பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

அனைவருக்கும் வணக்கம்,

இந்த வலைப்பூவில் இரண்டு வருடங்களாக எந்த பதிவும் வரவில்லை. கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது.

இனி வளமைபோல் இந்த வலைப்பூ இயங்கும். தங்களின் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கலா ஸ்ரீராம்

வலையுலக நட்புக்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு அதுவும் ஒரு அழகான படத்துக்கு. சந்தோஷமா ஆரம்பிக்கறேன்.

ஆஹா ஓஹோன்னு எதிர்பார்பெல்லாம இல்லாம தியேட்டருக்கு போனீங்கன்னா உங்களுக்குள்ள ஒரு மாற்றத்தோட வெளியில வருவீங்க. இதை எதிர் பார்த்துதான் டைரக்டர் பாண்டிராஜ் ( பசங்க படம் எடுத்த அதே புதுக்கோட்டை பாண்டிராஜ் தான்) இந்த படத்தை உருவாக்கியிருக்கார்.

முந்தைய படம் எங்க புதுகையில் நடக்கறாப்ல இருக்கும். ஸ்லாங்க் கூட அப்படியே வரும். இந்த படத்தோட களம் சிட்டி. நகர வாழ்க்கையில் இருக்கும் பிள்ளைகளின் பிரச்சனையை சொல்லியிருக்கார். கதைன்னு கேட்டா வழக்கமான ஒன்லைன். பிரச்சனையுடைய பிள்ளைகள், அது என்னன்னு தெரியாம, எப்படி ஹேண்டில் செய்ய தெரியாத பெற்றோர்கள் ரெண்டு பேருக்கும் நடக்கும் போராட்டம், அதற்கான தீர்வு இதுதான்.

சுட்டி கவின் மற்றும் அவனுடைய பெற்றோர், குட்டி சுட்டி நயனா மற்றும் பெற்றோர் இவங்களுடன் டாக்டர் தமிழ்நாடனாக வரும் சூர்யா, அமலா பால் (வெண்பா டீச்சர்) இவங்க பிள்ளைங்க. இவங்களை சுத்திதான் கதை நகருது.

கவினுக்கும் நயனாவுக்கும் ஒரே பிரச்சனை. ஒரு இடத்துல அவங்களால உட்கார முடியாது, குறும்பு சேட்டை, கவனக்குறைவு அதனால படிப்பு சுமார், இதனால பள்ளிகள் அப்பார்ட்மெண்ட்கள் மாற்றம்னு அவஸ்தை. அவங்களை ஹாஸ்டலில் போடுவதுதான் தீர்வுன்னு முடிவு செஞ்சு அதை அமுலாக்கற பெற்றோர்.  ஆனா அது தேவையில்லைன்னு தன்னுடைய அணுகுமுறையால புரிய வைக்கிறார் டாக்டர். தமிழ்நாடான்.

குழந்தைகளின் உலகம் வேற . அதுக்குள்ள நாம இருக்கணும். நானும் இந்த ஸ்டேஜெல்லாம் கடந்து தான் வந்திருக்கேன்லாம் சொல்லலாம். ஒவ்வொரு பிள்ளையும் வேறு. ஆனா பிசியா ஓடிக்கிட்டு இருக்கற பெற்றோருக்கு குழந்தைகளின் அழகு உலகை புரிஞ்சிக்க நேரம் இருக்கா என்பது கேள்விக்குறி தான்? அவங்களை புரிஞ்சிக்காம அவங்க அவஸ்தைகளை புரியாம பிள்ளைகளையே பிரச்சனையா பாக்கறது நடக்குது.

ADHD  நம்ம வலைப்பூல இதைப்பத்தி நிறைய்ய எழுதியிருக்கோம்.  குழந்தைகள் அதிகமா டீவி பார்க்க விடறது, மொபைல், ஐபேட், வீடியோ கேம்ஸ் அதிகமா உபயோகிப்பது இதெல்லாம் முக்கியமான காரணங்கள். இதைப்பத்தி கொஞ்சம் அதிகமா டாக்டரின் பார்வையிலாவது சொல்லியிருக்கலாம்.  ஆனா முக்கியமான பாயிண்டை பிடிச்சு சொன்னதற்காக டைரக்டருக்கு பூங்கொத்து கொடுக்கறேன்.

மாண்டிசோரி கல்வி முறையில 0-7 வருடங்கள் ரொம்ப முக்கியமானது. அப்படி பார்த்தா கரு உருவானது முதலே வளர்ச்சி துவங்குது. ரொம்ப முக்கியமான கட்டம் கருவறைப்பாடம் தான்.  தாய் என்ன சூழ்நிலையில் இருக்காங்க, கணவன் மனைவி உறவு எப்படி இருக்கு, என்ன சாப்பிடறாங்க, என்ன செய்யறாங்க, என்ன நிகழ்ச்சி பாக்கறாங்க, எதை விரும்பி செய்யறாங்க இதெல்லாம் குழந்தைக்கும் பாதிப்பு உண்டாக்கும். கருவிலேயே சக்கரவ்யூகத்துக்குள் போக கத்துக்கிட்ட அபிமன்யு, விஷ்ணுவின் கதையை கருவிலேயே கேட்டதால விஷ்ணு பக்தியுடன் பிறந்த பிரகலாதன் இவர்களை நினைவு படுத்திக்கணும். கவின், நயனா அம்மாக்கள் அவர்களை கருவுற்றிருந்த காலத்தில என்னென்ன செஞ்சாங்கன்னு காட்டியிருக்கார் டைரக்டர். அதை கவனிக்காம விட்டாங்கன்னா படத்தில் பிள்ளைகள் செய்யும் குறும்புக்கான புரியாம போயிடும்.  அப்புறம் படத்துல கதை என்ன? என்ன சொல்லவர்றாரு டைரக்டர்னு புரியாம போயிடும்.

பிள்ளைகள் நல்லவங்களா இருந்தாலும் கெட்டவங்களா இருந்தாலும் அளவோடு குறும்பு செஞ்சாலும், அளவுக்கதிகமா குறும்பு செஞ்சாலும், அடுத்த பிள்ளைகளை அடிப்பது, கடிப்பது இப்படி செஞ்சாலும் அது பெற்றோர் வளர்ப்பு குறைபாடுதான். ஆனா இதை பெற்றோர் சிலர் ஒத்துக்க மாட்டாங்க.

குழந்தை பேறுங்கறதை செல்வம்னு சொல்வாங்க. பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது. அவர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு எடுத்து பாத்து பொறுப்பா செய்ய வேண்டிய விஷயம். அதை இந்தப்படம் இன்னொரு வாட்டி தெளிவா புரிய வெச்சிருக்கு. நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து, நாம ஒரு உதாரணமா அவங்களுக்கு வாழ்ந்து காட்டி, அவர்கள் உதவியோடு அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்த்து அனுபவித்து மகிழ்வது சுகம். இது தான் இப்போதைய அத்தியாவசிய தேவையும் கூட.

HAPPY PARENTING. HAPPY NEW YEAR 2016


பெற்றோருக்கு எந்த வயதுப்பிள்ளையும் குழந்தைதான். அந்தக்குழந்தையின் நல்லபடியாக பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து, கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து, என ஒவ்வொரு வயதிலும் ஒரு ரகமாக அவர்களுடன் நம் பயணம் இருக்கும். ஒவ்வொரு வயதிலும் பிரச்சனை ஒவ்வொரு ரகமாக இருக்கும். அவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.


 சின்னக்குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றோ, டீன் ஏஜ்ல என்ன படிப்புல கான்சண்ட்ரேட் பண்ணாம என்றோ இருந்துவிட முடியாத விடயம் பிள்ளை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான நிகழ்வாக குழந்தையை புரிந்துக்கொள்வதை சொல்லலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகம் என்பதால் புரிந்து கொண்டால் தவிர அந்தக்குழந்தையின் வளர்ச்சியில் நம்மால் முழு பங்கு எடுத்துக்கொள்ள முடியாது.

 பெற்றோருக்கும் குழந்தைக்குமான உறவு: பெற்றோரும் குழந்தையுமே உறவுதானே!! இதுல என்ன தனியாக இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். ஒவ்வொரு உறவிலும் ஒரு தனித்தன்மை. அதை பேணிக்காக்க வேண்டும். கணவன் - மனைவி உறவுக்குள் அந்த புரிதல், பேணல் இல்லாவிட்டால் வாழ்வில் ஜீவனே இருக்காது. அது போலத்தான் பெற்றோர்- குழந்தை உறவு.

அன்பு - இது எந்த உறவுக்கும் தேவையான விஷயம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே கலப்படமில்லாத அன்பு இருக்க வேண்டும். திகட்ட திகட்ட அன்பை கொடுக்கும் அதே வேளையில் அன்பு எனும் பெயரால் பிள்ளைகளை கெடுத்துவிடவும் கூடாது. தவறைத் திருத்தி, பாராட்டி, என சமமாக அன்பு இருக்க வேண்டும். எதைக்கொடுத்தும் நிவர்த்தி செய்து விட முடியாத அளக்க முடியாத அன்பை குழந்தைக்கு கொடுப்பதை விட சிறந்தது வேறெதுவும் இருக்காது.

கேட்டதை உடனே வாங்கி கொடுப்பதோ, கேட்காததையும் முன் கூட்டியே வாங்கி கொடுப்பதோ அன்பாகாது. அது அவர்களை கெடுத்து விடும்.
 அன்பு  காட்டும்  அதே சமயம்  நாம் குழந்தைகளுக்கு தேவையான நீதி போதனைகளை, ஒழுக்கத்தை, நல்லெண்ணத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அதை தவற விட்டால் ரொம்ப கஷ்டம். 5 வளையாதது 50ல் வளையாது!!

இளம்ப்ராயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் ரோல்மாடல். எதற்கெடுத்தாலும் பெற்றோரிடம் தான் ஓடிவருவார்கள். அந்தச் சமயத்தில் நாம் நம் குழந்தையை எப்படி இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோமோ அப்படி நாம் அவர்கள் முன் நடந்து கொள்ள வேண்டும். கற்றல் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பெற்றோர்தான் சிறந்த முன்னுதாரணம் என்பதை நாம் மறக்க கூடாது. அதே நேரம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளும் அளவளாவ வேண்டும். அதுதான் முக்கியம். குழந்தைகளுடன் செலவிடும் அந்த நேரம் அவர்கள் மனதில் பாசத்தை உண்டு செய்யும்.

 வாரி எடுத்து அணைப்பது என்பது அன்பின் வெளிப்பாடு. வயது ஆக ஆக அது குறைந்துவிடாமல் என்றும் குழந்தைக்கு நம் ஸ்பரிசத்தை தந்தால் குழந்தை பாதுகாப்பாக, கதகதப்பாக உணரும் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளரும்.

அவர்களின் பேச்சை பொறுமையாக கேட்க வேண்டும். நாம் சொல்வதை பெற்றோர் காதுகொடுத்து கேட்கிறார்கள் எனும் எண்ணம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை தரும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு அலுத்து கொள்ளாமல் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு பதில் சொல்வது அவசியம். குழந்தைகளிடம் பொறுமை இழந்து கத்துவது கூடவே கொடாது.
பொறுமையாகத்தான் அவர்களை கையாள வேண்டும்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக நம் பேச்சு இருக்கவேண்டும்.
அவர்களிடம் பேசுவது, அவர்கள் பேசுவதை நாம் கேட்பது என இருவருக்குமிடையே ஆன கருத்து பரிமாற்றம் எப்போதும் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும்.

 வெளியிடங்களில் பிள்ளைகள் பலவிதமான எதிர்மறைக்கருத்துக்களை கேட்கநேர்கிறது. பள்ளியில், விளையாட்டில் என ஈடுபடும் பொழுது பாராட்டு அவசியமாகிறது. பெற்றோர் பாராட்டி ஊக்குவித்தால்தான் குழந்தை தன் முயற்சியை விடாமல் செய்யும் பக்குவத்தை அடையும். ஞாபகமிருக்க வேண்டிய விஷயம். பெற்றோரின் பாராட்டு ஓவர் டோஸாக போய்விடக்கூடாது. “தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்” என்பதனால் தூக்க மருந்து ஓவர் டோஸாகிடாமல் ஊக்கமருந்தாக அவர்களை முன்னேறச்செய்யும் அளவுக்கு இருக்கட்டும்.

பிள்ளைகள் தவறு செய்தால் மிதமான கண்டிப்புடன் புரிய வைக்க வேண்டும். நல்லது எது கெட்டது எது என புரியவைப்பது அவசியம். ஏன் நல்லபாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி புரியவைப்பது அவசியம். ஆனால் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்ககூடாது. அவர்கள் பிள்ளைகள்!!


”நீ ஒரு முட்டாள்!” “ உனக்கு ஒன்றும் தெரியாது!” போன்ற எதிர்மறையான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்ப்பது நலம். இது குழந்தையின் மனதில் அதீத பாதிப்பை உண்டு செய்துவிடும். மாறாக “ நான் உன்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்!!” என்று “இப்படி செய்தால் மகிழ்ச்சியாக இருக்கு” என்றோ சொல்வதனால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் அதிகம்.


அடுத்த பதிவு குழந்தைக்கு என்ன தேவை? (அடுத்த வாரம் )
இனி ஒவ்வொரு புதன்கிழமையும் சைக்காலஜி பதிவுகள் வெளிவரும் என்பதை தெரிவித்திக்கொள்கிறேன்.


பிள்ளைகளுக்கு பள்ளி துவங்கியாச்சு. எல்லா பெற்றோரும்
பிசியா இருக்கும் நேரம் இது. என் மனசுல ரொம்ப நாளா
ஓடிக்கிட்டு இருக்கற ஒரு கேள்விதான் இந்தப் பதிவு.

CURSIVE WRITINGல் தான் சில பள்ளிகளில் எழுத வேண்டும்னு
ரூலே வெச்சிருக்காங்க. ஆனா இந்த CURSIVE WRITING
தேவையா என்பதுதான் என் கேள்வி. இப்படி சேர்த்து
எழுதும் முறையை நாம அதிகமா எங்கேயும் உபயோகிப்பதில்லை.
இப்ப simple letters or printing letters இதுதான்
அதிகமா உபயோகத்தில் இருக்கு. ஏன் பிள்ளைகளின்
பாடப்புத்தகமே இந்த முறையில் தான் அச்சிடப்பட்டு இருக்கு.

அப்படி இருக்க கூட்டெழுத்து அல்லது சேர்த்தெழுதினாத்தான்
நல்லதுன்னு சொல்வதில் அர்த்தம் இல்லைன்னு எனக்குப் படுது.
அதுவும் இந்த எல்கேஜி பிள்ளைகளை கூட்டெழுத்து கத்துக்க
சொல்லி கட்டாயப்படுத்துவது மகா கொடுமை. அந்த வயசு
குழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்.
அப்படி இருக்க அவங்களுக்கு கூட்டெழுத்து கட்டாயமா
சொல்லிக்கொடுப்பதன் அவசியம் என்ன?





சில குழந்தைகளுக்கு எழுத வரும். சில குழந்தைகளுக்கு இப்படி
எழுத கஷ்டமா இருக்கு. b, d இந்த ரெண்டு எழுத்தையும் எழுதும்
பொழுது குழப்பமா இருக்கும். சேர்த்து வார்த்தைகள் எழுதும் பொழுது
படிக்க கஷ்டமா இருக்கும். அதைவிட கஷ்டம் பெற்றோருக்கு!!!
என்ன கேள்வி பதில் எழுதி வந்திருக்காங்கன்னு படிக்க
கஷ்டமோ கஷ்டம்தான். கூட்டெழுத்து நல்லா எழுத கற்ற பின்
எங்கே அதை உபயோகிக்க போறாங்க? கல்லூரிகளிலா? இல்லை
அலுவலகங்களிலா??

ஆங்கிலேயர்கள் டைப்ரைட்டர் கண்டுபிடிக்கும் முன்னாடி கூட்டெழுத்தில்
எழுதிக்கிட்டு இருந்தாங்க. "fair hand" அப்படின்னு சொல்வாங்க.
அதாவது எழுத்துக்கள் அழகா இருக்குன்னு அர்த்தம். ஆனா
அப்பக்கூட 2 ஆம் வகுப்புக்கு மேலதான் இந்த கையெழுத்துப்
பயிற்சியை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா
இப்ப பள்ளிகளில் எழுதுவதே CURSIVE தான்னு கஷ்டப் படுத்தறாங்க.
சிலருக்கு இப்படி எழுத முடியும். சிலருக்கு எழுத முடியாது.
கூட்டெழுத்துல எழுதுவது ரொம்ப ஈசியும் கிடையாது.

இப்ப கிளர்க் வேலையில் கூட எழுத்து வேலை குறைவு.
எல்லா இடத்திலையும் கணிணி ஆக்கிரமிச்சாச்சு. புத்தகங்கள்
எல்லாமே பிரிண்டிங் சிம்பிள் லெட்டர்ஸ்தான். அப்படி இருக்க
கூட்டெழுத்தில் எழுதக்கற்றுக்கொள்வதை கட்டாயம்னு சொல்வது
நியாயமே இல்லை. இப்ப பல இடங்களில் கூட்டெழுத்து முறை
குறைஞ்சுகிட்டே வருது. 2006 வருடத்தில் SAT
( standardized test for college admissions in the United States.)
15 சதவிகிதத்தினர்தான் கூட்டெழுத்துல எழுதியிருக்காங்க.

டிஸெலக்ஸியா பிள்ளைகளுக்கு எழுத்து என்பதே
கஷ்டமா இருக்கும். அப்படி இருக்க அவர்களை கூட்டெழுத்தில்
எழுதச் சொன்னா ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் எனக்குத்
தெரிந்து மாண்டிசொரி முறையில் பாடங்கள் ஆரம்ப
வகுப்புக்களில் நடத்தப்படுவதில்லை. அதாவது ஒரு
எழுத்தை தொட்டு உணர்ந்து, அதை பல முறை
பார்த்து அதன் பிறகு எழுதுவது. (என்னுடைய முந்தைய
மாண்டிசோரி கல்வி முறை பதிவுகளில் பார்க்கலாம்)

எடுத்த உடனேயே A,B,C, ஆரம்பிக்கறாங்க.
சில பள்ளிகளில் ஸ்ட்ரோக்ஸ் போடச் சொல்லிக்
கொடுப்பதே இல்லை. அதிலும் a,b,c ஈசியா இருக்க,
கேபிடல் ஏ,பி,சி ஆரம்பிச்சிருவாங்க. பாவம் பசங்க.

கையெழுத்து பயிற்சிக்காக பிள்ளைகள் விரும்பினா மட்டுமே
கூட்டெழுத்து சொல்லிக்கொடுக்கணும் என்பது என் எண்ணம்.
வற்புறுத்தாம விருப்பம் இருந்தா எழுதட்டும்னு சொல்லிக்
கொடுக்கலாம். நடைமுறை உபயோகத்தில் இருக்கும்
பிரிண்டிங் ஆல்ஃபபெட் எழுதப்பழகுவதில் எந்த தவறும் இல்லை.

அம்ருதா, ஆஷிஷ்ற்கு கர்சிவ் ரைட்டிங் தெரியாது. ஆனா
அவர்கள் இந்தியா வந்து பள்ளியில் சேர்த்த பொழுது
அதை அவர்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஷிஷாவது
அப்போது 7ஆம் வகுப்பு. அம்ருதா 4 ஆம் வகுப்புதான்.
அவர்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ”முடிந்தால் ட்ரை செய்,
இல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடு ”என்று சொல்லிவிட்டார்கள்.
D'Nealian style of writing:

D'Nealian 1978ஆம் ஆண்டு இப்படி எழுதும் ஸ்டைலை
கொண்டு வந்தார்.





பிரிண்டிங் மெத்தட் இல்லாமல் கர்சிவ் ரைட்டிங்கும் இல்லாம
நடுவாந்திரமா இருக்கும் இந்த முறை பிள்ளைகள் கற்க
எளிதா இருக்கும்.

இந்த முறையில் எழுத சொல்லிக்கொடுப்பது நல்லா இருக்கும்னு
சில அறிஞர்கள், ஆசிரியர்கள் சொல்றாங்க. இந்த முறையில்
எழுத சொல்லிக்கொடுக்கும் பொழுது கையெழுத்து பார்க்க
அழகா இருக்கும். (ஆஷிஷ் அம்ருதா இந்த ஸ்டைல்லதான்
எழுதுவாங்க.)
இங்க போய் பாருங்க.

கூட்டெழுத்து கையெழுத்து போல வேணாம் நல்லா இருக்கும்.
நடைமுறைக்கு ஒத்துவராது, அதனால அதை கற்பது
கட்டாயம்னு சொல்லக்கூடாது என்பது என் எண்ணம்.
உங்க எண்ணத்தையும் சொல்லிட்டு போங்க.

இப்ப டீவி, மாத இதழ்கள், வார இதழ்கள் எல்லாத்துலயும் ஒரே
டாபிக்தான் அதிகமா பேசப்படுது. அது தனது ஆசிரியையை
குத்தி கொன்ற மாணவன்.

தப்பு யார் மேலன்னு விவாதங்கள் நடக்குது. யாரைச் சொல்லி
நோவது கொஞ்சம் அலசி பாப்போமா?!!

நான் எப்பவுமே சொல்லிக்கிட்டு இருக்கும் மாரல் ஸ்டெடி வகுப்புக்கள்,
நீதி போதனைகள் எதுவும் பள்ளிகளில் கிடையாது. அவற்றிற்கு பதில்
எங்கள் பள்ளி மாணவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்
என மார்தட்டிக்கொள்ள பள்ளி நிர்வாகம் விரும்புவதால ஆசிரியர்கள்
இயக்கி விடப்பட்ட மிஷின்களாக தங்களுக்கு இடப்பட்டிருக்கும் வேலையை
மட்டும் செய்து முடிக்க முனைகிறார்கள். CBSC பாடத்திட்டத்தில்
இப்ப சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பாடங்களை ஸ்ட்ரெஸ்
இல்லாம பரிச்சார்த்தம் செய்யும் முறை வந்திருக்கு. ஆனாலும்
இந்த CONTINUOUS CLASS ROOM ASSESSMENT கேள்வித்தாள் செட்
செய்து, பரிட்சை வைத்து, பேப்பர் திருத்தி ரிப்போர்ட் கார்ட்
தருவதை விட ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும் தொடர்ச்சியான
ஒரு ஸ்ட்ரெஸ் என்றே சொல்ல வேண்டும்.

யோகா, டான்ஸ், விளையாட்டு இதெல்லாம் கட்டாயமா வெச்சிருக்காங்க.
இத்தோடு வேல்யூஸ், மாரல் ஸ்டெடி வகுப்புக்களையும் கட்டாயமாக்கணும்.
அப்போ இழந்த நீதி போதனைகள் பிள்ளைகளுக்கு கிடைக்கும். அப்படியும்
ஒரு தலைமுறை பள்ளிக்குழந்தைகள் இவற்றை இழந்ததை ஈடு செய்ய
முடியாம போகும். அதனால கல்லூரிகளில் (அதாவது நீதிப்பாடங்களை
பள்ளியில் கற்றிராதவர்களுக்கு என அமைத்தல் வேண்டும்.

மெத்த படிச்ச மேதாவியா மட்டும் இருந்தா போதாது. அதனால
நல்ல குடிமகனாக்க இதை கல்வித்துறை செய்ய வேண்டும்.


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. CHARITIY BEGINS AT HOME.
சத்தியமான உண்மை இது. எதுவும் நம்ம வீடுகளில் இருந்துதான்
துவங்கனும். எனக்கு வேலை இருக்கு. இரண்டு பேரும் வேலை
பார்க்கிறோம்னு சொல்லி ஓடிட முடியாது. தப்பிக்கவும் வழி இல்லை.
நம்ம பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான கடமை
நமக்கு இருக்கு. பெற்றால் மட்டும் போதாதே! நல்லது கெட்டது
சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய
கடமை. பள்ளியில் சேர்த்தோமா... ஃபீஸ் கட்டினோமா,
வேண்டியதை வாங்கிக்கொடுத்தோமா!!ன்னு இருக்க கூடாது.

மார்க்கு, ரேங்கு என ஓடாத பள்ளியாக பார்த்து பிள்ளைகளை
சேர்த்து, ஆசிரியரைப் பற்றி எந்த வித தவறான கமெண்டுகளும்
பிள்ளைகளின் காதில் விழாமல், ஒரு மாணவனின் வாழ்வில்
குருவின் அவசியத்தை சொல்லிகொடுத்து அந்த உன்னதமான
தொழிலின் மூலம் அறிவுக்கண்ணை திறக்க வைக்கும் தெய்வங்களுக்கு
என்றும் நன்றியுடையவர்களாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

உங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் பொழுது
உங்களின் ஆசிரியர்கள் பற்றியும் நினைத்து மனதில் ஒரு
குதூகலம் ஏற்ப்படுகிறதுதானே!!! அந்த ஒரு நிலயை,
சந்தோஷத்தை நம் குழந்தைகளும் அடைய உதவி செய்ய
வேண்டும். பள்ளியில் ஏதும் பிரச்சனை இருந்தால், ஆசிரியர்
ஏதும் திட்டியது தெரிந்தால் உடன் பள்ளிக்குச் சென்று
கத்தி சண்டை போடாமல் என்ன நடந்திருக்கிறது என்பதை
அறிந்துக்கொள்ள வேண்டும். ”அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதுதானே அறிவு!!!!

பள்ளியில் ஆசிரியருக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ் அவ்வளவு
இவ்வளவு இல்லை. அதிலும் இந்த பதின்ம வயதுக்கு
குழந்தைகள் இருக்கும் ஆசிரியருக்கும் இருக்கும் கஷ்டம்
அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வீட்டில் இருக்கும்
நமக்கு புரியாத கஷ்டம். ஒரு பதின்ம வயதுக்குழந்தை
இருக்கும் வீட்டில் எப்படி இருக்கும் என உணர்ந்தவர்கள்,
அதே போல 30க்கும் மேற்பட்ட குழந்தையை ஒரு இடத்தில்
உட்கார வைத்து பாடம் சொல்ல என்ன பாடு படுவார்கள்
என தெரிந்தால், புரிந்தால் போதும்.

எதுவும் நடந்த பிறகு பேசி புண்ணியம் ஏதுமில்லை.
ஆகவே முன்பே நன்கு யோசித்து, இப்படி இப்படி
நடக்கலாம் என அவதானித்து நாம் செய்ய வேண்டியவற்றை
செய்ய வேண்டும்.

யார்மேலும் தவறு இல்லை என்றோ, ஒருவர் மீது
தவறு என்றோ சொல்ல முடியாத சூழல். ஆகாவே
நம் கடமையை நாம் சரியாக செய்ய வேண்டும்
எனும் எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டால்
பிரச்சனைத் தீர வாய்ப்பிருக்கிறது

வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.

சென்ற வாரம் எனது மகன் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில பள்ளி நிர்வாகம் சொன்ன சில கருத்துக்கள் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் என்னைத் திண்டாட வைத்தது. அதன் விளைவே இக்கட்டுரை..

மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையில் ஒன்று 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு “Spelling Success” என ஒரு புத்தகம் கொடுத்துள்ளார்களாம். அதில 3000 வார்த்தைகள் இருக்கும். தினம் 10 வார்த்தைகள் எடுத்துக்கொண்டு, அன்றைய நாளில் எல்லா வகுப்புகளிலும் ஆசிரியர்கள் அந்த 10 வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பார்கள். அதனால் மாணவர்களின் மனதில் 10 வார்த்தைகளுக்கான அர்த்தமும், spellingம் மனதில் நின்றுவிடும். 2 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடிய 6000 வார்த்தைகளை மாணவர்களின் மனதில் புகுத்திவிடுவோம். அதனால் அவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசுவார்கள் என்பது அவர்கள் வாதம்.

முதலில் அவர்கள் தங்களுடைய பெரிய தவறு ஒன்றை ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் வழக்கமாக நடத்தும் பாடத்தில் வரும் வார்த்தைகளின் அர்த்தத்தையோ, spellingகோ மாணவர்களின் மனதில் பதியவைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மொழிப் பாடங்களில் அடிக்கடி வரும் வார்த்தைகளை பதிய வைத்தாலே போதும் ஆங்கிலம் பேச நிறைய வார்த்தைகளை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். இவ்வளவுக்கும் அந்த பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் (from 1st std) ஆங்கிலத்திற்கு மட்டும் textbook, good grammar, conversation or spelling success என 3 புத்தகங்கள் கொடுப்பார்கள். அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை பதிய வைக்கமுடியவில்லை என்றால் இந்த 3 புத்தகங்கள் எதற்கு?

உண்மையான பிரச்சினை பாடச்சுமை. ஒரு வார்த்தையை மாணவர்கள் படிக்கும்போது 3 விதமான கற்றல் நடக்கிறது.
1. வார்த்தையின் ஓசை
2. வார்த்தையின் அர்த்தம்
3. spelling
தாய்மொழியாக இருந்தால் முதல் 2 கற்றல் தேவையில்லை. 3வது கற்றல் மட்டுமே நடக்கிறது. ஆகவேதான் தாய்மொழியில் கற்பது எளிதாக இருக்கும்.(அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்)
ஆங்கிலம் அயல்மொழி 3 கற்றலும் நடக்கும். ஆகவே ஆங்கில வார்த்தைய கற்பதற்கு நிறைய கால அவகாசத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

இன்று இருக்கும் பாடச்சுமை மெதுவாக கற்பதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கவில்லை. அவசரகதியில் கற்பதால் அரைகுறையாக ஓசை மற்றும் spelling மட்டும் படித்து மதிப்பெண் எடுத்துவிட்டு மறந்துவிடுகிறார்கள்.

ஆங்கில வார்த்தைகள் மாணவர்கள் மனதில் பதியாமல் போனதற்கு பாடச்சுமைதான் காரணம். இதைகூட புரிந்துகொள்ளாமல் இக்குறையை போக்க இன்னொரு புத்தகம் வழங்குகிறோம் என்று பாடச் சுமையை மேலும் அதிகமாக்கும் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது?

(குறிப்பு: General Knowledge புத்தகத்தையும் இந்த வகையில் சேர்த்துகொள்ளலாம். Science, Social Science இரண்டையும் நன்றாக புரியவைத்து மனதில் ஏற்றினால் அதுதான் General Knowledge. ஆனால் இன்றோ General Knowledge புதிய பாடமாகவே ஆகிவிட்டது.)

உலகமயமாக்கலுக்குப் பின்னால நடந்திருக்குற மாற்றங்களால வேலை விசயமா நம்ம ஆட்கள் வெளிநாடுகளுக்கு போறது கடந்த பத்து இருபது வருசங்களில் பலமடங்கு அதிகமாகி இருக்கு. சும்மா ஒரு மாசம் ரெண்டு மாசம்னு தனியா போறவங்க மட்டுமில்லாம ஆறுமாசம் ஒரு வருசம் அதுக்கும் மேலன்னு குடும்பத்தோட வெளிநாடுகளுக்கு போறவங்கள அதிகமா பாக்க முடியுது.

இந்த முறை நான் அமெரிக்காவுக்கு ஆறு வார வேலையா வந்துட்டு அது ஆறு மாசமா எக்ஸ்டெண்ட் ஆனதால என் தங்கமணியவும் பையனையும் இங்க கூட்டிட்டு வந்தேன். அவனை இங்க பள்ளிக்கூடத்துல சேத்தலாம்னு போய் கேட்டப்ப அவங்க கேட்ட சில டாக்குமென்ட்ஸும், பள்ளிக்கூடத்துல சேத்துறதுக்காக நாங்க அலைஞ்சதும் நிறைய விசயங்களை கத்துக் கொடுத்தது. அதை எல்லார்கூடவும் பகிர்ந்துக்குறது நல்லதுன்றதால இங்க பதியுறேன்.

டிஸ்கி: நான் எழுதியிருக்குறது இப்ப நான் இருக்குற டென்னிஸி (Tennessee, USA) மாகாண விதிமுறைகள். இடத்துக்கு இடம் விதிமுறைகள் மாறும்னாலும், பெரிய அளவுல மாற்றம் இருக்காது.

1. குழந்தை பள்ளிக்கு செல்லும் வயது
இங்க குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குறைஞ்ச பட்சம் 5 வயசு கம்ப்ளீட் ஆகி இருக்கணும் (செப்டம்பர் 30 தேதி அன்னிக்கு). என் பையன் ஆகஸ்ட்லயே 5 வயசு கம்ப்ளீட் பண்ணிட்டதால அது பிரச்சினை இல்லை. ஒரு வருசம் KinderGarten, அதுக்கப்புறம் 1st grade, 2nd grade இப்படி போகுது.

2. தடுப்பூசிகள்
குழந்தையை பள்ளியில சேர்க்க முதல்ல அவங்க கேக்குற கேள்வியே “குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் குடுத்தாச்சா?” (vaccine / shots) அப்படிங்குறதுதான். இதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்குறதே இல்லை. ஒவ்வொரு மாகாணமும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் போட்டிருக்க வேண்டிய தடுப்பூசி லிஸ்ட் வெச்சிருக்காங்க. அது எல்லாம் போட்டாச்சின்னு ஒரு டாக்டர் சர்டிஃபிகேட் குடுத்தாத்தான் குழந்தையை பள்ளியில சேர்க்கவே முடியும்.

இந்தியாவுல இருந்து வர்ற நமக்கு இது பெரிய பிரச்சினை. என் பையனுக்கு எல்லா தடுப்பூசிகளும் சரியான நேரத்துல சென்னையில விஜயா ஹாஸ்பிடல்ல போட்டிருக்கோம். அது எல்லாத்தையும் மெடிக்கல் ரெக்கார்ட் எழுதுற நோட்டுலயே டாக்டர் எழுதி ட்ராக் பண்ணியிருக்கோம். ஆனா இங்க அந்த நோட்டை மெடிக்கல் ரெக்கார்டா கன்சிடர் பண்ண மறுத்துட்டாங்க. அதுக்காக அஞ்சு வருச தடுப்பூசிகளை மறுபடியும் போடுறதும் முடியாத காரியம்.

பதிவர் சஞ்சய் மூலமா அவர் நண்பர் டாக்டர் ரியாஸ் அவர்கள் எனக்கு இதுல உதவி பண்ணுனாரு. எல்லா தகவல்களையும் அவருக்கு அனுப்பி, குழந்தைகள் மருத்துவரா இருக்குற அவர் நண்பர் ஒருத்தரோட லெட்டர் ஹெட்ல எல்லாத்தையும் எழுதி கையெழுத்து போட்டு அனுப்பினாரு. அதை கொண்டு போய் கொடுத்ததும்தான் ஒத்துகிட்டாங்க.

அதிலும் அடுத்த பிரச்சினை வந்தது. குழந்தைக்கு நாலு வயசுக்கு அப்புறம் ஒரு தடவை போலியோ மருந்து கொடுத்திருக்கணும்னு சொன்னாங்க. அவனுக்கு ஐந்து வயசு ஆகுற வரைக்கும் ஒவ்வொரு தடவையும் பல்ஸ் போலியோ ப்ரோக்ராம்ல நாங்க அவனுக்கு மருந்து கொடுத்திருக்கோம். இதுவரைக்கும் 10 தடவையாவது கொடுத்திருப்போம். ஆனா அதுக்கு எந்த ரெக்கார்ட்டும் இல்லாததால மறுபடியும் ஒருதடவை கொடுத்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க

அதே மாதிரி லெட்டர்ல “Prevnar" அப்படின்னு மட்டும் எழுதியிருந்தது. அது Prevnar 6ஆ அல்லது Prevnar 13ஆன்னு கேட்டாங்க. நல்ல வேளையா அந்த தடுப்பூசி மேல இருந்த ஸ்டிக்கரை எடுத்து நோட்ல ஒட்டியிருந்தாங்க. அதுல 13ன்னு இருந்தது. இல்லைன்னா அதையும் மறுபடியும் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.

அதனால இந்தியாவுல இருந்து கிளம்பும் முன்னால உங்க டாக்டர்கிட்ட லெட்டர் ஹெட்ல எந்த எந்த தடுப்பு மருந்துகள் எந்த எந்த தேதியில குடுத்திருக்காங்கன்னு தெளிவா எல்லா டீடெய்ல்ஸோடவும் எழுதி கையெழுத்து + சீல் வெச்சி வாங்கிட்டு கிளம்புங்க.

3. தடுப்பூசிகள்
இங்க அரசு சொல்லியிருக்குற லிஸ்ட்ல இருக்குற 3 குறிப்பிட்ட தடுப்பூசிகள் நாங்க குழந்தைக்கு கொடுத்திருக்கலை. அதை கொடுத்தாத்தான் பள்ளிக்கூடத்துல சேத்துக்க முடியும்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்களே அதுக்கான வழியையும் சொன்னாங்க. இங்க குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு எல்லா தடுப்பூசிகளும் இலவசமாவே கொடுக்குறாங்க. அருகில் இருந்த அரசு மருத்துவமனை முகவரியும் கொடுத்தாங்க. ப்ரைவேட் க்ளினிக் போயிருந்தா குறைந்தது 300 டாலர் ஆகியிருக்கக்கூடிய அந்த மூணு தடுப்பூசிகளும் செலவே இல்லாம அதே நாள்ல குழந்தைக்கு கொடுத்துட்டோம்

4. ஆங்கில அறிவு
இங்க பேச்சு மொழியே ஆங்கிலமா இருக்குறதால, குழந்தைக்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவாவது இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க. இந்த மாகாண விதிகளின் படி, வெளிநாட்டில் இருந்து வரும் குழந்தைகள் முதலில் EL Office (English Learners Office) போகணும். அவங்க குழந்தைக்கு ஒரு டெஸ்ட் வெக்குறாங்க, எப்படி ஆங்கிலம் பேசுறான், பேசுறதை புரிஞ்சுக்குறானா எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணுறாங்க. என் குழந்தை எதிர்பார்த்த மாதிரியே “Not Proficient”. ஆனா அவன் ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணினது ஆங்கிலம் படிக்குறதுல, மத்தபடி பேசுறது / புரிஞ்சுக்குறது எல்லாம் ஓரளவு நல்லா பண்ணியிருந்தான். அதனால “நீங்க பள்ளியில சேர்க்கலாம், ஆனா ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் பள்ளி நேரத்துலயே உங்க பையனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் பள்ளியில குடுப்பாங்க”ன்னு சொல்லிட்டு அதை பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்ட்ரக்‌ஷனாவும் எழுதி கொடுத்துட்டாங்க.

சுருக்கமா சொல்லணும்னா,
1. இந்தியாவுல இருந்து கிளம்பும்முன் உங்க குழந்தையோட தடுப்பூசி லிஸ்ட்டை உங்க டாக்டர்ட்ட அவரோட லெட்டர் ஹெட்ல எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்க
2. அப்படியும் சில மருந்துகள் விட்டுப்போயிருந்தா, அதை கொடுக்க இலவசமா எதாவது அரசு மருத்துவமனைகள் இருக்கான்னு கேளுங்க, கேக்குறதில் தப்பில்லை. நமக்கு பணம் மிச்சமாகும்.
3. உங்க குழந்தை சின்ன சின்ன வார்த்தைகளாவது ஆங்கிலத்துல பேசணும், புரிஞ்சுக்கணும். தமிழோ அல்லது உங்களோட தாய்மொழியோ பேசுறது கூட அப்பப்ப இதையும் பழக்கிட்டு வர்றது இந்த மாதிரி வெளிநாட்டுப் பயணங்களில் ரொம்ப உதவும்

முதல்லயே சொன்ன மாதிரி, இது என்னோட அனுபவங்கள் மட்டுமே. இது ஒரு கைட்லைனா எடுத்துக்கிட்டு நான் சொன்ன சின்ன சின்ன விசயங்களை கவனிச்சி செஞ்சிட்டோம்னா வெளிநாட்டுக்கு போய் இறங்கினப்புறம் நமக்கு அலைச்சல் மிச்சமாகும்.

தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்
பொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.

பதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்
உரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த
அந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.

1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை!
பள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய?

நிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்
என நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்
அளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்
என்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.
அதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.

ஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்
நடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்
கூடாது.

2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.
நானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு
சென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.
நீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி?

நிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி
பிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை
நடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு
ஆதரவாக இருப்பது அவசியம்.

3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து
கொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)

நிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி
வேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை
புரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த
பொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்
சில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்
அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த
தகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று
ஓடுவதால் மகன் பாவம்)

( எனக்கு இந்த இடத்தில் தோணிய
பாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்
அடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.
தானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம்.)


4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.
ஏன் இப்படி செய்கிறார்கள்?

நிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு
உங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்
இந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது
பிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை
கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.

5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது
மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
பேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது
நம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் பெரிய மாற்றத்தை உண்டு
படுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்
கொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.

6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?
நிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்
குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்
பிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.

இப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக
பல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்
என்னென்ன பிரச்சனைகளோ? அவற்றை எப்படிக்கையாள்வது என்பது
ஒரு கலை தான்.

3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று
சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு
பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்
நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.
இந்த வயதுதான் கடினம்.

சோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.
அதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்
ஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு
விதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.

நவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்
எபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.
ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.
எங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்
9 மணிக்கே தூங்கப்போய்விடுவோம்.:))

காலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.
அப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்
என்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்
பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

Dorothy Law Nolte சொல்வதைக் கேளுங்கள்:

விமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.

காழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது

பயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது

இரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது

ஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது

பகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது

அவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.

ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.

சகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.

புகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.

உரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.

திருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது

அங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது

விட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு வாழ்கிறது.

நேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.

நியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.

கருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.

பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.

நட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம் என்பதைக் கற்றுக் கொள்கிறது.

சிறந்த பெற்றோர்க்கான குறிப்புகள்:

குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.
பெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.
ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது.
குழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.
வயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.
பெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.
தேவையான அளவு அன்பு காட்டுவது.
மன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.
திரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.
நல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.
தகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.
குடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.
நாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.


******************************************************

நிலாமகள் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பியதை பதிவிட்டிருக்கிறேன்.
நன்றி நிலாமகள்.

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .

"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !


"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"


"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."


"இரேன்ம்மா ..."


அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .


"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .


ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;
ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .


"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."


"ஹேய் ...குட்டி என்னடா இது !" எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.

"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,

"எம்பொண்ணாக்கும்! "

ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்