ ஒரு உருவம் கொடுத்து வணங்குகிறோமே அது தான் கடவுளா? இல்லை அதைத் தாண்டி ஏதோ ஒன்று.. சிலை வெறும் வாயில். அதன் மூலம் கடவுள் நமக்கு அருள் செய்கிறார். உண்மையில் எது கடவுள்? அதுதான் யாரென்று தெரியவில்லை. ஒருவேளை அடிக்கடி மனதில் வந்து போகும் அந்த முகம்தான் கடவுளோ? அதையே கேட்டால் என்ன?

கடவுள்... கடவுள்.. கடவுள்....

கடவுள் என்றதும் அவனுள் ஒரு பொறி தட்டியது. கடவுளை சிலையாய் வடித்துதானே கும்பிடுகிறோம், அந்த சிலை அருள் செய்யும் போது.. குரு அருள் செய்ய மாட்டாரா என்ன? மலர்ந்தான். குருவின் சிலை மெல்ல மெல்ல உருவானது. இராப்பகலாய் உழைத்தான்.. இதோ குருவின் சிலை தயாராகிவிட்டது. அடடா என்ன கனிவான முகம்.. என்ன ஒரு அருட்பொங்கும் பார்வை.. குருவைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவன் மனத்தின் அழகு சிலையில் வெளி வந்தது. பக்கத்தில் இருந்த மூங்கில் வளைந்து கொடுத்தது போல் இருந்த்தது.. எல்லாம் குருவின் ஆசிர்வாதம். அந்த மூங்கில் கொண்டு அழகான ஒரு வில் செய்தான்.

இரவு பகல் இல்லாத அசுரத்தனமான பயிற்சி. எல்லாம் வெகுவாய் இலகுவாய் வந்தது. இப்போது ஏகலைவன் சிறந்த வில்லாளி. சில நேரம் எதிர் வந்த பகையை வெகு இலகுவாய் ஒருவனாய் துரத்தினான். அவன் ஊரெல்லாம் அதே பேச்சு. இருந்தும் தினமும் அவன் செய்யும் தியானமும் குருவின் முன்னால் விற்பயிற்சியும் தவறுவதில்லை. இச்செய்தி அர்ஜுனன் காதில் தீயென விழுந்தது. பொறாமை மெல்ல உயிர்தெழுந்தது. அது குருவுடன் கானகம் செல்லத் தூண்டியது.

"குருவே இன்றைய பயிற்சியைக் கானகத்தில் வைத்து கொள்ளலாமா??"

குருவுக்கும் தெரிந்திருந்தது ஏகலைவன் புகழ். எப்படிக் கற்றுகொண்டான் இத்தனை அஸ்திரப்ரயோகம்.. நாம் தான் மறுத்து விட்டோமே, வேறு யாரவது? ஒருவேளை கிருபர் சொல்லித் தந்திருப்பாரோ.. சே சே.. இருக்காது.. சரி நேரில் சென்று கேட்டால் என்ன...

"சரி அர்ஜுனா.. அப்படியே ஆகட்டும்" ஆச்சார்யார் சம்மதித்தார்

ஒரு படை போல் திரண்டு சென்றனர் குருவும் மாணவர்களும். கூடவே கானகத்தில் வீழ்த்திய விலங்குகளை இழுத்து வர ஒரு நாயுடன்.

வழக்கம் போல் தியானத்தில் அமர்ந்திருந்தவன் காதில் தான் செல்லமாய் வளர்த்த மானின் அபயக்குரல். எழுந்து சென்று பார்த்தான்.. அங்கே ஒரு நாய் இடைவிடாது குரைத்து மானை பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஒரே ஒரு கணை.. நாயின் குரல் அடங்கியது. பின்னலிட்டு தைத்தார்போல் அதன் வாய் அந்தக் கணையால் கட்டுண்டது.

இது என்ன புது நாய், யாருடையது?.. விளங்காமல் அதன் பின்னே சென்றான். அங்கே, துரோணர் அர்ஜுனனுக்கு பயிற்றுவித்துக் கொண்டுஇருந்தார்.

"அர்ஜுனா.. இந்த அஸ்திரம் எந்த விலங்குகளின் வாயையும் கட்டக் கூடியது.. இதைத் தெரிந்தவர்கள் அதிகம் கிடையாது.. இதை உனக்கு சொல்லித் தருகிறேன்.. கேள்.. நான் சொன்ன மந்திரம் உச்சரித்து இந்த கணை செலுத்து.. "

அர்ஜுனன் கணை எய்ததோ ஒரு புலியின் மேல்.. வாய் தைக்கபட்டு வந்து எதிர் நின்றதோ அவன் அழைத்து வந்த நாய். தவறாய் எய்துவிட்டோமோ.. ஆனால் புலியும் வாய் கட்டுண்டு கிடந்தது. இது வேறு யாரோ எய்த அம்பு.

அர்ஜுனன் கோபம் கனலாய் இருந்தது..

"குருவே.. எனக்கும் மேலான மாணவன் உங்களுக்கு கிடைத்துள்ளான் போலும்.. " பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அழுகையை விட கொடிய ஆயுதம் இல்லை. அர்ஜுனன் அதை அந்த நேரத்தில் நன்றாக பயன் படுத்திக்கொண்டான். கோபம் அழுகையாய் மாறியது..

துரோணர் பதைத்துப் போனார். அரச குல மக்கள் அழுவது நல்லதல்லவே... அது தனக்குத் தீங்காய் அல்லவா முடியும்... துரோணர் சுற்றிலும் பார்த்தார். அங்கே நிற்பது யார்?.. அடடா இது அந்த வேடுவன் அல்லவா.. அவனுக்கு எப்படித் தெரிந்தது இந்த வித்தை....

"நீ ஏகலைவன் தானே?.. இங்கே வா!"

அவர் அழைப்புக் குரல் கேட்டதும் அவர் காலடியில் இருந்தான் ..

"ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி!"

"எழுந்திரு மகனே.. நீடூழி வாழ். இந்த அத்திரப் பிரயோகம் மிகவும் அரிதாயிற்றே, உனக்கெப்படித் தெரிந்தது"

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் சாமி!"

"நான் உனக்கு எதுவும் சொல்லி தரவில்லையே, பின்பு எப்படி ??"

அவன் அந்த சிலை பற்றி விவரித்தான். அதற்குள் ஊர் திரண்டிருந்தது.

குரு அர்ஜுனன் முகம் பார்த்தார்.. தலை கவிழ்ந்து பொறாமையுடன் கோபத்தை மனதுக்குள் அடக்கிக் கொண்டு கண்களில் நீருடன் இருக்கும் அவனைப் பார்க்கும் போது முதன்முறையாக அவன்மேல் சிறு வெறுப்பு ஏற்பட்டது. இருந்தும் இவனால் தான் என் சபதம் நிறைவேற வேண்டும்... துரோணரின் மனமும் முகமும் இறுகியது.

"ஏகலைவா.. குருதட்சிணை இல்லாமல் பயில்வது தவறல்லவா... "

"என்ன வேண்டும் சொல்லுங்க சாமி.. என் உசுரு வோணும்னா கூட குடுத்துடுவேன்."

"உன்னுடைய வலது கை பெருவிரல் வேண்டும்"

பேரதிர்வுக்குள்ளான ஊர் மக்கள் கோபத்தால் ஏசினர்..

"ஏகலைவா இந்தாளு உனக்கு ஒண்ணும் சொல்லி தரலே.. நீயா கத்துக்கிட்டே.. அதனால நீ சும்மா எங்க கூட வா.. அவங்களை நாங்க பாத்துக்கறோம்"

அர்ஜுனன் கை வேகமாய் வில்லின் பக்கம் போனது.. ஏகலைவன் அலட்சியமாய் அர்ஜுனனைப் பார்த்தான். பின் தன் கூட்டத்தினரிடம் திரும்பினான்

"எல்லாரும் சும்மா இருங்க.. கடவுளை சிலையா வச்சித் தான் கும்புடுரோம்.. அதனால கடவுள் நமக்கு அருள் செய்யலைன்னு ஆயிடுமா அது மாதிரி தான் இதுவும் "

கண்ணை மூடினான்.. அந்த நீலவண்ண முகம் பளிச்சிட்டது..

"சம்மதமா" கேட்டான்..


அந்த முகம் சம்மதம் எனத் தலையாட்டியது..

இடையில் இருந்த குறுவாள் மீதிப் பணி செய்தது. குருவின் காலடியில் அவன் பெருவிரல் துடித்தது. துரோணரின் இறுக்கமான முகம் எந்த சலனமும் இல்லாமல் அர்ஜுனனைப் பார்த்தது..

அர்ஜுனன் மகிழ்சியில் தத்தளித்துக்கொண்டு இருந்தான்.

அட இது என்ன துரோணச் சிலையின் கண்களில் நீர் துளிர்ப்பு?? காலைப் பனித்துளி இன்னும் காயலையோ இல்லை துரோணரின் மனத்தின் அழுகை சிலையின் கண்ணீராய் வெளிவந்ததோ? எதையும் பார்க்கும் நிலையில் ஏகலைவன் இல்லை. வலி உயிர் வரை பாய்ந்த்தது. மெல்ல மெல்ல நினைவிழந்தான்.

o o o

ஏகலைவனுக்கு மணமாகி ஒருகுழந்தைக்கு தந்தை ஆகிவிட்டான். தந்தையை கேள்வி கேட்கும் வயது அவன் குழந்தைக்கு. கேள்வி கேட்பது குழந்தைகள் குணம். எதையும் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்ளும். மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் வெளிப்பார்வைக்கு அர்த்தமற்றதாகத் தோன்றினாலும் ஏதேனும் தேடல் உள்பொதிந்து இருக்கும். இந்தப் பருவத்தில் எழும் கேள்விகளும் அதற்குக் கிடைக்கும் பதில்களுமே அவர்கள் வாழ்க்கையின் அத்திவாரங்கள்.

மகனுக்கு முதல் விற்பயிற்சி, குழந்தையின் கேள்விகளுடன் ஆரம்பம் ஆனது.

"முதலில் எந்த விலங்கு மீதும் அனாவசியமாக அம்பு செலுத்தக் கூடாது"

"அப்பா எது அவசியம்? எது அனாவசியம்?"

"உணவுக்காகவும் தற்காப்புக்காகவும் செய்வது அவசியம், விளையாட்டுக்காவும் வெறி கொண்டு கொல்வதும் தவறு"

"உணவுக்காகக் கொல்வது தவறில்லையா?"

"அது நம் குலதர்மம்."

"உங்கள் கட்டை விரல் எங்கே?"

"குருவுக்குக் காணிக்கையாய் வெட்டிக் கொடுத்துவிட்டேன்"

"அப்போது உங்களுக்கு வலிக்கவில்லலையா?"

"வலிச்சது.. மிகவும் வலிச்சது கண்ணா, உயிர் போறது போல வலிச்சது"

"கட்டை விரலுக்கே உனக்கு அவ்வளவு வலித்ததா?"

"ஆமாம் கண்ணு "

"அப்படியானால் நாம் அம்பு எய்து கொல்லும் உயிர்களுக்கும் வலிக்கும் தானே.. அது பாவமில்லையா?"

ஏகலைவன் அயர்ந்தான். என்ன சொல்வது.. கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றா? இல்லை கொல்லுதல் கூடாதென்றா?.. கொல்லாமல் உயிர் வாழ்வதெப்படி? சற்று நேரம் மௌனமாய் இருந்தான். அந்தக் கேள்வி வெகுவாய் பாதித்தது. சற்று நேரம் தேவையான அடிப்படை வித்தை சொல்லித்தந்து விட்டு அதனை மறுபடி செய்யச்சொல்லி சரிபார்த்தான். பரவாயில்லை.. வேகமாய் கற்றுக் கொள்கிறான்.. மனம் திருப்தி அடைந்தது.

மகனை அழைத்துக் கொண்டு அவன் அமரும் மரத்தடி சென்றான். இலை உதிர் காலம்.. மரம் எதையோ பறி கொடுத்தார் போல சோகமாய் இருப்பது போல் தெரிந்தது. அவன் மனம் இன்று ஒருமுகப்படவில்லை.. பிள்ளையின் கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது. சற்று காலாற நடந்தால் என்ன.. எழுந்து நடந்து சென்றான்.

அப்போது .....

( தொடரும் )
இரண்டாம் பாகம்

9 comments:

pillaigaluku solla oru arumayana kathai. nandri jeeves.

ithu ungaloda muthal post inge. atharkum special valthukkal

/புதுகைத் தென்றல் said...
pillaigaluku solla oru arumayana kathai. nandri jeeves.

ithu ungaloda muthal post inge. atharkum special valthukkal
//

ரிப்பீட்டே :)

இரண்டாம் பாகம் படிக்க ஆவல் :)

புதுகைத் தென்றல் said...//
சென்ஷி said...//
rendu perukkum nanRi

சற்றே பெரிய கதை பாஸ்!

இரண்டாம் பகுதிக்கு ஆவலுடன் அமர்ந்திருக்கிறேன் பாஸ்!

அருமையான கதை.....

அடுத்த பகுதி எப்போ?????

அசத்தல்...

ஐயோ! தொடர்ச்சி என்னாச்சு?

uma

second part is here

http://parentsclub08.blogspot.com/2008/11/2_14.html

i will update the link in part one also

thanks all for your encouraging comments.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்