பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

முந்தைய பதிவுக்கு வாக்குப்பதிவு செய்து
தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துரையில் இடம் பெறச்
செய்தமைக்கு நன்றிகள் பல.

சென்ற பதிவில் சாதாரணமாக நாம் நினைக்கும் கணவன் மனைவி
சண்டை இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதே
என்று பயப்படுகிறீர்களா???

எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம் கையில்தான்.
அப்படின்னு சொல்லியிருந்தேன்.

தீர்வுகளைப் பார்ப்போமா!!

தலைப்பே சொல்லிடுமே. ஆம் காதல்,
அன்பு அதுதான் சரியானத் தீர்வு.
கணவன், மனைவி பரஸ்பரம்
அன்பை பொழிவதைத் தவிர
வேறு வழி இல்லை.




குழந்தையை அந்த அன்பின் பரிசாக
பாருங்கள். அப்போது அன்பு புரியும்.

மிருதுவான குழந்தைகளின் மனதை
மிருதுவாகவே இருக்க என்னென்ன செய்ய
முடியுமோ அத்தனையும் செய்ய வேண்டும்.
குழந்தைப் பருவம் வந்ததும் தெரியாமல்
போனதும் தெரியாமலிருந்தால் மனச்சுமை
அதிகமாகும்.

சின்னக்குழந்தைக்கு மென்மையாகச் சொல்லி
புரிய வைக்க வேண்டும்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் குழந்தைகள்
எதிரில் சண்டையிடுவது கூடாது.தன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டு, நிலைமையை
சமாளிக்க வேண்டும். பிறகு தனி்யாக
அறையில் வைத்துக்கொள்ளலாம் கச்சேரியை.



முடிந்த மட்டில் நம் மன்ச்சோர்வை பிள்ளைகளிடம்
காட்டாமல் இருத்தல் நலம். கணவன் மீதிருக்கும்
கோபத்தை மனைவி பிள்ளையின் காட்டினால்
எப்படி இருக்கும்?? பாவம் குழந்தை.

திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து
கணவன் - மனைவியாகி பிறகு
குழந்தையை பெற்றெடுத்து பெற்றோராவது
மிகப்பெரிய பொறுப்பான விசயம்.

குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது
என்பது அறியக்கலை.

பிரச்சனை எல்லையை மீறுவதாக உணர்ந்தால்
நல்ல மனோதத்துவ நிபுணரை அனுகி
கலந்தாலோசித்தல் நலம்.

நம் நாட்டில் இருக்கும் தவறான எண்ணம்
பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும்.
உடல்நிலை சரியில்லாமல் போனால்
எப்படி மருத்துவரை சென்று பார்க்கிறோமோ
அப்படியே மனநிலையும். Psychiatrist
என்பவர் மனநல மருத்துவர்.

உடல்நலம் போலவே மனநலவும் ஒருவரின்
இயல்பான, சந்தோஷமான வாழ்க்கைக்கு
அவசியம்.

பைத்திய நிலையை அடைந்த வர்களும்
மனதால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களுக்கு
வைத்தியம் தருகிறார் என்பதற்காக
Psychiatrist அதாவது மனநல மருத்துவரிடம்
செல்வது தவறானது, தன்னைப் பற்றி
தவறான அபிப்ராயம் வந்து விடும் என்று
நினைப்பது தவறு.

தேவையான நேரத்தில் கவுன்சிலிங்
எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர்
குற்றம் சொல்வதை நிறுத்தி பிரச்சனையைத்
தீர்ப்பது எப்படி என்று பார்க்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் ஒழுங்காக
சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்க்கையை
நடத்த இயலாத குற்றத்தின் சுமையை
குழந்தையின் மேல் போடுவது எந்த
விதத்திலும் நியாயமில்லை.


பட்டர்ஃபிளை சூர்யா அவர்களின் இந்தப்
பதிவை கட்டாயம் படியுங்கள்.


கணவன் மனைவி உறவும் குழந்தை
வளர்ப்பும்
இதுவும் படிக்க வேண்டிய ஒன்று



இந்தப் பதிவுக்கு மறக்காமல் தங்களின்
வாக்கைப் பதிந்து செல்லுங்கள்.

தமிலீஷ்


நன்றி

திருமண உறவில் வி்ரிசல் ஏற்பட்டால் அதன் பாதிப்பு
கணவன் மனைவியை விட அவர்களின் குழந்தைக்குத்தான்.

கணவன் மனைவி இருவரும் பிள்ளையின் எதிரில்
சண்டை போடுவது பிள்ளைகளின் மனத்தில் காயத்தை
உண்டாக்கும். இதைப் பார்த்து வளர்ந்த குழந்தைகள்
மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். அவர்களை எப்போதும்
ஒரு சோகம் வாட்டிக்கொண்டே இருக்கும்.



இந்த சூழ்நிலையில் வளரும் சில குழந்தைகள் மூர்க்கத்தன
குணம் உடையவர்களாக இருப்பார்கள். சிலரோ
உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் தன்னுள்ளே
வைத்து வளர்வார்கள். இந்த இரண்டு நி்லையும்
ஆரோக்கியமானதல்ல என்பது வேதனைக்குறிய
விசயம்.



சந்தோஷமான தாம்பத்யம் இல்லாத தம்பதிகளினால்
பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை பார்ப்போம்:

1. பெற்றவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து
மனம் வெதும்பி போயிருக்கும் பிள்ளைகள் அவர்களை
மதிக்க மாட்டார்கள். இதனால் சொற்பேச்சு கேளாமல்
போய்விடுவார்கள்.

2. தனிமையை விரும்பும் குழந்தைகளாகி விடுவார்கள்.
கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்ப்பார்கள். இதனால்
வளர்ந்த பிறகு தனது வேலையில் கூட சரியாக
கவனிக்க முடியாமல் போகும்.



3. பெற்றோர்களின் சண்டைகள், வாக்குவாதங்கள்
பார்த்து பார்த்து தனக்கு யாருமில்லை, தானொரு
அனாதை எனும் எண்ணங்கள் வளர வாய்ப்பிருக்கிறது.

4.புரிந்து கொள்ள முடியாத கலக்கம், மனவருத்தம்,
பயம் அவர்களை ஆட்கொள்கிறது.

5. பார்க்க சந்தோஷமாக இருந்தாலும் உள்ளுக்குள்
வருத்தம், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும்,
தனது நிலையை அடுத்தவர்களுடன் பகிர்ந்து
கொள்ள தயங்கும் மனோபாவம் உடையவர்களாக
வளர்கிறார்கள்.



6. படிப்பில் மந்தமாகும். விளையாட்டு போன்ற
மற்ற விடயங்களை கற்கும் மனநிலை இருக்காது.

7. சி்றந்த திறமைசாலியாக இருந்தும் கூட
வாழ்வில் முன்னேற முடியாமல் போகும்.

8. மற்ற குழந்தைகளை துன்புறுத்தி,
கேலி, கிண்டல் செய்து அழவைத்துப் பார்க்கும்
மூர்க்கனாகி விடுவார்கள்.

9. பொறுமை என்பதே இல்லாமல் சிடுசிடுக்கும்
மனோபாவம் ஏற்படுகிறது.

10.தான் கேட்டது நடந்தே ஆகவேண்டும்,
என்ன ஆனாலும் சரி எனும் மனோ பாவம்
ஏற்பட்டு விடும்.(Demanding nature)

11.வீட்டை விட்டு வெளியே இருக்க
விரும்புவார்கள். தகாத சகவாசம் ஏற்படும்.

12. பெற்றோர்களின் சண்டைச் சச்சரவுகளைப்
பார்த்து பார்த்து குடும்பம்,உறவு ஆகியவற்றின்
மேல் வெறுப்பு ஏற்படுகிறது. அன்பு,நட்பு
ஆகிய உணர்ச்சிகள் ஏமாற்றாத்தைத்தான்
தரும் என தீவிர நம்பிக்கை கொள்வார்கள்.



13. சமுதாயத்தின் பார்வையில் இத்தைகய
குழ்ந்தைகள் கையாலாகதவர்கள், கர்வம் மிக்கவர்கள்,
பிடிவாதக்காரர்கள் என் பார்க்கப்படுகிறார்கள்.

இவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் காரணம்
இவர்கள் இல்லை. இவர்களின் குடும்ப அமைப்புதான்.

சாதாரணமாக நாம் நினைக்கும் கணவன் மனைவி
சண்டை இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதே
என்று பயப்படுகிறீர்களா???

எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம் கையில்தான்.
அதற்கான வழிமுறைகளுடன் அடுத்த பதிவில்
சந்திக்கிறேன்.(மதியம் 2 மணிக்கு வெளிவரும்)


அதுவரை இந்தப் பதிவுக்காக
தமிழ்மணம் மற்றும் தமிலீஷில் மறக்காமல்
ஓட்டு போட்டு பலரும் படிக்க உதவுங்கள்.

தமிலீஷ் லிங்க்.



பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரதநாடு என்றார் பாரதியார்.


ஆம்... விஞ்ஞான வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் அதிவேக முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் பாரத நாட்டை கண்டு பொறாமைப்படக் காரணம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ அல்ல.. நம் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும்தான்..

கூட்டுக்குடும்ப அமைப்பு, கணவன் மனைவி என்ற கண்ணியமான பந்தம், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைதான் அவர்களை ஈர்த்தது. அவர்களின் எந்திரமயமான வாழ்க்கை, நிலையற்ற குடும்ப அமைப்பு, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை ... இப்படி வாழ்ந்துவந்த அவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கை முறையை இந்திய கலாச்சாரத்தைப் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.


நம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.


கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டு இருக்கின்றன. பொருளாதாரத் தேவை நெருக்கடி, அவர்களின் வாழ்வை சீரழித்துக்கொண்டு இருக்கின்றது. கணவன், மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்த அவர்களின் இனிமையான வாழ்வு இன்று நீதிமன்றங்களின் வாசலில் காவல் காத்து நிற்கின்றது. இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்துள்ளது. குடும்ப நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 15 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல... நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்...ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி..திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்.. அதுமட்டுமின்றி,திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்...ஒருவரை ஒருவர் காதலித்து புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டவாகள் கூட இப்படி விவாகரத்து கோரி நீதி மன்றங்களின் வாசலில் நிற்கின்றனர்...


பத்திரிக்கை அடித்து மண்டபம் பிடித்து பெரும்பொருட்கள் செலவில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற திருமணங்கள் கூட இன்று விவாகரத்து கேட்டு நிற்கின்றன..


இப்படி பாரபட்சமின்றி அனைத்து வகையினரும் தங்கள் வாழ்க்கையில் இப்படிப் பட்ட முடிவு எடுக்க காரணம் என்ன..?திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள். அந்த சொர்க்கமான வாழ்வு இவர்களுக்கு நரகமானது ஏன்..?இந்த நிலை பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவி வருகின்றது.


ஆண் பெண் இருவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் விரைவாக முன்னேறிக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம்.அவர்கள் அதீத வளர்ச்சியின் இடையே அவர்கள் வாழ்வில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளால் அவர்களது வாழ்க்கை பெரும் வகையில் பாதிக்கப்படுவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.மண முறிவிற்கான அடிப்படைக் காரணம் ·


ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர் பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்ன பிரச்சனைகளால் சிதைந்து போகும்போது ஒருவருக் கொருவர் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர்.· சிலர் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத போது தங்கள் எண்ணப்படி விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த முடிவை எடுக்கின்றனர்.


ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. · கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது.


உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகின்றன. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் ஈகோ தன்மை வந்து தங்கள் பிரச்சனையை பெரியவர்களிடம் கூட கூறாமல் தங்களுக்குள்ளேயே பிரிவு என்று ஒரு முடிவை எடுக்கின்றனர்.


முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மீறிப்போனால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சேர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்பட்டால் அது குடும்பத்திற்கு இழுக்கு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று நிலைமையோ வேறு. இதற்கு கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமாகிறது.கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.


ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் அந்தரங்க விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.கணவன் மனைவி குடும்பத்தாரைப் பற்றியும், மனைவி கணவன் குடும்பத்தாரைப் பற்றியும் கிண்டலோ, தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அன்பாக, அனுசரணையாக ஒருவருக் கொருவர் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


கணவன் மனைவி ஒருநாளைக்கு நான்கு முறையாவது அன்பாக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தழுவும்போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதுடன் குதூகலத்துடன் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர்.கணவன் மனைவி உறவு என்பது உடலுறவு மட்டும் கிடையாது. அதற்கும் மேலாக பல விஷயங்கள் உள்ளன. உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் கலந்து பேசி அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.


கணவன் மனைவியிடையே அன்பு ஒன்று மட்டுமே இருந்தால் அந்த வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பு இருக்காது. சின்னச் சின்ன ஊடலும் கூடலும் தான் வாழ்வில் ரசனை சேர்க்கும். கணவன் மனைவி இருவரிடையே கோபம் வரலாம் ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. வெறுப்பு பிரிவை உண்டாக்கிவிடும். அவசர கதியில் தவறான முடிவைத் தேடும் தம்பதியரே..சற்று உங்களைச் சார்ந்தவரைகளையும் நினைத்துப் பாருங்கள்ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். அந்த குடும்பத்தில் பிறந்த மற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உங்கள் நடவடிக்கை ஒரு தடைக்கல்லாகக் கூட அமையலாம்..


வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்வையகம் இதுதானடா...


என்ற சினிமா பாடல் ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரைப் பற்றி அப்படி பொருள் சேர்த்தார் இப்படி பொருள் சேர்த்தார் என்று அவதூறாகப் பேசுவர்...சிறப்பாக வாழ்ந்தாலே இப்படியென்றால்..ஒருவர் வாழ்க்கை சீழிந்தால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்..உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்...


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒவையார். ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்த குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அணுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெற முடியாத அந்த குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும்...


அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்....அன்புக்கு ஏங்கும் அந்த குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூட வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்களே அழிக்கலாமா?


ஒருமுறைதான் பிறக்கின்றோம். எங்கோ பிறந்து நம்முடன் வாழ்வில் சேரும் துணையை அன்பாக அரவணைத்து இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்கலாம் அல்லவா?


வேண்டாமே... விவாகரத்து...



டிஸ்கி 1 : நன்றி நக்கீரன்.
டிஸ்கி 2 : சாப்ட்வேர் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் கம்பெனியில் வேலை பார்க்கும் அந்த பெண்ணுக்கும் ( Age: 23 )மிகப்பெரிய பல நாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்த பையனுக்கும் { Age: 27 } சென்ற வருடம் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நேற்று அந்த பெண் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தி கேட்டு துடித்து போனேன்.

ஒன்றரை வருடங்களாகிறது இந்த வலைப்பூவைத்துவங்கி.

பெற்றோர்கள் சேர்ந்து என்ன செய்யலாம் என்று
விவாதித்து, பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம்தான் இது.

எங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இது.

பதிவர் ஜமால் இந்த விருதை எங்கள் வலைப்பூவிற்கு
வழங்கியிருக்கிறார்.

நன்றி ஜமால்..



ஆறு பேருக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.
தொடர் பதிவு போல் தோன்றினாலும் ஊக்கமளிக்க
இதைவிட சிறந்த வழி வேறு ஏதுமில்லை என
நினைக்கிறேன்.

1. எண்ணங்கள் இனியவை என்று பதியும் ஜீவ்ஸ்.
இவர் கேமிரா கலைஞராக அறியப்படுபவர்.
இவர் ஆரம்பித்து வைத்ததுதான் தொடர்கதையாக
திருக்குறள் கதைகள். பேரண்ட்ஸ் கிளப் முகப்பில்
காணலாம் அந்தத் தொகுப்பை.

2. நாம் பார்த்த சினிமாவைப்பற்றி பதிவிடுவோம்.
சினிமா விமர்சனத்திற்காகவே ஒரு வலைப்பூவை
வைத்துக்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியாருக்கு
அடுத்த விருது.ஆங்கில படங்களுக்கு இவரது
விமர்சனம் அந்த படத்தை உடனடியாக
பார்த்துவிடமாட்டோமா என ஏங்க வைக்கும்.

3. இந்தக்குட்டிப்பொண்ணோட வலைப்பூவும் நல்லா
இருக்கும். நம்ப அருணாவோட மகள் வைஷ்ணவியின்

4. கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு இந்த விருது.
இவரைப்பற்றி சொல்லவே வேண்டாம். பூக்கடைக்கு
விளம்பரம் தேவையில்லை.

5.வலையுலகத்துக்கு ஒரு டீச்சர்னா அது துளசி டீச்சர்தான்
அவர்களுக்கு இந்த விருது.டீச்சரைப்பத்தி தெரியாதவங்க இல்லை.


6. வலைச்சரம். இது வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில்
குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
இதைத் துவக்கி வைத்த சிந்தாநதி தற்போது நம்மிடையே இல்லை.
வலைச்சரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமானவர்கள் பலர்.
வலைச்சரத்துக்கு இந்த விருது கண்டிப்பாய் மின்னும் மணிமகுடத்தில்
இன்னொரு கல்தான்.


வாழ்த்துக்கள்
பேரண்ட்ஸ் கிளப் சார்பாக
புதுகைத் தென்றல்

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா??

ஷேரிங்- பகிர்ந்துகொள்ளுதல் நல்லதாயிற்றே.
No sharing.. என்று சொல்கிறேனே என்று
பார்க்கிறீர்களா!!!

No sharing.. என்று சொல்வது படுக்கயறையை.

நாம் குழந்தை வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில்
இருந்தாலும் தனியாக படுக்க வைத்துக்கொள்ளாமல்
நம் அறையிலேயே படுக்க வைத்துக்கொள்வதுதான்
பழக்கம்.

அப்படி செய்வதனால் நாம் குழந்தைக்கு நன்மை ஏதும்
செய்துவிடவில்லை.. இதுதான் ஆச்சரியமான உண்மை.

சிறு குழந்தையாக இருக்கும்பொழுது சரி.
பால் கொடுக்க, இரவில் குழந்தை அழுமோ என்று
பயப்படும் வயதில் சரி.குழந்தை பெற்றோருடன்
தூங்குவதுதான் சிறந்தது.

வளர்ந்த குழந்தையும் உடன் படுக்க வைப்பதில்
பெற்றோர் குழந்தை இருவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்.

பிள்ளைகள் வளர வளர அவர்கள் படுக்கவென இடம்
தேவைப்படும். அந்தச் சூழலில் தாயோ/தந்தையோ
தனியே படுக்க வேண்டும். இது கணவன் - மனைவி
உறவில் சில சங்கடங்களை ஏற்படுத்தும்.

தவிரவும் தனியாக இருக்க குழந்தை பழக்கப்படுவதில்லை.


குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் நாமொன்றும்
இமாலய குற்றம் செய்துவிடவில்லை. தனித்துவமாக
இருக்க கற்றுக்கொடுக்கிறோம்.(developing a sense of
independence)

பெரியவர்கள் வீட்டில் இருந்தால் குழந்தைகள் அவர்களுடன்
படுக்க வைக்கலாம். இரண்டு தலைமுறைகளுக்கிடையே
இது ஒரு இணைப்பாகும். ஆனால் இப்போதெல்லாம்
தனிக்குடித்தனம் தான். இந்த நிலையில் எப்படி
குழந்தையை தனியாக படுக்க வைக்க பழக்குவது??!!!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது மிகப்பெரிய
வேலை. முழுமனதுடனும், விடாமுயற்சியுடனும்தான்
இதை செய்ய வேண்டும்.

இதைப்பற்றி குழந்தையிடம் நேரே பேசி அவர்களுக்கென
ஒரு அறை ஒதுக்கப்போவதாகவும், அது அவர்களுக்கேயான
ப்ரத்யேகமானதென்றும் சொல்லி அவர்களுக்குப்பிடித்த
பெட் ஸ்ப்ரெட்கள் போட்டு தனி மெத்தை என
நிறைய்ய..... பேசவேண்டும், செய்ய வேண்டும்.





1. இது தவறல்ல என முதலில் நம் மனதுக்கு
நாமே அடிக்கடி சொல்ல வேண்டும்.
ஏனென்றால் குழந்தை பக்கத்திலேயே இருந்து பழகிவிட்டிருக்கும்.

2. குழந்தை இரவில் எழுந்து வந்து கதவு தட்டலாம்.

3. இரட்டால் பயமாக இருப்பதாகவும்,அலமாரிக்குள்ளிருந்து
பூதம் வருவது போல் தோன்றுவதாகவும் குழந்தை
சொல்லும்.

4. பெற்றோரின் அன்பை இழப்பதாக நினைக்கலாம்.

5. தனி ரூம் கொடுத்து கட்டிலில் குழந்தையை போட்டு
கதவை சாத்திவிட்டு என் குழந்தை தனியே தூங்கக் கற்றுக்கொள்ளும்
என்று நினைபப்தை விட குழந்தையின் பயம்போக்க என்னென்ன
செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

6. இரவு விளக்கை ஒளிர விட்டு, அலமாரியின் கதவைத்
திறந்து வைப்பதால் அலமாரிக்குள் பூதம் ஒளிந்துகொள்ள
வாய்ப்பில்லை என்று சொல்ல வேண்டும்.

7. பக்தி/ஸ்லோகங்கள் புரியும் வயதென்றால் தைரியம்
வர ஸ்லோகம் சொல்ல வைக்கலாம்.

8. கார்ட்லெஸ் போன்/ மொபைல் ஒன்றை பக்கத்தில்
வைத்து தேவையென்றால் அழைக்கச் சொல்லலாம்.
குழந்தைகள் விளையாடும் வாக்கி டாக்கி கூட உபயோகிக்கலாம்.
(இரவில் தொந்திரவு செய்யாமல் தூங்கினால் காலையில்
பிள்ளைக்கு ஒரு சாக்லேட் கொடுக்கலாம்)

9. மேலை நாடுகளில் தாயின் ஆடைகொண்டு பூதம் போல்
செய்து அலமாரியில் வைத்து, தாயே பூதமாக தன்னை
காப்பதால் மற்ற பூதங்கள் வராது எனும் நம்பிக்கையை
தருவார்களாம்.

10. சில மாதங்களுக்கு பெற்றோரின் தூக்கம் தடை படும்.
குறைந்தது 6 முறை எழுப்புவார்கள். ”இந்தக் கொடுமைக்கு
பக்கத்திலேயே படுக்க வைத்துக்கொள்ளலாம்!!” என
தோன்றும். அப்படி செய்ய வைப்பதுதான் குழந்தையின்
முயற்சி. நீங்கள் இடம் கொடாமல் உங்கள் நோக்கத்தில்
குறியாக இருங்கள்.

11. ஒவ்வொரு முறை குழந்தை எழுந்து வரும் பொழுதும்
என்ன பிரச்சனை என கேட்பது அவசியம்.

12. குழந்தை தனியே படுப்பது அவரின் மெச்சூரிட்டியை
குறிப்பது என்றும் நீ பெரியவள்/ன் என்று சொல்வதனால்
கொஞ்சம் புரிதல் ஏற்படும்.

13. குழந்தையின் அறையில் கதை சொல்லி தூங்க
வைத்துவிட்டு வருதல் பலனளிக்கும்.

14. தனியாக படுப்பதை ஒரு தண்டனையாக்கக் கூடாது.

15. இரவு படுக்குமுன் பாத்ரூம் செல்ல வைக்க வேண்டும்.





16. பயப்படும் குழந்தைக்கு கையில் ஒரு பொம்மை
கொடுப்பதால் அந்த பொம்மையை பிடித்துக்கொண்டு
தூங்கப்பழகும்.

17. குழந்தை தனியே படுக்கத் துவங்கியதற்கு
பாராட்டு பத்திரம் வாசிக்க்ப்பட வேண்டும். இது
அவசியம். வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை
பொ்ங்க சொல்வதனால் குழந்தையும் பெருமையாக
உணரும். சில நாட்களில் தனது அறையை பெருமையாக
காட்டிக்கொள்ள விரும்புவாள்.

18. இப்ப படுத்துக்கோ!! அப்புறமா எங்க ரூம்ல, எங்ககூட
படுத்துக்கலாம் போன்றவைகள் தவறான அனுகுமுறை

19. நடு இரவில் கதவை தட்டி அறைக்குள் வந்து
படுக்கையில் படுத்து தூங்கும் குழந்தையை அவனது
அறையில் விட்டு படுக்க வைகக்வேண்டும்.
(இம்ம்புட்டு கஷ்டம் படணுமான்னு யோசிக்காதீங்க)

20. கொஞ்சம் பொறுமையாக அணுகினால் உங்கள்
குழந்தை தனியே படுத்துத் தூங்கும் பழக்கத்திற்கு
ஆளாக்கலாம்.




இன்று மணநாள் காணும் பட்டர்ஃபிளை சூர்யா
அவர்களையும் அவரது துணைவியாரையும்
பேரண்ட்ஸ் கிளப் சார்பில் வாழ்த்துகிறோம்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin



என்ன தான் கலாச்சாரம் மிக்க நாடு அப்படி இப்படின்னு எல்லாம் சொன்னாலும் நம்ம நாட்டுல தவறு நடக்காமல் இல்லை. நாம நம்ம கொழந்தைகளை பொத்தி பொத்தி வளத்தாலும் தவறுகள் நடந்தது கிட்டே தான் இருக்கு. சரி, நம்ம வூட்டு புள்ளைக்கு தப்பு எதுவும் நடக்கலை அவ்வளவு தானா. பக்கத்து வூட்டு புள்ளைக்கு எது நடந்தாலும் பரவா இல்லையா. இது போல எதிர் கேள்விகள் வந்திட்டே தான் இருக்கு.

இப்போ என்ன நடந்திச்சுன்னு இப்படி குதிக்கறே.

2005'இல் இருந்து 2007 வரை ஒரு ஆய்வு செய்யப்பட்டு, 'குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை' வெளியுட்டுள்ள 207 பக்க ஒரு அறிக்கையின் முடிவுகளை இங்கே தருகிறேன். நம்ம மக்களுக்கு ஒரு பக்க நல்ல பதிவை படிக்கவே கண்ணு கட்டும் இதுல நல்ல விடயத்தை பத்தியோ 207 பக்க அறிக்கைய படிங்கன்னு சொன்னா ஹி ஹி ஹி தான்.

கீழ வரும் செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த அறிக்கையில் இருந்து பெறப்பட்ட முடிவுகளும், அதனுடைய சாராம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.

இந்த ஆய்வுக்கான களத்தை பற்றிய பின்னனி. இது இந்தியாவில் 13 மாநிலங்களில் 12447 குழந்தைகள் மற்றும் 17220 ஏனையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுதப்பட்ட அறிக்கை. அனைத்து விதமான மத, இன, மொழி வாரியான குழந்தைகளும் பங்கு பெற்று உள்ளார்கள். ஆதலால் இதனுடைய முடிவை நாம் ஒரு நல்ல கணிப்பாக ஏற்க முடியும்.

1. Physical abuse (தமிழ்ச்சொல் தெரியவில்லை, அதுநாள் ஆங்கிலத்தில்)

அ. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதற்க்கு ஆளாகி உள்ளார்கள்.
ஆ. பிசிகல்லி abuse செய்யப்பட்ட 69 சதவிகித குழந்தைகளில் 54.68% ஆண் குழந்தைகள்.
இ. 50% மேலான குழந்தைகள் ஒன்று அல்லது மற்றொரு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஈ. குடும்ப சூழலில் பாதிக்க பட்ட குழந்தைகளில், 88.6% பெற்றோரால் பாதிக்க பட்டு உள்ளார்கள்.
உ. ௬௨% தண்டனைகள் அரசு பள்ளிகளை தரப்பட்டு உள்ளன.
ஊ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

2. Sexual abuse.

அ. 53.22% இந்த வகையில் பாதிக்க பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.
ஆ. தெருக்களில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை தொழிலில் ஈடு படும் மற்றும் காப்பங்களில் வளரும் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள்..
இ. 50% மேலான தவறுகள் மிகவும் நம்பகமான ஆட்களால் செய்யப்பட்டு உள்ளது.
ஈ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

3. Emotional abuse and Girl child neglect

அ. 83% பெற்றோரால் செய்யப்பட்டு உள்ளது.
ஆ. 48.4% பெண் குழந்தைகள் ஆண்களாக பிறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த அறிக்கையில் இதில் இருந்து மீள்வதற்கான ஒரு முக்கிய குறிப்பாக அவர்கள் கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரிடமும்.

இதில் கூறப்பட்டு உள்ள பல விடயங்களை படிக்கும் பொழுது, நெஞ்சு பதபதைக்கவே செய்கிறது. இது போல் ஒன்று இருப்பதாக இந்தியா இது வரை மறுத்தே வந்து உள்ளது. இதுவே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு.

நன்றி :
குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை.
'Save the children' அமைப்பு.
'PRAYAS' அமைப்பு
'UNICEF'

இந்த அறிக்கையை முழுவதும் படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே தரவிரக்கம் செய்யலாம். இதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு எதாவது தோன்றினால் இங்கே கூறவும்.

பயம் கலந்த நம்பிக்கையுடன்.
எஸ். கே.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்