பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பள்ளி செல்வதற்கு முன், பள்ளி செல்ல ஆரம்பித்த பின்
என பிள்ளையின் வளர்ச்சியை எடுத்து பார்த்தால்
கணிசமான வித்யாசம் தெரியும்.

பல நல்லவைகளையும், சில கெட்டவைகளையும்
கற்றுக்கொண்டிருப்பது புரியும். இது யார் சொல்லிக்
கொடுத்து வந்தது. சுற்றி இருப்பவர்கள்.
சமுதாயம் கற்றுத் தந்தது. அதனாலேயே
ஆரோக்கியமான சமுதாயத்தில் பிள்ளைகள்
வளர வேண்டும்.

இந்த மாற்றத்தை நாம் ஒன்றும் செய்ய இயலாது.
இது தன்னிச்சையாக நடப்பது.

அப்படி என்ன பெரிய்ய மாற்றம் வந்துவிடும்
என்று கேட்கிறீர்களா??

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

20 வயது பெண் தனது உறவினர் வீட்டில்
தங்கி மேல் படிப்பு படிக்க சென்றாள்.

அந்த வீட்டு பிள்ளைகள் 4,6 வகுப்பில்
படிப்பவர்கள். தன் தாய்க்கு உதவிக்கொண்டு,
தன் வேலையை தானே செய்து பழகிய
நல்ல குழந்தைகள். ஹாலில் டம்பளார் இருந்தால்
அதைக் கொண்டு வந்து சிங்கில் போட்டு வீட்டைச்
சுத்தமாக்க உதவும் இயல்பு, நல்ல விதமாக
பிள்ளைகளை வளர்த்திருந்தார் அந்தத் தாய்.

அந்தப் பெண் வந்து தங்கியது முதல் மாற்றங்கள்.
இந்தப்பிள்ளைகள் படிப்பில் மந்தகித்து, தன்
வேலையைக்கூட செய்யாமல் இருக்க குழம்பிய
தாய் யோசித்து பார்த்ததில் மேல் படிப்பு
படிக்கும் காரணத்தைக்காட்டி புதிதாக வந்திருக்கும்
20 வயது பெண் வீட்டில் உதவுவதே இல்லை.
அவரின் உடைகள் எல்லாம் அலங்கோலமாக
கிடக்கும், படிப்பும் சரியாக படிக்காமல் எந்த
நேரமும் மொபைலில் பாட்டு கேட்டுகொண்டிருப்பதை
பார்த்து பிள்ளைகள் மாறிவிட்டார்கள்.

மகனின் பள்ளியில் அழைத்து பிள்ளையின்
படிப்பு குறித்தும், நடவடிக்கை மாற்றம் குறித்து
பேசும் பொழுதுதான் நிலமையின் தீவிரம் உணர்ந்து
அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்க்க வைத்து
தன் மக்களின் மனமாற்றத்தை போக்க வெகு
காலம் எடுத்தது!!!!


வீட்டை விட்டு வெளியே சென்று பலதரப்பட்ட
மக்களுடன் பள்ளியில் பழகித்தான் ஆகவேண்டும்.
என் மகன் கெட்டுவிடுவான் என நினைத்து
வீட்டுக்குள் முடக்கி வைக்க முடியாது.

என்ன தான் செய்வது??

அன்னை தெரசாவிடம் 4 மாணவர்கள் சென்று
தாங்களும் சேவை செய்ய விரும்புவதாகச் சொன்னார்களாம்.

ஏன் என்று கேட்க, “அவர்களுக்கு உதவ, அன்பு காட்ட”
என்றார்களாம்.

“உடனே அன்னை! அன்பு விதைப்பதை உன் வீட்டிலிருந்து
தொடங்கு!” என்று அனுப்பி வைத்தாராம்.

நாமும் நம் குழந்தைகளுக்கு நற்பண்பு, அன்பு ஆகியவற்றை

வீட்டில் விதைத்த அன்பு,நற்பண்புகள் வீதி முழுதும் விளைந்து,
ஏரியா, ஊர், மாநிலம், தேசம் என விரிந்தால் நல்லதொரு
சமுதாயம் அமையும். அப்படி பட்ட சமுதாயத்தில் வாழும்
பிள்ளைகள் நல்ல குடிமகன்களாக, சிறந்த பண்புடையவர்களாக
வளர்வார்கள்.

ஆரோக்கியமான,அழகான சமுதாயத்தை உருவாக்குவோம் வாருங்கள்.



வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.

காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று குழந்தைகளுக்கு விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...


அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.


அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.


பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.


சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.


சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.


எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.


உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.


எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.


எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
குழந்தைகள் மட்டுமல்ல அனைவரும் கடைபிடிக்க வேண்டியவையே.
நன்றி: வெப்துனியா

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

  • கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
  • அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
  • குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.
  • அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.
  • உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.
  • பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.
  • தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் குழந்தைளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது.
  • கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல (அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல "எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று மனம் இழக்க மாட்டார்கள் :))
  • டிவி மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.
  • கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம் பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும். இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள் முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்), தாய் தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதால், அவர்களை நல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை சொல்லுதல் அமையும்.
  • குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
  • உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.
  • கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள் (modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை / நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.

================
=======================================================



அதே போ குழந்தைகளையும் உங்களுக்கு கதை சொல்லச் சொல்லி, பொறுமையாய் கேளுங்கள்.

  • அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். (presentation skills)
  • தன்னம்பிக்கை வளரும்.
  • உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும்.
  • creativity, inventive thinking மற்றும் imagination வளரும்.
  • குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.
உதாரணத்திற்கு, என் பெண் தன் teddy bear (பிங்கி) மற்றும் நாய்க்குட்டி (மிட்டு) stuffed toy இரண்டையும் வைத்து ஒரு கதை சொல்லும் போது, அவள் ஸ்கூலில் (LKG) ஒரு பையன் மற்றவர்கள் பென்சிலை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருவது தெரிந்தது. பென்சில் ஒரு ரூபாய்தான். மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொலைத்து வருவது பிரச்சினையாகத் தெரியவில்லை அல்லது அந்த குழந்தைகளை திட்டி விட்டு வேறு பென்சில் வாங்கி தந்து வந்திருக்கிறார்கள் (நானும்தான்). பென்சிலை தினம் தினம் எடுத்துச் செல்லும் குழந்தையின் பெற்றோரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பழக்கம் தொடர்ந்தால், அவன் attitude தவறாக மாறிவிட ஏதுவாகும், என்பதால், class miss-ஸிடம் இதை கவனிக்குமாறு சொல்லி விட்டேன். அவர்கள் அக்குழந்தைக்கு தண்டனை ஏதும் தராமல், ஒரு அற்புதமான வழியில் இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். எப்படி தெரியுமா? அவனை class leader ஆக்கி, அனைவரது பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று தினமும் செக் பண்ணச் சொன்னார்கள். அப்படிச் சரியாக இருந்தால், அவன் பெயர் அன்று போர்டில் எழுதி, எல்லோரும் clap செய்வார்கள். நாளடைவில் அவன் self-esteem அதிகம் உள்ள சிறுவனாக ஆகிவிட்டான்.

====================================================

என்
பெண் மூன்று வயதிருக்கும் போது, கிட்டத் தட்ட அவள் வயதுக்குரிய எல்லா கதையும் தீர்ந்து போய் விட்டது. அன்று greedy farmer and the duck which laid the golden egg, என்ற கதை சொல்லிக்கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு "வாத்து பாவம் இல்ல" என்று அழுதே விட்டாள் குழந்தை. அப்போது, அவளை சமாதானப் படுத்த, கற்பனையாக நானே எடுத்துவிட்ட கதை.


மழை வந்த கதை
(
என் பெண் தர்ஷிணிக்காக நான் எழுதியது)

வாத்து ஒன்று குளத்திலே நீந்தி நீந்தி சென்றதாம்.
மாடு ஒன்று வந்து தாகத்தில் தண்ணீரெல்லாம் குடித்ததாம்.
குளத்தின் நீரும் குறைந்து போய்விட்டதாம்.

வாத்து மாடு கிட்ட போய்
`மாடே மாடே எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மரத்து கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து மரத்துக்கிட்ட போய்
`மரமே மரமே மாடு சொல்லிச்சு
எல்லாத் தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த கடல் கிட்ட
போய் கேளு' அப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து கடல் கிட்ட போய்
`கடலே கடலே மரம் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
கடல் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த சூரியன் கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து சூரியன் கிட்ட போய்
` சூரியன் சூரியன், கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
சூரியன் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மேகத்துக்கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து மேகத்துக்கிட்ட போய்

` மேகம் மேகம் சூரியன் சொல்லித்து, கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மேகம் அதுக்கு `அப்படியா? இதோ இப்பவே மழையை தரேன்அப்படீன்னு சொல்லித்தாம்.
மழை சோவெனப் பெய்தது. குளம் நிரம்பி, மாடு நனைந்து, மரம் எல்லாம் நனைந்து, கடலும் நிரம்பி, சூரியன் அந்த கடல் நீரை ஆவியாக்கி, மேகமாக ஆக்கியது. மீண்டும் மழை சோவெனப் பெய்தது. அந்த மகிழ்ச்சியுடன் நீந்திச் சென்றது.



.
.

இந்தக் கட்டுரை, என் அம்மா, பாட்டி போன்றவர் கூறியதை எல்லாம் குறித்து வைத்து கொண்டு, பின்பற்றிய என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. இதில் ஏதும் தவறு / சந்தேகம் / improvements / suggestions இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

குழந்தையின் மூன்றாம் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதத்திருக்கும் உண்டான குறிப்புக்களை தருகிறேன். இன்று ஒன்று முதல் ஆறு மாதம் வரையான பேணும் முறைகள். இது ஓரளவுக்கு guideline என்றே எடுத்துக்கொள்ளவும்.

அந்தந்த ஊரின் தட்பவெட்பம், மற்றும் குழந்தையின் உடல் நலம், தாயின் instinct (உள்ளுணர்வு) போன்றவை குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
==============================
மூன்று மாதம் முதல் ஐந்து வயது வரை, குழந்தை சரியான ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் பெறுமாறு கவனித்துப் பேணுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகிறது. இதனால் குழந்தை சரியான படி வளர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதில்தானே நமக்கும் peace of mind கிடைக்கிறது. குழந்தைகள் அதிகம் நோயுராமல் இருந்தாலே அவர்கள் நன்கு வளர்வார்கள்.

அதற்காக ஜுரம், ஜலதோஷம் கூட வராமலோ, பல் முளைக்கும் போது dysentry ஆவதையோ நம்மால் தடுக்க முடியாது. அது இயற்கை. இதனால் நோய் எதிர்ப்பு குழந்தையின் உடலில் அதிகரிக்கும். குழந்தைக்கு இந்தமாதிரி நேரங்களில் உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனைக்கு தக்கவாறு மருத்துவம் கொடுத்தால், மீண்டும் பழையபடி ஆரோக்கியம் அடைவார்கள்.

ஆறு மாதம் வரை போட்டால் போட்டபடியே கிடக்கிறதே குழந்தை என்று அலட்சியமாக நினைக்க முடியாது. அதே போல குழந்தைதானே என்று நினைத்து, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு முன் இஷ்டப்படி நடந்து கொள்வது அதன் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.

குடும்ப சூழ்நிலை, தாயின் மனநிலை முதல் தட்பவெட்பம் வரை ஒவ்வொரு விஷயமும் குழந்தை தாயின் வயிற்றில் உருவானதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும், குழந்தைகளைப் பாதிக்கிறது. இதற்கு தீர்வுல்கள் பலவாக இருந்தாலும், இன்று மிகக் குறைவான செலவிலேயே, சாதாரண இந்திய குடும்பத்தில் வழக்கமாக இருக்கும் உணவுப் பழக்கங்களை பின்பற்றியே, அதை ஒழுங்கு செய்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதைப் பார்க்கலாம்.

====================================
பிறந்த / கைக் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து அளிப்பது எப்படி?

  • தாய்ப்பால் மிக அவசியம். பிறந்த அன்றிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வயது வரை, முடிந்தால் இரண்டு வயது வரைக் கொடுப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திஅதிகமாகிறது. ஆரோக்கியம் நிறைந்த குழந்தையாக இருக்கிறது. பாலூட்டும் தாய், ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை, பூண்டு, மீன், கோதுமை அடிப்படையிலான உணவுகள், பால், தயிர், மோர் ஆகியவற்றை உண்பதால்அதிகம் பால் சுரக்கும். அரிசி, வாயு உண்டாகும், காய்கறிகள் (உருளை, சேனை போன்ற) மொச்சை, பயறு, பருப்பு வகைகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும், ஊறுகாய், உப்புகரிக்கும் பண்டங்கள் சாப்பிடாமல் இருப்பதாலும் பால் வற்றாமல் இருக்கும். பாலூட்டும்தாய் காரமான மற்றும் மாமிச வகை உணவுகள் அல்லது வாயு பதார்த்தங்களைசாப்பிடுவதால் குழந்தைக்கு ஆஸ்துமா, ஜலதோசம் போன்றவை ஏற்படுகிறது. குழந்தைக்குஜெரிக்கும் சக்தி (செரிமானம்) குறைந்து நாக்கு வெள்ளை படிந்து, மலஜலம் கழிப்பதிலும்அசௌகரியம் ஏற்படுகிறது. சரியான உணவு உண்பதால், தாயும் உடல் எடை அதிகரிக்காமல்பார்த்துக் கொள்ள முடியும். குழந்தைக்கு பத்து வயது வரை, செரிமானம் மற்றும் மல-ஜலம்கழிக்கும் பழக்கங்கள் சீராக இருந்தாலே, நோய் ஏற்படாமல் காக்க முடியும். "யாகாவாரயினும் நா காக்க" என்பது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.
  • குழந்தையை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணிக்குள், காலை வெய்யில் படுமாறு ஒரு அரை மணிநேரம் கிடத்தி வைக்கவும். அப்படி போடும் போது, உடம்பில் டாபர் லால் தேல் அல்லது ஆலிவ் / கடுகு / நல்லெண்ணெய் தடவி, தலை உச்சியிலும் தொப்புளிலும், பிறப்புறுப்பிலும் சிறிது விளக்கெண்ணை தடவி (சும்மா தொட்டு தடவினால் போதுமானது) நல்ல துவைத்த காட்டன் வேஷ்டி அல்லது மல் துணியை கீழே போட்டு அதன் மேல் போடவும். வெறும் தரையில் யாருமே படுக்கக் கூடாது. வெய்யிலில் இருப்பதால் வைட்டமின் டி கிடைக்கிறது. (குளிர் நாட்களிலும், மழை நாட்களிலும் விளக்கெண்ணை உபயோகிக்க வேண்டாம்).
  • குழந்தைக்கு nappy (huggies போன்றவை) உபயோகப்படுத்தினால், இரவில் மட்டுமேஉபயோகிக்கவும். குளிப்பாட்டிய பின் சிறிது நேரம் மல் துணியால் ஆனஜட்டி உபயோகிக்கவும். அல்லது இப்படத்தில் கொடுத்த படி தைத்துவைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும். இதனால் nappy rash வருவதை தவிர்க்கலாம்.
  • தினமும் குழந்தையைக் குளிப்பாட்டவும். குளிப்பாட்டிய உடனேயே நன்குநெஞ்சு/முதுகுபகுதிகளை உடனே துடைக்கவும். எப்போதும், முகத்திலும் தொப்புள் மற்றும்பிறப்புறுப்புப்பகுதிகளில் talcum powder போட வேண்டாம். அவசியம் என்றால் மட்டும், சிறிதுவிரலில்தொட்டு முகத்தில் தடவி விடவும். இதனால் சுவாசக் குழாயில் பவுடர் போவது தவிர்க்கலாம். சாயந்திர நேரங்களில் நல்ல சுத்தமான டர்கீ டவலை மிதமான வெந்நீரில் நனைத்துப் பிழிந்து உடலை நன்கு துடைத்து விடுங்கள்.
கைக் குழந்தையாக இருந்தாலும் அதுவும் ஒரு மனிதப் பிறவிதான். நம்மைப் போன்றே எல்லா உணர்வுகளும் நிறைந்தது. அதுக்கு ஒன்னும் தெரியாது என்று மட்டும் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்கள் உணர்வுகளை உங்கள் விரல்கள் (தொடுதல்) மூலம் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை குழந்தைகள்.

பொறுமை இல்லாத தாய்மார்கள் / creche / care takers / ஆயாக்களுக்கு - யாரும்தான் இப்போ பக்கத்தில இல்லையே.யாருக்குத் தெரியப் போகிறது என்று உங்கள் அலட்சியம், உங்களுக்கு சம்பளம் ஈட்டும் தொழிலுக்கு வஞ்சனை மட்டும் இல்லை, ஒரு குழந்தையின் அன்பையும், எதிர்காலத்தையும் shatter செய்து பார்க்கிறீர்கள். இதனால் இழப்பு கடைசியில் உங்களுக்குத்தான் என்பதையும் உணர்ந்து, குழந்தைக்காக செய்யும் சிறிய வேலையையும் முழு ஈடுபாடோடு செய்தால், நீங்கள் குழந்தையோடு அதிகம் போராட வேண்டியிருக்காது.

-----வித்யா

.

குழந்தைகளுக்கு முதல் வருடப் பிறப்பு கொண்டாடும் நாளன்றே, உங்கள் குழந்தையின் பல் மருத்துவருக்கும் ஒரு கேக் கொடுத்துவிட்டு, அப்படியே உங்கள் குழந்தையின் பல் குறித்த அவரது ஆலோசனையும் கேட்டு வாருங்கள்.

  • பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஆஸ்துமாவை விட ஐந்து மடங்கு அதிகமாகவும், இன்புளுயன்சா என்ற வைரஸ் தாக்குதலால் வரும் ஒருவித சுவாச மண்டலத்தை பாதிக்கும் காய்ச்சலான ப்ளூ ஜுரத்தை விட ஏழு மடங்கு அதிகமாகவும் பல் நோய்கள் வருவதாகத் தெரிகிறது.
  • முக்கியமாக, இரண்டு முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் பல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.







பற்கள்
சரியான முறையில் பாதுகாக்கப்படாததின் விளைவுகள்:
  • மோசமான பற்கள் இருப்பதால், அவர்களால் படிப்பில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல்போகலாம்.
  • அவர்கள் சிரிப்பது குறைந்து போகலாம். தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடும்.
  • சமூகத்தில் இலகுவாக பழகவியலாமல் போகலாம்.
  • பல் சீரமைப்பு சிகிச்சைக்கு மருத்துவச் செலவு மிகவும் அதிகம்.
  • மோசமான பல் பராமரிப்பு, சர்க்கரை நோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பல் நோய்கள் வராமல் எப்படி தடுக்கலாம்?

பற்களை தினமும் இருமுறை சுத்தம் செய்யுங்கள்.
  • பிறந்த குழந்தையாக (1 முதல் 9 மாதங்கள் வரை) இருந்தால் ஒரு நாளுக்கு இருமுறையேனும் ஓமம் வறுத்து பொடி செய்து, சிறிது உங்கள் ஆட்காட்டிவிரல்முனையில் தொட்டு கொண்டு ஈறுகளைத் துடைக்கவும். (ஓமம் உரைக்கும் (காரமாகஇருக்கும்)என்பதால், கவனமாக மிக மிக சிறிய அளவே எடுக்க வேண்டும்.)
  • ஒவ்வொரு முறை பால் அல்லது பானங்கள் ஏதும் குடித்த பிறகு வாயை நன்கு தண்ணீரால் துடையுங்கள்.
  • ஆறு மாதம் ஆன பிறகு, ஒரு பல் வரும். ஒரு அரிசி அளவே டூத் பேஸ்ட் எடுத்துக்கொண்டு, ஸாஃப்ட் டூத் பிரஷால் தேய்த்து விடவும். (இப்படித் தேய்க்கும் போதுகுழந்தையின் தலை உங்கள் மடியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்)
ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் பானங்களையே கொடுக்கவும்.
  • பாட்டில் பால், ஃபார்முலா பால் வகைகள் கொடுப்பதாக இருந்தால், கொடுத்து முடித்ததும், ஒன்றிரண்டு டேபிள்-ஸ்பூன் தண்ணீர் கொடுக்கவும்.
  • ஸ்நாக்ஸ் சாப்பிடும் வயது வந்ததும், சீஸ், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்ற உணவு வகைகளும், மென்று சாப்பிடக் கூடிய வகைகளையுமே தேர்ந்தெடுக்கவும்.
  • பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள், மிட்டாய்கள், கர்போனேட்டட் பானங்களை முற்றிலும் தவிர்க்கவும்.
  • ஜவ்வு போன்ற உணவுகளை (சுயிங் கம் போன்ற) மற்றும் உறிஞ்சி குடிக்கக் கூடிய பானங்கள் ஆகியவை இளவயதினருக்கு, பல் இன்னும் முழுமையாக உருவாகாமல் இருப்பதால், பற்சிதைவு ஏற்படலாம்.
  • சர்க்கரை சேர்க்காத, இனிப்பூட்டப் படாத பானங்கள், ஜூஸ், மற்றும் தண்ணீர் மட்டும் அடிக்கடி கொடுக்கவும்.
குழந்தையின் உதடுகளை அடிக்கடி தூக்கிப் பற்களை பரிசோதிக்கவும்.
  • குழந்தைகள் சீக்கிரம் வளர்ச்சியடைவது போலவே பற்களும் அதிவேகத்தில் வளரும்.
  • ஒவ்வொரு மாதமும் உங்கள் குழந்தையின் பற்கள் சரியான விதத்தில் வளருகிறதா என்று பரிசோதித்து பார்க்கவும்.
  • பற்சிதைவு பெரும்பாலும் ஈறுகளை ஒட்டிவாறு முன் பற்கள், அல்லது பின் பற்களில் தான் ஏற்படுகிறது.
  • வித்தியாசமான வெள்ளை நிறமோ, அல்லது பிரவுன் நிறமோ பற்களில் அல்லது ஈறுகளில் தென்பட்டால் உங்கள் பல் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
  • குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறும் போதே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும்.
  • இதற்கு முன்பே பற்களில் ஏதும் பிரச்சினைகள் தென்பட்டால் அப்போதே மருத்துவரிடம் காட்டித் தெளிவு படுத்திக் கொள்ளவும்.
மருத்துவப் பரிசோதனைகளின் போது:

ஒவ்வொரு முறை பல் மருத்துவரிடம் செல்லும் போதும்:

  • பற்கள், பல் வரிசை / அமைப்பு சரியானபடி வளர்ந்திருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொள்ளவும்
  • பற்சிதைவு இருக்கிறதா என்று தெளிவு படுத்திக் கொள்ளவும்
  • தினசரி பல் தேய்க்கும் முறைகள், மற்றும் டூத் பேஸ்ட் / பிரஷ் ஆகியவற்றைப் பற்றி மருத்துவரிடம் பேசவும்.
  • உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கம் பற்றி பேசவும்.
  • ப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா என்று கேட்டுக் கொள்ளவும்

இவை எல்லாவற்றுக்கும் மேலே, ஒரு பெற்றோராக நீங்களும், கை கழுவிய பின் சாப்பிடுவது, சாப்பிட்டபின் வாய் கொப்பளிப்பது, தினசரி இருமுறை பல் துலக்குவது போன்ற பழக்கங்களை கொண்டால், உங்களை பார்த்து, குழந்தைகளும் சீக்கிரம் இந்த நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வார்கள்.

.



சென்ற டிசம்பரில் நான் இந்தியா போன போது நல்ல மழைகாலம். ஊரில் வெள்ளம். அப்போது காலை அபி வழக்கமா பள்ளி போகும் போது சாப்பிட அடம். எனக்கு கோவம் வந்து லைட்டா திட்டினேன். உடனே அவளுக்கு நல்ல கோவம் வந்துவிட்டது. "சாப்பிட சொல்லி மாத்திரம் திட்டுறீங்க. ஆனா எனக்கு என்ன என்ன ஆசை இருக்கு தெரியுமா? அதை எல்லாம் கேட்டீங்களா ஒரு நாளாவது. நீங்களா கேஎட்[ஈங்கன்னு பார்த்தேன். ஒரு வார்த்தை கூட கேட்கலை நீங்க"ன்னு பொறிஞ்சு தள்ளீட்டா.


எனக்கு என் தப்பு அப்பதான் உறைத்தது.சிறு வயதில் இப்படியாக நினைத்தது உண்டு. அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக பல விஷயங்கள் நிராகரிக்க பட்டிருக்கின்றன. அதே நிலை என் பசங்களுக்கு வர கூடாது என அப்போதே நினைத்தேன். ஆனால் இப்படி அபி மனசுக்குள்ள இப்படி ஒரு ஆசைகள் இப்பதை கூட கண்டுக்காம இருந்து விட்டேனே என நினைத்து ஒரு பேப்பர் பேனாவை அவள் கையில் கொடுத்து "உனக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எல்லாம் எழுது" என்றான். அதை வாங்கிகிட்டு தன் ரூமிற்கு போய் விட்டா. பின்னே எழுதினாளா இல்லையா என தெரியாது. ஆட்டோ வந்தது பள்ளிக்கு போயிட்டா.


பின்னே பள்ளிக்கு எதிர் கடையில் இருந்து அவ அம்மாவுக்கு போன் செய்தா. அவளுடைய மேசை டிராயரில் அந்த லிஸ்ட் இருப்பதாக சொன்னா. நான் போய் அந்த லிஸ்ட் எடுத்து பார்த்தேன்.


1. லேடி பேர்டு சைக்கிள் (சிகப்பு கலர்)
2. என் யூனிபார்ம் அளவு தொட தொடனு இருக்கு. அம்மா இதை வைத்து இந்த வருஷத்தை ஓட்டு என்று சொல்லிட்டாங்க. அதனால வேற யூனிபார்ம் 2 செட். என சரியான அளவு சுடிதார் என் கப்போர்ட்ல் மேலேயே வச்சிருக்கேன்.
3. என் சைஸ் ஷூ (ஸ்போர்ட்ஸ் ஷு)
4. வெள்ளை கலர் சாக்ஸ் - 3 செட்
5. பியர்லெஸ் தியேட்டர் முறுக்கு 1 பாக்கெட்
6. தம்பிக்கு ஒரு நல்ல ஷூ வித் சாக்ஸ்(குளிருக்கு போடுவது போல)


என லிஸ்ட் இருந்தது. அப்போது காலை 8.30 குளித்து முடித்து சாப்பிட்டேன். ஒரு 9.30 மணிகு ஒரு குடையை எடுத்துகிட்டு, அள்வு சுடிதாரை ஒரு மஞ்சமையில் சுத்திகிட்டு நகரின் மழை நீரில் வேஷ்ட்டியை மடித்து கட்டி கொண்டு பெரிய ராஜன் தோட்டம் வழியாக முதலில் மணிகூண்டு காந்திஜி ரோட்டின் ஜெகந்நாதன் சைக்கிள் கம்பனிக்கு வந்தேன். அது தான் மயிலாடுதுறையில் பெரிய சைக்கிள் கம்பனி. ஷோ ரூமில் ஒரு சைக்கிள் லேடிபேர்டு சிகப்பு கலர் என்னை பார்த்து சிரித்தது. உள்ளே பலபேர் சைக்கிள் கோர்த்துகிட்டு இருந்தாங்க. என்ன விலைன்னு கேட்டேன். 3030 ரூபாய்ன்னு சொன்னார். சரி குடுங்கனு பணம் நீட்டினேன்.


இல்லப்பா அது கோர்த்து 6 மாசம் ஆகுது. வேற கோக்க சொல்றேன்ன்னு சொல்லி செந்தில் இங்க வாடான்னு கடை பையனை அழைத்தார். அந்த பையன் எங்க தெருதான். "வாங்க அண்ணே எப்ப வந்தீங்க. பாப்பாவுக்கு சைகிளா சூப்பரா கோர்த்து தறேன். அண்ணே எனக்கு ஒரு விசா அடிச்சு கூட்டிக்க கூடாதா" வழக்கமான 3 ம் கட்ட மக்களின் டயலாக். நான் கேட்டேன் "சரி பாஸ்போட் வச்சிருகியா" பட்டுன்னு பதில் வந்துச்சு "இல்லை நீங்க விசா அடிச்சுட்டு ஒரு போனை போடுங்க நான் திருச்சிக்கு போய் எடுத்துட்டு அந்த ஏற்போர்ட்ல இருந்து வந்துடுவேன் அண்ணே" எனக்கு பகுன்னு ஆகிடுச்சு.

சரி நான் கோர்த்து வைக்கிறேன். நீங்க எங்கயாவது போயிட்டு 1 மணி நேரம் கழிச்சு வாங்கன்னு சொன்னவுடன் எதிரே இருக்கும் சீமாட்டிக்கு போனேன். வாசலில் டைலர் மிஷினை துடைட்து கொண்டிருந்தார். அவரிடம் "அய்யா நான் உள்ளே போய் 2 செட் சுடிதார் துணி எடுத்து வருவேன் 1 மணி நேரத்தில் தைத்து தரமுடியுமா என கேட்க அவரு "2 மணி நேரம் ஆகும் தம்பின்னு சொல்லிட்டார். உள்ளே போய் பள்ளியின் பெயரை சொல்லி வாங்கிகிட்டு வந்து அளவு சுடிதாரையும் கொடுத்து விட்டு அங்கிருந்து 10 கடை தள்ளி இருக்கும் அப்சரா வந்தேன். அங்கே எல்லாரும் நல்ல பழக்கம் 30 வருஷ பழக்கம்.


அபிக்கு ஸ்போர்ட்ஸ் ஷு சாக்ஸ், தம்பிக்கு ஷூ எல்லாம் வாங்கிகிட்டு நேரா வண்டிகார தெரு நெரிசல் வழியா பியர்லெஸ் தியேட்டர் போய் முறுக்கு, கடலைமிட்டாய் வாங்கிகிட்டு (இத்தனைக்கு மழை நல்லா பெய்யுது) எல்லாம் நடராஜா சர்வீஸ் தான் திரும்ப தியேட்டரில் இருந்து கச்சேரி ரோடு வழியாக "பாண்டியன் சாமில் வந்து என் நண்பன் சங்கரிடம் 1 மணி நேரம் மொக்கை போட்ட பின் அவனே வண்டியிலே திரும்ப ஜெகந்நாதன் சைகிள் கடைல விட்டு போனான். தெரு பையன் என்பதீல் எக்ஸ்ராவா எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் போட்டிந்தான்.


எடுத்து கொண்டு வண்டிகாரதெரு மாரியம்மன் கோவில் பூக்கடையிலே அதுக்கு பொட்டு இட்டு, மாலை மாதிரு பூ போட்டு பூசை போட்டு விட்டு வந்து சுடிதாரை வாங்கிகிட்டு ஜெகஜோதியா வீட்டுக்கு வந்தேன். அப்போதும் மழை.


வந்து பெல் அடித்ததும் நட்டு தான் குடுகுடுன்னு ஓடி வந்தான். அந்த சைக்கிளை பார்த்ததும் அவன் அடைந்த சந்தோஷம் என்னால் எழுத வார்த்தை இல்லை. அபிக்கு 3 வயதா இருகும் போது ஒரு சைக்கிள் வாங்கி துபாயில் இருந்து வாங்கி குடுத்தேன். அது வாசலில் கட்டி போட்டிருப்பா. அவளின் இப்போதைய உயரத்துக்கு ஓட்ட முடியாது. அதிலே பலதடவை நட்டு ஏற முயன்று பல அடி பட்டிருக்கான். அதை "அய்க்கிள்"னு தான் சொலுவான். சரி அக்காவின் சைக்கிள அய்கிள்ன்னு சொல்றான் அப்படின்னு விட்டுட்டேன்.


இந்த புது சைக்கிளை பார்த்த உடனே "அய்க்கிள் அய்க்கிள்"ன்னு கத்திகிட்டே கிச்சன் போய் அவன் அம்மா புடவையை பிடிச்சு இழுத்து கிட்டு வந்து "அம்மா அய்ய்கிள் அய்க்கிள்"ன்னு காமிக்கிறான். கீழே புரண்டு விழுந்து சிரிக்கிறான். பெடலை வந்து சுத்துறான். சைக்கிளை வீட்டின் உள்ளே சாமிரூம் கிட்ட கொண்டு வந்து நிப்பாட்டி கிருஷ்ணா தலைமைல அங்க ஒரு பூஜை.
பின்னே அப்படியே அதை அலேக்காக தூக்கிகிட்டு மாடி ஏறினேன். நட்டுவும் தாவி தாவி ஏறுகிறான். மாடி ரூம்ல கொண்டு போய் வைக்கிறேன். பின்ன கிருஷ்ணா அந்த சுடிதார் ஷு எல்லாம் எடுத்து கொண்டு மேலே நட்டுவையும் தூக்கிகிட்ட்டு பின்னாலே வருது. எல்லாத்தையும் வைத்து ஒரு போர்வை போட்டு மூடினேன். பின்னே கீழே வந்து சாப்பிட்டு மதிய தூக்கம் போடும் போது 2 மணி. அபி 3 மணிக்கு வருவா. வந்தவுடன் அவ இரவு மாடிக்கு படிக்க போகும் போது ஆச்சர்ய படட்டும் என நினைத்தேன். அந்த மதிய தூக்கத்தின் போது நட்டுவும் தூளியிலே படுத்து தூங்கிடுவான். சரியா அபி ஆட்டோ நகர் முனைக்கு வரும் சத்தம் கேட்ட உடனே எழுந்து கேட்டுக்கு போய் அவ புத்தக மூடையை பிடித்து இழுத்து வந்து ஏகப்பட்ட கொஞ்சல் நடக்கும் அவன் அக்கா கிட்ட.


ஆனா அன்று தூங்கவே இல்லை கேட்டை பிடிச்சுகிட்டே நிக்கிறான். உள்ளே வர மாட்டேன்னு அடம். அபி வந்தா அவ்வளவுதான். அவன் ரியாக்ஷன் இப்பவும் என் மனசிலே வீடியோவா ஓடுது. வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவ புத்தக மூட்டையை சட்டை பண்ணலை அபியை இழுத்துகிட்டு மாடிகு இழுக்குறான். அக்கா அய்க்கிள் அய்க்கிள்னு சத்தம் வேற. தவ்வி தவ்வி ஏறுறான். பின்னாலயே அபியும் ஏறுறா. அந்த கண்கொள்ளா காட்சியை காண நானும் கிருஷ்ணாவும் மேலே போனோம்.
அங்கே போய் அந்த போர்வையை இழுத்து அக்கா அய்க்கிள் ன்னு புரண்டு புரண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான். (இதான் விழுந்து விழுந்து சிரிப்பதா). நான் அப்படியே அபி ரியாக்ஷனை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன். "போய் பாரும்மா" என கிருஷ்ணா சொல்கிறது. காலை 1 ஸ்டெப் எடுத்து முன்னே வைக்கிறாள். பின்னே பின்னால் இழுத்து கொண்டாள். என்னிடம் பேசவில்லை. பின்னே அதை தொட கூட இல்லை. அப்படியே கீழே போய்விட்டாள். என் மீது கோவத்தில் இருக்காலாம்.


பின்பு மேலேயே போகலை. எப்போதும் இரவு படிக்க மாடிக்கு போவது கூட அன்று போகலை. சீக்கிரமே என் கூட படுத்துட்டா. நான் தூங்கிட்டேன். இரவு 11 மணிக்கு நான் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த போது அபி என்னை பார்த்துகிட்டு உட்காந்து இருந்தா அந்த இரவிலே. நான் முழித்து என்னம்மா னு கேட்டேன்.


"அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா"ன்னு சொல்லிட்டு கண்ணை கசக்க ஆரம்பிச்சுட்டா. நான் எழுந்து வாடா மாடிக்கு போய் சைக்கிளை பார்க்கலாம் என கூட்டி போனேன். ஆசை ஆசையா சைக்கிளை கட்டி பிடிச்சுகிட்டா. அப்பா சுடிதாரை போட்டு பார்க்கிறேன்ன்னு போட்டு பார்த்தா. ஷூ வை போட்டு பார்த்தா. கடலை மிட்டாய் சாப்பிட்டா, நட்டுவின் ஷூவை எடுத்துகிட்டு தூங்கிகிட்டு இருந்த நட்டுக்குக்கு போட்டு அழகு பார்த்தா. அப்பா இப்பவே ஓட்டனும் போல இருக்குப்பா என சொல்லியது அந்த 11 மணிக்கு (இரவு) கீழீ இறக்கினேன். மழை விட்டு இருந்தது. நகரில் லைட் இல்லை. அவளை அழைச்சுகிட்டு ராஜேஸ்வரி நகர் (நல்ல ரோடும் லைட்டும் இருக்கும்) சைக்கிள் ஓட்டின்னா. அவளின் சந்தோஷத்தை விட நான் சந்தோஷ பட்டனா என்னை விட அவள் அதிகம் சந்தொஷ பட்ட்டாளா என பாலமன் ஆப்பையா பட்டி மன்றம் நடத்தினா கூட தீர்ப்பு சொல்ல முடியாது.


இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தைகள் ஆசைப்பட்ட நேரத்தில் வாங்கி கொடுங்க. இல்லாவிடில் அது அவர்கள் வாழ்க்கையில் தீராத வடுவாகவே ஆகி இருக்கும். பிறகாலத்தில் அவர்கள் சம்பாதிக்கும் போது நினைத்தா கூட அந்த விஷயங்களை நடத்தி கொள்ள முடியாது.
நான் அப்போதே சொன்னேன் "அபி உனக்கு எப்போது எது தேவையோ அதை கேட்டுவிடு. தயங்காதே."


10 நாள் முன்ன போன் செய்யும் போது "அப்பா நான் இனி ஆட்டோவிலே போகலை. எனக்கு ஆட்டோகாரர் எல்லா பசங்கலையும் இறக்கி விட்டு விட்டு கடைசியா தான் நம்ம நகர்க்கு வருது, அது போல காலை முதல் ஆளா என்னை எடுக்கிறார். கிட்ட தட்ட 2 மணி நேரம் எனக்கு ஆட்ட்டோ விலே போகுது. அதனால நான் சைக்கிள்ல போகிறேன்"
"சரி அப்படின்னு சொல்லிட்டேன். இப்ப அபி பள்ளிக்கு சைக்கிள்ல போறா சந்தோஷமா!


போட்டோ உபயம் கூகிள் இமேஜ் தேடல்

பேரண்ட்ஸ் கிளப்பில்
அப்பாக்கள் வலைப்பூ துவங்கி பிள்ளைவளர்த்தலில்
அவர்களும் தங்கள் பங்கினை வகிக்க, கருத்தினை

கூற வேண்டுமென கேட்டிருந்தேன்.

பதிவர் நண்பர் விஜய்கோபால்சாமி
அப்பாக்களுக்கான வலைப்பூவை ஆரம்பித்து
விட்டார்.


தந்தையர் வலைப்பூ

இந்த வலைத்தளத்தில் இணைந்து
கொள்ள விருப்பமுள்ளவர்கள்

dadsweblog@gmail.com என்ற முகவரிக்கு
மடலிட வேண்டுகிறேன்.

வாருங்கள். தாரைத் தப்பட்டைகள்
முழங்க அதிரடியாக ஆரம்பமாகட்டும்
தந்தையர் வலைப்பூ.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்