பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

என் மகனுக்கு தினசரி கதை சொல்வது வழக்கம்.. சொல்லாவிட்டால் தூங்க மாட்டார்..இதற்காக நானும் பெரிதாக தயாரித்துவைத்துக்கொள்ளவும் முடியாது.. படுத்ததும் கற்பனையில் என்ன தோணுதோ அதுதான் கதை..

அப்படி நேற்று இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்ப பிடித்து ரயில் அண்ணாவோடு
ஒன்றிவிட்டார்.. இதே போல மரங்கள் விலங்குகளோடும்..

அவருக்கு சொன்ன கதைகளை , பாட்டுகளை வைத்து ஒரு புத்தகமே போட்டிருக்கலாம்..:)
இப்பவாவது சில கதைகளை எழுதி வைக்கலாம்னு தோணியது..

இக்கதைகளை படிக்குமுன்பு 4-5 வயது சிறுவறாய் மாறிடுங்கள் ரசித்திட..]


*************************************************

புன்னைதைதேசம் எனும் வலைப்பூ வைத்திருக்கும்
தோழி இந்தக் கதையை நமக்கு அனுப்பியிருக்கிறார்.
******************************************************
கதை ஆரம்பம்.
" கூஊஊஊஊஊஊஊஊ. குச்...குச்...குச்...குச்.................."

" வந்தாச்சு வந்தாச்சு ரயில் அண்ணா , வந்தாச்சு...."


" பேராண்டி ஒனக்கும் ரயில் அண்ணாவா?.. எங்களுக்குத்தான் அவர் அண்ணா. உங்களுக்கெல்லாம் ரயில் மாமா.."


" இல்ல தாத்தா எங்களுக்கும் ரயிலண்ணா தான் .."

" என்ன முத்தையா சார், பேரப்பிள்ளையோடு பேரம் ? ." ரயிலண்ணா..

இப்படித்தான் அந்த தானியங்கி ரயில் எல்லோர் மனதிலும் உறவாய் ஆக்கிரமித்திருந்தது கடந்த பல வருடங்களாக... மலை தேச ரயில் மட்டுமல்ல , இதுவரை ஒருமுறை கூட விபத்து ஏற்படாமல் பயணிகளை பத்திரமாக சேர்ப்பதோடு அவர்களுக்கு பிடித்த வளைவு நெளிவான மலைகளில் நிறுத்தி நிதானமாக இயற்கை எழில் காட்சிகளை கண்டுகளித்திடவும் செய்வார் ரயிலண்ணா.

ஆறிலிருந்து அறுபது வரை அவருக்கு விசிறிகள் உண்டு...

ரயிலில் ஏறி அமர்ந்ததுமே இசைக்க ஆரம்பித்துவிடுவார்... அந்த மகிழ்ச்சியில் இணைந்து பயணிகளும் தாளத்துக்கேற்ப பாடலோடு ஆடவும் ஆரம்பித்திடுவார்கள்.. ரயிலை யாரும் அசுத்தப்படுத்துவதும் கிடையாது.. கீழே இறங்குமுன் தன்னால் முடிந்தளவு சுத்தப்படுத்திவிட்டே செல்வார்கள்.. இதை காணும் ரயிலண்ணாவுக்கு விழிகளில் நீர் முட்டும்... அதை அவர் சில சமயம் ஆவியாய் வெளியிடுவார்...

இப்படி மகிழ்வோடு இருந்த நாளில் வந்தது சோதனை...
நீலகிரி மலையில் சென்று கொண்டிருந்தபோது கனத்த மழையினால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தமையால் கவனமாகவே சென்ற ரயிலண்ணா சிறிது தடம் புரண்டுவிட்டார்... உடனே நிறுத்தியும் விட்டார், பயணிகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாமல்... எல்லோரும் இறங்கி வந்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதுமாய் பாதையை செப்பனிட உதவுவதுமாய் இருந்தார்கள்..

அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு இந்த ரயிலுக்கு வயதாகிவிட்டது கேரேஜில் வைத்திடலாம் என அறிக்கை சமர்ப்பித்து சென்றார்கள்..

கேரேஜில் வைக்கப்பட்ட ரயிலண்ணாவுக்கு மிகுந்த கவலையாகிவிட்டது...ஆனாலும் அங்கும் வந்து குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பத்தோடு வந்து விளையாடி சென்றனர்.. இருப்பினும் ரயிலண்ணா கவலை தீரவில்லை...

இதை கவனித்த குழந்தைகள்

" ரயிலண்ணா, ரயிலண்ணா, ஏன் முன்பு மாதிரி நீங்க மகிழ்ச்சியா இல்லை ?.."


" குழந்தைகளே , எனக்கு இன்னும் நல்ல தெம்பு இருக்குது பயணம் செய்ய.. ஆனால் சின்ன விபத்தால் என்னை இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டார்கள்.
ஏதோ புது ரயில் வரப்போகிறதாம்.. அதான் ... என்னோட உறவுகள் ஒவ்வோரு ஊரிலும் இருக்காங்களே அவர்களெல்லாம் என்னை தேடுவார்களே.. இப்படி சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டால் அவர்கள் பாடு பரிதாபமல்லவா?.." என வருந்தியது...

" அழாதீங்கண்ணா ...நாங்கல்லாம் இருக்கோம்.."


[[ இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே சின்னவருக்கு பொத்துக்கொண்டு வருது வீரமும் , சோகமும்..... அதுவரை ..ம்..ச்.. கொட்டிக்கொண்டிருந்தவர் , " நான் அந்த கேரேஜை திறந்து அந்த ரயிலண்ணாவை உடனே விடுவித்துவிட்டு வெளியில் ஓட செய்வேனே... ".. பொறுமை பொறுமை என அடக்கவேண்டியிருந்தது.. ]]]

" நீங்கல்லாம் சின்ன பிள்ளைகள் .. என்ன செய்ய முடியும்.. பரவாயில்லை...நான் உங்களுக்காக இனி மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறேன்.." ரயிலண்ணா கண்ணீரை துடைத்துக்கொண்டார்..

எல்லா சிறுவர்களும் வீடு சென்று எப்படியாவது இந்த ரயிலண்ணாவை விடுதலை செய்யணும்னு ஒரே பிடிவாதம் . அன்றிரவே ஊர் கூடியது..குழந்தைகளின் தொல்லை தாங்காமல்


அதிகாரிகளிடம் பேசினார்கள் பெரியவர்கள்... அதிகாரிகளும் வந்து பார்த்து சின்ன சின்ன கோளாறுகளை செப்பனிட்டார்கள்...


ரயிலண்ணா ஓட தயாரானார்.. அப்பதான் ரயில் அழுக்கேறி இருப்பதை பார்த்த குழந்தைகள் ரயிலண்ணாவுக்கு வண்ணம் தீட்டினால் என்ன என யோசனை சொன்னார்கள்.


அதற்கு அதிகம் செலவாகும் என சொன்னதும் எல்லோரும் வீட்டுக்கு சென்று உண்டியலையும் தம் சேமிப்பையும் எடுத்து வந்தார்கள்.. மொத்தமே ஆயிரம் ரூபாய் கூட தேரவில்லை...எல்லோருக்கும் சிரிப்பு..

இருப்பினும் குழந்தைகளின் உற்சாகத்தை பார்த்த அதிகாரிகள் ரயிலுக்கு வண்ணம் தீட்டுவதோடு பலவிதமான விலங்குகள், இயற்கை காட்சிகள் நிறைந்த
படங்களையும் ரயிலில் வரைய உத்தரவிட்டார்..

ரயிலண்ணா இப்போது மிக இளமையாக தோற்றமளித்தார்... முன்பை விட பன்மடங்கு உற்சாகத்தில் விசிலடித்துக்கொண்டே கிளம்பியதும் அந்த
உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக்கொள்ள எல்லோரும் ஏறிக்கொண்டனர் அந்த சோதனை ஓட்டத்தில்...

குழந்தைகளுக்கோ பெருமை பிடிபடவில்லை....







பதின்ம வயது பிள்ளைகள் அந்தந்த வயதிற்கே உரிய வளர்ச்சியுடன்
காணப்படுவார்கள். பெண் பிள்ளை பூப்பெய்வதும் அப்போதுதான்.
வெளியே சொல்ல முடியாமல், சொன்னால் தவறாக நினைப்பார்களோ!!
என்று குழம்பி தவிப்பான் ஆண்பிள்ளை.

(13 வயது தான் டீன் ஏஜின் துவக்கம் என்றாலும் பல பிள்ளைகள்
11 வயது அடைந்த உடனே மாற்றங்கள் மெல்ல நிகழும்)


தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரியா? தவறா? எல்லோருக்கும்
இப்படித்தான் இருக்குமா? போன்ற அனாவசிய குழப்பங்கள்
பிள்ளைக்கு ஏற்படும். யாருக்கும் நேராத ஒன்று தனக்கு மட்டும்
ஏற்பட்டிருப்பதாக உள்ளுக்குள் புழுங்கிப்போவார்கள். தெளிய
வைக்க வேண்டியது நம் பொறுப்பு.

அந்தரங்க உறுப்புக்களில் முடிவளர்தல் சாதாரணமான ஒரு
நிகழ்ச்சி என்று புரிய வைக்க வேண்டும். பெண்களுக்கு
ஏற்படும் உடல் மாற்றத்தையும் சாதரண நிகழ்வு என
புரிய வைத்து மனதை லேசாக்கி வைப்பது அவசியம்.


என் மகனுடன் பேச முதலில் எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது.
இதுவே பெண்குழந்தையாக இருந்தால் இந்தத் தயக்கம் இருந்திருக்காது
என நினைக்கிறேன். அயித்தானோ அடிக்கடி டூர் போகிறவர். பக்கத்தில்
இருந்து மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஆண்டவன்
பெண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறான்.

குழ்ந்தை பிறக்கும் பொழுதுதான் தாய், தந்தையர் எனும் பதவி
வருகிறது. அதன் பிறகுதான் கற்றலும் நடக்கிறது. ஆம் தாயாக,
தந்தையாக நாம் செய்ய வேண்டியதை கற்கிறோம். இப்போது
பதின்ம வயது மகனை ஹேண்டில் செய்யும் திறனை நான்
வளர்த்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்து தனியறையில்
நானும் மகனும் மட்டும் உறவாடினேன்.

”கண்ணா, உன் உடலில் சில மாற்றங்கள் நேரும்
இதற்காக கலங்கக்கூடாது. மற்ற பிள்ளைகளிடம் இது குறித்து
ஆலோசனை செய்ய வேண்டாம். இது தவறல்ல! இயற்கை உன்னை சின்ன
குழந்தையிலிருந்து பெரிய மனிதனாக்க செய்யும் வேலை இது.
இது சாதாராண நிகழ்வு,” என்று சொன்னேன்.


”ஆமாம்மா, சின்ன சின்ன மாற்றம் பயமாயிருக்கு! என்ன செய்வதுன்னு
புரியலை!!” என்றான் கண்களில் நீருடன். தக்க சமயத்தில் பிள்ளையிடம்
பேசும் புத்தியை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கண்ணீரை
துடைத்து மடியில் இருத்திக்கொண்டேன்.


“நம் வாழ்க்கையில் டீன் ஏஜ் பருவம் ரொம்ப முக்கியம். ஏன் தெரியுமா?
inner PERSONALITY DEVELOPMENT அப்போதுதான் ஏற்படும். இதுவரை
சின்னக்குழந்தையாக தெரிந்த உன் உடல் இனி சில மாற்றங்கள் கொண்டு
தன்னை தயாராக்கிக்கொள்ளும். 13-19 வயது வரை நீ ரொம்பவே
கவனமாக இருக்க வேண்டும். பயப்பட ஏதும் இல்லை. ஆனந்தமாக
கொண்டாடலாம். இப்போது நீ குழந்தையுமில்லை, பெரிய மனிதனும்
இல்லை. அதனால் உனக்கு எப்போதாவது எதற்காவது சந்தேகம்
வந்தால் நானோ, அப்பாவோ உடன் இருக்கிறோம். கடினமான
இந்தக் கட்டத்தை நீ ஆனந்தமாக கடக்க நாங்கள் இருக்கிறோம்.


நீ செய்ய வேண்டியதெல்லாம், எங்களை நம்பு. 13-19 வயது
என்பதை ஏணிப்படி போல் கற்பனை செய்து கொள். ஒவ்வொரு
அடி எடுத்துவைக்கும்பொழுதும் உனக்குள் ஒவ்வொரு மாற்றம்,
ஒரு முதிர்ச்சி ஏற்படும். படியில் ஏறும்பொழுது கொஞ்சம் பயமாக
இருந்தால் என் கைகளைப்பிடித்துக்கொள்!!! அப்பாவைக் கேள்!நாங்கள் நீ ஏற
உதவி செய்கிறோம். நானும் உன்னைப்போல அந்த வயதைத்
தாண்டித்தானே வந்திருக்கிறேன், என்றதும் முகத்தில் நம்பிக்கை
வந்தது மகனுக்கு.

அவரிடமும் பேசி நீங்களும் மகனிடம் பேச வேண்டும்
என்று சொல்ல ,”நானும் அது பற்றி தான்
யோசித்து கொண்டிருக்கிறேன்!” உற்ற நண்பனாய் இருப்பேன்!! என்றார்.
சொன்னபடி செய்தும் வருகிறார்.


நாங்கள் அப்போது இருந்தது வெளிநாட்டில்! அங்கே கேர்ள்/ பாய்ஃப்ரெண்ட்
சகஜம். அது இல்லாவிட்டால் ஏதோ பெரும் குத்தம் என்பது
போல் பேசும் ஜென்மங்களும் உண்டு. அவர்களது கலாச்சாரம் அது.
6ஆம் வகுப்பு மகனிடம் கேர்ள் ஃப்ரெண்ட் பற்றி பேச தைரியம்
கொடுத்தது குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி. அப்போதுதான்
அவர் இது பற்றி சிநேகிதியில் எழுதியிருந்த தலையங்கம் படித்திருந்தேன்.
அவர் சொன்ன உதாரணத்தை என் மகனிடம் சொன்னேன்.

“பதினம வயதில் தான் ஆண்/பெண் கிளர்ச்சி ஏற்படும். வயதுக்கோளாறு
அது. ஆனால் அது உன் வாழ்வை நாசமாக்கி விடக்கூடாது. உன்
விருப்பப்படி நீ படித்து செட்டிலாகிவிட்டு அதைப் பற்றி யோசிக்கலாம்.
சில உதாரணங்கள் சொல்லி,” அம்மா இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன்
தெரியுமா? வானத்தில் ஆனந்தமாக பறக்கும் குருவி தன் காலில்
ஒரு சிறு கல்லைக் கட்டிக்கொண்டு பறந்தால் என்னவாகும்!?” எனக்கேட்டேன்.

“பறக்கவே கஷ்டமாக இருக்கும் அம்மா, ஃப்ரியா பறக்க முடியாது”
என்றான்.

“ஆமாம். படிக்கும் வயதில் காதல் கூட அப்படித்தான். ஒரு பாரமாகி
உன்னை திசை திருப்பும். பெண் நண்பர்கள் இருப்பது தவறில்லை.
உன் தோழி AQUILA இல்லையா. ஆனால் நட்பு வேறு காதல் வேறு!”
என்றதும் மகன் சொன்னது, ரொம்ப தேங்க்ஸ்மா, புரிய வெச்சதுக்கு!”
என்றான்.

என் மகனிடம் பேசியதை ஏன் இங்கே கொடுத்தேன் தெரியுமா??
நம் பிள்ளைகளிடம் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
நான் பேசுவது அட்வைஸாக இருந்தால் பிள்ளைகளுக்கு
போரடித்து விடும். அதுவே நட்பிடம் பகிர்வது போல் பக்குவமாக
பேசினால் நல்ல பலன் இருக்கும்.

தன்னைக் குழந்தையாக நடத்தாமல் பெரிய பிள்ளை போல்
நடத்துவதாக பிள்ளை புரிந்து நம்மிடம் மனம் விட்டு பேச வரும்.
“என்ன ஆனாலும், நானிருக்கிறேன்!” என்ற நம்பிக்கையை
நாம் கொடுத்து விட்டால், என்னை காக்க என் பெற்றோர்
இருக்கிறார்கள் என்ற எண்ணமே தன்னம்பிக்கை மிளிர வைக்கும்.


நாமே நம் பிள்ளையிடம் பேசாவிட்டால் அந்தக் குழந்தை
தன்னை பாதுகாப்பற்றவனாக/ளாக ஆக நினைத்து வருந்தும்.
சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரிவதால் அவர்கள்தான்
தெய்வம் போலவும், தவறான நட்புக்கள் மூலம் பாதை மாறுதலும்
நடக்கும். வீட்டில் போதிய சப்போர்ட் இல்லாத குழந்தைகள் தான்
வழி மாறிச் செல்கின்றன.

போதை, குடி, சிகரெடி போன்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவது
இதனால் தான். தமிழ்த்துளி தேவா அவர்களின் இந்தப் பதிவை
பாருங்கள்.
போதை பழக்கத்துக்கு ஆளானல் மீட்பது கஷ்டம்.


குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படி நாகரீகம்


இதுவும் படிச்சி பாருங்க

வரும் திங்களன்று அடுத்த பதிவு வரும்
அதுவரை
தொடரும்....

குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்


குழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு.  என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இதில்: 
1. படமும் பாடலும் - Tamil Nursery Rhyme
2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக்  குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)
3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)
4. குழந்தைகளுக்கான புதிர்கள்
5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)
6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்
7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்

உங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நன்றி.

= =வித்யா

நானும் எல்லார் கிட்டயும் இதைப்பத்தி பதிவு போடுங்கன்னு
கேட்டுகிட்டே இருந்தேன். போடறேன்னு சொன்னவங்க எல்லோரும்
மறந்துட்டாங்களா?? என்னன்னு புரியலை.

wifeologyக்கு எதிரா யாராவது எழுதுவாங்கன்னு காத்திருந்து
அது நடக்காம போக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்
husbandoloy வகுப்புக்கள். :))

இப்பவும் நானே எழுதலாம்னு முடிவு செஞ்சிட்டேன். திரும்ப
ஹஸ்பண்டலாஜி இல்லீங்க. எதைப்பத்தி???? வாங்க பேசலாம்.

பதின்ம வயதுக்குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு
சுலபமான வேலையில்லை. குழந்தையும் அல்லாத,
பெரியவரும் அல்லாத இரண்டும்கெட்டான் மன நிலையில்
இருக்கும் அந்தக் வளரும் குழந்தைகளை மென்மையாக
கையாளவது மிக அவசியம்.




பெண் குழந்தைக்கு தரப்படும் அறிவுரையைப் போல ஆண்குழந்தைகளுக்குத்
தரப்படுவதில்லை. அதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இனி வரும் வாரங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்
வரப்போகும் இந்த பதின்மவயதுக்குழந்தைகள் தொடரில் இருபாலருக்கும்
பொதுவான சில பிரச்சனைகள், வளர்ப்பு முறை பற்றி பேசுவோம்.



என் தோழி ஒருத்தரை பத்தி முன்னமே சொல்லியிருக்கேன். இலங்கையில்
ஒரு கல்லூரியில் DIPLOMA IN PERSONALITY DEVELOPMENT அப்படின்னு
ஒரு பட்டயப்படிப்பு. பதின்ம வயது பிள்ளைகள் இந்த பயிற்சியில
கலந்துகிட்டு தன்னை நல்லா உருவாக்கிக்க முடியும். இந்த வகுப்பில்
சைக்காலஜி ஆசிரியை மேலே சொல்லியிருக்கும் என் தோழிதான்.

அவங்க தயாரிச்ச புத்தகத்தை அச்சில் ஏத்திக்கொடுக்கும் பொழுது
நிறைய்ய டிஸ்கஸ் செய்வோம். நாளை உனக்கும் உதவும் என்று
அந்த புத்தகத்தை எனக்கு ஒரு காபி தந்திருக்காங்க.

எனக்கும் பதின்மவயதில் அடி எடுத்துவைத்திருக்கும் மகன் இருக்கிறான்.
அவனுக்கும் அதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். என் பிள்ளைகள்
போல மற்ற பிள்ளைகளுக்கும் உதவவேண்டும் எனும் எண்ணத்தில்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. நான் பாடம் எடுக்கப்போவதில்லை.
அதில் எனக்குத் தேர்ச்சியும் இல்லை. ஒரு ஆசிரியையாகவும், தாயாகவும்
என் பார்வை எப்போதும் இருக்கும். நானும் கற்றுக்கொண்டு கற்றதை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.


இந்த பதிவுகள் பேரண்ட்ஸ் கிளப்பிலும் என் வலைப்பூவிலும் திங்கள்
மற்றும் வியாழக்கிழமைகளில் வரும்.


மெல்லச் சிறகு விரிக்கும் அந்த பட்டாம்பூச்சிகளுக்கு
வசந்தமான வாழ்வை அளிப்போம். நல்லதொரு
தலைமுறையை உருவாக்குவோம்.


அதிக ஜலதோஷத்தினால் (சளி) காதில் வலி ஏற்பட்டால், குழந்தை ஓயாமல் அழுது கொண்டும், காது வலியினாலும், அழுகையினால் ஏற்படும் தலை மற்றும் தொண்டை வலியினாலும் அதிக துன்பத்திருக்கும் ஆளாகும்.

காது இன்பக்ஷன் தானா இல்லை சளியால் ஏற்பட்ட காது வலியா என்று எப்படி அறிவது? எப்படித் தவிர்ப்பது?
சளியால் ஏற்பட்ட காது வலியில், ஒற்றைக் காதில் (பெரும்பாலும் இடது) ஊசி குத்துவது போன்ற வலியும், கண்ணுக்கு கீழ் மூக்கின் அருகிலும், நெற்றியில் (படத்தில் dark colour-இல் காட்டப் பட்ட பகுதிகள்) கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால லேசாக அழுத்திக் கொடுத்தால் இதமாகவும் உணரும்.


  • ஒரு வேளை அன்றுதான் தலைக்கு குளிப்பாட்டி இருந்தீர்கள் என்றால், சளி பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல சுத்தமான ear-buds அல்லது மல் துணியால் காதுகளை சுத்தம் செய்து விடவும். தலையை நன்றாகத் துவட்டி விட்டு, தலை உச்சியில் சிறிதளவு வீபூதியும் நெற்றியில் சிறிது வீபூதியும் மிக சிறிதளவும் தண்ணீரில் குழைத்து இட்டு விட்டால் நீர் கோத்துக் கொள்ளாமல் இருக்கும்.
  • இல்லை என்றால் நாட்டு மருந்துக் கடைகளில் "நீர் கோவை மாத்திரை" என்று கிடைக்கும். ரொம்ப வீரியம் கொண்டது மற்றும் காரமானது. கை கண்ட மருந்து. இதை அப்படியே குழைத்து குழந்தைகளுக்கு நெற்றியில் போட்டால் தோல் எரியும். அதனால் சிறிது வீபூதி அல்லது மஞ்சள் சேர்த்து குழைத்து இடவும். 
  • இல்லை என்றால் சுக்கோடு கடுகை அரைத்து மைதாவில் குழைத்து நெற்றிக்கு பத்து போடவும்.
  • மேலும் வாரம் ஒரு நாள், தலைக்கு குளிப்பாட்டும் அன்று, மூன்று பல் பூண்டு, மூன்று வெற்றிலை, ஒரு ஆர்க்கு வேப்பிலை, பத்து துளசி இலை, மற்றும் ஓமம், மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை,  வால் மிளகு, (எல்லாம் மூன்று டீஸ்பூன்) அதிமதுரம், கண்டந்திப்பிலி, அரிசித் திப்பிலி, (எல்லாம் ஒவ்வொன்று) இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒரு சொட்டு (ஒரே ஒரு சொட்டுதான்) விளக்கெண்ணை விட்டு வறுத்துக் கொண்டு மூன்று தம்ப்ளர் தண்ணீரில் போட்டு ஒரு தம்ப்ளராக வற்றும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, வெது வெதுவென்று கொடுக்கவும். என் சொந்த அனுபவத்தில் எனக்கு ரொம்பவே உதவிய கஷாய ரெசிப்பீ இதுதான். குழந்தையை குளிப்பாட்ட வெந்நீர் போடும் போதே இதையும் ரெடியாக வைத்திருப்பேன். குளித்து தலை துவட்டியதும் தானே வந்து குடித்து விட்டு போய் விடுவாள்.


எப்படி கண்டு பிடிப்பது?
  • மஞ்சள்/பச்சையாக சளி கட்டிக் கொண்டு, சளி நாற்றம் அடிக்கும். 
  • மூக்கை உரிய சிரமப் படுவார்கள்.
  • தூக்கமின்மை  / படுத்துக்கொள்ள சிரமப்படும்
  • குழந்தை காதுகளை பிடித்து/பொத்திக் கொண்டு அழும் (அல்லது) காதை பிடித்து இழுக்கும், காதை அறைவது போல தட்டும் / தேய்த்து விட்டுக் கொள்ளும்
  • இருமல்
  • தலை வலி
  • மூக்கில் நீர் வடிதல்
  • உணவு உண்ண மறுத்தல்
  • விழுங்க சிரமப் படுதல்
  • மலம் / சிறுநீர் கழிக்காமல் இருத்தல் (குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு தரம் மலமும், அதிக பட்சம் ஆறு முறையாவது சிறுநீரும் கழிக்க வேண்டும்)
  • ஜுரம் வரலாம் 
  • வாந்தி எடுத்தால் 
  • நை நை என்று அழுது கொண்டே இருத்தல்
சரி, காது வலி வந்து விட்டது, என்ன செய்வது?

  • வாந்தி எடுத்தால் வீட்டில் ஓம வாட்டர் இருந்தால் தண்ணீரில் கலந்து குடிக்க வெந்நீர் கொடுங்கள்.
  • பஞ்சில் ஒரு சொட்டு யூகாலிப்டஸ் எண்ணெய் சொட்டி, அதை காதில் வையுங்கள். இதமாக இருக்கும்.
  • மூக்கு மற்றும் நெற்றி (சைனஸ் ஸ்பாட்டுகள்) ஆகிய இடங்களில் கொஞ்சமாக விக்ஸ் தடவி அழுத்திக் கொடுங்கள்.
  • மேலே சொன்ன "பத்து" ஏதாவது ஒன்றை போடுங்கள்.
  • முடிந்த வரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போங்கள். அப்படி போகும் போது "பத்து பதினொன்று", குழந்தையின் மூக்கு எல்லாவற்றையும் துடைத்து விட்டு கூட்டிப் போங்க.
  • டாக்டர் தரும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை தவறாமல் கொடுங்கள். Acetaminophen or ibuprofen முக்கால்வாசி காது வலிக்கு நல்ல மருந்தாகவே இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே காது வலி முழுமையாக குணமாகி விடுகிறது. இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி முழு டோஸும் கொடுத்து விடுங்கள்.
டாக்டர் கொடுத்த மருந்துகள் 24-மணி நேரத்துக்குள் செயல் படவில்லை என்றாலோ, தொடர்ந்து காது வலி இருந்து கொண்டே இருந்தாலோ, குழந்தையை சமாதானம் செய்ய முடியாதளவு அழுது கொண்டே இருந்தாலோ, குழந்தைக்கு கழுத்து பிடிப்பு (stiff neck) ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று விடுங்கள். அது காது இன்பெக்ஷன்னாகக் கூட இருக்கலாம்.



0

பதிவர் தோழி அமைதிச்சாரல் அவர்களின் பதிவு,
பலருக்கும் உதவும் என்பதால் பேரண்ட்ஸ் கிளப்பிலும்
மறுபதிவு செய்கிறேன்.

நன்றி அமைதிச்சாரல்

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள்ளாம் ஆரம்பிக்கப்போவுது.இவ்வளவு நாள் சரியா படிக்காதவங்க கூட,இப்போ ராத்திரி, பகலா விழுந்து, விழுந்து படிக்க ஆரம்பிச்சிருப்பாங்க..அம்மாக்களெல்லாம் ஹார்லிக்ஸும், மசாலா டீயும் போட்டுக்கொடுத்துட்டு, ஏதோ அவுங்க பரீட்சை எழுதப்போவது போல, டென்ஷனோட கூடவே முழிச்சிருப்பாங்க!!!. பாத்துப்பாத்து சமைச்சு கொடுப்பாங்க...

"கீரை சாப்புடு.... பழம் சாப்புடு.... பாவம்.. ராப்பகலா முழிச்சு புள்ளைக்கு உஷ்ணம் ஏறிப்போச்சு..படிச்சு,படிச்சு, புள்ளைக்கு தொண்டை கட்டிப்போச்சுன்னு சொல்லி சுக்கு காப்பி போட்டு கொண்டு வந்து, பக்குவமா ஆத்தி, புள்ளை இருக்கிற இடத்துக்கே, கையில கொண்டாந்து கொடுப்பாங்க..

புள்ளைங்களை பச்சத்தண்ணியில, குளிக்கக்கூட விட மாட்டாங்க.. ஜலதோஷம் பிடிச்சுக்குமாம்...லேசா ஒரு தும்மல் போட்டாக்கூட 'புள்ளையை சரியா கவனிக்கிறதை விட வேற என்ன வேலைன்னு'அம்மாவுக்கு திட்டு விழும்...பொதுப்பரீட்சை வருதுன்னு புள்ளையை பொத்தி பொத்தி, பாத்துக்குவாங்க..

பரிச்சை ஆரம்பமானதுலேர்ந்து,புள்ள படிக்கிது,அதோட கவனம் செதறக்கூடாதுன்னு சொல்லி,இவங்க கவனமா பாத்துப்பாங்க.பரிச்சைக்கு வேண்டிய எல்லாம் சரியா கொண்டு போவுதான்னு ஒன்னுக்கு ரெண்டு தரம் சரிபாத்து வைக்கிற பெற்றோர்கள் நிறையா பேர் இருக்காங்க.

அவுங்க மனசுலேயும் லேசா கலக்கம் இருக்கத்தான் செய்யும்.அவுங்க கலக்கம் பரிச்சையை நெனைச்சு இல்ல.. ரிசல்ட்டை நெனைச்சுதான்..ஊர்ல உள்ள, இல்லாத பொல்லாத நெனைப்பெல்லாம் அப்பத்தான் ஓடிவரும்."யப்பா!... கொலசாமி.... எம்புள்ளைக்கி நல்ல படிப்பையும், புத்தியையும் கொடுப்பா"ன்னு,ஆயிரத்தெட்டு வேண்டுதல் வெப்பாங்க.ரிசல்ட் வர்ற அன்னிக்கு புள்ளையை விட, டென்ஷன் படற பெத்தவங்க எக்கச்சக்கம். எல்லாம்...... இந்த பாழாப்போன அறிவு, அன்னைக்குன்னு சில புள்ளைங்களுக்கு மழுங்கிப்போயிருதே....அதை நெனைச்சுத்தான். அங்கன,.. அந்தப்பையன் அப்படி பண்ணிக்கிட்டான், இங்கன, இந்தப்பொண்ணு இப்படி பண்ணிக்கிட்டா அப்டிங்கிற ரிசல்ட்டும் சேர்ந்தே இல்ல வருது..

ஏஞ்சாமி....படிப்ஸ் பார்ட்டிங்களை விடுங்க...அவுங்க பாஸாகிடுவாங்க... கொஞ்சம் முயற்சி செஞ்சா தேறுறவங்க, கடைசி நேரத்துல, விழுந்து விழுந்து படிச்சிட்டு ஓடுறவங்க இவுங்கள்ளாம் கொஞ்சம் யோசிக்கலாமில்ல...பெத்தவங்க கண்ணீருக்கு யாருப்பா பதில் சொல்றது.. இப்பல்லாம், அனேகமா புள்ளைங்க இஷ்டப்படற படிப்பைத்தானே படிக்கிறாங்க....அப்படி இல்லையா... மொதல்லே அப்பா.. அம்மா.... கிட்டே உட்கார்ந்து பேசுங்க... புரிய வையுங்க..."ஃப்யூச்சர்ல என்னவா ஆகப்போறோம்கிறதை எட்டு, அல்லது ஒன்பதாம் வகுப்பு வரும்போதே முடிவு செஞ்சுக்கோங்க,அதுக்கேத்த மாதிரி உழைங்க" அப்டின்னு நான் இல்லை,.. ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.

அவரவருக்கான அரிசியை ஆண்டவன் அளந்து வெச்சிருப்பான், அதனால தயவு செஞ்சு மனச அலைபாய விடாதீங்க.

அப்பா... அம்மாக்களும் கொஞ்சம் யோசிக்கணும். பரிச்சை கிட்டே வந்த பிறகு, பசங்களை ஓட ஓட விரட்டுவதை விட,மொதல்லேயே அவங்க கிட்ட உக்காந்து பேசுங்க... ஏதாவது பிரச்சினை இருந்தா, அவங்களுக்கு அதை தீர்க்க உதவி செய்யுங்க.. இதில் முக்கியம், தீர்க்கிறேன் பேர்வழின்னு நீங்களே பிரச்சினையா மாறிடாதீங்க...

அவங்களுக்கு, தேவையானத வாங்கி கொடுப்பது மட்டுமில்லை... வீட்டுல படிக்கிறதுக்கான அமைதியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொடுங்க.உங்களோட நிறைவேறாத ஆசைகளை உதாரணமா கலெக்டர், இஞ்சினியர், டாக்டர்ன்னு இருந்தா அவுங்க மேல திணிக்காதீங்க. ரிசல்ட் பற்றிய பயம் அவங்களுக்கு வராம பாத்துக்கோங்க..படிக்கிறப்ப லேசான கண்காணிப்பு தேவை...பாடங்களை கரெக்டா முடிக்க முடியலையா... டைம்டேபிள் போட்டு படிக்கச்சொல்லுங்க...

ஓரொருத்தருக்கு, ஓரொரு மாதிரி படிக்கிற பழக்கம் இருக்கும். "நான் விடியக்காலையில எந்திரிச்சு படிச்சேன். நீயும் அப்டித்தான் படிக்கணும்"ன்னு எல்லாம் வற்புறுத்தாதீங்க. அவங்களுக்கு, தன்னம்பிக்கை வர்றமாதிரி பேசுங்க..என்ன மார்க் வாங்கினாலும், அப்பா...அம்மா... நம்மள வெறுக்க மாட்டாங்கன்னு நம்பிக்கை வெச்சாலே , அந்தப்புள்ளை, தவறா முடிவெடுக்காது.

பல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல.
எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும்
நானே வளர்ந்திருப்பேன்” என்ற நிலைதான். மாரல் ஸ்டடி வகுப்புக்களும்
இல்லை, வீட்டிலும் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை எனும்
நிலையில் ஒரு தலைமுறையே முறையாக வளர்க்கப்படாமல்
போய்விட்டது.

நாம் செய்யக்கூடாதவை என்னென்ன என்று தெரிந்து விட்டால்
செய்யக்கூடியவை புரிந்துவிடும். பெற்றோர்கள் நல்ல பிள்ளைகளை
வளர்க்க இது உதவும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.


1.குழந்தை ஆசையா சொல்லணும்னோ, பேசனும்னோ
வந்தா ”நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசலாம்”!,
மேல விழுந்து கொஞ்சனமாக்கும் தள்ளி நின்னு அப்படின்னுல்லாம்
பேசக்கூடாது. அம்மா, அப்பா, தன்னை தவிர்க்கிறார்கள்,
உதாசினப்படுத்துகிறார்கள் எனும் எண்ணம் விதைக்கப்படுகிறது.


2. பெல்டால அடி, குட்டு, கிள்ளுவது, கைல கிடைச்சதால அடி
இவை physica abuse வகை. இவை தரும் நேர்மறை விளைவுகள்.

3. அடிப்பது குத்தம். வாய்க்கு வந்தபடி திட்டுவது மஹா கொடுமை.
நம் நாட்டில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது இன்னமும் குற்றமாக
இல்லை. மேலை நாடுகளில் எங்கப்பா அடிச்சார், அம்மா திட்டினாங்கன்னு
போலிஸ்ல கேஸ் போட முடியும். நம்ம நாட்டுல அந்த வசதி
இல்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் திட்டுவது
“தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்டவடு”ஆகிப்போகும்னு
வள்ளுவர் சொல்லி வெச்சிருக்கார்.

4.” நான் பெத்தது சரியில்லீங்க!!!” ”இதெல்லாம் நாளைக்கு
எனக்கு சோறா போடப்போகுது!!” இதெல்லாம் தன் மனக்குறையை
அடுத்தவங்க கிட்ட சொல்லிக்கிறா மாதிரி பெத்தவங்க பேசுவது.
ஆனா இது தவறு. நம்ம பிள்ளையை பத்தி நாமே குறையா
அடுத்தவங்க கிட்ட சொல்லக்கூடாது. அதே சமயம் ரொம்பவும்
புகழ்ந்தும் சொல்லக்கூடாது.

“தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்”
என்பதையும் மறக்கக்கூடாது.

5. இந்த உலகத்துல ஒண்ணு கூட சரியில்லை, “உங்கம்மா
ஒரு உதவாக்கரை!!” உங்கப்பனுக்கு மூளையே வேலை செய்யாது”
”நீ பைசா ப்ரோயஜன்ம் இல்லாதவன்” இப்படி அடுத்தவர்
பற்றியோ பிள்ளைகள் பற்றி பிள்ளைகளிடமோ குறை சொல்வதும்
ஆகாது.

6. அடுத்தவங்களைப் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சா போதும் மக்களுக்கு.
இதுல எதுத்து பேச முடியாத பிள்ளைகளை பத்தி விமர்சனம்
செய்ய தயங்கவும் மாட்டாங்க. அந்த விமர்சனங்கள் அவர்களின்
வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

7. நம் கனவுகளை சுமக்க பிறந்தவங்க இல்லை பிள்ளைகள்.
அவர்கள் விரும்பும் படிப்பு,வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாம் சொல்லுவதை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கக்கூடாது.

8. அம்மா, அப்பா சண்டை போட்டுக்கொள்ளும் சூழ்நிலையில் வளரும்
குழந்தை பாதுக்காப்பின்மையாக உணர்ந்து கூனிக்குறுகி முன்னேர
முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் முரட்டுத்தனமாக
மாறிவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

9. பசங்க சின்னவங்க என்பதால் அவங்க செய்வது எல்லாமே
தவறா இருக்கணும்னு சட்டமில்லை. அவர்களின் செயல்கள்,
பேச்சுக்கள், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் தவறாகவே
புரிந்துக்கொள்ளக் கூடாது.

10. ”என் பையன் எதிர்காலம் என்னாகுமோ!!”
“நாளைக்கு அவங்க என்ன ஆவாங்களோ!!”
“எஞ்சினியரிங், டாக்டர் படிகாட்டி கை நிறைய்ய
சம்பாதிக்க முடியாதே” போன்ற தேவையில்லாத வருத்தங்கள்
பட வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

11. பிள்ளைகள் விரும்பியதை அவர்கள் அடைந்தே தீர்வார்கள்
எனும் நம்பிக்கை நமக்கு முதலில் இருக்க வேண்டும்.

12. பிள்ளையின் கனவை நனவாக்க நமது தூண்டுகோல்(சுடர்
விளைக்கைத் தூண்டும் தூண்டுகோல் போல)இருக்க வேண்டும்.
அவர்கள் சோர்வுறும் தருணத்தில் ஆதரித்து, பேசி
முன்னேற்றப்பாதையில் நடக்க வைக்க வேண்டும்.

13. ”வயசாகிடுச்சு இன்னும் என்ன அம்மாவை கட்டிகிட்டு”
”வயசு வந்த பொண்ணு அப்பனை கட்டிக்கிறது எல்லாம்
எங்க காலத்துல இல்லை” எனும் பேச்சுக்களை கேட்டிருப்போம்.
நம் பிள்ளைகளை நாம் கட்டியணைத்து, பேசினால் அவர்களின்
தன்னம்பிக்கை வளரும். வசூல் ராஜா எம்பீபீ எஸ் பரிந்துரைத்த
”கட்டிப்பிடி வைத்தியம்” ரொம்ப முக்கியம். நம் குழ்ந்தைகளிடம்
மட்டும்.

14. அன்றாட வாழ்க்கையில் பசங்களின் நடவடிக்கை, பேச்சு,
ஆகியவைகளை கண்காணிப்பது அவசியம். ஏதும் மாறுதல் இருந்தால்
அட்வைஸ் மழை பொழியாமல் நட்புடன் பேசுவது போல பேசி
கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

15. ”உபகாரம் செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா
போதும்னு!!” பெரியவங்க சொல்லியிருக்காங்க. பசங்களின்
வளர்ச்சிக்கு உதவும் வார்த்தைகள் சொல்லாட்டியும் அவர்களை
Demotivate செய்யும் வார்த்தைகளை பேசாமல் இருப்பது உசிதம்.


16. பெரிய தவறுகள் செய்தால் தண்டனை அவசியம்.
சின்ன சின்ன தவறுகளுக்கும் பெரிய பெரிய தண்டனை கொடுத்தால்
தண்டனையில் தன் தவறை புரிந்து கொள்வது போய் பிள்ளை
முரடாக தயாராக வாய்ப்பிருக்கிறது. தண்டனை தவறாக புரிந்து
கொள்ளப்படும்.

நாம் தவறு செய்திருக்கிறோம், அதை மறுமுறை
செய்யக்கூடாது என அறிவுறுத்தத்தான் தண்டனை.
அந்த பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டால் நமக்கு
பிரச்சினையே இல்லை.

செய்யக்கூடாதது தெரிந்து கொண்டதால், நாம் செய்ய வேண்டியது
தெளிவாக புரிந்து கொள்ள வசதி. நல்ல பெற்றோராக
பிள்ளையின் வளர்ச்சிக்கு உதவுவோம்.


சிவகாசிராம்குமார் எனும் இந்த நண்பரின் தளத்தில்
பல விடயங்கள் இருக்கின்றன. பாருங்களேன்.



பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை. 

குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத் திறமைகள் எனக்கு ரொம்ப பயன்பட்டது. ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பயன் படுத்தினேன்.என் பையனுக்கும் அதைக்கற்றுத் தந்திருக்கிறேன்.


வாழ்க்கை ரொம்ப சுலபம் இல்லை.திடீர் திடீர் என்று கிறுக்கல் அடித்து நம்மை வேடிக்கைப் பார்க்கும்.

பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால படிப்பாளி.திறமைசாலி அல்ல. நூற்றுக்கு நூறு மார்க் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தரும். பள்ளி படிப்பில் முதலில் இருக்கும் சில பேர் பொரோபஷனல் (professional) வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒளியற்று இருப்பார்கள்.மக்குத்தனம் இருக்கும்.படிப்பு வேறு.புத்திசாலித்தனம் வேறு.


குழந்தைகள் நூற்றுக்கு நூறு பார்டியாக இல்லாவிட்டாலும் “உஷார் பார்ட்டி”யாக (சாமர்த்தியசாலியாக..) இருக்கவேண்டும்.இப்போது இருக்கும் உலக நடப்புக்கு அதுதான் யதார்த்தம்.“உஷார் பார்ட்டி” with நேர்மை/ஒழுக்கம்/பக்தி/அன்பு. Be practical. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வர வேண்டும்.


அது என்ன வாழ்க்கைத் திற்மைகள்(Life Skills):-




உதாரணம்- 1
பக்கத்துவீட்டுப் பையன் படிப்பில் கில்லாடி.ஆனால் தன் சைக்கிளின் செயின் கழண்டால் அதை சரி செய்யக் கூடத்தெரியாது.தள்ளிக்கொண்டுதான் வருவான்.ஆறு கிலோ மீட்டர்.காற்று கூட அடிக்கத் தெரியாது. அடிப்பது அவன் அப்பா.இழப்பு யாருக்கு?


உதாரணம்- 2
பல வலைப்பதிவர்கள் மெது மெதுவாக தங்கள் திறமைகளை(skills) பயன்படுத்தி வலையை ஜொலிக்க வைக்கிறார்கள்.எல்லாம் ரெடிமேடாக கிடைத்தாலும் அதை நிறுவும் பொழுதில் கிடைக்கும் அனுபவம் அடுத்த முயற்சிக்கு தூண்டுகிறது.அறிவு /அனுபவம் வளருகிறது.திறமைகள் வளர்கிறது.


உதாரணம்- 3
நடிகர் கமல் நாலாவதுதான் படித்திருக்கிறார்.புகழின் உச்சியில் இருக்கிறார்.அவர் கால கதாநாயகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.காரணம் கமல் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். தொலை நோக்குப் பார்வையில் சினிமாவை எடைப்போட்டு காணாமல் போகாமல் தன்னை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய சிவப்பு நிறம் அழகான முகம் ரொம்ப நாள் “தாக்குப்பிடிக்காது” என்று தெரியும்.


உதாரணம்- 4
பக்கத்து வீட்டுப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டி நின்று விட்டது.காரணம் தெரியவில்லை மெயின் ரோட்.ஆள் நடமாட்டம் கம்மி.மெக்கனிக் ஆறு கிலோ மீட்டர் தள்ளி.எப்படி நடுரோடில் விட்டு வருவது. ஐடியா! பக்கத்து பங்களாவின் மாடியில் நின்றவரைக் தையரிமாக கூப்பிட்டு ”excuse me, if you don't mind" சொல்லி புன்னகைத்து வண்டியை  உள்ளே விட்டு விட்டாள்.சாமர்த்தியம்!
பிறகு ரிப்பேர்.


உதாரணம்- 5
பிளாட் லிப்டில் கரெண்ட் போய் ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான்.எமர்ஜென்சி அலாரம் வேலைச் செய்யவில்லை.”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”என்று பெரும் குரலில் கத்தினான். ஷூவைக் கழட்டி லிப்ட் கதவில் அடித்தான். அடுத்த கணத்தில் உதவி வந்தது.அலாரம் வேலைச் செய்யா விட்டால்”அய்யோ அம்மா, அய்யோ அம்மா”..கதவைத் தட்டுதல்...” போன்றவற்றை செய்யவேண்டும் என்று சொன்னது அவன் அப்பா.அப்பா கே.ரவிஷங்கர். பையன் ஆதித்யா.


உதாரணம்- 6
பக்கத்து வீட்டு மாமிக்கு காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் புதுசு மாட்டத் தெரியாது.வாட்ச்மேன் அல்லது எதிர்வீடுதான் உதவி செய்யவேண்டும்.அந்த இரண்டு பேர் இல்லாவிட்டால் என்ன செய்வார்?


இந்த திறமைகளைப்(skills) பற்றிச்சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.


நான் கடையில் ஒரு நாள் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தேன்.அப்போது என் மகன்
(வயது 10) என்னைக் கடந்து சைக்கிளில் போய் சிக்னலில் நின்றான்.என்னை கவனிக்கவில்லைஅப்போது எதிரில் வந்த தண்ணீர் லாரி சடன் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி தண்ணீர் பீச்சியடித்து அவன், சைக்கிள்,புத்தகப்பை எல்லாம் அருவியில் குளித்த மாதிரி ஆகிவிட்டது.


வாழ்க்கையைப் பச்சையாக (raw formஇல்) சந்திக்கிறான்.என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்னசெய்யப்போகிறான் என்று பார்த்தேன்.


நனைந்ததால் உடலோடு ஆடைகள் ஒட்டி கட் பனியன்,ஜட்டி ஷேப் தெரிந்தது.(வெள்ளை யூனிபார்ம்).அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது. வாழ்க்கையின் ஒரத்தில் இருந்தான்.(பொது ஜனங்கள் “உச்” கொட்டிவிட்டு ”பாத்துத் தம்பி” என்று நகர்ந்தார்கள்).


தண்ணீரில் நனைந்ததிலிருந்து வீடு வந்து சேரும் வரை அவனுடைய திறமைகள்:-


1.அடுத்த வினாடி முக்கியமான புத்தகங்களை பையின் பின் அறைக்கு மாற்றினான்.(அங்கு ஈரமில்லை). (மெயிண்டனென்ஸ்/வாழ்வாதாரம்(survival)


2.TNEB Junction Boxலிருந்து தள்ளி நின்று கொண்டு தலையை கர்சீப்பால் தவிட்டிக்கொண்டான். (பாதுகாப்பு)


3.அடுத்து வேறு சந்தில் நுழைந்து சில நிமிடம் காத்திருந்து கிளாஸ் டீச்சரை ரோடில் சந்தித்து “see my position" என்று லேட்டாக வருவேன் என்று பர்மிஷன் வாங்கினான். (முன் யோசனை/சமயோசிதம்/பயம்)


4.PCOக்குப் போய் எனக்கு செல்லடித்தான்.(உதவி/தகவல்) நான் செல் எடுக்கவில்லை காரணமாக. (இவனுக்கு பணம் எப்படி? இதை தனியாக கவனிக்க வேண்டும்)


திறமையின்மை:


1,வண்டியை ஓட்டாமல் தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தான். உலகமே தன்னைப் பார்த்து பரிதாபப் பட வேண்டும்.(சுய பச்சாதாபம்)


2.பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று லாஜிக் யோசிக்கமால் செல்லடித்தது. (முன் யோசனையில்லாமை)


3.ஸ்கூலுக்கு மறுபடியும் திரும்பி போகும்போது வேற சுத்து ரூட்.ஏன்? திரும்பவும் தண்ணீர் லாரி வந்து விட்டால்? (பயம்/வெறுப்பு/உஷார்)


4.அவன் என்னை வரச் சொல்லியிருந்தான்.செக்யூரிட்டி/லேட் மிஸ் என்று வாசலில் இருப்பவரிடம் நான் விளக்கிச் சொல்லி உள்ளே அனுப்ப.அவன் தன் சொந்த திறமையில் இதை சமாளிக்க வேண்டும்.செய்யவில்லை. (தன்னம்பிக்கையின்மை)


எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்‌ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.


”என் பையன் மாதிரி கம்பூயட்டர் கேம்ஸ் விளையாட.....என்றும் செல்போனக் கொடுத்துட்டா போதும் அதுல பூந்து விளையாடுவான்...அவன மாதிரி..” என்று மற்றவர்கள் முன்னால் குழந்தைகளை செல்லம் கொஞ்சுவார்கள்.இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை காமெடி. ஏனென்றால் 99% சதவீதம் குழந்தைகளுக்குத் இதெல்லாம் தெரியும்.


”கண்ணே...செல்லம்...உச்சு புச்சு..”என்று கொஞ்சிக் கொண்டு இருக்காமல் வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அடிப்படை எதார்த்தங்களை (ground realities) கற்றுக் கொடுங்கள்.


குழந்தையை வளர்ப்பதும் ஒரு பெரிய(life skill) திறமைதான். (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவதில் என்ன நன்மைகள்:-


1.சுயசிந்தனை
2.அடுத்தவரை சாராமை
3.அனுபவம்
4.அனுபவத்தில் பெறப்படும் அறிவு
5.சுறுசுறுப்பு
6.பொது அறிவு
7.பிரச்சனை எதிர் நோக்கும் துணிவு
8.ஒரு வித சுய சந்தோஷம்(நானே செய்தேன்!)
9.சமயோசிதம்
10.கெளரவம் பார்க்காமை



ஒரு தலைமுறை குழந்தைகளுக்குக்கு(நகர்புறம் சார்ந்த) இருக்கும் lifeskills அடுத்த தலைமுறைக்கு இல்லை.இப்போது இருக்கும் தலைமுறைக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.


பாதுகாக்கபட்ட சுழ்நிலையில் வளர்கிறது.(highly protected zone).போனதலைமுறை மாதிரி அல்லதுஅதற்கு முந்திய தலைமுறை அலைந்துதான் எல்லாம் பெற வேண்டும் .கையில் எதுவும் தொப்பென்று விழாது.


கடைசியாக... மிருகங்கள தங்கள் வாழ்வாதர திறமைகளை எப்படி பயன்படுத்துகிறது என்று டிஸ்கவரி சேனல்,அனிமல் பிளானெட்டில் பாருங்கள். Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொருந்தும்.






.

அனைவருக்கும் வணக்கம்,

பேரண்ட்ஸ் கிளப்பில் இணைய விருப்பம் தெரிவித்து
பல மடல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பலரை சென்றடைந்திருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதுவும் விகடன் வரவேற்பறையில் வந்த பிறகு
அதிக ரெஸ்பான்ஸ். ஃபாலோயர்களும் 100ஐத் தாண்டி
விட்டது.

இணைய விரும்புபவர்களுக்கு வேண்டுகோள்.

தாங்கள் பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து மெம்பரானால்
மட்டும் போதாது தங்களின் பங்களிப்பும் மிக அவசியம்.

தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அவசியம்.
அதுதான் இந்த வலைப்பூ துவங்கப்பட்டதன் காரணம்.



பல் வேறு பதிவர்கள் இந்த வலைப்பூவில் பதிகிறார்கள்.
குறைந்த பட்சம் அதை படித்து பின்னூட்டமாவது போட
வேண்டுகிறேன்.


தங்கள் கருத்துக்களை பதிந்து, பல பெற்றோர்களுக்கு
உதவும் எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே இந்த
வலைப்பூவில் இணைந்து பதிவுகளைத் தர வேண்டுகிறேன்.

நானும் இணைய விருப்பம் என விருப்பம் தெரிவித்த
பலரை இணைத்து 2 மாதமாகியும் 1 பதிவு கூட
போடப்படவில்லை!!! இணைந்ததன் நோக்கம் என்ன??

தவறாக நினைக்க வேண்டாம். இப்போது வைரஸ்
தாக்கம் வலைப்பூக்களில் அதிகமாக இருப்பதால்
அதிகமான எண்ணிக்கையில் மெம்பர்கள் இருந்தால்
வலைப்பூவுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கின்ற அச்சமே
இந்தப் பதிவுக்கு காரணம்.

உண்மையாக இணைந்து கருத்துக்களை பதிய
விரும்புபவர்களை இருகரம் நீட்டி இந்த வலைப்பூ
வரவேற்கிறது.

பெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்

பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை. 

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு என்னும் சம்பிரதாயம். இது வருடத்திற்கு இரண்டு முறையோ நான்கு முறையோ பள்ளியில் படிக்கும் தம் குழந்தைகளின் ”எப்படி படித்துக் கிழிக்கிறார்கள்” பற்றிய பின்னூட்டத்தை(feed back) நேரடியாக ஆசிரியர்களிடம் பெறுவதுதான்.பெற்றுக்கொண்டு சீர்படுத்துவது.இங்கு அனானி பின்னூட்டம் இல்லை.பிள்ளைகளின் ”ஓபன் சீக்ரெட்”

இது எவ்வளவு பள்ளிகளில் இருக்கிறது என்பது தெரியாது.

இதில் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை _________ “எனக்கேட்க அம்மாவும் “ மகன் தந்தைக்கு _____________இவன் தந்தை  என்னோற்றன் கொல்லொனுஞ் சொல்”லை கேட்க அப்பாவும் வருவதுண்டு. கடந்த நான்கு வருடங்களாக நிறைய அப்பாக்கள் தென்படுகிறார்கள்.

என் வீட்டில் மாறிமாறிப் போவதுண்டு.நான் போவதற்கு முன் எனக்கும் ஒரு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடக்கும்.அங்கு போய் இதைப் பற்றி பதிவுப் போடுவதற்கு மண்டையில் யோசித்துக்கொண்டிருக்காமல் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக காதில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதாக."படிப்பு முக்கியம்...பதிவு அல்ல.understand?" "Yes.... mam!"
 
புத்தகத்திருவிழாவில் ஸ்டால் ஸ்டாலாகப் போவது போல் இங்கு வகுப்பு வகுப்பாகப்  போக வேண்டும்.முக்கால்வாசி கவலைத் தோய்ந்த முகங்களைப் பார்த்தாலும் இங்கு நடக்கும்  இந்த சந்திப்புகள் பார்த்தால்  நன்றாக பொழுதுபோகும்.

ஆசிரியரைக் கும்பலாக சூழ்ந்துக்கொண்டு மற்ற குழந்தைகளின் மார்க்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அவர்களின் “ஓபன் சீக்ரெட்டை”காதில் கேட்டுக்கொண்டுதான் நடக்கும்.அடுத்து அழுவது.ஒரு முறை ஒரு மாணவனின் தாயார் (விசும்பி விசும்பி) அழுதைப் பார்த்தேன்.(இது கண்டிப்பாகத்  தவிர்க்க வேண்டிய செயல்.)பிறகு மாணவ/வியின் காதைத் திருகி அங்கேயே கண்டிப்பது.அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது.
  
ஒரு ஆசிரியர் ஒரு நாளில் கிட்டத்தட்ட 200 பெற்றோர்களைச் சந்தித்து பின்னூட்டம் கொடுக்கிறார்.பரிதாபம்.முப்பது அல்லது நாப்பதாவது பின்னூட்டத்திலேயே சலிப்பு வந்து ரோபோவாகி “டெம்பிளேட் பின்னூட்டம்” ஆகிவிடுகிறது. ”நிறைய பிராக்டீஸ் பண்ணனும்” “கான்செப்ட்ட தெரிஞ்சிகிடனும்””சில்லி மிஸ்டேக்ஸ்””வாய்விட்டு படிக்கணும்” “She/He can still do better"”lacking concentration".
 
( Lacking concentration எனும்போது இப்போது இருக்கும் தலைமுறைக்கு கவனக்கலைப்புகள் அதிகம்.இதிலிருந்து மீண்டு படிப்பில் பாடம் செலுத்துவது இமாலய சாதனை.)இது பெற்றோர்களுக்கும் ஒரு சவால்.இதில் பல பெற்றோர்கள் சலித்துப்போய் அலுத்து நொந்து விடுகிறார்கள்.

இங்கும் ஒரு பக்கப் பார்வைதான்(one sided view) பார்க்கப்படுகிறது.அதாவது ஆசிரியர்களிடம் குற்றமே இல்லாத மாதிரியும் மாணவ/விகள்தான் முழு பொறுப்பு என்பதாக.பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும்  பதிலுக்கு உண்மையான “டெம்பிளேட் பின்னூட்டங்கள்”தொண்டையில் உண்டு.ஆனால் சொல்வதில்லை. அவை” போர்ஷ்ன்களை மின்னல் வேகத்தில் நடத்திக்கொண்டுப் போவது” “பாடத்தை எழுதுவதற்குள் அழித்துவிடுவது””எப்படி இருந்தாலும் மாணவ/விகள் டுயூஷன் வைத்துவிடுவதால் மேலோட்டமாக சொல்லிக்கொடுப்பது”” மார்க் குறைந்தாலும் பணம் இருப்பதால் இன்ஜினியரிங் கல்லூரி சேர்த்துவிடலாம்”

வகுப்பில் ஆசிரியர்களின் கண்டிப்பில் வீரியம்  குறைவாகத்தான் இருக்கிறது.காரணம் மாணவ/விகள் தற்கொலை.மனித உரிமைக் கழகம்.ஏதாவது நடந்தால் ரெடியாகக் காத்திருக்கும் புலானய்வு ஊடகங்கள்.

நான பார்க்கும்  உலக மகா அபத்தம் கம் குற்றம்  ஒரு வகுப்புக்கு 65 மாணவ/விகள் மேல் இருப்பது.இருக்க வேண்டியது 30.எவ்வளவு சொல்லியும் இந்த டெம்பிளேட் பின்னூட்டத்தை யாரும் காதில் போட்டுக்கொள்வதில்லை.

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவ/மாணவிகளின் பெற்றோர்களுக்கு எங்கு தவறு என்று நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது.தெரியவில்லை என்றால் முட்டாள் பெற்றோர் என்றுதான் சொல்வேன்.

சில படித்தப் பெற்றோர்கள் டுயூஷன் வைக்காமல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.ஆனால் இதற்கு.எல்லையில்லா பொறுமையும் எனர்ஜியும் வேண்டும்.அதுவும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் வீடு? அம்மாடியோவ்!


பெரும்பாலும் கணக்குப்பாடத்தில் சறுக்குவது சகஜம்.காரணம் இதில் கதை விட முடியாது. அடிப்படைத் தெரியவேண்டும்.கவனம் குறைந்தால் காலிதான்.

அடுத்து ஆங்கிலம்.இலக்கணம் மிக முக்கியமானது.ஆசிரியர்/மாணவர் இரண்டுமே இங்கு சொதப்பல். மூன்றாம் நான்காம் வகுப்பிலேயே அடித்தளம் பலமாக போட வேண்டும்.இல்லாவிட்டால் காலி.தமிழ்(2nd language) இங்கும் சொதப்பல்.காரணம் மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதால்.இதை இரு தரப்பும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.காரணம் இது சோறுப் போடப்
போவதில்லை என்பதால்.பிளாக் எழுத உதவும்(????).

என் மகன் 2nd language தமிழ்தான். ”ஐனூத்தி என்பத்தி நாலு ரூபாய்” என்பதை மார்வாடி போல் தட்டுத்தடுமாறி உச்சரிப்பான்.

இந்த சந்திப்பில் வெளி வரும் விஷயங்கள்:

  • பாடத்தின் அடைப்படையை மண்டையில் ஏற்றுதல்
  • மாணவ/விகளின் சோம்பேறித்தனம்
  • கணக்கில் பயிற்சி நிறைய செய்யவேண்டும்.அசுர சாதகம்.போட போட கணக்கு, பாடபாட பாட்டு.....
  • அடித்தளம் பலமாக இருக்கவேண்டும்.இது ஆரம்ப நிலையிலேயே
  • பொறுமையின்மை(பெற்றோர்/குழந்தைகள்)
  • கவனக்கலைப்புகளை கண்டறிதல்
  • டீச்சர்களுக்கும் கவனக்கலைப்புகள்
  • பாடச் சுமை
  • வாய்விட்டுப் படித்தல்
  • தனி கவனம் இல்லாமை
  • கூலிக்கு மாரடிப்பது

கவனக்கலைப்பு: டிவி,ரேடியோ,டிவிடி,நண்பர்கள்,வீட்டு உறுப்பினர்கள், ஷாப்பிங், குர்குரே இத்யாதிகள்






0

முதல் பகுதி இங்கே

தற்காப்பும் அதன் அவசியமும்

என் முந்தைய பதிவில் ஒரே நாளில் இரு கயவர்களையும் இரு நல்லவர்களையும் எதிர் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன்.

இன்றும் கூட கராத்தே, ஜூடோ, முகத்தில் குத்துவது, அல்லது கால்களுக்கு இடையில் உதைப்பது போன்றவற்றை தற்காப்பு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். கராத்தே ஜூடோ போன்றவை  தன்னம்பிக்கை வளரும். உண்மைதான்.  ஆனால், நிதர்சனத்தில்??? இதெல்லாம் சினிமாவிலோ டீவீ சீரியல்களிலோ பலன் கொடுக்கலாம். அரிதாகவே, நிஜத்திலும் சில நேரங்களில் உதவலாம்...

ஒருவேளை அடிபட்டவன் ஆக்ரோஷமடைந்து அடித்தவள் மீது பாய்ந்தால்? இவளை விட பலம் பெற்றவனாக இருந்தால்? அவனும் கராத்தே ஜூடோ தெரிந்தவனாக இருந்தால்? ஒருவனுக்கும் மேற்பட்டவர் இருந்தால்?

அடிதடி சண்டை போடுவது, வாயால் கத்திக் கொண்டு உதவி கேட்டுக் கொண்டு நிற்பதை விட, துரிதமாக ஆபத்து நிறைந்த அந்த இடத்திலிருந்து ஓடுவது / வெளியேறுவது எப்படி என்று யோசித்து செயல் பட வேண்டும். எதிராளியை அடிப்பது நிச்சயம் பல நேரங்களில் உதவுவதில்லை. இது வன்மமாகக் கூட மாறி மென்மேலும் ஆபத்துக்களை உருவாக்கலாம். ஆபத்தை எதிர்கொண்டு இன்னொரு ஆபத்தை உருவாக்குவதை விட ஆபத்தை தவிர்ப்பது, அந்த இடத்தை விட்டு ஓடி விடுவது சாலச் சிறந்தது.

தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் ஆண்களுக்குப் பெரும்பாலும் பாலியல் நோக்கமே இருக்கிறது. யாரேனும் உங்களைத் தாக்கியோ / மிரட்டியோ உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழலில், நீங்கள் இடத்தை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில் அவன் வேறு ஒருவரை நாடுவானே தவிர, சினிமா மாதிரி உங்களையே துரத்திக் கொண்டிருக்க மாட்டான். அவனது பாலியல் நோக்கம் (வெறி) கூட அந்த நிமிட மனப் பிழற்வுதான். ஏற்கனவே உணர்ச்சி வசத்தில் இருக்கும் அவனுக்கு அவன் குறிக்கோளை அடைய என்ன வேண்டுமாலும் செய்துவிடும் மனப்போக்கிலேயே இருப்பான். அதனால் உங்கள் மனதுக்கு ஆபத்து என்று படும் பட்சத்தில் 'வீரம்' காட்டுவதை விட 'விவேகமாக'வும் அதி வேகமாகவும் செயல்படுங்கள். எதிராளியின் பார்வையில் இருந்து மறைவதை முதலில் முயற்சியுங்கள். தனிமையான இடத்திலிருந்து  கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று விடுங்கள்.  வேறு வழியே இல்லாத பட்சத்திலேயே சண்டையில் இறங்கலாம்.

தற்காப்பு என்றால் என்ன? தற்காப்புக்கு முதல் தேவை மன உறுதியும் சமயோசிதமும். இவை இரண்டும் ரொம்பவே அவசியம். ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மன உறுதி இல்லை என்றாலோ, ஆபத்து வரும் சமயத்தில் துரிதமாக முடிவெடுத்து, தகுந்தவாறு செயல் பட முடிய வில்லை என்றாலோ தற்காப்புப் பயிற்சிகளால் பயனேதும் இல்லை.  உங்கள் உள்ளுணர்வுகளின் ஒவ்வொரு செய்திக்கும் செயல் படுங்கள். பெரும்பாலும் உள்ளுணர்வு தவறுவதே இல்லை.

இது முன் பின் தெரியாத அன்னியனால் வரும் ஆபத்தினை சமாளிப்பது. சரி.  டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும், அல்லது பெரும்பாலும் எல்லா வயதுடைய பெண்கள் சிலருக்கு அவர்கள் நண்பர்களால் / மிகவும் நன்கறிந்த ஆண்களாலேயே ஆபத்து நேர்கிறது. அப்போது என்ன செய்வது?

பாலியல் தாக்குதல் எல்லாமே பெரும்பாலும் அந்த நிமிட மனப் பிழற்வு தான். ஆனால் ஏற்கனவே நன்கறிந்த ஆண்களால் தாக்குதலுக்கு ஆளாவது அந்த ஆணால்  'முன்பே' திட்டமிடப்பட்டது. அந்தப் பெண்ணின் தனிமை, வீட்டில் எப்போது யாரும் இருக்கமாட்டார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பான். இம்மாதிரி நிகழ்வுகள் எப்போதும் ஒரு அறையோ இல்லை பெண்ணின் வீட்டிலேயோ கூட நடக்கலாம். இதனால் இம்மாதிரிச் சூழ்நிலையில் முடிந்தவரை பதட்டப் படாமல், புத்திசாலித்தனமாகப் பேசி கதவுகளைத் தாண்டி வெளியேற முயற்சியுங்கள்.  தோற்று விட்டோம் என்று நாமே நம்பாத வரை, யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். எந்நிலையிலும், இம்மாதிரிச் சூழலில் உங்கள் கோபத்தையோ, இயலாமையோ வெளிக்காட்டுவது உங்களைத் தோற்கச் செய்யும்.

உங்களைக் கோபமூட்டுவதன் மூலம் அவன் நோக்கம் எளிதில் நிறைவேறும் என்பதை எதிராளி நன்கறிவான். உங்கள் கோபம் உங்கள் "ரெஸ்பான்ஸ்" ஆகிறது. அதே போல அவனை சண்டைக்குத் தூண்டுவதோ, கோபமூட்டுவதோ உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதனால் உணர்ச்சி வசப்படாமல், மெதுவாக அத்தகைய இடத்திலிருந்து வெளியேறுவதை குறித்தே சிந்தித்து செயல்படுங்கள்.

வழிப்பறி, திருடன் போன்றவரிடம் மாட்டிக் கொண்டால் அவனிடம் பர்ஸ் நகைகள் போன்றவற்றை கொடுத்து விடுவது தப்பிப்பது சாலச் சிறந்ததாகும். அவன் நோக்கம் பணம் பொருள் என்பதே. இவை சண்டைபோடுவதால் அவன் நோக்கம் மாறிவிடக்கூடும்.  பொருளை இழப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

இம்மாதிரி தாக்குதலுக்கு ஆளாகும் போது முடிந்த வரை உங்கள் உயிர், சுய மரியாதை, ஆகிவற்றைக் காப்பதிலே முழு கவனமும் இருக்கட்டும்.  தாக்குபவனைத் திருப்பித் தாக்குவது பெரும்பாலும் அவனை ஆக்ரோஷப்படுத்துகிறது. நீங்கள் பாதுகாப்பென்றும் கருதும், உள்ளுணர்வு நம்பும்  எந்த ஒரு அன்னியரிடமும் உதவி கேட்கத் தயங்காதீர்கள். அதற்காக முன் பின் தெரியாத அன்னியரின் கார் போன்ற வாகனங்களில் முழுமையாக நம்பி, தனியாகப்  பயணிக்க  வேண்டாம்.

உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிருங்கள் - முழுமையாக.

  1. தனியாக பயணிக்கும் போது, அந்த இடம், பயணிக்கும் சாலைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருங்கள்.கூட்டத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தனிமை படுத்திக் கொள்ளாதீர்கள். இலக்கிலாத வழிகளில் பயணிக்க வேண்டாம். அதே போல, நெடுந்தொலைவு / ஏற்கனவே போகாத இடங்களுக்கு தனியாக பயணிக்க வேண்டாம் / தவிருங்கள்.
  2. எப்போதும் குறுக்கு வழிகளில், இருட்டான சாலைகள், யாரும் பயன்படுத்தாத சந்துகளில் செல்லாதீர்கள்.
  3. வீட்டில் இருந்தால் உங்கள் பெற்றோர், ஹாஸ்டல் / விடுதி போன்ற இடங்களில் இருந்தால் உங்கள் தோழிகளுக்கு நீங்கள் எங்கே போகிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதை தெளிவாகக் கூறுங்கள். 
  4. டேட்டிங் (dating) போன்றவைகளுக்குச் சென்றால், முடிந்தவரை உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம் யாருடன் போகிறீர்கள் என்பதை பகிருங்கள். என்னதான் அந்த நண்பர் நம்பகமானவராக இருந்தாலும்,  தனிமையில் இருக்கும் போதோ, டேட்டிங் செல்லும் போதோ, வெளியிடங்களில் / மூடிய அறைக்குள் குளிர் பானங்களை அருந்த வேண்டாம் / உணவு உட்கொள்ள வேண்டாம்.
  5. ஹாங்-அவுட் (hang-out), ஆடல்/பாடல் நிகழ்ச்சிகள், திரையரங்குகள், விருந்துகள், போன்ற பெருந்திரளான மக்கள் வரும் பொதுவிடங்களுக்குப் போகும் போது முழுமையான உடையணிந்து (பெண்கள் மன்னிக்க, ஆனால் கவனம்) செல்லவும். நடைமுறையில் உடல் பாகங்கள் தெரியுமாறு உடையணிந்த பெண்களே அதிகளவில் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இம்மாதிரி இடங்களில் தான் வாய்ப்பு தேடி அலையும் கயவர்கள் அதிகம் நடமாடுகிறார்கள். சமூகம் / சில ஆண்கள் மாறவில்லை, மாறவேண்டும், என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதுவரை, நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது நலம். அதே போல, நீங்கள் இருக்கும் குழுவினரோ, அல்லது உங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் நபர்களோ (ஆண்கள் பெண்கள் இருபாலாரும்தான்) பொறுப்பற்ற அல்லது வரம்பு மீறிய பேச்சுக்கள் அல்லது செயல்களில் ஈடுபட்டால், வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று விடுங்கள். ஆபத்து வரும் வரை காத்திருக்க வேண்டாம். இது உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைத் தடுக்கும்.
  6. ஆங்கிலத்தில் vulnerable target என்பார்கள். அதாவது எளிதில் தாக்கக்கூடிய இலக்கு. இவர்களைத் தேடித்தான் "அவர்கள்" அலைவார்கள். இவர்கள் அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். எப்படி? நண்பர்கள் அல்லாத அன்னியர்களோடு -  தொட்டு பேசுவது,  அவர்கள் அளிக்கும் மது / குளிர் பானங்கள் / உணவுகளை ஏற்பவர்கள், இவர்களை மிக விரைவிலேயே தாக்குவார்கள். உங்கள் தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் வெளிக்காட்டுங்கள். அவமரியாதையான / மரியாதைக்கு குறைவான பேச்சுக்களை ஒரு போதும் அனுமதிதோ சமரசம் செய்தோ பொறுத்துக் கொள்ளாதீர்கள். "உங்கள் எல்லையை மீறவேண்டாம்" என்று முதலிலேயே பொறுமையாக அதே சமயம் உறுதியான குரலில் கூறி விட்டால், 99% ஆபத்துக்களை நீங்கள் முளையிலேயே கொன்றதாக ஆகிறது. பெரும்பாலும் அப்போதே 'கயவர்கள்' வேறு நபரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். (ஐயோ! அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்)
  7. அம்மாக்களே!!! தயவு செய்து பதிமூன்று வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கே ஓரளவு விபரம் தெரியும் வரை,  சினிமாவில் அணிவிப்பது போன்ற உடைகளை (முதுகு முழுதும் திறந்து / தொப்புள் தெரியுமாறு / மினி போன்ற உடைகள்) அணிவித்து மகிழ வேண்டாம். அதுவும் பொதுவிடங்களில், பேருந்துகளில் பயணிக்கும் போது, யாரேனும் தவறான எண்ணத்தோடு bad touch செய்தால் பாவம் குழந்தைகளுக்குச் சொல்லவும் தெரியாது. நீங்களும் கண் கொத்திப் பாம்பாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா? பயணங்களில் பான்ட் ஷர்ட் / சுடிதார் போன்ற எளிய பாதுகாப்பான உடைகளையே நீங்களும் அணியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் அணிவித்துப் பழக்குங்கள். மற்ற உடைகளை வீட்டிலோ இல்லை மிகவும் நம்பிக்கையான இடங்களுக்கோ போகும் போது அணிவித்து மகிழுங்கள்(!!).
  8. கைபேசியில் shortcut program-கள் செய்து ஒரே நம்பரை அழுத்துவதனால் பெற்றோர் / கணவர்/உறவினரை அழைக்கும் வண்ணம் ஏது செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  9. உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து, முதல் முறையே, உங்கள் பெற்றோர் / பள்ளி / கல்லூரி / போலீஸ் ஆகியவர்களிடம் பகிர / முறையிட (complaint) தயங்காதீர்கள். யாரும் தப்பா நினைப்பாங்களோ  அல்லது நம்மை கெட்டுப் போனவள்-ன்னு நினைச்சிருவாங்களோ அல்லது "ரொம்ப நெருங்கிய உறவுக்காரர் / நண்பர் ஆவாரே.. அவர் உறவு / நட்பு பிரிஞ்சுடுமோ" என்றெல்லாம் வீண் கற்பனை செய்து பயப்படாதீர்கள். (பெற்றோரே. நீங்களும் இத்தகைய குறைகளைக் காது கொடுத்து கேளுங்கள். உங்கள் பெண்ணை முழுமையாக நம்புங்கள்)
  10. முறையான தற்காப்புக் கலை ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஓடிப் போய் தப்பிக்க முடியாத நிலையில் கை கொடுக்கும்.
 =================================================
உங்கள் குழந்தைகளுக்குப் பாலியல் குறித்த அந்தந்த வயதிற்கேற்ற செய்திகளை மெல்ல மெல்ல கொடுத்துக் கொண்டே இருங்கள்.

"பாய்ஸ் ஏம்மா பாய்ஸ்ஸா இருக்காங்க. அவங்களும் ஏன் கேர்ள்ஸா இல்ல? அவங்களாம் ரவ்டீஸ்ஸா?" என்ற கேள்விக்கு ஒரு தாயாக / தந்தையாக என்ன பதில் அளிப்பீர்கள்?

நான் "ரவுடின்னா என்னம்மா?" என்றேன்.

 "அடிப்பாங்க. கெட்ட வார்த்தை சொல்வாங்க. சாக்லேட் ஸ்நாக்ஸ் எல்லாம் யாருக்கும் ஷேர் செய்யவே மாட்டாங்க... அவங்களே ஸ்விங்-ல (ஊஞ்சல்) விளையாடிண்டே இருப்பாங்க. அவங்கதான் ரவ்டீஸ் ..." என்றாள்.

 "அப்பா பாயா கேர்ள்-ளா?" என்றேன்

 "பாய்தான்...." என்றாள்.

"தாத்தா ?"

"தாத்தாவும் பாய்தான் - பின்னல் இல்ல  ...வேஷ்டி கட்டிகாரங்க, பான்ட் ஷர்ட் போட்டுக்கறாங்க."

யோசிக்க ஆரம்பித்தாள் "அப்பா தாத்தால்லாம் ரவ்டீஸ் இல்லம்மா." என்றாள். கொஞ்ச நேரம் கழித்து "ஆனா விஷால்-லும் நிஷாந்த்-தும் இருக்கான்ல ... இவங்கதான் கேர்ள்-சை அடிப்பாங்க. ஸ்நாக்ஸ்-சை எல்லாம் பிடுங்கி சாப்ட்ருவாங்க... மிஸ் அடிச்சாக் கூட பயப்படவே மாட்டாங்க. இவங்க மட்டும் தான் ரவ்டீஸ் மா... "
(உடனே ஸ்கூல் மிஸ்ஸிடம் பேசி ஸ்நாக்ஸ்/அடிதடி பிரச்சினையை ரிப்பேர் செய்தாகி விட்டது. ப்ரைமரி ஸ்கூல் மிஸ்ஸுகள் ரொம்ப பாவம்ங்க )

ஒரு முறை என் கணவரின் சக பணியாளருக்கு குழந்தை பிறந்திருந்தது. பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்ற போது தர்ஷிணியும் வந்திருந்தாள். அங்கு வந்திருந்த ஒருவர் "என்ன குழந்தை" என்று கேட்டார். குழந்தையின் தாய் "கேர்ள் சைல்ட்" என்றார். தர்ஷிணி மெல்ல என் காதில்  "பேபிக்கு பின்னல் தோடு எல்லாம் இல்லையே? பாய் மாதிரி மொட்டையா இருக்கே. எப்படிம்மா பொண்ணுன்னு கண்டு பிடிச்சா அவ அம்மா?" என்றாள்.


000 -- தொடரும் -- 000
அடுத்து:
3. ஆபத்து என்று எப்படி அறிவது?
4. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
5. கற்பழிப்புக்கு ஆளானால்?



(நான் எதையும் தவறாக / தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தலாம். பிறரை அவமதிக்காத / புண்படுத்தாத / ஆரோக்கியமான விவாதங்கள் செய்யலாம்.)



.

பிள்ளையை பள்ளியில் சேர்த்த அன்னைக்குத்தான் பலர்
பள்ளிக்கு சென்றிருப்பார்கள். அதற்கப்புறம் பேரண்ட்ஸ் மீட்டிங்
வெச்சா ”அவங்களுக்கு வேற வேலை இல்லை”!!
தட்டிக்கழிச்சிடுவாங்க.

அம்மா அல்லது அப்பா யாராவது ஒருத்தர் போனா போதும்னு
சொல்லிட்டு இதுக்காக சண்டை போட்டு யாருமே போகாம
பிள்ளைய ஏங்க விடுவதும் நடக்கும்.


”ஸ்கூல்ல சேத்திருக்கோம்ல. சேர்க்கறவரைக்கும் தான் நம்ம கடமை!
படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியது வாத்தியார் கடமை”! என்பது
பலரின் எண்ணம்.

மார்க் குறைஞ்சா பிள்ளைய திட்டுவது, இல்லாட்டி
ஆசிரியைகளிடம் சண்டைக்கு போவது. உண்மையில்
செய்ய வேண்டியது என்னத் தெரியுமா? பிள்ளை படிக்கும்
பள்ளிக்குச் சென்று ஆசிரியைகள் (ஒவ்வொரு சப்ஜெக்ட்
டீச்சர்களும்) ஹெட்மாஸ்டர்களை சந்தித்து இந்தக் குழந்தையின்
பெற்றோர் என அறிமுகப் படுத்திக்கொள்வது அவசியம்.

பள்ளிக்கு செல்வது அவர்களை பற்றியோ பிள்ளையை
பற்றியோ குற்றப்பத்திரிகை வாசிக்க அல்ல என்பதை நல்லா
மனதில் பதிய வெச்சுக்கணும்.

அப்புறம் அங்க போய் என்ன செய்யன்னு கேக்கறீங்களா??

தெரிஞ்சிக்கலாம் வாங்க.

சின்ன வகுப்புக்களில் பிள்ளைகள் இருக்கும்பொழுதை விட
பெரிய வகுப்புக்கள் சென்ற பிறகு அவர்களின் நடவடிக்கைப்
பற்றி வெகுக் குறைவாகத்தான் பெற்றோருக்குத் தெரிய வரும்.
காரணம் கொஞ்சம் பொறுப்பு குழந்தைகளிடமும் தரப்படுவதே.

உதாரணம்: வீட்டுப்பாடம் செய்ய வேண்டியது பிள்ளையின்
பொறுப்பு என்றாலும் தாமதமாவதற்கான காரணத்தை கண்டறிய
வேண்டியது நம் கடமை.

ஆசிரியைகளுடம் கலந்து பேசி, நம்மை அறிமுகப்படுத்திக்கொள்வதால்
இந்த பிள்ளையின் பெற்றோர் பிள்ளையின் படிப்பில், நலனில்
அக்கறை உள்ளவர்கள் எனும் எண்ணத்தை ஆசிரியரின் மனதில்
விதைக்கிறோம்.

ஆசிரியரின் அனுமதியுடன் தேவையானால் அடிக்கடி இருவரும்
கலந்து பேசுவதனால் பிள்ளையின் படிப்பில் நல்ல முன்னேற்றம்
கொண்டு வர முடியும்.

ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம் என்பதால் பிள்ளையின்
முன்னேற்றத்தின் போது அவருக்கு நன்றி கூறுவது, பாராட்டுவது
மிக முக்கியம்( பரிசு பொருட்கள் வேண்டாம். உங்களின் பங்கு
இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது போன்ற பாசிடிவ்வான
பாராட்டுக்கள் முக்கியம்)

பெற்றோர்- ஆசிரியர்கள் இந்தக் கூட்டணியினால் அனைவருக்கும்
நல்லது. பிள்ளைக்கு முன்னேற்றம், பிள்ளைகளால் பள்ளிக்கு
நன்மதிப்பு.

பெண்கள் பெண்கள்தானே. மனிதர்கள் தானே. எதற்கு தேவதை பட்டம் எல்லாம்? நற்குணமெல்லாம் தேவைதான். ஆனால் அடக்கம் அடக்கம் என்று "அடக்கம்" பண்ணும் அளவுக்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவையா? சிலர் தேவதைகளாகவும், தெய்வத்தின் பிரதிபிம்பமாகவும், தியாகத்தின் உருவம்,பொறுமையில் பூமி மாதா,அவள் அடக்கத்திற்கு கோவில் கட்டிக் கும்பிடலாம், செதுக்கி வைச்ச சிலை,அழகி, பேரழகி, சுண்டினா ரத்தம் தெரியும் சிகப்பு, நீ என் தேவதை, வாயே திறக்கமாட்டாள் - ரொம்ப நல்லவ, போன்றவைகள் மீதான மயக்கம் இன்னும் போகவில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அழகு, அடக்கம், பொறுமை, தியாகம் போன்ற குணங்களை பெண்களுக்கே மொத்த குத்தகையாக கொடுத்து விட்டாமாதிரியான மூளைச்சலவைகளை.

பல வருடங்கள் முன் செனடாப் ரோடு பயங்கரத் தனிமையான சாலை. இதை தினமும் இரவு எட்டரை மணி வாக்கில் பயன்படுத்த வேண்டி இருந்தது. அதுவும் இருசக்கர வாகனத்தில். ஒரு நாள் இரவு பத்து மணியாகி விட்டது - அலுவலகத்தில் மறுநாள் ஒன்பது மணிக்கே மார்கடிங் மீட்டிங் துவங்குவதால் எல்லாவற்றையும் தயார் செய்து வைக்க நேரமாகி விட்டது. ஒரு குண்டு தைரியத்திலும், ஈவ் டீசிங் போன்ற முன் அனுபவம் எதுவும் இல்லாத அனுபவக் குறைபாட்டாலும், அன்று வீடு திரும்புகையில், "என் வண்டிலையே போய்க்கறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

இரு வாகனங்கள் ஒன்று கார், இன்னொன்று மோட்டார் பைக், இரண்டும் ஏறத்தாழ மவுன்ட் ரோடு கருமுத்து மாளிகை அருகிருக்கும் சிக்னலில் இருந்து பின்தொடர்ந்து கொண்டே வந்தது. பைக்கில் வந்தவன் "ஏ கைனடிக்.... நில்லுடி" என்று கூறிக்கொண்டே கிட்ட வருவதும் பின்தொடர்வதுமாய் இருந்தான். காரும் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தது. எனக்கோ படபடப்பு அதிகமானது. உண்மையிலேயே பயமாகத்தான் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே சிறிது வேகப்படுத்தினேன் வாகனத்தை. அடையார் பிளைஓவர் அப்போது இல்லை. ஐ.டீ. காரிடாரும் இல்லை. போலீசாரும் யாரும் கண்ணில் படவில்லை. அடையார் சர்ச் எதிரில் வருகையில் மோட்டார் பைக்காரன் என் கைனடிக் ஹோண்டாவின் பின் சீட்டில் கையால் தட்டினான். எனக்கு பதற ஆரம்பித்து விட்டது. எங்கிருந்து துணிவு வந்ததோ தெரியவில்லை, வண்டியின் வேகத்தைக் குறைத்து இடது காலால் அவன் வண்டியை எட்டி உதைத்தேன். கீழே விழுந்து விட்டான். காரும் அவன் அருகில் நின்று விட்டது. நான் பின் என்ன நடந்தது என்று கூட பார்க்காமல் வேகமாய் அடையார் பாஸ்கின் ராபின் ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்து விட்டேன். பின் அங்கிருந்த இருவர் துணையோடுதான் வீடு சென்றேன்.

இந்நிகழ்வை இப்போது யோசித்தால் கூட அன்றும் இன்றும் என்றும் தனியாய் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து விளைப்பதோ தீங்கு செய்யவோ, எல்லைகளை மீறுவது கயவர்களுக்கு எளிதாக இருக்கிறது என்று நினைப்பேன். அன்று பாஸ்கின் ராபின்ஸ் போன்ற இரவு நேரக் கடையோ, இல்லை அங்கிருந்த இரு ஆண்கள் நல்லவர்களாகவோ இல்லாதிருந்தால்? நம் பெண்கள் இன்றும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா?

இவள் மூக்கைத் தாண்டியும் அடுத்தவர் தொடுவதையும், சீண்டல்களையும் ஏன் இப்படிச் சகித்துக் கொள்ள வேண்டும்? எதற்காகப் பயப்படுகிறாள் இவள்? ஈவ் டீசிங், அலுவலகத்தில் பாஸ் அல்லது சக பணியாளரின் சூசகமான உள்ளர்த்தம் பொதிந்த பேச்சுக்கள், உடல்/உளரீதியான அல்லது பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் போதும் கூட வாய் மூடி ஒதுங்கி போவது, இப்படி தவறு செய்பவருக்கு ஊக்கம் கொடுப்பது போல ஆகி விடாதா? "உன் செய்கை எனக்கு பிடிக்கவில்லை" என்று சொல்ல / அவர்கள் செயலைத் தடுக்க எதற்குத் தயக்கம்?

இக்கட்டான இது போன்றச் சூழலில் பெண்களாகிய நாம், நம்மை நாமேப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு ஆபத்து நேர்ந்தால் நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மன ரீதியாகத் தயாராக இருக்கிறோமா?

வரும் பதிவுகளில் காணலாம்.

1. தற்காப்பும் அதன் அவசியமும்
2. ஆபத்து என்று எப்படி அறிவது?
3. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
4. வன்புணர்வு/பலாத்காரத்துக்கு  ஆளானால்?




.






குழந்தைகளின் உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அது தனித்துவமானது. எல்லையற்ற பாதையில் முடிவில்லாத பயணமாய் செல்ல அவர்களை தூண்டுகிறது. நட்பும் சந்தோஷமும் மட்டுமே அவர்களின் ஆசை, விருப்பம் மகிழ்ச்சி.


அப்படி எல்லையில்லா பேரானந்தத்தை விரும்பிய இரண்டு பாலினம் புரியாத பால்ய நட்பு சிறார்களின் கதையே விவா கியூபா என்றும் ஸ்பானிஷ் திரைப்படம்.


மாலு உயர்குடியில் பிற்ந்த செல்வந்தரான சிறுமி. அவளது தந்தையோ அவளது குடும்பத்தை விட்டு விலகி வெகுதூரம் வாழ்ந்து வருபவன். தாயுடனும் தனது முதிர்ந்த பாட்டியுடன் வசித்து வருகிறாள்.


மாலுவுக்கு சம வயதுடைய ஜார்ஜி எதிர் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் சிறுவன். கம்யூனிச சித்தாந்த கொள்கைகளுடைய குடும்பத்தில் பிறந்தவன்.


இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் இணை பிரியா நண்பர்கள். துள்ளி திரிவதும் சிறு சிறு சண்டைகளுடன் சதா விளையாடி மகிழ்வதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுமாய் பொழுதுகள் போகின்றது. இது இரு வீட்டாருக்கும் பிடிப்பதில்லை. மாலுவை அவள் தாய் ஆண்பிள்ளைகளுடன் விளையாடுவது தவறென்றும் பெண் குழந்தைகள் வீட்டின் உள்ளேயே தான் விளையாட வேண்டும் என்றும் நச்சரித்து கொண்டே இருக்கிறாள். இதனால் மாலுவுக்கோ தாயின் மீது அளவற்ற கோவம். ஆனால் அவளின் ஒரே ஆறுதல் வயதான பாட்டி மட்டுமே.


இதே நிலைதான் ஜார்ஜிக்கும். ஜார்ஜியின் தந்தை மாலுவினுடனான நட்பை துண்டிக்க வேண்டுமென்றும் சக ஆண் நண்பர்களுடன் விளையாட அறிவுறுத்துகிறார். அப்பாவை கண்டாலே அவனுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. மாலு & ஜார்ஜியாவின் நட்பால் இரு குடும்பமும் இந்தியா பாகிஸ்தானாய் முறைத்து கொள்கிறது.


நிலைமை இப்படி இருக்க மாலுவின் தாய் வேறொருவனை மணமுடிக்க எண்ணுகிறாள். ஜெர்மனியில் வசிக்கும் அவனிடம் சேர்ந்து வாழ விருப்பமும் தெரிவிக்கிறாள். இதற்காக சட்டப்படி மாலுவின் தந்தைக்கு அவர் கையெழுத்திட வேண்டி ஒப்புதல் படிவத்தையும் அனுப்பி வைக்கிறாள். மனமுடைந்து போகிறாள் மாலு.

ஒரு புதிய வாழ்க்கை வருகிறதென்றும் ஜெர்மனியில் சுகமாய் வாழலாம் என்று மாலுவை தேற்றுகிறாள் தாய். சோகத்திலும் சோகமாய் பாட்டியும் திடிரென்று மரணித்து விட சொல்லமுடியாத வேதனையுடன் இருக்கிறாள் மாலு. விளையாடவோ பாடத்திலோ விருப்பமின்றி இருப்பதை பார்த்து ஜார்ஜியாவும் மிகவும் வருத்தப்படுகிறான்.


தாயின் விருப்பத்தையும் இடம் பெயர்வது பற்றியும் மற்றும் அனைத்து விபரங்களையும் நண்பன் ஜார்ஜியாவிடம் அழுதபடியே சொல்கிறாள். தற்போதைய பள்ளி கூடத்தையோ ஜார்ஜியாவையோ பிரிய ஒரு போதும் இயலாது என்றும் வருந்துகிறாள். அவளை தேற்றுகிறான் ஜார்ஜியோ.


இதற்கு ஒரே வழி மாலுவின் தந்தையை சந்தித்து அவரை அந்த ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடாமல் செய்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் என்றும் இருவரும் தனியே கிளம்பி போய் அவரை சந்திக்கலாம் என்று முடிவும் செய்கின்றனர்.

இரவோடு இரவாக வேண்டிய துணிகளையும், ஊருக்கு செல்ல வரைப்படம் சேர்த்து வைத்த உண்டியலையும் எடுத்து கொண்டு பள்ளி செல்வது போல காலையில் கிளம்பி இருவரும் உற்சாகமாகவும் அதீத சந்தோஷத்துடனும் பயணத்தை தொடங்குகின்றனர்.

படகில் ஆரம்பித்த பயணம் கார், மோட்டர் சைக்கிள், மாட்டுவண்டி, இரயில் என்று சகலவித பாதைகளிலும் பயணிக்கிறது.

பசியும் சோர்வும் வாட்டுகிறது. தொலை தூர கிராமத்தில் பார்வையிழந்த பெண்ணொருத்தியின் வீட்டிலிருந்து ரொட்டியையும் பாலையும் திருட முற்பட அவள் நாயின் துணையோடு இருவரையும் விரட்டி பிடிக்க செய்வதறியாது திகைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து ஒட இரவில் காட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக வழி போக்கன் சொன்னதை நம்பி பயந்து ஜார்ஜியாவிற்கு கடுமையான காய்ச்சல்.

டாக்டரிடம் சென்று காண்பிக்க ஊர் மக்கள் உதவினாலும் ஊசிக்கு பயந்து ஜார்ஜியா ஒடுவதும் நகைச்சுவையாய் காட்சிகள்.


இதனிடையே இரு வீட்டாரும் போலிஸில் புகார் கொடுக்க இரு குடும்பமும் ஒத்துழைத்தால் மட்டுமே குழந்தைகளை மீட்க முடியும் என்கிறார் அதிகாரி. சண்டையிட்டு கொண்டிருந்த இருவரின் குடும்பம் சிறிது சிறிதாய் நட்பாகி ஒருவருகொருவர் ஆறுதலாய் இருந்து வர குழந்தைகள் இருவரும் ஒரு பக்கம் போலிஸ் துரத்திலில் இருந்தும் மறைந்து மறைந்து ஒடுவதும் பல புதிய மனிதர்களை சந்திப்பதுடன் ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுக்க் பல வித அனுபவத்தையும் புத்துணர்வையும் அளிக்கிறது.

ஒரிடத்தில் தவறுதலாய் விட்டு சென்ற ஜார்ஜியாவின் கைப்பையை வைத்து போலிஸ் அவர்களின் இருப்பிடம் தெரிவிக்க இரு குடும்பமும் குழந்தைகளை தேடி புறப்படுகின்றனர்.

கடைசியில் மலை குகைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவனின் துணையோடு மாலுவின் தந்தையிருக்குமிடத்தை சென்றடைந்து விடுகின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

அதற்கு முன் அங்கு வந்த் சேர்ந்த மாலுவின் தாயும் ஜார்ஜியாவின் பெற்றோர்களும் குழந்தைகளை கண்ட அனைவரும் முதலில் சந்தோஷத்திலும் பரவசத்தில் திளைத்தாலும் சிறிது நேரத்தில் யார் மீது குற்றம் என்று சண்டை பிடிக்க தொடங்கியவுடன் அருகே இருக்கும் கடற்கரையை பார்த்ததும் எதையும் பொருட்படுத்தாது அளவில்லா ஆனந்தத்துடன் விளையாட செல்கின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

தூரத்தில் பெற்றோர்கள் சண்டையிட மணலில் குழந்தைகள் விளையாட அற்புத காட்சியாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.


2005ல் வெளியான இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் பங்கு பெற்றதுடன் 34 உலக விருதுகளை வாரி குவித்துள்ளது. 2005 கேன்ஸ் குழந்தைகள் சர்வதேச விழாவில் முதன் முதலில் பரிசு பெற்ற கியூபா திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. இயல்பான நடிப்பும் அருமையான ஒளிபதிவும் கூடுதல் சிறப்பு.

வானொலியில் காணாமல் போனவர்களின் பற்றிய அறிவிப்பை கேட்டவுடன் ஜார்ஜியா பெண் வேடமிட்டு திரிவதும், வழி நெடுகிலும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பொய்யுரைப்பதும் பிறகு மாட்டி கொண்டு முழிப்பதும் சிறு சிறு சண்டையிடுவதும் மீண்டும் நட்பாவதும் இயல்பான நகைச்சுவையுடன் நெகிழ வைக்கும் காட்சிகள்.

இத்திரைப்பட்த்தை எழுதி இயக்கியிருப்பவர் கியூபா திரைப்பட துறையில் மிகவும் போற்றதக்க Juan Carlos Cremata. இவர் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் இயக்கிய அனுபவம் பெற்றவர். இயக்குநர் மற்றும் எடிட்டிங் பயிற்ச்சி பள்ளியில் ஆசிரியராகவும் இருந்து பல மாணவர்களுக்கு பயிற்ச்சியும் அளித்துள்ளார்.


குழந்தைகளை பற்றிய இத்திரைப்படம் பார்பவர் அனைவருக்கும் தமது பாலர் பருவத்தை கிளர செய்யும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளுடனும் குடுமபத்துடனும் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்.


பார்க்க டிரைலர் இங்கே

குழந்தைகள் குறித்த எந்தவித சிந்தனையில்லாமல் சென்னை போன்ற பெரு நகரங்களில் அவசர உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய புத்தகப்பைக்களுக்குள் அவர்கள் நசுங்கி கிடப்பதும் சதாராணமான நிகழ்வுகள். இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட தெருக்களில் விளையாடும் பிள்ளைகளை பார்க்க முடிவதில்லை.


நமது சிறு வயதில் நூற்றுகணக்கான விளையாட்டுகளில் உலகம் விரிந்து கிடந்ததை நினைத்து சந்தோஷப்படும் வேளையில் “தொலைக்காட்சி” பூதம் அந்த விளையாட்டுகளையெல்லாம் விழுங்கி விட்டதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடிவதில்லை.



முன்பே சொல்லியிருப்பது போல அவ்வளவு சுலபமான வேலையல்ல
இது. கஷ்டமென்றும் சொல்லிவிட முடியாது. நல்ல திட்டமிடல்
பிள்ளை வளர்ப்பிற்க்கு மிக அவசியம்.

பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த பின்
பிராகரஸ் ரிப்போர்ட் வாங்கவோ அல்லது பிரச்சனை இருந்தாலோதான்
செல்வார்கள். நானும் கூட ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன்.
ஒரு முறை என் மகனை சக மாணவர்கள் கிண்டல் செய்வது
மட்டுமல்லாமல் நெஞ்சில் மிதித்து எல்லாம் செய்த உடன்
பொங்கி எழுந்து பிரின்சிபலிடம் முறையிட்டேன். அந்தப்
பையனின் பெற்றோரை அழைத்து பேசி ஒரு வாரம் அந்தப்
பையனை சஸ்பெண்ட் செய்தனர்.


விஷயம் அறிந்த தெரிந்த பெண் வம்பு செய்யும் பிள்ளையிடம்
போய் பேசிப்பார் அப்போதுதான் பிரச்சனையை தீர்க்க முடியும்
என்றார். இது எவ்வளவு தூரம் சாத்தியமென்று விட்டு விட்டேன்.

இந்தியா வந்த பிறகு எங்கள் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு
பையன் மகனுடம் ஒரே பள்ளியில் படிக்கிறான். இருவரும்
ஒரே வேனில் செல்கிறார்கள். ஆனால் அந்தப் பையன் கொஞ்சம்
முரட்டுத்தனமாக ஆஷிஷிடம் நடந்து கொள்வானாம்.
ஏதாவது பேசினால் அப்பார்ட்மெண்டில் இருக்கும் கொஞ்சம்
குண்டான இன்னொரு பையனிடம் சொல்லி இவனை
அடிக்க போவதாகவும் மிரட்டினான்.

அவனின் அம்மா தெரிந்தவர்கள். நட்பை இழக்கவும்
விருப்பமில்லை. அந்தப் பையனின் அம்மாவுக்குச் சொன்னால்
பிரச்சனை பெரிதாகலாம். எனவே அந்தப் பையன் கீழே
விளையாடும்போது தனியாக சென்று அவனிடம் பேசினேன்.
ஹாய் என்று ஆரம்பித்தேன்.

ஆஷிஷ் இங்கே புதியவன். வந்தவர்களை வரவேற்பது நம்
பண்பாடு. அவனை விட மூத்தவனான நீ அவனை
பாதுகாப்பதை விட்டு அவனுடம் இப்படி தேவையில்லாமல்
சண்டை போடலாமா? ஆஷிஷ் உண்ணை துன்புறுத்தினால்
என்னிடம் சொல் என்றேன்.

”அப்படில்லாம் இல்லை ஆண்டி, ஹீ இஸ் எ நைஸ் பாய்.
நான் தான் உடனிருக்கும் மாணவர்கள் தூண்டுதலால்
தவறாக நடந்து கொண்டேன். இனி நாங்கள் இருவரும்
ஃப்ரெண்ட்ஸ்” என்றான். நல்லவேளை நீங்கள் என் அம்மாவிடம்
சொல்லவில்லை என்று சொன்ன பிள்ளையை கை குலுக்கி
நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.

இப்போது வரை எந்தப் பிரச்சனையையும் இல்லை.

பிள்ளையை பள்ளியில் சேர்த்த பின் நாம் அடிக்கடி
பள்ளிக்கு சென்று வர வேண்டும். ஏன்???

அடுத்த பதிவில் அதுதானே!!!!

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்