பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வானம்பாடிகள் ஐயாவை அறிமுகப் படுத்துவது சூரியனுக்கே டார்ச் அடிக்கறது போல.

அவரின் அனுமதியோடு மிகவும் அருமையான இந்தப் பதிவு parent's club வலைத்தளத்தில் வெளியிடப் படுகிறது.

யோசிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்லை, இந்த நிமஷம் முதலில் நம்மை நாமே கேள்வி கேட்டு மாற்றிக் கொள்ளவும் தூண்டும் பதிவு இது. நீங்க என்ன நினைக்கறீங்க? நாம் குழந்தைகளோடு ஒரு மணிநேரமாவது பேசியோ, விளையாடியோ, அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் பெரும்பாலும் மன-உடல் அயர்வோடுதான் வீட்டுக்குள் நுழைகிறோம். நம் முகமும் உணர்வலைகளும் பிள்ளைகளை நம்மோடு பேசத் தூண்டுமாறு இருக்கா..

வேலை நாட்களில் மாலையில் பெரும்பாலும் எனக்கு வீட்டில் தூங்கும் நேரம் தவிர வெறுமனே இருக்க ஒரு மணிநேரம் கிடைத்தாலே அதிகம். இதில் ஒன்று என் கணவரோடோ அல்லது குழந்தையோடோ என்று யாரேனும் ஒருவரை மட்டுமே பேசி கவனிக்க முடிகிறது. குழந்தைக்கு இன்னும் புரிந்து கொள்ளும் வயதாகவில்லை என்பதால், அவளோடு பெரும்பான்மை நேரங்களை ஒதுக்கி செலவிட வேண்டியிருக்கு. கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தாலும், இப்போதும் அவள் பல நேரங்களில் வேறு யாரோடும் பேசினால் கூட அம்மா அம்மா கன்னம் திருப்பி தன்னை பார்த்துக் கொண்டே அவரோடு பேசவேண்டும் என்று நச்சரிப்பது ஆரம்பித்த்தாள். அப்போதுதான் ஒரு வேளை வளர்ப்பதில் ஏதும் தவறு செய்கிறேனோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். முற்றிலும் என் தவறுதான், அவளை பொறுத்த வரையில், எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் கொடுத்தது யார்? நான்தானே... அப்போது முதல், அவளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களோடும் பேசத் தூண்டுவது, வந்த விருந்தாளிகளுக்கு ஸ்வீட், பிஸ்கட், போன்ற சிதறாத உணவு வகைகளை பரிமாற வைப்பது, கையலம்பிக் கொண்டதும் துடைத்துக் கொள்ள துண்டு போன்றவற்றைத் தரத் தூண்டுவது, போகும்போது சாகலேட், மஞ்சள் கிழங்கு, குங்குமம் தருவது என்று அவர்களையும் கவனிக்குமாறு செய்தேன். இப்போது அவளால் விருந்தாளிகள், முதன்முறை எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு புன்னகை கொடுக்க முடிகிறது. கேள்வி கேட்டால் தகுந்த பதிலும் தரும்படி ஆகி இருக்கிறாள்.

குழந்தையை mend செய்ய அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும் என்பது மறுக்க முடியாது.... குழந்தைகள் மட்டும் இல்லை, யாருமே ஏதேனும் தவறு செய்தால் பொதுவில் திட்டாமல் இருப்பது எனக்கு எப்போதும் உதவி இருக்கிறது. இவளிடமும் அப்படியே...

அதே போல கதை சொல்லி அதனூடே நமக்கு வேண்டிய 'அறிவுரைகளை' அல்லது விபரங்களை புத்தியில் ஏற்றுவது இலகுவாக இருக்கிறது. ஏதாவது தவறு செய்து விட்டால், குழந்தைக்கு அது தொடர்பாக கதை சொல்லுங்கள்... அறிவுரையாக இல்லை.

கீழிருக்கும் பதிவை வெளியிட அனுமதித்த வானம்பாடிகள் ஐயாவுக்கு நன்றிகள்.

அன்புடன்,
விதூஷ்.

======================================================
பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..
======================================================

ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம்.

மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை

* தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
* படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
* எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
* தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.


இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது

“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம்.

இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?

மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம்.

“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.





.


ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.

ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.

"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.

இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.

கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.

உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.

"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.

"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு

"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.

கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.

"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.

கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.

"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.

"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.

மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.

"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.

"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.

கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.

உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.

"என்ன நண்டு" என்றது கொக்கு.

"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.

மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.

புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.

நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.

"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.

"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.

நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.

கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.

வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.






.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்