பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

4ஆம் வகுப்பு மாணவன் கூட ஐ லவ் யூ என்று தன்
சகவகுப்பு மாணவியிடமோ, தோழியிடமோ சொல்லும்
காலம் இப்போது. இந்த நிலையில் பதின்மவயதுக்குழந்தைகள்
பற்றி சொல்லவே வேண்டாம்.

பாய்ஃப்ரெண்ட்/கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாவிடில் அவர்கள்
எதற்கும் லாயக்கற்றவர்கள் என சொல்லும் நட்பு வட்டம்...
ஸ்டேடஸ் சிம்பளாக ஒரு பெண்ணோடோ/ஆணோட
நட்பு இருப்பதாக காட்டிக்கொள்வது சர்வ சாதரணமாகிவிட்ட
சூழல் என இருக்கும் நிலையில் பிள்ளைகள் காதல்
வயப்படுகிறார்கள். இது உண்மையில் காதலில்லை
என்று சொன்னால் கேட்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை.
தனக்கென ஒரு உலகம் அமைத்து அதற்குள் வாழும் அவர்கள்,
தனக்கான தனி அடையாளம் அமைத்துக்கொள்ள என்ன
வேண்டுமானாலும் செய்ய கூடிய ஒரு மனநிலையில்
இருப்பார்கள்.

வீட்டுக்குள் அடைப்பது, திட்டுவது, அடிப்பது, சோறு
போடாமல் கண்டிப்பது எல்லாம் வேலைக்கு ஆவாது.
அவர்களுடன் பேசி நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள
வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள்
தான் தனது வாழ்க்கையின் முக்கிய எதிரி என நினைப்பார்கள்.
அன்பான வார்த்தை கூட எடுபடாத இந்த சூழலில்
இது எதிர்பாலினத்தரின் மீதான ஒரு கவர்ச்சி. இது
இப்பொழுது நிகழக்கூடிய ஒன்று. இதை காதல் என
தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கையை வீணாக்காமல்
படிப்பை கவனித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என
பேசிப் பேசி புரிய வைக்க வேண்டும்.
சொல்வது போன்ற எளிது கிடையாது.

தற்போது படிப்பில் கவனதை செலுத்தி நல்லதொரு
வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு
அப்போதும் இருவருக்கும் இருந்தால் பார்க்கலாம்
என சொல்லலாம். ஏன் கூடாது??? என எதிர் கேள்வி
வீசப்போகும் பிள்ளைக்கு அதை புரிய வைக்க வேண்டியது,
நிதர்சன உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது
பெற்றோரின் கடமை.

ஆகாயத்தில் கோட்டை கட்டாமல் நிதர்சனங்களை அலசி
ஆராய்ந்து தனக்கென கால் ஊன்றிய பிறகு தன் வாழ்க்கை
துணையை தேர்ந்தெடுப்பது நலம் என சொல்லவேண்டும்.
இந்த வயதில் இந்த இனக்கவர்ச்சி இயல்பானது என்பதை
புரிந்து கொண்டு பெற்றோரும் குழந்தைகளை அதிகமாக
கட்டுபடுத்தாமல் நல்ல வழிகாட்டியாக பிள்ளைகளுக்கு
உதவி இனிதாக பதின்மவயதை தாண்ட உதவ வேண்டும்.

ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,

இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர்.

அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.

பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை."லட்ச்சுமணா "என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.

வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராடனங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.

பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.

கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.

அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.

அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;

"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.

பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.

இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.

வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .

"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.

வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.

வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.

தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.

" நீயோ என்னைக் கொன்றது !?"

தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;

"என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே"!

அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;

"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! "

தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.

குழந்தைக்கு ஒன்றுமில்லையா!அப்படியானால் லட்சுமணன்!

பாதையில் கண்ட கீரி நீயோ!

என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!

ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!

அலறித் துடித்தார் அந்தணர்."

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!

மாரல் ஃஆப் தி ஸ்டோரி :

ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.

எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,

முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,

ம்மா ...ரொம்ப வலிக்குமா ?

ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;

சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.

அதெல்லாம் இல்ல...

அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !

ஏன் ?

அவ மகர ராசியாம்

வாட்?!

ம்ம்...டி.வி ல சொன்னாங்க .

சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!

இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...

( !!! )வேறென்ன பல்பு தான் .
அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .
போம்மா நீ பொய் சொல்ற .
நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.
ம்மா ...
ம்ம் ...சொல்லு
ம்மா
சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.
ம்மா ...
கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...
சொல்லிட்டு தூங்கும்மா
சரி கேளு
எப்போ பல்லு விழும்.
அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.
ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.
இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.
இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.
சரி ...சரி தூங்குடா இப்போ .
இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?
சீக்கிரமாவே தான் .
அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?
(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .
ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .
ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.
:((((
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி) நோட்:
நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;
"கடக்" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.
அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .
ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.

கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.

தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.
முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.

சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.
அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?
இதன் செய் முறை:
குருந்தட்டி வேர் - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
சாரண வேர் - 50 கிராம்
மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.
இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.
அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.
பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.

தொடரும்

post by நானானி

அந்தக்காலத்தில் பிள்ளை பேறு என்றால் பத்தியம், பக்குவமான சாப்பாடு
என இழந்த சக்தியை மீட்டுத் தரும் வகையில் குழந்தை பெற்ற
பெண்ணின் உடலை பாதுகாக்கும் டெக்னிக் பாட்டி வைத்தியம்.
அதனால்தான் அந்தக்காலத்தில் பெண்கள் ஸ்ட்ராங்காக இருந்தார்கள்.
பிள்ளை பிறந்த உடன் டாக்டருக்குத் தெரியாமல் தேனைக்குழைத்து
கோரசினை மருந்தை நாக்கில் தடவிவிடுபவர்களும் உண்டு.

நம் பாரம்பரிய பாட்டி வைத்தியம் சில தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.
நம் நானானி அவற்றை அழகாகத் தொகுத்து தன் வலைப்பூவில்
பதிவிட்டுக்கொண்டு வருகிறார். பேரண்ட்ஸ் கிளப் வாசகர்களுக்கும்
அவை பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி
பெற்று அவரது அனுமதியுடன் இங்கே அந்தத் தொகுப்பை ஒவ்வொன்றாக
பிரசூரிக்க இருக்கிறோம்.

இதோ அவர் சொல்வதை கேளுங்கள்:

பிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.
முதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.
உள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.

என்ன செய்யலாமென்று,"திங்..திங்.." என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா!!!!
அதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.
அந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.

அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.

தொடரும் இவரது பதிவுகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் சிந்தனையைத் தூண்டி அறிவுத்திறனைப் பெருக்கும் முறையில் வடிவமைக்கட்டுள்ளன. ஆனால், இப்போது நாம் பரவலாக கல்வி என்பது

அறிவு என்ற கோணத்தை மீறி கல்வி என்றால் மதிப்பெண்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காலத்தின் மாற்றத்தில் இதுவும் அவசியமாகிப் போய்விட்டது.

பள்ளிகளும் சரி, பெற்றோரும் சரி....மதிப்பெண்களையே முன்னிலைப்படுத்தி, முக்கியப்படுத்திப் பார்க்கப் பழகிவிட்டோம்.

அந்தந்த வகுப்புக்கு, அந்தந்தப் பாடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளா போதிய செய்திகள் மாணவர்களிடம் பல நேரங்களில் சரியாகச் சென்று சேர்வதில்லை.

ஆசிரியரின் போதனையை இங்கே நான் குறைசொல்ல வரவில்லை. மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தும் காரணத்தால், முக்கியமான பல கேள்விகளுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது சில நேரங்களில், சில பகுதிகளையே தவிர்க்கும் சூழலுக்கு மாணவர்களைத் தள்ளுகிறது.

எல்லா மாணவர்களும், எல்லா நேரமும் 100/100 மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், அவரவர் வயதுக்கேற்ற, வகுப்பிக்கேற்ற அறிவைப் பெறுவது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட கேள்வி பதில்களை மட்டுமல்லாமல், பாடத்தின் மொத்த வரிகளையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டியது மிகவும்
அவசியம்.

CBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன். அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது.

 புதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.

http://malar-studyroom.blogspot.com/

ஒன்பதாம் வகுப்பு (CBSE) இரண்டாம் பருவத்திற்கான அறிவியல், சமூக அறிவியல் பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.

குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு பெற்றோர்களுக்கு
இருப்பது போல குழந்தை நல மருத்துவருக்கும் இருக்கு.
குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிரது இவர்களது
வேலை. மிகவும் ஸ்ட்ரெஸ் தரும் மருத்துவத்துறையில்
இருப்பதாலோ என்னவோ பல மருத்துவர்கள் எதையும்
பெற்றோர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நோய்க்குண்டான மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு
அனுப்பி விடுவார்கள்.

என் அம்மாவின் ஒன்று விட்ட தம்பி ஒரு குழந்தை
நல மருத்துவர். அம்ருதா பிறந்த உடன் தலையை இஞ்ச்
டேப் வைத்து அளந்து பார்த்து, கைகளில் பென்சில் கொடுத்து
பிடிக்கிறாளா என்றெல்லாம் செக் செய்தார். 1 1/2 நாளிலேயே
அம்ருதாவுக்கு ஜாண்டிஸ் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து
உடன் போட்டோதெரப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார்.

அப்போதுதான் எனக்கு குழந்தை நல மருத்துவரின்
முக்கியத்துவம் புரிந்தது. தலையின் அளவை வைத்து
மூளையின் சைஸை கண்டுபிடிப்பார்களாம்! கையில்
கொடுப்பதை பிடிக்கும் சக்தி, திறன் இவற்றை சோதித்து
ஏதும் பிரச்சனை என்றால் ஆரம்பித்திலேயே கண்டு
பிடிப்பார்கள் என குழந்தை நல மருத்துவரின் பங்கு
சொல்லிவிட முடியாது. வெறும் காய்ச்சலுக்கும், ஜுரத்துக்கும்
மட்டும் மருந்து கொடுக்கும் மருத்துவர் போல இல்லை.

சரி இவ்வளவு ராமாயணம் ஏன்? எனது சென்ற பதிவுக்கு
ஒரு குழந்தை நல மருத்துவரிடமிருந்து வந்திருந்த
பின்னூட்டத்தை தொடர்ந்து அவரின் வலைப்பூக்களை
சென்று பார்த்தேன். வியந்தேன். எப்படிப்பட்ட நிகழ்வுகள்
பெற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ அவற்றை
மிக அழகாக தொகுத்து தனது வலைப்பூவில் தந்திருக்கிறார்
டாக்டர்.ராஜ்மோஹன்.

பலருக்கும் உதவும் என்பதால் அவரின் வலைத்தளங்களை
இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

குழந்தை நலம் வலைப்பூ:


உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

குழந்தையின் ஜிப் அவிழ்க்கும் போது மாட்டிக்கொண்டால்?

உங்கள் குழந்தையின் உயரத்தைக் கணிக்க

இப்படி நிறைய்ய்ய இருக்குங்க அவரது வலைப்பூவில்.

இந்தப் பதிவின் மூலம் மதிப்பிற்குரிய டாக்டர்.ராஜமோஹன்
அவர்களுக்கு நமது பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து
பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து
வைத்து பதிவு போட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

http://www.livechennai.com/detailnews.asp?newsid=1488
வாசகர்களுக்கான தகவல் :
சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ 250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது .

இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி ரூ 50 குறைக்கப்பட்டது. அதன்படி, தடுப்பு மருந்துக்கு ரூ 100, தடுப்பூசிக்கு ரூ 200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடபடுகிறது
முகவரி :
Alandur Road, SIDCO Industrial Estate
Chennai, Tamil Nadu 600032
044 22501520

044 22501778

044 22501706

044 22501233

.

வயது வித்தியாசமில்லாம எல்லா பெண்ணும் சலிச்சுக்கும்
விஷயம் இது. யாரு கூப்பிட்டா இந்த அழையா விருந்தாளிய?
எப்ப வேணாம்னு நினைக்கிறோமோ அப்ப கரெக்டா வந்திடும்?
இப்படி அர்ச்சனை வாங்குவது வேற யாருமில்லை மாதாமாதாம்
வரும் மாதவிடாய்க்குப் பெயர் தான் அழையா விருந்தாளி.

ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள்னு சொன்னாலே பாவம்! இன்னும்
35 வயசுக்கு கஷ்டப்படணும், தலையெழுத்து!!! நல்லவங்களுக்குத்தான்
40ல நிக்கும்!! என ஏஏஏகப்பட்ட சொலவடைகள் சொல்லி
டெர்ரர் ஆக்குவதே வேலையா இருக்கும். இது மனோதத்துவ
ரீதியில பாதிச்சு மனசுல செட்டாகி மாதவிடாய் என்றாலே
ஏதோ ஒரு வியாதி மாதிரி ஆகி அதனாலே கூட அந்த
சமயங்களில் உபாதைகள் அதிகமா இருக்காம்.


இப்பெல்லாம் பெண் குழந்தைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்திடறாங்க.
அதனால அவங்களுக்கு எல்லாம் சொல்லி வைக்க வேண்டியது
அவசியம். என்னைப்பொறுத்தவரைக்கும் இதை ஒரு
mental preparation அப்படின்னு சொல்வேன். இப்படி செய்வதால
அழுது, பயந்து, மயக்கமாகின்னு பசங்க கஷ்டப்படாம இருக்கும்.
தனது வகுப்பில் ஒரு ஃப்ரெண்ட் பூப்படைந்ததை அம்ருதா
சொல்வதற்கு முன்னே அவளிடம் பேசிக்கொண்டு தான்
இருந்தேன். ஆனாலும் அவள் எதற்கோ தயங்குவது போல
தெரிந்தது.

“நான் தான் எல்லாம் சொல்லியிருக்கேனே பாப்பா! உங்களுக்கென்ன
பயம்?” அப்படின்னு கேக்கவும் அம்மா ஆரம்பிச்சாங்க.
“இல்ல!!! வந்து.... பீரியட்ஸ் வந்தா நானும் உங்களை மாதிரி
கஷ்டப்படுவேனா??? அதை நினைச்சாலே பயம்மா இருக்கு!!இது ஏந்தான்
பெண்களுக்கு வரணும்? ஏம்மா இந்தக் கஷ்டம்??”
நான் இந்தக் கோணத்தில் யோசிக்கலையே. என் நிலை
மகளுக்கு பயம் தரும்னு நினைக்கலையே!!! பெற்றவர்கள்
ஆன பிறகு கற்பதுதானே நிறைய்ய...


பக்கத்தில் உக்கார வெச்சு பேசினேன். இந்த மாதிரி எல்லோருக்கும்
இருக்காது, என் வயசென்ன? உன் வயசென்ன? அப்படி எல்லாம்
இருக்காது! போன்ற பதில்கள் சமாதானம் ஆக்கவில்லை. தேவையாம்மா
இப்படி ஒரு பீரியட்ஸ்? அதனால என்ன பலன்? அப்படின்னு கேட்டாள்.
நானும் முன்பு மாதவிடாய் காலங்களில் பாரதியாரின் பாடல்வரிகளை உல்டா
செஞ்சு “மங்கயராகப் பிறப்பதற்கே மாபாதகம் செய்திடல் வேணுமடா””ன்னு பாடியிருக்கேன்.

எல்லாத்தையும் சொல்லிட முடியுமா??? ஆனா சிலதை அழகாச்
சொல்லலாமேன்னு முயற்சி செஞ்சேன். குழந்தையின் மனதிலிருந்து
பயத்தை எடுப்பது தான் என் நோக்கம்.

அம்ருதம்மா, PUBERTY ஆண்டவன் பெண்களுக்கு கொடுத்திருக்கும்
வரம். ஹார்மோன்ஸ் சேஞ்சாகி சின்னக்குழந்தைக்கும்-
பெரிய பெண்ணிற்கும் இடைபட்ட இந்த நிலை ரொம்ப
முக்கியம். மாதாமாதம் சின்ன சின்ன கஷ்டம் இருக்கும்.
இல்லைன்னு சொல்லலை. இது கிளைமேட்
சேஞ்சானா எப்படி தும்மல், ஜுரம் வருதோ அதுமாதிரி தான்.
அதுக்காக மழைக்காலமே வேணாம், குளிர்காலமே வேணாம்னு
சொல்வோமா!!

இல்ல சொல்ல மாட்டோம். வீ வில் எஞ்சாய் த கிளைமேட் வித் த
கிளைமேடிக் சேஞ்ச் என்றாள் அம்ருதம்மா.

ஆமாம். உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாறுதல்களை சகிச்சுகிட்டாத்தான்
அழகான பெண்மை ஏற்படும். இதுதான் உனக்கு அழகைத் தரும்.
அழகான உடலமைப்பு, நல்ல சத்துள்ள எலும்புகள் எல்லாத்துக்கும்
உன்னை பாதுகாக்கும் ஒரு ஃப்ரெண்டா பீரியட்ஸ் இருக்கு.
45-50 வயது வரைக்கும் கூட வரும் இந்த ஃப்ரெண்டால தான்
நம் எலும்புகள் வலுவா இருக்கு. இதனால நமக்கு எத்தனையோ
நன்மைகள் இருக்கும்மா” என
சொன்னதும் கண்களை அகல விரித்து இவ்வளவு இருக்கா!!
தெரியலையே அம்மா! என்றாள்.

இப்பச் சொல்லு இந்தப் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும்
வேணுமா? வேண்டாமா?

கண்டிப்பாய் வேணும்மா! நீங்க எப்பவும் சொல்வது போல்
with out pain no gain புரிஞ்சுகிட்டேன்! அப்படின்னு சொல்லியும்
மனசு பூர்த்தியா நிறைஞ்ச மாதிரித் தெரியலை.

இனிமே பீரியட்ஸை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்.
அந்த ஃப்ரெண்ட் இல்லாட்டி நமக்கு கஷ்டம் தானே.
ஆக பெண்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் பீரிட்யட்ஸ். சரியா?
என்றேன். சரிம்மா என்ற கண்களில் இருந்த ஒளி மனதுக்கு
நிம்மதியை தந்தது.

எல்லா பெண்களும் மாதவிடாயின் போது
படும் துயரங்களை வீட்டில் இருக்கும் மகளும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறாள் என்பதை நினைவில் வைய்யுங்கள். அதற்காக
வலி பொறுத்து நடிக்க வேண்டுமென்பதில்லை. அந்த
நேரத்தை வேண்டா வெறுப்பான நேரமாக்கி விடாதீர்கள்.

நாம்தான் நம் பிள்ளைகளுக்கு முன்னுதாரனங்கள். நாமே
வெறுப்பு உமிழ பேசினால் அது அவர்களுடைய மனதிலும்
பசுமரத்தாணி போல உட்கார்ந்துவிடும்.

இப்பொழுதெல்லாம் அம்ருதம்மா நான் அதிக டயர்டாக
இருந்தாலோ இல்லை பீ எம் எஸ் சிம்ப்டங்களுடன்(இப்போது
எவ்வளவோ குறைந்துவிட்டன)இருப்பதை உணர்ந்தாலோ,
“ஏம்மா டயர்டா இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் வந்தாச்சா??”
என்று கேட்கிறாள். பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் மகளிடம் பேசுவதும்
ஒரு சுகம். பகிர்ந்துகொள்ள ஒரு தோழி கிடைத்தது போல்
இருக்கிறது.


மாதவிடாயை அழையா விருந்தாளி எனச் சொல்லி வெறுத்து
ஒதுக்காமல் அன்புத்தோழி ஆக்கி ஆனந்தமாக இருப்போம்.

ஒவ்வொரு வீட்டில் பிள்ளைகளும் வேறுபடலாம். ஆனால்
எனக்கும் எனது மகளுக்குமிடையேயான இந்த உரையாடல்
சிலருக்கு உதவலாம் என்பதால் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

வானம்பாடிகள் ஐயாவை அறிமுகப் படுத்துவது சூரியனுக்கே டார்ச் அடிக்கறது போல.

அவரின் அனுமதியோடு மிகவும் அருமையான இந்தப் பதிவு parent's club வலைத்தளத்தில் வெளியிடப் படுகிறது.

யோசிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்லை, இந்த நிமஷம் முதலில் நம்மை நாமே கேள்வி கேட்டு மாற்றிக் கொள்ளவும் தூண்டும் பதிவு இது. நீங்க என்ன நினைக்கறீங்க? நாம் குழந்தைகளோடு ஒரு மணிநேரமாவது பேசியோ, விளையாடியோ, அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் பெரும்பாலும் மன-உடல் அயர்வோடுதான் வீட்டுக்குள் நுழைகிறோம். நம் முகமும் உணர்வலைகளும் பிள்ளைகளை நம்மோடு பேசத் தூண்டுமாறு இருக்கா..

வேலை நாட்களில் மாலையில் பெரும்பாலும் எனக்கு வீட்டில் தூங்கும் நேரம் தவிர வெறுமனே இருக்க ஒரு மணிநேரம் கிடைத்தாலே அதிகம். இதில் ஒன்று என் கணவரோடோ அல்லது குழந்தையோடோ என்று யாரேனும் ஒருவரை மட்டுமே பேசி கவனிக்க முடிகிறது. குழந்தைக்கு இன்னும் புரிந்து கொள்ளும் வயதாகவில்லை என்பதால், அவளோடு பெரும்பான்மை நேரங்களை ஒதுக்கி செலவிட வேண்டியிருக்கு. கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தாலும், இப்போதும் அவள் பல நேரங்களில் வேறு யாரோடும் பேசினால் கூட அம்மா அம்மா கன்னம் திருப்பி தன்னை பார்த்துக் கொண்டே அவரோடு பேசவேண்டும் என்று நச்சரிப்பது ஆரம்பித்த்தாள். அப்போதுதான் ஒரு வேளை வளர்ப்பதில் ஏதும் தவறு செய்கிறேனோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். முற்றிலும் என் தவறுதான், அவளை பொறுத்த வரையில், எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் கொடுத்தது யார்? நான்தானே... அப்போது முதல், அவளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களோடும் பேசத் தூண்டுவது, வந்த விருந்தாளிகளுக்கு ஸ்வீட், பிஸ்கட், போன்ற சிதறாத உணவு வகைகளை பரிமாற வைப்பது, கையலம்பிக் கொண்டதும் துடைத்துக் கொள்ள துண்டு போன்றவற்றைத் தரத் தூண்டுவது, போகும்போது சாகலேட், மஞ்சள் கிழங்கு, குங்குமம் தருவது என்று அவர்களையும் கவனிக்குமாறு செய்தேன். இப்போது அவளால் விருந்தாளிகள், முதன்முறை எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு புன்னகை கொடுக்க முடிகிறது. கேள்வி கேட்டால் தகுந்த பதிலும் தரும்படி ஆகி இருக்கிறாள்.

குழந்தையை mend செய்ய அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும் என்பது மறுக்க முடியாது.... குழந்தைகள் மட்டும் இல்லை, யாருமே ஏதேனும் தவறு செய்தால் பொதுவில் திட்டாமல் இருப்பது எனக்கு எப்போதும் உதவி இருக்கிறது. இவளிடமும் அப்படியே...

அதே போல கதை சொல்லி அதனூடே நமக்கு வேண்டிய 'அறிவுரைகளை' அல்லது விபரங்களை புத்தியில் ஏற்றுவது இலகுவாக இருக்கிறது. ஏதாவது தவறு செய்து விட்டால், குழந்தைக்கு அது தொடர்பாக கதை சொல்லுங்கள்... அறிவுரையாக இல்லை.

கீழிருக்கும் பதிவை வெளியிட அனுமதித்த வானம்பாடிகள் ஐயாவுக்கு நன்றிகள்.

அன்புடன்,
விதூஷ்.

======================================================
பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..
======================================================

ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம்.

மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை

* தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
* படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
* எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
* தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.


இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது

“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம்.

இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?

மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம்.

“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.





.


ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.

ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.

"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.

இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.

கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.

உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.

"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.

"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு

"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.

கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.

"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.

கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.

"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.

"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.

மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.

"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.

"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.

கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.

உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.

"என்ன நண்டு" என்றது கொக்கு.

"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.

மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.

புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.

நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.

"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.

"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.

நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.

கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.

வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.






.


இந்த மிட் டேர்ம் டெஸ்ட்க்கு சிலபஸ் என்னவோ ஒன்று முதல் பத்து வரை தான். ஆனால் நட்ராஜ்க்கு இரண்டும் மூன்றும் மட்டும் எட்டிக்காய் ஆகிவிட்டது. 25 வரை சொன்னாலும் சொல்லுவேன். ஆனால் அந்த பாழாய் போன இரண்டும் மூன்றும் மட்டும் சொல்ல மாட்டேன் என பிடிவாதம்.

நாங்களும் க னா பாஷை மாதிரி இரண்டையும் மூன்றையும் சொல்லி பார்த்தோம். அதாவது 'டூ த்ரீ என்னங்க டூ த்ரீ கடைக்கு போய் டூ த்ரீ கத்தரிக்காய் டூ த்ரீ வாங்கிவாங்க" என சொல்வதும் அதுக்கு பதிலா நான் "டூ த்ரீ வாங்கி வரேன்" என சொல்வதும், அபி "அம்மா டூ த்ரீ ஹிந்தி கிளாஸ்க்கு டூ த்ரீ போயிட்டு வரேன்" என சொல்வதும் பலிக்காமல் போனது.

வேற வழி இல்லாமல் தோசை வழியா டூ த்ரீ போட ஆரம்பிச்சு ஊட்டிவிட்டாச்சு. அதிலும் ஒரு சிக்கல். இப்ப தம்பி ஒன்லி டூ த்ரீ மட்டும் தான் சொல்கிறான். இப்ப 3, 4 தோசை ரெடியாகுது.

நீங்களும் இப்படி கூட படிப்பை ஊட்டலாமே!!!!



(காது ,மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர் Prof .கே.கே.ராமலிங்கம் )


காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க காதினுள் உட்புகும் ஒலியானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோத வேண்டும்,ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நுழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டெப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப் படுகிறது,இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது,இதை இந்த வரைபடம் மூலம் தெளிவாக அறியலாம்.
ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து :


நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி வயது வேறுபாடு இன்றி காதுக்குள் வினோதமான சத்தம் கேட்கத் தொடங்கினால் சில நாட்களில் சரியாகி விடக் கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது.அப்படி வினோதமான சத்தம் வரக் காரணம் என்ன என்பதை காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவரை அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு வினோத சப்தங்களுக்கான காரணங்களை உடனே அறிய முயற்சிக்க வேண்டும்.ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல்லாமல் புறக்கணித்து விட்டு ,நாட்கள் பல கடந்த பின் கேட்கும் திறனை முழுமையாக இழக்கும் நிலை வரை காத்திருப்பது புத்திசாலித்தனம் ஆகாதே.

காதுக்குள் வினோதமான சப்தங்கள் அடிக்கடி கேட்டால் அந்த குறைபாட்டை "ஒடெஸ்லோரோசிஸ்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்தக் குறைபாடு வரக் காரணம் நடுக்காதுப்பகுதியில் காணப்படும் சிறு எலும்புகளின் வளர்ச்சியே,இந்த சிறு எலும்புகளை மருத்துவர்கள் " ஸ்டேப்ஸ்" என்கிறார்கள்.இந்த எலும்புகள் சிலருக்கு பரம்பரை மூலக்கூறுகள் காரணமாக இயல்பான வளர்ச்சியைத் தாண்டி விரைவாக வளர ஆரம்பிக்கின்றனவாம். அப்படி வளரும் எலும்புகள் காதுக்குள் உட்புகும் ஒலி நடுக்காதுப் பகுதியில் இந்த எலும்புகளால் தடுக்கப் பட்டு காது ஜவ்வில் பட்டு ஒலிக்கும் திறனை இழக்கிறது ,மேலும் இடையில் தடுக்கப் படுவதால் வினோதமான சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது.இந்த ஸ்டேப்ஸ் எலும்புகளின் வளர்ச்சியை ஆரம்பம் முதலே அறுவை சிகிச்சை முறையில் முற்றிலுமாக கட்டுப் படுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை குறித்த பயம் உள்ள நோயாளிகள் வயது வித்தியாசமின்றி அறுவை சிகிச்சையைப் புறக்கணித்து காது கேட்கும் திறனளிக்கும் மெசின்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஸ்டேப்ஸ் எலும்புகள் அபிரிமிதமாக வளர்ந்து விட்டால் இந்த உபகரணங்களால் யாதொரு பயனும் இல்லை.படிப்படியாக காது கேட்கும் திறனை இழப்பதை விட ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை என்பதே முற்றாக பலனளிக்க வல்லது என காது,மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தக் குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளையே அதிகம் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.மேலும் பெண்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருக்கும் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடுபட்டாலும் கூட கர்ப்ப காலங்களில் இந்தக் குறைபாடுகள் \ தனது அறிகுறிகளை முழுதாகக் காட்டத் தொடங்கி விடுகின்றனவாம், அப்போதைக்கு வலிநிவாரணிகள் மூலம் சமாளித்தாலும் குழந்தை பிறந்த பின்பு முழு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்,இல்லா விட்டால் காலப் போக்கில் காதுகள் முற்றாக கேட்கும் திறனை இழக்கும் நிலை வரும்.

இதற்கான அறுவை சிகிச்சையை "ஸ்டேபிடெக்ட்டமி" என காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறுவை சிகிச்சை காதின் உட்புறத்தில் நடத்தப் படுவதால் வெளிப்புறம் கத்தியால் அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் வடுக்கள் எதுவும் தோன்ற வாய்ப்புகளே இல்லை. மேலும் அறுவை சிகிச்சையின் பின் முழுமையாக காது கேட்கும் திறனை பெறுவதற்கான உத்திரவாதம் உண்டாம்.

சென்ற சனிக்கிழமை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் கே.கே.ஆர் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமனைக்குப் போயிருந்தோம் ,மருத்துவருக்காக காத்திருந்த நேரத்தில் வாசிக்கக் கிடைத்த தகவலே இன்றைய இடுகையானது ,பயனுள்ளதாக இருக்கக் கூடுமென எண்ணியதால் பகிர்கிறேன்.

மேலும் அங்கிருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது .

இறந்து விட்ட ஒரு யானையைச் சுற்றி நின்று கொண்டு அதன் அகன்ற காதுகளை ஒருவர்,நீண்ட தும்பிக்கையை ஒருவர் ,கழுத்தை(தொண்டை) ஒருவர் என மூன்று மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இது தான் அந்த ஓவியம் .ஆக மூன்று மருத்துவர்கள் சேர்ந்து அளிக்கத்தக்க சிகிச்சையை ஒரே மருத்துவர் அளிக்கத் தகுதி அடைவது தான் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் போல என எண்ணிக் கொண்டேன்.

:)




http://www.kkrenthospital.org (காது மூக்கு தொண்டைக்கு சிறப்பான மருத்துவம் இங்கே கிடைக்கும் என பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிந்துரைத்ததால் இந்த சுட்டி ,தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்)







ஹரிணிக்கு நாளை யூனிட் டெஸ்ட் ,அதையொட்டி நேற்று பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள்(தோம்).

ஆங்கிலத்தில் முதல் பாடம் மை பேமிலி .

இரண்டாம் பாடம் ஸ்மால் பேமிலி,லார்ஜ் பேமிலி,ஜாயின்ட் பேமிலி இவை மூன்றையும் ஒப்பிட்டு காட்டுவது தான் இரண்டாம் பாடம்.

மை பேமிலி அவளுக்கு எல்.கே.ஜி முதற்கொண்டே இருப்பதால் என்னிடம் கேட்பதற்கு கேள்வி ஒன்றும் இல்லை அவளுக்கு.

ஸ்மால் பேமிலி படித்து விட்டு My family is a small family என்றாள். ஆமாம் என்றேன்.

அடுத்து லார்ஜ் பேமிலி வந்தது ;

Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Childrenஇவர்கள் எல்லோரும் இணைந்து வசித்தால் அது லார்ஜ் பேமிலி .

அடுத்து ஜாயின்ட் பேமிலி ;

Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Cousins,Childrenஇவர்கள் எல்லோருமே சேர்ந்து வசித்தால் அது ஜாயின்ட் பேமிலி .

கடைசியில் Which family you like ?என்றொரு கேள்வி.

ஹரிணியின் பதில் -I LIKE ALL THE THREE FAMILIES .

என்னடா இப்பிடி சொல்ற ,ஏதாவது ஒரு பேமிலி பிடிக்கும்னு சொல்லலாமே என்றதற்கு ;

இல்ல ..எனக்கு எல்லா பேமிலியும் பிடிச்சிருக்கு , ஆனா ஜாயின்ட் பேமிலி தான் நான் இன்னும் பார்த்ததே இல்லை என்றாள். ரொம்ப ஜாலியா இருக்குமில்லம்மா ,நம்ம பெரியப்பாக்கள் நாலு பேரோட பேமிலி ,சித்தி பேமிலி,மாமா பேமிலி , அத்தைகளோட பேமிலி ,அப்புறம் Mummyசைடு தாத்தா,பாட்டி,Daddy சைடு தாத்தா பாட்டி ...அம்மாடி எவ்ளோ பெரிய ஜாயின்ட் பேமிலியா இருக்கும் !

சூப்பரா இருக்கும்ல?!

ம்ம்...சூப்பரா தான் இருக்கும்.

எப்போ நாம ஜாயின்ட் பேமிலி ஆவோம்?

ம்ம்...எப்போ !!! ...அது வந்து ஊர்ல திருவிழா நடந்தா அப்போ ஜாயின்ட் பேமிலி ஆயிடுவோம் அப்புறம் பெரியப்பாக்கள் வீட்ல ஏதாவது விசேசம்னா ,தாத்தா,பாட்டி வீட்ல ஏதாவது விசேஷம்னா ,சித்தி பையனுக்கு பெர்த் டேனா அப்போலாம் நாம எல்லாரும் ஜாயின்ட் பேமிலி தானடா என்றேன்.

அவளுக்கு என் பதில் சமாதானம் ஆகவில்லை போலும்.

அதுக்கு பேர் ஜாயின்ட் பேமிலியா ? ...நாம தான் ரெண்டு நாள்ல சென்னைக்கு வந்து திரும்பி ஸ்மால் பேமிலி ஆயிடரோமே!?

குழந்தையின் கண்களில் ஏக்கம் தெரியத்தான் செய்கிறது .கூடியமட்டும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வகையில் தான் இனிமேல் எந்த ஒரு குடும்ப விழாவையும் திட்டமிட வேண்டும் என அந்த நொடியில் மனதுக்குள் தோன்றியது.கூடவே என்ன தான் சின்னச் சின்ன உரசல்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நம் தலைமுறையோடு மறையட்டும் குழந்தைகளிடம் அவற்றை கடத்திக் கொண்டு தொடர வைக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

குழந்தைகள் எப்போதும் தனிமையை விரும்புவதில்லை ,தன்வசதி வாய்ப்புகள் ,தன் வளர்ச்சி,சூழல் எனும் போர்வையில் பெரியவர்களுக்குத் தான் அதெல்லாம் தேவைப்படுகிறது.குழந்தைகள் எப்போதும் கூட்டமாய் குழுவாய் வாழவே விரும்புகிறார்கள் என்றும் தோன்றியது .

நண்பர் பதிவர் எஸ்.கே அவர்கள் ஒரு லிங்கை அனுப்பியிருந்தார்.
தற்போது அதிகமாகப் பேசப்படும் Child Sexual Abuseனால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளின் பிரச்சனையை தீர்க்கவும், பாதிக்கப்படாமல் காக்கவும்
பல வித செய்திகளை இந்தத் தளம் கொண்டுள்ளது.

பலருக்கும் உதவும் என்பதால் அந்தத் தளத்தின் முகவரி.

துளிர்

"http://www.hindu.com/2010/07/05/stories/2010070560611100.htm">Bill to deal with sexual offences against children soon, says Moily.

என் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா
போதும்!

என் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா
பொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி!!

இப்படி சொல்லும் வகை பெற்றோரா! உங்கள் குழந்தை அதிக
நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

ADD - ATTENTION DEFICIT DISORDER
அதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு
ஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை
ஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்
அதீதமாக ஆக்டிவாக இருப்பதும்,(hyperactive)
முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)
போன்ற குறைபாடுகளும் இருக்கும்.

இந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது
பல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்
என்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

முறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு
பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,
சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை
கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்
நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்
பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்
இந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்
அடிக்கும் எச்சரிக்கை மணி.

பரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு
சாத்தியம் இருக்கிறது
நாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,
உண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்
ஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக
இருக்கக்கூடும்.




பல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி
குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி
பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி
பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு
கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி
வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்
காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து
இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.

நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்
பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான
மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்
போகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான
பழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி
அதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,
குறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்
செய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து
ஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.


தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,
நொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.
வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட
இதே விளைவைத் தருகின்றன.

கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை
நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை
ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத
பொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய
உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

ADD - ATTENTION DEFICIT DISORDER இதன் அறிகுறிக்கள்:

சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,
சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு
தாவுதல்.

ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய
முடியாது.

ஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது
சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.

முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்
செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்
அதை செய்ய மாட்டார்கள்.

ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து
முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.

பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை
காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்
பெற்றோருக்கு வரும்.


பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.
குழப்பமான மனநிலை.

இவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.
தகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று
ஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,
ட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்
அறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.


ஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து
குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து
அதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.
வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.
அதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை
எடுத்துக்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட
சக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை
அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முறையான மனநலமருத்துவரைச் சந்தித்து
தேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்
குழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான
வாழ்க்கையை குழந்தைக்கு வழங்கலாம்.

பேரண்ட்ஸ் கிளப் ஆரம்பித்ததின் நோக்கமே ஒரு
வளமான எதிர்காலத்தை வளரும் குழந்தைகளுக்கு
பெற்றோர் வழங்க தங்கள் அனுபவங்களை பகிர்ந்து
பதிவு செய்து உதவி புரிந்து கொள்ளவே.

சென்ற மாதம் ஒரு மடல் பேரண்ட்ஸ் கிளப் ஐடிக்கு
வந்திருக்கிறது. நான் ஓய்வில் இருந்தது அனைவருக்கும்
தெரிந்தது. இன்றுதான் அந்த ஐடியை திறந்து பார்த்தேன்.
அதிர்ச்சியூட்டும் வரிகளுடன் ஒரு மடல் வந்திருந்தது.

25 வயதுக்குழந்தை ஒன்று தனது பருவத்தில் திகழ்க்க
வேண்டிய மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டதாக
சொல்லியிருந்த மடல் அது. எனக்கு ஏதாவது உதவி
செய்யுங்கள் என்று கேற்றிருக்கிறார்.

கிராமங்களில் இன்னமும் மனம், மணம் மாறா
மக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்
இந்த வேளையில் இவரின் மடல் பரிதாப நிலையைச்
சொல்கிறது.


மனம் நொந்து மடல் வடித்திருக்கும் அந்த நண்பரின்
பெற்றோர்கள் இருவருக்கு வயது 55, 50 வயதாகிறதாம்.
தந்தை விவாகரத்துக்கு கோறியிருக்கிறாம்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் பத்தாம் வகுப்பு
வரை படித்தவர்களாம். இவர்களின் கையாலாகாத
தனத்தால் இவர்களின் மகளின் வாழ்வும் நாசமாகி
அவருக்கும் திருமணமாகி விவாகரத்து வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

தனது இந்த நிலை மன உளர்ச்சிக்கு ஆளாக்குவதாக
எழுதியிருக்கிறார்.” கிராமத்தில் பிளர்ந்து வளர்ந்த
எனக்கு என் வீட்டில் இப்படி ஒரு நிலை வரும் என்பதை
ஜீரணிக்க முடியவில்லை!” என்று எழுதியிருக்கிறார்.
பிரச்சனைகளின் காரண கர்த்தாக்களான பெற்றோர்களிடம்
கெஞ்சி, கூத்தாடி அறிவுரை சொல்லி என எத்தனையோ
செய்து பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்
இருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய கோரி மடல்
அனுப்பியிருக்கிறார்.


இந்த பிரச்சனைக்கு சுமூகமான விடை பெற
தமிழகத்தில் உங்கள் யாருக்காவது தெரிந்த
marriage counsellerஇருந்தால் தனக்குத் தெரியப்படுத்தி
உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
pshycologis பார்க்க பெற்றோர்களும், சகோதரியும்
ஒத்துக்கொள்ளவில்லை போல் தெரிகிறது.

பெயரை மாற்றியாவது என் மடலை தங்களின்
வலைப்பூவில் வெளியிட வேண்டுகிறேன்,  என்
கண்ணீர் கதையைப் படித்தாவது சில பெற்றோர்கள்
திருந்தட்டும் என கேட்டிருப்பதால் பதிவிட்டிருக்கிறேன்.

உங்களால் ஆன உதவியை செய்ய வேண்டுகிறேன்.

ஸ்கூல் திறக்க போவுது, சிலருக்கு திறந்திருக்கும்.
நேற்றுவரை அம்மாவின் துப்பட்டாவை கட்டிக்கொண்டு
அலைந்த பிள்ளை ,”புது யூனிஃபார்ம், புது டிபன் பாக்ஸ்,
புது பேக், புது வாட்டர் பாட்டில் கலக்கறே சந்துரு””!!
என்று பள்ளிக்கு செல்ல தயராக இருக்கும்.

எல்லாம் புதுசாதான் வாங்கிக் கொடுத்திருக்கோம்.
பையன்/பொண்ணு அழுகாம ஸ்கூலுக்கு போயிடுவாங்கன்னு
நினைச்சிருப்போம். அப்படியே கவுத்து ரகளை செஞ்சு
நம்மளை, டீச்சரை ஒரு வழி ஆக்கிடுவாங்க.

அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு தொங்கிய என்
கிளாஸ் பையன் ஞாபகத்துக்கு வர்றான். ஆரம்பப்பள்ளி
ஆசிரியைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே
குழந்தையை முதலில் அழாமல் வகுப்பில் உட்கார
வைப்பதுதான். ஒரு குழந்தை அழுகை நிப்பாட்டிய
நேரத்தில் இன்னொன்று மூலையில் உட்கார்ந்து
அழுவதைப் பார்த்து மத்ததுக்கும் பொங்கும்.

கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும் இந்த நிலை மாற.
அப்புறம் நாம் ஸ்கூல் கேட்கிட்ட போறவரைக்கும்தான்.
கையை ஒதறிட்டு டாடா காட்டக்கூட மறந்துட்டு
பிள்ளை ஓடிடும்.

வீட்டிலேயே நாம் குழந்தையை இந்தப் பிரிவுக்கு
தயார் படுத்த வேண்டும்.

சொல்லாதீங்க பதிவை படிச்சிருக்கீங்களா!

இதுவும் முக்கியம்:

சரி பிரிவுக்கு தயார் செய்வது எப்படின்னு பாக்கலாம்.

டே கேர் செண்டரிலோ/பள்ளியிலோ விடுவதை
ஆரம்பத்தில் குழந்தை விரும்பாது. பிரிவை தாங்க
இயலாத இந்த சுபாவம் ரொம்ப இயற்கையானது.
பெற்றோரின்  அணுகுமுறை ரொம்ப முக்கியம்.

அடிப்பதோ, திட்டுவதோ கோபப்படுவதோ சுத்தமாக
உதவாது. பொறுமை, பொறுமை, முறையாக கையாளுதல்
தான் உதவும். கீழே கொடுத்திருக்கும் முறைகள்
உளவியலாளர்களின் கருத்துக்களும் கூட. 


1. முத்த மழை பொழிந்து:
அன்னையின் அரவணைப்பு பிள்ளைக்கு தரும்
இதம் சொல்ல முடியாது. அழும் குழந்தையை
ஏதும் சொல்லமால் பக்கத்தில் இருத்தி
முத்தம் கொடுப்பது நல்லது. இப்பொழுதெல்லாம்
1 வாரம் வரை பெற்றோர்களும் வகுப்பிலேயே
உடன் இருக்க அனுமதிக்கிறார்கள்.

2. குழந்தையின் பையில் ஒரு நோட்டிலோ
அல்லது பள்ளி டயரியிலோ குடும்ப
புகைப்படம் ஒன்றை வைத்து அனுப்புவதும்
உதவுமாம். ஞாபகம் வரும் பொழுது
புகைப்படத்தை எடுத்து பார்த்து குழந்தை
கொஞ்சம் திருப்தி பட்டுக்கொள்ளும்.

3.  நல்லபிள்ளை விளையாட்டு:

நீ அழாம நல்ல பிள்ளையாய் ஸ்கூலுக்கு
ரெடியாகும் ஒவ்வொரு நாளும் பாயிண்ட்ஸ்
கொடுப்பேன், அதை வைத்து உனக்குத்
தேவையான விளையாட்டு சாமான்கள்
வாங்கிக்கொள்ளலாம், என்றோ ஹாப்பி
ஃபேஸ் சார்ட் ஒட்டி அதில் எத்தனை ஹாப்பி
ஃபேஸ் வருகிறதோ அதுக்குத் தகுந்த மாதிரி
பிள்ளை விரும்பும் சாமான் அல்லது தின்பண்டம்
என்றும் வைக்கலாம்.

4. பேசாமல் இருத்தல்:
அழும் குழந்தையோடு “டூ” விடுவதல்ல.
சில சமயம் குழந்தை அழும் பொழுது
நாம் உடன் ரியாக்ட் செய்யாமல் 10 நிமிடம்
போல நம் வேலையை அருகிலேயே
உட்கார்ந்து செய்து கொண்டிருந்தால்
தன் நடவடிக்கையை கவனிப்பார் இல்லாமல்
தானே சமாதானமாகி விடும். சில சமயம்
அழும் குழந்தையை சமாதானம் செய்கிறேன்
என்று பெற்றோர் செய்யும் ஆட்டம் அதிகமாக
இருக்கும்.

5. உறுதி மொழி:

எங்கே நம்மை அப்படியே விட்டுவிடுவார்களோ!
எனும் பயம் குழந்தைக்கு இருக்கும். அதனால்
ஸ்கூல் 11 மணிக்கு முடிஞ்சிடும், வீட்டுக்கு
வந்திடலாம், உனக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சு
வெச்சுகிட்டு அம்மா ரெடியா காத்திருப்பேனாம்!/
ஸ்கூல் பெல் அடிச்சதும் வெளியே யார் இருப்பாங்கன்னு
பாரு!போன்ற  உறுதிமொழிகள் பயத்தை குறைக்கும்.

6. நேற்று என்பது வரலாறு அதைப்பற்றி பேசலாம்:
தான் சாதித்தவற்றைப் பற்றி பேசுவது குழந்தைகளுக்கு
ரொம்ப பிடிக்கும். நேத்து எவ்வளவு குட் பாயா எந்திரிச்சு
ரெடியான!, ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும்
நாம பைக்ல ஒரு ரவுண்ட் கூட போனோம்ல என
பேசுவது  தான் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவோம்
என்ற எண்ணமும் நல்லபடியாக கிளம்பி போனால்
ட்ரீட் கிடைக்கும் என்பதும் புரியும்.

7.  பிள்ளை விரும்பும் பூ, பொம்மை, மிக விரும்பும்
வகை உணவு, போன்றவற்றை மறைத்துவைத்து
சர்ப்ரைஸாக கொடுக்கலாம்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர் ரிலாக்ஸ்டாக
இருக்க வேண்டும். இந்த மாறுதலை குழந்தை புரிந்து
கொள்ளும் வரை நாம் புரிய வைக்க முயற்சி செய்து
கொண்டே இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் நம் கோபத்தையோ டென்ஷனையோ
குழந்தை மீது காட்டினால் அது நிலமையை இன்னும்
மோசமாக்கும். “அழாதே! அழுகையை நிப்பாட்டு”
போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவது நலம்.
நம் முன்னால் ஏதும் நடவாத மாதிரி பொறுமையாக
சிரித்த முகத்துடன் இருந்தாலே போதும். குழந்தையை
பிரிகிறோமே, பிரிக்கிறோமோ என்று தேவையில்லாமல்
குழம்பாமல் நிம்மதியாக குழந்தையை பள்ளியில்
விட்டுவிட்டு வரவேண்டும்.

ஆசிரியை, பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சியினால்தான்
ஒரு குழந்தையின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
பெற்றோரும் சிலவற்றைச் சொல்லிக்கொடுத்து
பிள்ளையை வளர்த்தால்தான் பள்ளியில் மேலும்
கற்க அது உதவும்.

புதுகை மாவட்டம் ராயவரம் ஒன்றியத்தைச் சேர்ந்த
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்
பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

பள்ளி செல்ல விரும்பு
பாடம் நல்லக் கரும்பு
படித்து விட்டுத் திரும்பு
பண்ண வேண்டாம் குறும்பு;
அரும்பு போல சிரிப்பாய்
  எறும்பு போல இருப்பாய்!



எங்க உறவுக்கார அக்கா ஒருத்தரை ரொம்ப வருஷம்
கழிச்சு பாத்தேன். அவங்களுக்கு ஒரே பொண்ணு.
அந்த பொண்ணை 5 வயசு பாப்பாவா பாத்தது.
இப்ப அந்த செல்லம் காலேஜ் படிக்குது. ரொம்ப
நாள் கழிச்சு பாத்ததுல சந்தோஷமா பேசிக்கிட்டு
இருந்தோம். ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.

”எம் பொண்ணு எப்பவும் கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ்
காலேஜ் தான் கலா!! ஆம்பிளைங்களுடன் பேசவே
சான்ஸ் இல்ல! ரொம்ப ஸ்ட்ரிக்டா வளக்கிறேன்!”
அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரே யோசனை.
”ஏங்கா உங்க பொண்ணை வேலைக்கு அனுப்பணும்னு
சொல்றீங்க! அப்ப கூட ஆண்களே இல்லாத
இடத்துக்குத்தான் அனுப்புவீங்களான்னு??” கேட்டேன்.
அவங்களுக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சு. எனக்கு
அந்தப் பொண்ணை நினைச்சு மனசு ரொம்ப வருத்தம்.

அப்பாவைத் தவிர வேறு ஆண்மகனுடன் பழக்கமே இல்லை.
ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே
போய்விடும். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனாலும்
கொஞ்சம் கஷ்டம் தான். ஆண் நட்பே இல்லாத
காரணத்தால் கணவனிடம் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கணவன் - மனைவி உறவில் ஆரம்பம் நட்பாகத்தான்
இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான புரிதல்
ஏற்படும்.

இதை கொஞ்சம் விவரமா பாப்போம்.

ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எதிர்பாலினருடன்
தொடர்பே இருக்கக்கூடாது என பொத்தி பொத்தி
வளர்த்தால் அலுவலகத்தில் வீட்டில் பிரச்சனை
ஏற்பட சாத்தியங்கள் அதிகம்.

வீட்டில் ஒரே ஆண்குழந்தை என்று வைத்துக்கொள்வோம்.
உடன் விளையாட அக்கா, தங்கை இல்லாத பட்சத்தில்
அவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது.
பெண்ணின் பிரச்சனை தெரியாது, புரியாது. அவளின்
வருத்தங்கள் புரிந்துகொள்ள முடியாது. வெளியிலும்
அவனுக்கு நல்ல பெண் நட்பு (நட்பு மட்டுமே)
கிடைக்காத பொழுது சுத்தமாக பெண்வாசனையே
இல்லாமல் தன் தாயையை வைத்து மட்டுமே
பெண்களை எடை போடுவான்.

இப்படி பட்ட சூழ்நிலையில் வள்ர்ந்து
வேலைக்குச் செல்லும் பொழுது அங்கே சக
பணியாளராக பெண்ணோ, அல்லது உயரதிகாரியாக
பெண்ணோ இருந்தால் அந்த சூழ்நிலைக்கு தன்னை
அட்ஜஸ்ட் செய்து கொள்வது கஷ்டமாகிவிடும்.

இதேதான் பெண் குழந்தைகளுக்கும். எல்லோரும்
தன் தந்தையைபோல நல்லவர்/கெட்டவர் என்ற
முடிவுக்கு பெண் வந்துவிடுவாள். அதே கோணத்தில்
பார்த்து பார்த்து பிரச்சனை ஆகிவிடும். வேறு
விதமாக கூட ஆண்கள் இருப்பார்கள் என்று புரியாததற்கு
காரணம் ஆண்களிடம் பழக்கம் இல்லாமல் இருப்பது.
ஆண்களே சுற்றி இல்லாத சூழலில் வளர்ந்த
காரணத்தால் அலுவலகத்தில் தன்னை
பொறுத்திக்கொள்ள இயலாமல் போய்விடும்.
புகுந்த வீட்டில் கணவனைத்தவிர வேறு
ஆண்மகன்கள் இருந்தால் அவர்களுடன் சரியாக
பேசத்தெரியாமல் போய்விடும்.

நம் குடும்ப உறவுகள் தவிர வெளியாருடனும்
பழகத்தெரிவது அவசியம். மனிதர்களை படிக்க,
புரிந்து கொள்ள இது அவசியம்.

இதற்காக ஆண்களிடம் குழைந்து பேசி, மேலே
விழுந்து பழகச்சொல்வதாக நினைக்க வேண்டாம்.
ஆரோக்கியமான நட்பு இருபாலருக்கும் வேண்டும்.
அப்பொழுதுதான் எதிர் பாலினரை புரிந்து கொள்ள
முடியும். ”ஆண் பிள்ளைகளுடன் விளையாடினால்
காதறுந்து போகும்” என்று பயமுறுத்தியோ எங்கே
தன் மகள் காதல் வலையில் விழுந்துவிடுவாளோ
என்ற பயத்தினால் பொத்தி பொத்தி ஆண்வாசனையே
இல்லாமல் செய்வதனால் பெண்ணை காப்பாற்றுவதில்லை,
மாறாக அவளுடைய புரிதல் குணத்தை தடுத்து
நிறுத்துகிறோம்.

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொது இடத்தில் வாழ்வில்
அந்தப் பெண் ஆண்களை சந்தித்தாக வேண்டும்.
ஆண்களே இல்லாத உலகமோ, பெண்களே இல்லாத
உலகமோ சாத்தியப்படாத பொழுது சகஜமாக
பெண்/ஆண் குழந்தையை வளர்க்க வேண்டும்.

பொத்தி பொத்தி வளர்த்து அவர்களின் வாழ்க்கையை
கஷ்டமுள்ளதாக ஆக்க வேண்டாம். மலர்ந்து
நட்புக்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை
உருவாக்க கை கொடுப்போம்.

இக்கட்டுரை ஈரோடு நண்டு நொரண்டு என்ற பதிவர் எழுதியது.

ஒரு சில எழுத்துப் பிழைகள் மட்டும் மாற்றி இருக்கிறேன். கொஞ்சம் முரணாக இருக்கும் வார்த்தைகளை சற்றே மாற்றி அமைத்திருக்கிறேன்.

குழந்தைகளுக்கு விடுமுறை. ஒரு மாதம் பெரிய தொந்தரவு. லீவே விடக்கூடாது. இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம்.

குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி. பள்ளிக்கூடம் வீடு போன்று இருப்பதில்லை என்றே உண்மையில் அனைத்துக் குழந்தைகளும் நினைக்கின்றனர்.

குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும் செழுமைப்படுத்திக்கொள்கின்றன (இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது). 2-லிருந்து 5 வயது வரை குழந்தைகள் மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன, சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது.

குழந்தைகள் 5 வயதிற்குப்பின், 5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில் பயணித்து 12வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து, தொடர்ந்து, பிறகு 16வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள் நுழைகின்றனர். அதுவரை அவர்கள் கட்டற்ற சுதந்திரம் இருப்பவர்களாகவே உணர்கின்றனர்.

இதுவே, குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது.

எனவே, இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள். அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளர ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் அல்லது அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள். அது அவர்களிடத்தில் தாழ்வு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள். அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக் கொள்ளாதீர்கள். நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.

குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள். அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள். அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள். அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள்.தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று
தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள்.உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப் புகுத்தாதீர்.

அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான். விடைகளை தருவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை. கற்றுக்கொள்வது அவர்களின் இயல்பான செயல்.
கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது.

ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் பிறக்கும் பொழுதே பலவிசயங்கள் அவர்களுக்கு இயல்பாகவும் இயற்கையாகவும் ஆணையிடப்பட்டிருக்கின்றது.

அது "சுவாசி உடல் இயங்கும் ". "உண் உடல் வளரும் ". "வளர உணவு தேவை ".
இதுபோன்று...பல...

இதில் "வளர உணவு தேவை" என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும், சேட்டைகளுக்கும் காரணம்.மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான்.காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான் குழந்தைகள் செய்யும் அனைத்தும்.

அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள்.

குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள்.அதனால் பயனேதும் இல்லை.

ஆதலால் , குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள். அவர்களின் வாழ்வை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் மீறினால், அவர்களும் மீறுவார்கள். ஜாக்கிரதை. எனவே குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள். அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள். அவர்களை உற்று கவனியுங்கள். அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள். அதற்கு உதவுங்கள். சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள்.

நம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான். அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன் பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள்?



.

ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.
கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.
அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.
அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?
நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?
எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்
கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பது
போல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே
சொல்லவில்லை.

1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்
இருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்
போட்டு விழுவான். வகை வகையா சமைச்சு
போடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு
பாத்து பாத்து செய்யறோமே! என்னாச்சோன்னு
பயந்து டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப்போனா
உடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.
அதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால
லோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு
சொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு
பால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்
கூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு
கொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,
கொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.

எங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்
6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.
என் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.
அதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு
ஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்
எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு
வேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.
ஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.
ஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.

உயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா
ரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த
உயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்
வலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.
பாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்
கொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது
உயரம் அதிகமான பிள்ளைகளுக்கு.


நார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத
எடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.

போன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்
கிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட
என்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு
தூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா
என் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.
”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே
வளர்ச்சி!!”

நல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.
டயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.
வயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு
வயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.
டயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட
பேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது
BALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்
இருக்கணும்.


ஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த
நல்ல உடலமைப்பை இப்ப உருவாக்கினாத்தான் உண்டு.
இந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,
இப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்
உடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு
கொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.

இந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.
எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்
அளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்
கொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே
ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.

ஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.
இப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.

பால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,
பருப்பு,இட்லி/தோசை/உப்புமா,அரிசி/சப்பாத்தி,
சோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.
அசைவம் சாப்பிடறவங்க
முட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு
இல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்
கொடுக்கலாம்.

இரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து
அதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.
இதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.
உடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.

இரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்
கொடுக்கலாம். பேரிச்சம்பழம் விரும்பாதவங்களுக்கு
அந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,
கீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்
நல்லா கொடுக்கணும்.

இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான
தேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,
ஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்
தேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக
கொடுக்க வேண்டும்.

இதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்
சைக்கிளிங், டான்ஸ், விளையாட்டுக்கள்னு
வைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு
ஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.
இல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி
அவஸ்தையைக் கொடுக்கும்.முறையான உடற்பயிற்சி
பதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்
heart disease, certain cancers, diabetes,
hypertension, bowel problems மற்றும் osteoporosis
போன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.

ஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு
சாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால
கவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு
எப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி
பதின்மவயதுக்குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
இதில் ஆண்குழந்தை, பெண்குழ்ந்தைன்னு
பாகுபாடே இல்லை.

இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு
கொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்
தேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.
அப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.
உடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்
பளிச், பளிச் தானே!

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்,
எமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்
பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு
குறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.
உடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்
ரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,
தயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ
சொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை
ரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.
இல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது
பல பிரச்சனைகள் வருமாம்.

முறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி
கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட
நாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ
பிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன??

குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்
வரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.
பதின்மவயதின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம்.

முடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு
டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.
அவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்
அவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,
நாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு
கொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்
குழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.
(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்
கவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல
மேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா
கொடுக்கலாம்.


இப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே
என் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப
சந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்
வெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,
அயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட
ஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.


இந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்
கிடைக்கும்.

தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்னு முண்டாசு கவிஞர் பாடிவெச்சதிலேயே
உணவு எவ்வளவு முக்கியம்னு தெரியுது. அதிலயும்
நாம் சாப்பிடும் உணவு சத்தான உணவா இருப்பது
ரொம்ப முக்கியம்.

குழந்தை பிறந்ததும் முதல் உணவு அன்னையின்
அமுதான தாய்ப்பால்தான். அதில் கிடைக்காத
சத்துக்களே இல்லை. அதன் பிறகு குழந்தைக்கு
திட உணவு கொடுக்கும்போது கூட சத்தான
உணவா கொடுக்கணும். இல்லாட்டி உடல்பருமன்,
அல்லது குறைவான எடைன்னு குழந்தை அவதிப்படும்.

பிறந்த குழந்தையை வளர்ப்பதைவிட பள்ளிப்போகும் வயது
குழந்தையை வளப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா
உள்ளதிலேயே ரொம்ப கஷ்டமான ஸ்டேஜ்னு சொன்னா
அது இந்த பதின்மவயதுதான்.

சின்னக்குழந்தையை மிரட்டி, திட்டி, கொஞ்சின்னு
எப்பாடுபட்டாவது சாப்பிடவெச்சிடலாம். வாயில
ஊட்டி ஏதோ ஒரு வகையா சாப்பாட்டை உள்ளேத்
தள்ளிடலாம். ஆனா இந்த பதின்மவயதுக்குழந்தையை
இடுப்பில வெச்சு ஊட்டவா முடியும்?

ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்துக்கு வரப்போகிறாள்னு
அவளோட உடல்வளர்ச்சி கட்டியம் கூற ஆரம்பிச்சதும்
வீட்டுல ஆரம்பிச்சிடுவாங்க. சத்தான உணவு கொடுப்பாங்க.
பூப்பெய்தியதும் பச்சை முட்டை, நல்லெண்ணெய்,
உளுந்தங்களி, அது இதுன்னு நல்லா கவனிப்பாங்க.
நெய், பால், இடுப்பை பலமாக்க திண்பண்டங்கள்னு
ஓவ்வொரு ஊரிலும் ஒரு பழக்கம் இருக்கும்.
எப்படியோ பொண்ணை சரியா கவனிச்சிடறாங்கன்னு
சொல்வேன்.

ஆனா இந்த பதின்மவயது ஆண்குழந்தைகள்தான்
ரொம்ப பாவம். தட்டு நிறைய்ய சோறு வெச்சா
சரி. பத்தோ பதினொண்ணோ தோசைன்னு ஊத்தி
போட்டா சரின்னு இருப்பாங்க சிலர். இதனால
அந்த வயசுபசங்க சரியான வளர்ச்சி இலலாமா
ஒண்ணா ரொம்ப குண்டா இல்லாட்டி ஒல்லியா
இருப்பாங்க. முறையான கவனிப்பு இல்லாததுதான்
காரணம். எங்க ஊர் பக்கம் ஒரு வாக்கியம் சொல்லி
கேள்விப்பட்டிருக்கேன். “குறத்தி பிள்ளைபெற
குறவன் மருந்து சாப்பிட்டானாம்” என்பதுதான் அது.

சத்தான உணவு குறவனுக்கு கிடைக்காட்டி பிரச்சனைதானே!!!
யாருக்காவது பதின்மவயதுக் குழந்தைக்கு என்ன
கொடுக்கணும்? எப்படிக்கொடுக்கணும்னு தெரியுமா?
காலங்காலமா சமைஞ்ச பொண்ணு, சமைய போகும்
பொண்ணுன்னு எல்லாம்பொண்ணையே டார்கட் கட்டி
ஊட்டச்சத்தை கொடுத்தாங்க.

அதுக்காக நாம அப்புடியே விட்டுடலாமா?
எப்படி உணவு கொடுக்கணும்? எப்பப்போ கொடுக்கணும்?
இதைப்பத்தி பேசுவோமா??

தெரிஞ்சவங்க உங்க கருத்தையும் சொல்லுங்க.
பலருக்கும் உதவப்போகுது இந்தப் பதிவு.


- கு. செந்தமிழ்ச் செல்வன்
“என் குழந்தை நல்ல மார்க் எடுக்கணும். மாலையிலும் டியூசனுக்கு அனுப்பிடறோம். இல்லைன்னா விளையாடியே நேரத்தை வீணடிச்சிடுவான்”
அக்கறையுள்ள பெரும்பாலான அம்மாக்களின் அணுகுமுறை இது தான்.
“படி, படி, படி”
பள்ளியில் ஆசிரியர்களும்,
வீட்டில் பெற்றோர்களும்,
குழந்தைகளுக்கு இடும் ஒரே கட்டளை இது தான்.
குழந்தைகள் மீது பெற்றோர்களின் அன்பு அளவில்லாதது. “படி படி” என்பது அன்பின் வெளிப்பாடே. ஆனால் ஒரு குழந்தையின் உண்மையான தேவைகளை உணர்ந்து, அதனை அனுமதிப்பது எத்தனை பேர்.
தெருக்களில் குழந்தைகளின் ‘ஓ’வென சத்தம் எவ்வளவு இனிமையானது. விளையாட்டுகளுடன், வேடிக்கை காட்டும் குழந்தைகள் எவ்வளவு அழகானவர்கள். இக்காட்சிகளை எங்கே காண முடிகிறது.
இரண்டு குழந்தைகள் சந்தித்து கொண்டால் போடும் ஒப்பந்தம் விளையாட்டு தானே. பலவகை விளையாட்டுகளை அவர்கள் எங்கு, எப்படி கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் எப்போதேனும் கிடைக்கும் சலுகை நேரங்களில், அவர்களின் விளையாட்டு சாம்ராஜ்யம் தான் விரிகிறது. குழந்தைப் பருவத்தின் பிரிக்க முடியாத இயல்பு விளையாட்டு. குழந்தைகளின் உரிமை விளையாட்டு, அதனைப் பறித்திடும் நாம் குற்றவாளிகள் தானே !!
விளையாட்டு, ஒரு குழந்தைக்கு தேவையான அடிப்படை ஒன்று, உடல்களைக்க விளையாட்டு அவர்களை உற்சாகமூட்டுகிறது, சுறுசுறுப்பாக்குகிறது. உணவை பெற்றோர் கண்டிப்பின்றியே உண்ணத் தூண்டுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள விளையாட்டு வழிவிடுகிறது. கணக்குகளை அறியவும், காரணகாரியங்களை அறியவும் பல விளையாட்டுகளில் உள்ளடக்கமாக உள்ளது. கற்பனைக்கும், ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும் விளையாட்டு மேடை அமைக்கிறது.
நண்பர்களின் வலைபின்னலுக்கும் விளையாட்டு தானே அடிப்படையாக உள்ளது.
விளையாடுவதும், விளையாட்டை கற்பதம் இயல்பானது, இயற்கையானது. சக நண்பர்களிடமிருந்துதான் ஏராளமானவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.
இதனை உணர்ந்தே, பாரதியும் குழந்தைகளுக்கு சொல்லும் முதல் வாழ்த்தாக “ஓடி விளையாடு பாப்பா” என்று பாடினார். மாலை முழுவதும் விளையாடி வழக்கப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்கிறார்.
பலவகை உள்ளரங்கு, வெளியரங்கு விளையாட்டுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கம்யூட்டர் விளையாட்டுகளும் சிந்திக்க தூண்டுபவைகளே. ஆனால், அளவை மீறும் போது அது வெறித்தனமாகிவிடுகிறது. அப்போது , அதில் சிந்தனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.
பெற்றோர்களும் குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம்.
“அது சரி, ஆயிரக்கணக்கில் பீஸைக்கட்டி பள்ளிக்கு அனுப்புவது நாங்கள் விளையாடுவதற்கா?”
உங்களின் முணுமுணுப்பு கேட்கிறது.
குழந்தைகளோடு விளையாடுவது உங்களுக்கும் உற்சாகமளிக்கும், குழந்தைகளிடையே உங்களின் மதிப்பு உயரும். அவர்களின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம். குழந்தைப் பருவத்தில் நீங்கள் இழந்ததை உங்களின் குழந்தைக்கள் மீட்டுத்தரட்டுமே.
இதன் அடுத்தப்பகுதி,”விளையாடாதே” எனும் போது, குழந்தைகளின் வெறுப்புக்கு ஆளாகிறோம். அவர்களை விட்டு விலகுகிறோம். அவர்களின் உரிமையினை பறித்த குற்ற உணர்வோடு நிற்கிறோம்.
“என்ன சொன்னாலும், குழந்தைகளின் வருங்காலம் என்பது அவர்களின் படிப்பு தானே, அவர்களின் மார்க்கு தானே அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்றது” இது பெற்றோர்களின் அர்த்தமுள்ள அங்கலாய்ப்பு.
அர்த்தமுள்ள  ஒரு கேள்வியினையும் நாம் முன்வைப்போம்.
“விளையாட்டும் படிப்பும் எதிரெதிரானதா?”
“இல்லவே இல்லை”
விளையாட்டு குழந்தைகளின் மூளைகளை இயங்க வைக்கிறது. புதியவைகளை எளிதாக உள்வாங்கவும் பதிய வைக்கவும் பக்குவப்படுத்துகிறது. விளையாட்டில் ஆர்வமானவர்கள் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவார்கள் என்பது தான் பல ஆய்வுகளில் தெரிகின்றது. விளையாட்டு, சமூக சிந்தனை, சக மாணவர்களுடன் உறவு இவைகளெல்லாம் இல்லாமல் படிப்பை மட்டுமே பெறும் குழந்தைகள் உள்ளீடற்ற மனிதர்களாகவே வளருகின்றார்கள்.
போதிய விளையாட்டும், தேவையான படிப்பும் குழந்தைகள் சீராக வளர வழிவகுக்கும்.
குழந்தைகளோடு விளையாடுங்கள்.
குழந்தைகளை விளையாட விடுங்கள்
அவர்கள் மார்க்குக்கு நாங்க கேரண்டி
- கு. செந்தமிழ்ச் செல்வன்

நாம சின்ன பசங்களா இருந்த காலத்துலயும் லீவு
வந்திருக்கு. எந்த சம்மர் கேம்புக்கும் போகாமலேயே
நல்லா ஆனந்தமா சிறகடிச்சு லீவைக் கொண்டாடி
இருக்கோம்.

எப்படி? ஒரு முறை அப்படியே சின்ன வயசுக்குப்
போய் ஒரு கொசுவத்தி சுத்திப்பாருங்க. ஆனந்தமா
கல்லா மண்ணா விளையாண்டது, நுங்குவண்டி,
டயர் வண்டி, கிட்டிப்புல், கோலி, பச்சைக்குதிரை,
தாயம், பரமபதம், ஆடுபுலி ஆட்டம் இப்படி
விளையாடியது எல்லாம் ஞாபகத்துக்கு வருதா??

அப்ப விளையாடினது ஞாபகம் இருக்கு. ஆனா
அதை பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க தெரியலை.
அதாவது ஆட்டம் பேரு ஞாபக்ம் இருக்கு. விதிமுறைகள்,
எப்படி விளையாடுவது எல்லாம் ஞாபகம் இல்லை.

நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இந்த
வலைத்தளத்தில் அழகா அதையெல்லாம் தொகுத்து
வெச்சிருக்காங்க. TRADITIONAL GAMES
அப்படிங்கற வலைத்தளத்துல போய் பாக்கலாம்.
நான் ரசித்து விளையாடி மகிழ்ந்த பல
விளையாட்டுக்களை நம்ம பசங்களுக்கும்
சொல்லிக் கொடுத்து பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு
உயிர் கொடுக்கலாம்.

ஹேப்பி ஹாலிடேஸ் குட்டீஸ்!!!

குழந்தைகளை நர்சரியிலோ, ப்ரீஸ்கூலிலோ சேர்க்கும்
முன் குழந்தைகளை தயார் செய்வது மிக முக்கியம்.
இண்டர்வ்யூவுக்கு தயார் செய்வது பத்தி நான் சொல்லவில்லை.

பசங்களுக்கு மைண்ட்செட் செய்வதற்கு முன்னாடி
பெற்றோர்கள் இதை ஒருவாட்டி படிச்சிக்கணும்.
ரொம்ப முக்கியம்.


பள்ளியில் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகமல்
இருக்க சில அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுப்பது
நல்லது. பள்ளிக்கு அனுப்பும்முன் பெற்றோர்கள் இதை
மனதில் வைத்து பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த
வேண்டியது அவசியம்.



1.TOILET TRAINING:

6 மாதம் முடிந்ததுமே இந்த பழக்கத்தை துவக்கிவிடலாம்.
டாய்லட் சீட்டில் உட்காரவைத்து பழக்கினால் பழகிவிடும்.
இது வீட்டில் பழக்கப்படாவிட்டால், பள்ளியில் பிரச்சனைதான்.
அதனால் கவனமாக, முக்கியமாக பழக்கவேண்டிய
விஷயம் இது.

2. தானாகவே சாப்பிடுவது:
”என் பிள்ளைக்கு நான் ஊட்டினால்தான் வயிறு நிறைஞ்சா மாதிரி!!”
அப்படின்னு சொல்லி சொல்லி ஊட்டி விட்டு பழக்கப்படுத்தியிருப்பீங்க.
ஆனா பள்ளியில யாரும் ஊட்டி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்க.
குழந்தை உட்கார ஆரம்பித்த உடனேயே தட்டு போட்டு
சாப்பிட வைப்பது அதுவும் தானாகவே சாப்பிட் வைப்பது
நல்லது.

3.பகிர்ந்து கொள்ளுதல்:
சில குழந்தைகள் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள
மாட்டார்கள். இதனால் யாருடனும் எளிதில் பழகவும்
மாட்டார்கள். பகிர்ந்து கொள்ள பழக்கினால் பள்ளியில்
வாழ்க்கை இனிதாகும்.

4. சின்னச் சின்ன வேலைகள் செய்வதை பழக்கப்படுத்த
வேண்டும். தன் உடையை கழற்ற மாட்ட, ஷூ அணிய
என பழக்கப் படுத்துவது அவசியம்.

பிறருக்கு உதவும் பாங்கு, sorry, thank u சொல்லப்
பழக்குதல், மரியாதையாக நடந்து கொள்ளுதல்,
தன் சாமான்களை பாதுகாத்துக்கொள்ளுதல் எல்லாமும்
மெல்ல மெல்ல பழக்க வேண்டும்.

இவை பள்ளியில் குழந்தை நல்ல முறையில்
செட்டாக உதவும்.

ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி?.. என்றுதான் தோன்றியது..

ஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.

பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .

சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!

இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.

நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..
அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.
சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.

இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.

பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை. சாப்பிட இன்னொரு வயிறு வந்துவிட்டதே... என்று வருத்தப்படுபவர்களுக்கு, உழைக்க இரண்டு கைகள் கிடைத்திருப்பது ஏனோதெரிவதில்லை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்."எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.

சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.எங்கள் வீட்டிலும் என் குழந்தைகள் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். சிலசமயங்களில் பையர் குக்கர் வைத்தால், குழம்பு வைப்பதை பெண் செய்வார்.டைனிங் டேபிளை இருவரும்தான் செட் செய்வார்கள். அதே போல் சாப்பிட்டு முடித்ததும்,ஒதுங்க வைப்பதும் அனேகமாக அவர்கள்தான். அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.

நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.பெண்குழந்தையை பெற்றுவிட்ட காரணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவனைப்பற்றிய செய்தி, தினசரியில்ஒரு மூலையில் இன்று வந்து போனது, ஏனோ,.. இப்ப ஞாபகம் வருது....

சில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா
இருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும்
அஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட்
செஞ்சுக்கலாம்! ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா??
கஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க.

யோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது? யாரைன்னு குத்தம்
சொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்ம வீட்டுலயும்
நம்ம சட்டையில வெச்ச பணம் காணாம போயிருந்தா உஷார்
ஆக வேண்டியதுதான். யாரோட வேலையா இருக்கும்!!
நான் இதைச் சொல்வதால் ஏதோ எல்லா பதின்ம வயதுப்பிள்ளையும்
இப்படித்தான்னு இல்லை. சில வீடுகளில் இதுதான் நிகழ்வு.

பணம் காணாமல் போயிருந்தால் அது அந்த சற்றே பெரிய
குழந்தைதான் எடுத்திருக்கு வாய்ப்பு அதிகம். வயிற்றுப்பசிக்கு
சோறு வீட்டுல இருக்கு, வகைவகையா ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கு,
வெளிய வாச நாங்களே கூட்டிகிட்டு போறோம் அப்புறம்
இதுகளுக்கு பணத்தை கொடுப்பானேன்! என்று சில பெற்றோர்.


பாக்கெட் மணியெல்லாம் வசதி உள்ள வீட்டுப்பசங்களுக்குத்தான்.
நம்மாள முடியாது எனும் வகை பெற்றோர்.

பிள்ளை கையில காசைக்கொடுத்தா கெட்ட
பழக்கத்துக்கு ஆளாகிடுவாங்க என பயப்படும் பெற்றோர்
இப்படி பட்டவர்களால்தான் அப்பாவின் சட்டைபை, அம்மாவின்
அஞ்சறைப்பெட்டி, ஹேண்ட்பேக் ஆகியவற்றில் பணம்
காணாமல் போவது.

சைக்கிளுக்கு காத்தடிக்க, பேனா, பென்சில் வாங்க,
நண்பர்களுடன் சாட் சாப்பிட(எனக்குத் தெரிஞ்சு ஒருபையன்
சாட் கடையில் கடன் சொல்லி சாப்பிட்டு வீட்டுக்குத்
தெரிஞ்சு அடி பின்னிட்டாங்க) என சில செலவீனங்கள்
பதின்ம வயதுக்கு உண்டு.

நாமதான் எல்லாம் செய்யறோமே அப்புறம் இவங்களுக்கு
எதுக்கு காசுன்னு பெத்தவங்க நினைப்போம். ஆனா தானா
தன் கையால காசு வெச்சுகிட்டு செலவு செய்யணும்னு
பசங்க நினைப்பாங்க. பொம்பளைப்பிள்ளைன்னா அழுது
ஆர்பாட்டம் செஞ்சு காசு கறந்துடுவாங்க. பசங்க பாவம்!!
”நீ சிகரட் குடிக்கத்தான் காசு கேக்குற, என் காசை கரியாக்கன்னே
பொறந்திருக்குன்னு” ஏச்சுத்தான் கிடைக்கும்.

இதனால அப்பா, அம்மாக்குத் தெரியாம காசை எடுக்க
ஆரம்பிக்கறாங்க. தனுஷோட ஒரு படம்.(திருடா திருடின்னு)
அவர் அப்பா பணத்தை எடுத்து செலவு செய்வதுபோல
காட்டியிருப்பாங்க. இது நிஜத்துல நடப்பதுதான்.
(இல்லைன்னு யாராவது சொல்லுங்கப்பா, பாப்போம்)

போன வாரத்துல ஒரு நாள் ஆஷிஷ் கூட பேசிகிட்டு இருந்த
போது அவன் வகுப்பில் சில பசங்க வந்து, ”நான் இன்னைக்கு
எங்க அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்தேன்” என்று
சொல்ல ஐயா ஷாக் ஆகியிருக்கிறார். ”அப்பா, அம்மா
பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பது தப்பாச்சேம்மா!!
எப்படிம்மா இப்படி செய்யலாம்? என்றான். இதனால்
இந்தப் பழக்கம் பசங்களுக்கு இப்பவும் இருக்குன்னு
நான் நம்பறேன்.

பணம் கையில் வைத்திருப்பது பெரிய மனிதத்தன்மையைக்
காட்டுது. தனக்குன்னு ஒரு அடையாளத்தை தேடும் அந்த
வயதில் தன் கையில் காசில்லை என்பதே பெரிய குறையாத்
தெரியும். நல்லா படிச்சு முடிச்சாத்தான் சம்பாரிக்க முடியும்.
சம்பாரிக்காம காசுவரணும்னா பர்ஸ்ல கை வைப்பதுதான்.
நாமே நம் பையனை திருடனாக்குறோம்.

பசங்களுக்கு காசு கொடுத்து குட்டிச்சுவராக்கச் சொல்லறீங்களான்னு?
சண்டைக்கு வரவேணாம். நம்ம பிள்ளைகளை நாம் முறையா
வளர்க்கணும். பணத்தை எப்படி செலவு செய்வதுன்னு சொல்லி
கொடுக்க வேண்டியதும் நம் கடமையாச்சே! இப்ப பழக்குவது
பின்னாளில் தான் சம்பாதிக்கும்பொழுது சேமிக்க கற்க வைக்கும்.

யோசிச்சு பாருங்க. ஆரம்பத்துல சொல்லியிருக்கற நிகழ்வு
நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்கு நடந்தா நமக்கு
எவ்வளவு அவமானம்?? நம்மைப்பத்தி, நம்ம பிள்ளைய பத்தி
என்ன நினைப்பாங்க??

என்ன செய்யலாம்? பாக்கெட் மணி கொடுத்திடலாம்.
(பதின்மவயது பிள்ளைகள் ஆண்/பெண் இருவருக்கும்)
சும்மா தூக்கி கொடுத்திட்டா பணத்தோட அருமை தெரிஞ்சிடுமா?
1 ரூபாய் காசுகூட சும்மா கிடைக்காதுன்னு நாம
சொல்லிக்கொடுப்போம். எப்படி? நான் என் வீட்டில் செய்வதை
சொல்றேன். ஆரம்பத்துல சொல்லியிருந்த அனுபவம் விருந்தினராப்
போனப்ப எனக்கும் ஏர்பட்டிருக்கு. அதனால என் பசங்க
அந்த வழிக்கு போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சிருந்தேன்.

அதுக்கு உருவகம் கொடுத்தது என் தோழி அண்ணபூர்ணா.
அவங்க சொல்லிக்கொடுத்ததை நான் கொஞ்சம் முன்னேற்றி
ஆரம்பிச்சதுதான் என் பசங்களுக்கு பாக்கெட் மணி
கொடுக்கும் பழக்கம்.


HOME IMPROVEMENT COMMITTEE இங்க அதைப்பத்தி
சொல்லியிருக்கேன்.

GOLDEN RULES</span> இதை வெச்சுத்தான் பாயிண்ட்ஸ் கொடுத்து
அதை மாத இறுதியில பாக்கெட் மணியா கொடுக்கறேன்.


பணத்தை எப்படி செலவழிக்கறாங்க என்பதை கண்காணிக்கணும்.

செலவு செய்வதை எழுதச் சொல்லி பழக்கி, மாத கடைசியில்
கையிருப்பு எவ்வளவு என்பதை எழுதச் சொல்வதால் பணம்
எங்கே தேவையில்லாமல் செலவாகுதுன்னு புரியும்.
கட்டுப்படுத்த முடியும். இதெல்லாம் நாம பக்கத்துல இருந்து
செய்யணும்.

கார் கழுவுதல் போன்ற அதிகமான வேலைகளில்
உதவும் பொழுது எக்ஸ்ட்ரா பாக்கெட்மணி.
(கொழும்புவில் இருந்த பொழுது ஆஷிஷும்,
அம்ருதாவும் சேர்ந்து கார் பார்க் ஏரியாவை கழுவுவார்கள்.
நானும் உதவுவேன். அன்றைக்கு இருவருக்கும் 25 ரூபாய்
எக்ஸ்ட்ரா மணி)

என்ன கொடுமைன்னு என்ன புலம்ப வெச்சிட்டாங்க பசங்க :))


சின்னக்குழந்தையா இருக்கும்பொழுதே இதை பழக்கிட்டா
பதின்ம வயதுக்கு வரும்பொழுது சுலபமா இருக்கும் என்பதால்
அப்போதே போட்டுவைத்துவிட்டேன் இந்தத் திட்டத்தை.

எங்க அப்பார்ட்மெண்டில் இருக்கும் பசங்க கூட ஆஷிஷ்
பேசிகிட்டு இருக்கும்பொழுது தனக்கு மாசா மாசம்
பாக்கெட்மணி கிடைப்பது பத்தி சொல்ல அந்த பசங்களோட
அம்மாக்கள் என்னை கேட்டாங்க. நானும் என் திட்டத்தைப்
பத்திச் சொல்ல ,”ஐடியா நல்லாயிருக்கேன்னு!” ஆஷிஷ்,
அம்ருதாவோட பாயிண்ட்ஸ் புக்கை வாங்கிகிட்டு போய்
ஜெராக்ஸ் எடுத்து தன் வீட்டிலும் நடைமுறை படுத்த
ஆரம்பிச்சிட்டாங்க. ”ஆஷிஷ் உன் புண்ணியத்துல
இப்ப எங்களுக்கும் பாக்கெட் மணி கிடைக்குதுன்னு!”
பாராட்டுக்கள்தான்.

இந்தப் பழக்கம் மேலைநாடுகளில் இருக்கு. அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா வீட்டிலும் தன் குழந்தைகளுக்கு
பாக்கெட்மணி வேலை செய்வதற்குத்தான் கொடுக்கிறார்
என செய்தி படித்தேன்.(அவர் பசங்களை விட எங்களுக்கு
பாக்கெட் மணி கூடவே கிடைக்குதுன்னு பசங்களுக்கு
சந்தோஷம்.)

பதின்மவயதுப்பிள்ளைகளை மதித்து அவர்கள்
வாழ்வில் நல்லபடியாக வளர உதவுவோம்.

நாளை மகளீர் தினம் என்பதால் நாளை வரவேண்டிய
பதிவு வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை அன்றே.


Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்