பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.

குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.

(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)

சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம்.


நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக- கோதுமையின்
அடிப்படையில் தயாரிக்கப் படுகிறது.

நெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்டலாம்.

குழந்தை கூட்டி உண்ண பழகினால்தான் பிறகு திட ஆகாரம் உண்ணமுடியும்.

நெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்து , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்து கொடுக்கலாம்.

மசித்த உருளைக்கிழங்கு, பழவகைகள் மசித்துக் கொடுக்கலாம்.

இட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின்
வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.

உதாரணமாக ஒரு டைம்டேபிள் கொடுத்திருக்கிறேன். (இதன் குறிக்கோள் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவுக் கொடுப்பதுதான். )

காலை 5 மணீ - தாய்ப்பால்.

காலை 8. மணி- இட்லி அல்லது நெஸ்டம்

காலை 9.30 மணி - கொஞ்சம் பால்.

12.மணீ - கஞ்சி, நெஸ்டம்.

1.30 மணி - பால்

4 மணீ - பழ மசியல் + நெஸ்டம்/ செரிலாக் / பிஸ்கெட் பாலில் நனனத்தது.

6 மணி - தாய்ப்பால்

8மணி - திட ஆகாரம்.

இரவு 10.மணி - தாய்ப்பால்.

செரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவையே நாக்கிற்கு
பழக்கமாகிவிடும். நெஸ்டம் ரைஸில் பருப்புத் தண்ணீர், 9/10
மாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக உப்பு/காரம் பழக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை,
இறைச்சி ஆகியவையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்த வேண்டும்.

மிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்
குழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை
உட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.

குழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது
ஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண
பழக்க வேண்டும்.


(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது
தெரிகிறது)

கறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.

1. கேட்டதை செய்யுங்கள்
வாரத்தில் ஒரு நாள் தங்களால் இயன்ற நேரம் குழந்தையோடு செலவிடுங்கள். குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு விளையாடுதல், (அது உங்களுக்கு பிடிக்காட்டிக் கூட), கதை சொல்லுதல் போன்றவைகள் செய்யலாம்.

தங்களின் கவனத்தை வேறு எதிலும் சிதறாமல் அந்த நேரம் ப்ரத்யேயமாக குழந்தைக்கானதாக இருக்கட்டும்.

(பார்க்குக்கு கூட்டிகிட்டு போயிட்டு,"நீ விளையாடு, நான் இங்கதான்
இருக்கேன்", என்று சொல்லிவிட்டு போன் பேசக்கூடாது)


2. நான் இருக்கிறேன்.
குழந்தை வேறு ஏதோ காரணங்களால் மனவருத்ததில் இருந்தால்( அவங்களுக்கும் விருப்பு,வெறுப்பு, மன உளைச்சல் இதெல்லாம் உண்டு) "கட்டிப்பிடி" வைத்தியம் செய்து, செவிமடுத்திக் கேட்டு நான் இருக்கிறேன் என்று உணர்த்துங்கள். இருவரும் அருகாமையை உணர்வீர்கள்.

3. நோ ஃபைட்டிங் பிளீஸ்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், அது குழந்தைகள் முன் வேண்டாமே?. இந்தச் சண்டை குழந்தையின் மனதில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் மரியாதயை இழப்பீர்கள். அத்துடன் குழந்தையின் மனம் பாதுகாப்பு இல்லாதது போன்ற வெறுமையை உணரும்.

மீறி ஏற்பட்டால் குழந்தையிடம் "சாரி" சொல்லிவிடுங்கள்.
(அப்பால ரூம்ல கூட்டிகிட்டு போய் "பரேட்" நடத்திக்கோங்க)


5.தண்டிக்க ஓடாதீர்கள்
தவறு செய்வது மனித இயல்பு. எனவே
ஒரிருமுறை குழந்தை செய்யும் தவறை மன்னியுங்கள்.

குழந்தைகள் தவறு செய்யும்போது (misbehave) உடன் திட்டாமல் "செய்தது தவறு" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுங்கள். சிறிது நேரம் கழித்து தாங்கள் எதிர்பார்க்கும் "ஒழுங்கான நடவடிக்கைகளை" எடுத்துக் கூறும் ஒரு கலந்துரையாடலை குழந்தையுடன் நடத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம்

புதுகைத் தென்றல்.

GOLDEN RULES
1. Folded the bedsheet, Got ready to school without arguments and fussing! Had breakfast on time, washed your plates and cups! hurray u got 3 stars

2. Back home.If u have kept u r shoes and bags in proper place, washed bottle and tiffin box, went to bath! GREAT U GOT 2 STARS(Do't forget to dry your towel and switch of the lights.)

3. Lunch time: Eating without spilling, with table manners not talking during the meal time, finishing lunch on time, washing cups and tumblers after each meal & tea time U WILL GET 4 STARS

4. We are ready for the class: Getting ready for the extra curricular classes and after class if u have kept u r bag in cup board - U WILL GET 2 STARS

5. Study time: Hope u have noted down the class work in u r note book, Finished home work daily, revised the class work, no incomplete class works, spent study time only for studies U r eligible for 5 Stars

6. Getting ready: It's time to get ready for next day's school. Hope u have packed all ur books and notebooks, uniforms, shining shoes and socks u get 3 stars.

7. MAKING THE ROOM AND CUPBOARD TIDY Saturday/ Sunday make sure you have arranged your dress/books cupboard. Daily make sure you are keeping your ironed/FOLDED cloths into the cupboard properly.
இது மாதிரி பிரிண்ட் செய்து ஒரு 40 பக்கம் நோட்டில் ஒட்டிவிட்டேன். அன்றாடம் நோட்புக்கில் பாயிண்ட்கள் குறிக்கப்படும். (அவங்களா
புக்கை எடுத்துக்கிட்டு வரணும். இல்லன்னா அன்றைய பாயிண்ட் மொத்தமும் கட்டாகிடும்.) இதில் எதை செய்யத் தவறினாலும் பாயின்ட் கட்.
"காட்ல மழை s.v.sekar மாதிரி அங்க கட்டு, இங்க கட்டு ", என்று சொல்லி பாயின்ட் கட் செய்யப்படுவதால் ஒழுங்காக தங்கள் வேலையைத் தானே செய்கிறார்கள்.
மாதக் கடைசியில் சேர்ந்திருக்கும் பாயிண்ட்களூக்கு ஒவ்வொரு பாயிண்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் பாக்கெட் மணி கொடுக்கப்படும். அதை அனாவசியமாக செலவு செய்ய விடமாட்டேன்.
மேலும் அடிக்கடி தொலைக்கும், பென்சில், ரப்பர், பேனாக்களுக்காக பணம் தங்கள் பாக்கெட்மணியிலிருந்து கட்டாகும் என்பதால் தங்கள் சாமான்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
அண்ணனும் தங்கையும் பரஸ்பரம் birthdaygift, rakshabandhangift, diwaligifts ஆகியவை தங்கள் பாக்கெட் மணியிலிருந்து கொடுத்துக் கொள்வார்கள்.
இந்த ரூல்களால் எனக்கு அனாவசிய டென்ஷன்கள் இல்லை. இது என்
மகன் 2nd standard படிக்கும்பொழுதிலிருந்து நடைமுறையில் இருக்கிறது.
உங்களுக்கும் இது உதவலாம் என்ற எண்ணத்தில் இதை தந்துள்ளேன்.
அடுத்தமுறை "golden rules for toddlers " என்ற பதிவுடன் சந்திக்கிறேன்.
புதுகைத் தென்றல்

இப்பல்லாம் குழந்தைகள் சொல்லும் டயலாக்," நாங்க ரொம்ப பிஸி"

ஸ்கூல் தவிர பாட்டு, பரதம், அது இதுன்னு பிரதம மந்திரிய விட ரொம்ப பிஸி ஷெட்யூல் தான்.

இது நல்லதான்னு கேட்டா? யோசிக்காம இல்லைன்னே சொல்லலாம்.

"GIVE YOUR CHILD SOME TIME TO BE IDLE" அப்படிங்கற கட்டுரையை படிச்சேன்.

அதுல எழுத்தாளர் என்ன சொல்லியிருக்கார்னா!,

"பாவங்க இந்த குழந்தைங்க. எதையும் பொறுமையா ரசிக்க, பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து சந்தோஷப்பட, நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ, பூனைக்குட்டியோட விளையாட," இப்படி எந்த ரசனையும் இல்லாமலேப் போகுது அவங்க குழந்தைப் பருவம்.

"சும்மா" இருக்கவும் (Being idle) கத்துக்கொடுக்கணும் அப்படின்னு மனநல மருத்துவர்கள் சொல்றாங்க.

அப்பத்தான் குழந்தைகள் சின்னச் சின்ன சந்தோஷங்களின் இனிப்பை சுவைத்து மகிழ கத்துக்குவாங்களாம்.( பட்டாம்பூச்சி பிடிக்கிறது, இயற்கையை ரசிக்கிறது.......இப்படிச் சின்ன சின்ன சந்தோஷங்கள்). "தன்னைத் தான்" உணர்வதற்க்கு குழந்தைகல் கொஞ்ச நேரமாவது "சும்மா" இருக்கணும்".

எதுவும் செய்யாம கொஞ்ச நேரம் சும்மா இருப்பதனாலேயே அவர்களின் மூளை அதிகமாக உபயோகிக்கும் ஆற்றல் உடையவர்களாக ஆக சாத்தியம் இருக்காம்.

ஆகவே பெற்றோர்களே! குழந்தைகளை சும்மா இருக்க விடுங்க.

புதுகைத் தென்றல்.

காட்சி-1:

ஒரு கடையில் ஒரு பையன் உருண்டு உருண்டு அழுது கொண்டிருக்கிறான்.
அம்மா: அது போல் கார் ஏற்கனவே இருக்குடா..வேண்டாம்.
அப்பா: நாலு சாத்து சாத்துனா சரியாப் போயிரும்..(சாத்துகிறார்..)
பையன் இன்னும் உருண்டு கொண்டிருக்கவே, மனனவியை பில் பணம் கொடுக்கச் சொல்லிவிட்டுத் தர தரவென்று பையனை இழுத்துச் செல்கிறார்.

காட்சி-2:

மகள்: எனக்கு பெப்ஸி வேணும்..
அம்மா: ஏற்கனவே 2 தடவை குடிச்சாச்சுடா..இனிமே குடிக்கக் கூடாது..நான் தர மாட்டேன்.
மகள்: (ஓ வென்ற குரலில் ஓலம்..)
அப்பா: இப்பதான் ஆபீஸ்லருந்து வந்தேன்..அதுக்குள்ளயா..அங்கயும் தலைவலி.. இங்கயுமா..
குடுத்துத் தொலை பெப்ஸியை..
அம்மா: வீட்ல இருந்தா எனக்கு மட்டும் டென்ஷன் இல்லியா..நாள் முழுசும் நான்தானே பாத்துக்கிறேன்..எப்படி அடம் பண்ணுறா பாருங்க..நீங்கதான் இவ கத்தாமப் பாத்துக்கிறது...

காட்சி-3:

மகள்: எனக்கு இன்னொரு சாக்லேட் வேணும்..
அம்மா: சொன்னாக் கேளுடி..அவ்ளதான்..எத்தன சாக்லேட் சாப்பிடுறது?
மகள்: இன்னோண்ணு வேணும்..
அம்மா: (சாக்லேட் கொடுத்துக் கொண்டே) இரு. இரு. அப்பா வந்ததும் சொல்றேன்.

இந்தக் காட்சிகள் அநேகமாக எல்லாப் பெற்றோரும் பார்ப்பதுதான்..அனுபவிப்பதுதான். அரவணைப்பு என்ற பெயரில் அதிகச் செல்லம் கொடுத்துப் பின் அவஸ்தைப் படுதலென்பது அநேக பெற்றோர் எதிர்நோக்கும் ப்ரச்னை. அரவணைப்பு அவசியந்தான்..அதுதான் குழந்தையினுடைய நியாயமான ஆசைகளைச் சரியான நேரத்தில் தீர்த்து வைப்பது. விளையாட்டுப் பொருட்களோ, தின்பண்டங்களோ அளவுடன் வாங்கிக் கொடுப்பது அவசியம். புரியாத வயதில் பழக்கங்களைக் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள நாமே காரணமாயிருந்து விட்டுப் பின் குழந்தைகளை அடிப்பதில், நோவதில் என்ன பயன்?

செல்லம் இருவரும் கொடுக்கத்தான் வேண்டும் - சரியான அளவில்.அரவணைப்புக்கும்,
செல்லத்துக்கும் இருக்கும் இடைவெளியைச் சரிவரப் புரிந்து கொண்டு நடக்கும் பெற்றோருக்குக் குழந்தை வளர்ப்பதில் எந்தச் சிரமமும் இராது என்பது அனுபவம் கூறும் உண்மை.

காட்சி-1. எவ்வளவு தர்மசங்கடம் ஒரு பொது இடத்தில்!

காட்சி-2. குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம். கணவன் மனைவி சண்டை.

காட்சி-3. அப்பா பெயரைக் கூறித் தப்பிக்க நினைக்கும் அம்மா, ப்ரச்னையையிலிருந்து தான் விடுபட அப்பாவைப் பலிகடா ஆக்குகிறார். குழந்தைக்கு அப்பாவிடமிருக்கும் பயம் அம்மாவிடமில்லாமல் போகும். அப்பா நம்பியார் ஆகிவிடுவார்.

இது தவிர வேறு ப்ரச்னைகள்:

1. குழந்தைக்கு அடம் பிடித்தால் எதுவும் கிடைக்கும் என்ற போக்கு பழக்கமாகிவிடும்.
2. அப்பா அம்மா சண்டையில் குழந்தை குளிர் காயப் பழகிக் கொண்டு நினைத்ததைச் சாதிக்க முற்படும்.
3. அம்மா/அப்பா ஒருவரிடம் மற்றும் ஒட்டிக் கொண்டு மற்றவரிடம் பயம் வளர்த்துக் கொண்டு விலகிவிடும்.

இதைத் தவிர்க்க/குறைக்க சில டிப்ஸ்:

1. மாதம் ஒரு முறை குழந்தைக்கான விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் முறை. அல்லது அதே பட்ஜெட்டை இரண்டாகப் பிரித்துக் கொண்டு வாங்கிக் கொடுக்கும் முறை.

2. கடைக்குப் போகுமுன் இதுதான் வாங்கிக் கொடுக்கப் போகிறேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிக் கூட்டிச் செல்லுதல். வார்த்தையைக் கண்டிப்பாகச் செயலாற்றிக் காட்டுதல்.

3. பெப்ஸி, காபி, சாக்லேட் போன்றவற்றின் சுவையை மாற்றித் தருதல்.பெப்ஸியில் அவர்கள் அறியா வண்ணம் தண்ணீரைக் கலத்தல், அதிகக் காபித்தூள் போடுதல், சாக்லேட்டைக் குளிர்ப்பெட்டியில் வைக்காமல் வெளியே வைத்தல்..கொழ கொழவென்ற சாக்லேட் 3 வயது தாண்டிய குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பிடிக்காது. 3 வயதுக்கு முன் வேறு விளையாட்டுப் பொருள் அல்லது தின்பண்டங்கள் மூலம் திசை திருப்பலாம். (இது என் அனுபவத்தில் கண்ட வெற்றி.)

4. பாவம் பார்த்துப் பழக்கத்தை நாமே ஏற்படுத்திவிடக்கூடாது. அரவணைப்புக்கும் செல்லத்துக்கும் இடையே கண்டிப்பு என்ற பாலம் அவசியம்.

5. குழந்தைக்கு இருவரிடமும் பயமும் அன்பும் இருக்க வேண்டும்..அப்பா செல்லம், அம்மா செல்லம் என்று ஆரம்பத்தில் கூறும் நம் அறியாமை, நாளடைவில் யாரேனும் ஒருவரிடம் அனாவசிய பயத்தை உருவாக்கிவிடும்.

கஷ்டந்தான்..என்ன செய்வது? ஒவ்வொரு தலைமுறையும் மாறிவர வர, knowledge explosion சதவிகிதம் கூடுவதால் நாமும் புதிய புதிய உத்திகளை உருவாக்க வேண்டியுள்ளது.

மீண்டும் சந்திப்போம்.

இன்றைய சூழலில் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. பெண்கள் வேலைக்குச் செல்வது அத்தியாவசியமாகிறது.

Dr.DAVID MACE எனும் மேரேஜ் கொவுன்சிலர் கூறியிருப்பதாவது," இன்றைய புதிய சமுதாயத்தில் வேலைக்குச் செல்லும் மனைவியும் ஓர் அங்கமாகிவிட்டார். உலகம் முழுவதும் அதிக அளவில் பெண்கள் வேலைகளை ஏற்று பணிபுரிய துவங்கிவிட்டனர்.

இதனால் திருமண வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டா? என பார்த்தால், இது ஒவ்வொரு தம்பதிகளைப் சூழ்நிலையைப் பொறுத்து அமையலாம். அதை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அமையலாம். இதனால் உண்டாகும் பாதிப்பு கணவன் - மனைவி சம்பந்தப் பட்டது.

குழந்தைகளைப் பற்றி பார்த்தால் ஆம் என்றுதான் சொல்வேன். பெண்கள் வேலைக்குப் போவது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும். எப்படி? என்கிறீர்களா?

குழந்தையின் 5 வயதுவரை தாயின் அருகாமை, அன்பு, அரவனைப்பு, அது தரும் சுகம் ஆகியவை தான் அவன் வளர்ந்த்து எப்படி பட்ட மனிதனாகிறான் என்பதை தீர்மானிக்கின்றது.
இந்தக் காலக் கட்டத்தில் சிறிதளவேனும் குழந்தையின் மனதில் ஏற்படும் மனநல பாதிப்புக்கள் வருங்காலத்தில் பெரியவனாகும் போது தீவிரமாக பாதிப்பினை உண்டாக்குகிறது"

யோசிக்க வேண்டிய விஷயம் ?
உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறோம்..
புதுகைத் தென்றல்

குழந்தையின் வளர்ச்சிக் காலங்கள்.

பொதுவாக குழந்தைகயின் வளர்ச்சிக் காலங்கள் 3 ஆக பிரிக்கப்படுகிறது.

0-6 வயது வரை, 6-12 வயது வரை, 12-18வயது வரை ஆகும்.

முதல்நிலை வளர்ச்சி மிக வேகமாக ஏற்படும். முதல்பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது குழந்தையின் எடை, பிறந்தபொழுதில் இருந்ததைவிட 3 மடங்காக இருக்கும். அதன் பிறகு 6 வயது வரை எடை 10ல் 1 பாதிதான் எடை அதிகரிக்கும். (இது ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசப்படும்.

அதனால் இந்த முதல்நிலையில் அதாவது (0-6 வயது) குழந்தைகள் அதிக கவனத்துடன் வளர்க்கப்படவேண்டும். நல்ல உறக்கம், முழூ சமச்சீர் உணவு (புரதம் மற்றும் அனனத்துச் சத்துக்களும் நிறைந்ததாக இருக்கவேண்டும்.)ஆகியவை குழந்தையின் முழூ வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.

நோய்க்கிருமிகளின் தாக்குதல்களிருந்தும், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவை தாக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமானதாக இருக்கும். அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மொத்ததில் குழந்தைகளின் வாழ்க்கை இயல்பானதும், மிகுந்த சுறுசுறுப்புடனும், அதே சமயம் அதிக சோர்வளிக்காத வகையிலும், over-excitement ஆகாத வகையிலும் இருத்தல் நலம்.

இதுவும் ஒரு சின்ன அட்வைஸ் பதிவு. கண்டிப்பா பயமுறுத்த அல்ல. எங்க குட்டி இம்சைக்கு அம்மா வயிற்றில் இருக்கும் போது பாட்டு கேட்டு ஆட்டம் போட ரொம்ப பிடிக்கும்.

அவனுக்கு ரொம்ப பிடித்த பாட்டு தீப்பிடிக்க தீப்பிடிக்க .... இந்த பாட்டு போட்டா அவரோட ஆட்டம் எங்களால உணர முடியும், அதனால தினமும் இரவு ஒரு முறையாவது அந்த பாட்டுக்கு ஆட்டம் போடுவாரு.

அன்று Mar 21 2006 இரவு 10:30க்கு வழக்கம் போல பாட்டு போட்டு அவரோட ஆட்டத்தை ரசித்துகொண்டு இருந்தோம், ஆனால் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் ஆட்டம் அதிகமா இருந்தது. அன்று இரவு முழுக்க ஆட்டம் தொடர்ந்தது. காலை 4 மணிக்கு களைத்து போய் அய்யா ஆட்டத்தை நிறுத்திவிட்டார்.

நாங்கள் எதற்கும் ஒரு முறை செக் பண்ணலாம் என்று மருத்துவமனை சென்றோம், அப்போ தான் தெரிந்தது cord was around his neck and tight அதனால் தான் ஆட்டம் அதிகமா இருந்தது.

டாக்டர் சொன்னாங்க 30 வாரம் ஆனபிறகு குழந்தை movements அதிகம் இருக்கும் ஆனா அம்மா வயிற்றில் இடம் போதாது அதனால் இப்படி ஆக சான்ஸ் இருக்கு, நார்மலா அதுவா சரி ஆயிடும், ஆனா பெற்றோர்கள் குழந்தையின் movements track பண்ணுவது ரொம்ப நல்லது என்றார்.

இது போல குழந்தையின் ஆட்டம் அதிகம் இருந்தால்/குறைவா இருந்தால் உடனே டாக்டரிடம் கன்சல்ட் பண்ணுவது மிக மிக அவசியம்.

முடிவு சுபம் குட்டி பவன் Mar 22 2006 மாலை 4:10 க்கு பிறந்தார். இனிமே தான் குட்டி இம்சையின் ஆட்டம் ஆரம்பம்.

குழந்தையின் வளர்ச்சியும், பயிற்ச்சியும் தாயின் வயிற்றிலிருந்த்து தான் ஆரம்பம்.

நாம் அனைவருக்குமே நீச்சல் தெரியும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா? அது தான் உண்மை. 10 மாதக்காலம் தாயின்வயிற்றில் நாம் நீந்திக் கொண்டிருந்தோமே. அங்கே ஆரம்பிக்கிறது நம் நீச்சல் திறமை.

(வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் நாம் எல்லாவற்றையும் மறந்து, மாறிப் போகிறோம்.)

தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்கும் திறன், உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகியவை ஆரம்பம் ஆகிறது.

புராணத்தில் "பிரகலாதன்" தாயின்வயிற்றில் இருக்கும் போது நாராயணனைப் பற்றி நாரதர் சொல்லக் கேட்டுபிறகு சிறந்த விஷ்ணுபக்தனாக திகழ்ந்தான்.

இசைக் கேட்டு துள்ளும் குழந்தைகள் உண்டு. ( இம்சை அவர்கள் கூட தன் மகன் கருவில் இருக்கும் போது ஒரு பாடலைக் கேட்டு குழந்தை அதிகம் உதைத்து விளையாண்டதாக சொல்லியிருக்கிறார்.)

இதெல்லாம் நமக்கு சொல்லும் பாடம் என்ன? ஒரு பெண் கருவுற்றிற்கும் போது பெண்ணிற்கு கிடைக்கும் சூழ்நிலையை பொறுத்துதான் ஒரு குழந்தையின் தன்மை இருக்கும். நல்லதையே கேட்டு வளரும் குழந்தை நல்ல பிள்ளையாக பிறந்து, நாட்டிற்கு நல்லது செய்யும் நல்ல குடிமகனாகிறான்.

கருவுற்றிற்கும் பெண் அழுவது, படப்படப்புடன் வேலைப் பார்ப்பது, துக்கம், கோபம் எல்லாம் கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கிறது. HYPERACTIVE குழந்தைகளின் காரணம் தாய் கருவுற்றிருக்கும் போது இருந்த மனோபாவம்தான்.

உடனே பெண்ணால்தான் எல்லாம் என்று குற்றம் சாற்றக் கூடாது. கணவனும், கணவன் வீட்டைச் சார்ந்தவர்களும் இதற்கு கருவுற்றிற்கும்
பெண்ணிற்கு உதவினால், கர்ப்ப காலத்தை அனுபவித்து, ஆனந்தமாக பிள்ளை பெற ஏதுவாக இருக்கும்.

குழந்தைபிறந்த பிறகு குழந்தைமருத்துவர் குழந்தையின் கையில் பென்சில் ஒன்றைக் கொடுத்து, பார்ப்பார். குழந்தை பென்சிலை பிடித்துக் கொண்டால் திறன் சரியாக இருக்கிறது என்று அர்த்தமாம். பிறந்து ஒரு சில நிமிடங்களே ஆன குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்து பென்சிலைப் பிடிக்கிறது?

இதிலிருந்தே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அளற்கறிய திறனுடன்தான்
பிறக்கிறது என்பது ஊர்ச்சிதமாகிறதல்லவா?

தொடரும்...

புதுகைத் தென்றல்.

பெற்றோர்களுக்கான புதிய பாடம்(child psychology) - 1

வணக்கம் பெரன்ட்ஸ், புது வருசம், பொங்கல் எல்லாம் முடிஞ்சது, குடியரசு தினம் கொண்டாட இருக்கோம். புது வருசம் பிறக்கும் போது புத்தாண்டு சபதம் எடுத்தோமே (வெயிட் குறைக்கனும், சிகரெட் விடனும், டிராபிக் ரூல் பாலோ பண்ணனும் ...) அது என்ன ஆச்சி ?

பெரும்பாலான சமயம் ஜனவரி முடியரதுக்குல்ல நம்ம சபதமும் முடிஞ்சி போயிடுது. சரி வெயிட் குறைக்கரதுக்கும் நல்ல பெற்றோரா குழந்தைய வளர்க்கரதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கரிங்களா ?

நம்ம புத்தாண்டு சபதம் கன்டிநியு பண்ண முடியாட்டி என்ன செய்யரோம். எதாவது சப்பை காரணம் கண்டுபிடிக்கறோம். டிராபிக் ரூல் யாருமே பாலொ பண்ணல நான் மட்டும் ஏன் பண்ணனும், மழை பெய்யுது அதனால எஃசர்சைஸ் பண்ணல, எனக்கு டைம் கிடைக்கல பிச்சி...

நம்ம இப்படி பண்ணரதுல இருந்து என்ன தெரியுது
1. என்னால என்னோட வார்த்தைகளை காப்பாற்ற முடியாது
2. என்னால பிளானிங் சரியா பண்ண முடியாது.
3. எதாவது காரியம் முடிக்க முடியவில்லயா எதாவது சப்பை காரணம் சொல்வது.
4. எந்த சின்ன செயல்லயும் போகஸ் இல்லை.
5. என்னால என்னையே சரியா பாத்துக்க முடியாது. ... இன்னும் பல

நம்ம குழந்தைகள் நம்ம பார்த்து தான் வளர்ராங்க, அவங்களோட ஒவ்வொரு செயலுக்கும் நாம தான் காரணம்.

குசும்பன் நீங்க என்ன நினைக்கரிங்கன்னு தெரியுது (குசும்பனுக்கு கண்டனம் ).

நம்ம குழந்தைகள் நம்ம தொடர்ந்து வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க, நாம தான் அவங்களுக்கு ரோல் மாடல். நாம என்ன பண்ணரோம், பேசரோம். எப்படி நடக்கிறோம். நம்ம பேச்சின் டோன், வார்த்தைகள், பாடி லாங்வேஜ் எல்லாம் உன்னிப்பா பார்க்கறாங்க.

என்ன மாதிரி நிறைய பேரன்ட்ஸ் இப்ப சொல்லரது தன்னோட குழந்தை ரொம்ப குறும்பு, சொல்லரது கேக்கரது இல்ல, வீண் சண்டை, எப்படி அவங்கள திருத்தரது, நம்ம கண்ரோல்ல வைக்கரது ....

திருத்த வேண்டியது அவங்கள இல்ல நாம நம்ம திருத்திக்கனும், மாற்ற வேண்டியது குழந்தைகளை அல்ல நாம தான் மாறனும்.

சரி இப்ப என்ன பண்ணலாம், ரொம்ப சிம்பிள். இன்று முதல் நம்மை நாமே கண்காணிக்க வேண்டும். நாம் வீட்டில், வெளியில் எப்படி நடந்துக்கறோம். நாம் யாரிடமாவது பேசும் போது எப்படி பேசுகிறோம் (டோன், வார்த்தை) என்பதை கவனிக்கனும்.

எப்படி ஆரம்பிக்கலாம். நாம வீட்டில் இருக்கும் 2 மணி நேரம் சூஸ் பண்ணிக்குவோம் அந்த இரண்டு மணி நேரம் நம்மை நாமே வாட்ச் பண்ணுவோம். எத்தனை முறை நெகடிவா எதாவது செயல் பண்ணறோம்னு நோட் பண்ணுவோம். ஒரு வாரத்துக்கு பிறகு டைம் கொஞ்சம் கொஞ்சமா அதிகம் பண்ணிக்கலாம்.

இத நாம பண்ணா, நம்ம நாமே திருத்திக்க முதல் அடி எடுத்தாச்சி. நம்ம குழந்தைகளிடம் உடனே மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது ஆனால் நம்ம இம்பாக்ட் கண்டிப்பா அவங்களிடம் தெரியும்.

சரி இதயும் நம்மால செய்ய முடியலயா, அடுத்த முறை நம்ம குட்டீஸ் கிட்ட எதாவது சின்ன செயல் செய்ய சொல்லி அவங்க பெயில் ஆனா எப்படி நடந்திக்கறோம்னு யோசிங்க.

அவங்க கிட்ட எப்படி அட்வைஸ் பண்ணரோம், இல்ல கத்தரோம். அதை நமக்கு அப்ளை பண்ணுவோம். பிறகு மீண்டும் டிரை பண்ணுவோம் வெற்றி பெறும்வரை. (மொதல்ல என்ன நானே திருத்திக்கனும்)

Remember parenting is not for children alone, it's for parents.

தொடரும்.... இம்சை

பேரன்டிங் ஆரம்பம் - 1

"உங்க பொண்ணு என்ன வகுப்பு படிக்கிறா?"

"இந்தம்மா சுஜா, இங்க வா..என்ன படிக்கிற மாமாகிட்ட சொல்லு..", "அதல பாருங்க..இவ என்ன படிக்கிறான்னே தெரியல..4ஆவதோ 5ஆவதோ...இது எல்லாம் என் மனைவி சமாச்சாரம்..எல்லாப் பொறுப்பும் அவகிட்ட விட்டாச்சு..நமக்கு நேரம் எங்க இருக்குங்க?"

இப்படி ஒரு அப்பா..

"என்ன ரேங்க் ராஜான்னா கேட்ட? ஏ ராஜா..சித்தி கேக்குறாங்க வந்து சொல்லுப்பா..நான் என்னத்தக் கண்டேன்? நா என்ன பெரிய படிப்பா படிச்சுருக்கேன்..எல்லாம் அவுக அப்பாதான் பாத்துப்பாக..இதெல்லாம் அவுக அப்பா சமாச்சாரம். நமக்கு என்ன தெரியும்?"

இப்படி ஒரு அம்மா..

இப்படியும் நடக்கிறது. குழந்தைகளின் உலகத்தில் இன்னும் காலடி எடுத்து வைக்காத பெற்றோரும் சிலருண்டு. தத்தம் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குபவர்கள் பிள்ளைகளுக்காக அன்றாட அலுவல்களுக்கேயன்றி நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகளின் உலகம் நம்முலகத்தினின்று வேறுபட்டது. நமக்குத் துச்சமென்பது அவர்களுக்கு உச்சம்..இதையே மாற்றியும் சொல்லலாம். இதைச் சரிவரப் புரிந்து கொள்வது அவசியம்.

இயந்திரகதி உலகமாகிப் போய்விட்டது இன்றைய உலகம். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக் குடும்பங்கள் தீவுக் குடும்பங்கள் என்று போய்க் கொண்டிருக்கிறோம். வேலை நிமித்தம் புலம் பெயர் வாழ்வு ஒரு பக்கம். நேரமில்லை நேரமில்லை என்று கூறி ஓடிக் கொண்டே இருக்கிறோம். குழந்தைகளுக்கான முன் மாதிரி இன்று பெற்றோர் மட்டும்தானே.

எது எப்படியோ, குழந்தை வளர்ப்பில் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குவதுதான் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம். இதற்கொன்றும் பெரிய படிப்போ, நாளின் பல மணி நேரங்களோ தேவையில்லை. குழந்தைகளின் ரசனை, ஈடுபாடு, திறமை, முயற்சித்திறன் இப்படி ஒரு குழந்தையின் பலவிதமான செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள, அவர்களைப் படிக்க அவர்களுக்காய்ச் சற்று நேரம் ஒதுக்குவது அத்தியாவசியமாகிறது.

இந்த வயதுதான் என்றில்லை..ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் தேவைகளும் செயல்பாடுகளும் மாறி மாறி அமையும். இதனைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

சில டிப்ஸ்:

1. அப்பா, அம்மா இருவரின் கூட்டுப் பங்களிப்பு - குழந்தையைப் பற்றி அ முதல் ஔ வரை
அறிதல் மிக முக்கியம். அவரவர் பார்வையில் குழந்தையைக் கண்காணிக்க நேரம் இருவருமே ஒதுக்குவது மிக முக்கியம்.

2. தினமும்..அல்லது அவ்வப்போது குழந்தையைப் பற்றிய புரிதலைத் தம்பதிகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்தல். சிறிய விஷயமென்று எதையும் ஒதுக்குதல் கூடாது.

3. குழந்தையின் ஈடுபாடுகளுக்கேற்ற சூழல் உருவாக்கிக் கொடுத்தல். உதாரணமாக ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் என்றால் அதற்குச் சமயம் ஒதுக்கிக் கொடுப்பது, அவர்கள் வேலைத்திறனை ஊக்குவிப்பது.

4. வேலைகள் இருந்து கொண்டேதானிருக்கும். இதையும் ஒரு வேலை என்றும் கடமை என்றும் நினைத்துச் செயல்படுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

பெரியவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி, உரிமை மீரல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் சமுதாயம், குழந்தைகளைப்பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.

இது மாபெரும் தவறு. ஒரு பெரிய மனிதனாக வளர்வதற்கு உண்டான அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு வளர்வது இன்றைய குழந்தைதானே?

"The adult is a procreator, but the child is a creator" என்பார்கள். குழந்தைகளின் உலகம் ஆரோக்கியமானதாகவும், தடைகளற்றதாகவும் இருந்தால்தான் அவன் வளர்ந்து ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்?

உண்மையான உதவியை குழந்தைகளுக்கு கொடுக்க நாம் முதலில் குழந்தைகளின் உலகத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


"EVERYTHING BEGINS IN CHILDHOOD" என்கிறார்கள் அறிஞர்கள். ஒரு நல்ல முழு மனிதனன உருவாக்குவது என்பது மிகப்பெரிய காரியம்.

குழந்தையிலிருந்து முழு மனிதனாக மாறுவதற்கு இடையில் இருக்கும் காலகட்டத்தை ஒரு குழந்தை கடந்தாகவேண்டும்.

வழித்தட முன்னேற்றத்தை (path of development) அறிந்து சின்னஞ்சிறார்களுக்கு உதவுவதனாலேயே, பிறக்கும்போதே அளற்கறிய சக்தியுடன் பிற்ந்திருக்கும் குழந்தையை, முழு சக்தி, ஆற்றலுடன் கூடிய மனிதனாக மாற உதவலாம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளை அன்புடன் புரிந்து கொண்டு, பாதுகாத்து, சரியான/தேவையான உதவிகளை செய்தால் நம்மால் ஒரு வலுவான, அன்பு நிறைந்த தலைமுறையை உருவாக்கமுடியும்.

இதனால் தான் குழந்தைகளை வருங்காலத் தூண்கள் என்கிறோம். இப்படி வளரும் குழந்தைகள்தான் இப்போது இருப்பதைவிட மேலும் சிறந்த உலகத்தை படைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? குழந்தையின் வளர்ச்சியும், பயிற்ச்சியும்

துவங்குவது தாயின் கருவறையில் இருந்துதான்.

குழந்தைகளைப் படிப்போம். வலுவான உலகைப் படைக்க அவர்களுக்கு உதவுவோம்.


(பாடம் எடுப்பதாக நினைக்கவேண்டாம். நான் ஒரு MONTIESSORY METHOD OF TEACHING DIPLOMA முடித்த ஆசிரியை. அங்கு படித்ததை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்)

கலா ஸ்ரீராம்.

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதை சரிவர செய்தால் தான் ஆரோக்கியமான தலைமுறை உருவாகும்.

முதலில் ஒவ்வொரு ஸ்டேஜ் ஆக குழந்தை வளரும் முறைகளை அறிந்து, அதன் பிறகு பிள்ளை வளர்ப்பு, சுட்டிக் குழந்தையை மேய்த்தல், பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், பெற்றவர்கள் கையாளும் முறை,

குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வது எப்படி?
அவர்களிடம் என்ன மாதிரி வேலைகள் சொல்லலாம்?
பள்ளியினை தேர்வு செய்வது எப்படி? பள்ளியில் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, விடுமுறை பயிற்சிகள்.

பருவ வயதில் இருபால் குழந்தைகளுக்கான பிரச்சனை, அவ்ர்களை கையாளும்முறைகள், பெற்றோர்களுக்குத் தேவையான அறிவுரை, குழந்தை மருத்துவம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த, குழந்தைகள் விரும்பும் உணவு ரெசிபிக்கள், என பல வகையான பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

வணக்கம் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இம்சைக்கு இங்க என்ன வேலை என்று சிவா, சஞ்சய், குசும்பன், மைபிரண்ட் எல்லாம் கேக்கரது தெரியுது. உங்க ஆட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் பிறகு தானா தெரியும்.

எனக்கு குட்டி குழந்தைகள் வளர்ப்பது பற்றி அதிகம் தெரியாது ஆனா என்னோட சொந்த அனுபவங்களை சொல்லலாம்னு இருக்கேன்.

கண்டிப்பா அப்பாக்களுக்கு குழந்தை வளர்ப்பிள் 25% பங்களிப்பாவது இருக்கும் அதனால இங்க நானும் எழுதலாம் அப்படின்னு என்னையும் ஆட்டத்தில சேர்த்திட்டாங்க எங்க அக்கா.

என்னோட கருத்து என்னன்னா Parenting starts not from Day one of your Child birth. It actually starts from the Day 1 of gestation.
இதல்லாம் சொன்னா தெரியாது அனுபவிக்கனும் அப்ப தான் அதன் உண்மையான மகிழ்ச்சி, வலி, இன்பம், துன்பம், எல்லாம் தெரியும்.
What doctors look at in 1st Trimester Ultrasound

Uterus and adnexa for presence of gestational sac
Presence or absence of yolk sac and/or embryo
Crown-Rump length of embryo if possible
Presence of cardiac activity
Fetal number and chorionicity/amnionicity

Reasons to have a 1st Trimester Ultrasound
Estimate gestational age
Diagnose or evaluate multiple gestations
Confirm cardiac activity
Confirm presence of intrauterine pregnancy
Evaluate suspected ectopic pregnancy
Define cause of vaginal bleeding
Evaluate pelvic pain

வாங்க பெற்றோர்களே! இது உங்கள் பிளாக்.

பிள்ளைகளை பெறுவதால் மாத்திரமே பெற்றவர்கள் ஆகிவிடுவதில்லை.

நம்மில் இருந்து பிறந்தவர்கள் என்பதனாலேயே நம் பிள்ளைகள் நமக்கு அடிமையும் இல்லை.

அதனாலே நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் parentsclub08@gmail.com ற்கு மெயில் தட்டுங்க.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்