பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label அணுகுமுறை. Show all posts
Showing posts with label அணுகுமுறை. Show all posts

பகுதி - 1: குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதற்கான காரணங்கள்

பகுதி - 2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்

பகுதி - 3: குழந்தைகளைத் தயார்ப்படுத்துதல், முடிவுரை:

குழந்தைகள் மனநிலை:

  • குழந்தைகள் நாமே எதிர்பார்க்காத அளவுக்கு விடுதி வாழ்க்கைக்குத் தயாராகக் கூடும்.
  • அரைகுறை மனதோடு தயாராகக்கூடும்.
  • தயாரே இல்லாமல் இருக்கக்கூடும். மிகவும் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கக்கூடும்.
  • தயாராகி விடுதியில் சேர்த்தவுடன், குழந்தைகள் தரப்பில் விடுதிச் சூழலுக்கு ஒத்துப் போக முடியாத நிலமை இருப்பின் குழந்தையின் மனநிலை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.
***************************************
  • இதில் முதல் நிலை பெற்றோர்க்கு மிகவும் எளிதாக அமையும்.
  • இரண்டாம் நிலை பேசித் தயார்ப்படுத்தி முடிவெடுக்க வழிவகுக்கும்.
  • மூன்றாம் மற்றும் நான்காம் நிலைதான் மிகவும் ஆபத்தானது., அந்த நிலையில் இந்த முடிவைக் கைவிட்டு, மாற்றுவழி யோசிப்பதே நல்லது.
இரண்டாம் நிலை - என்ன செய்ய வேண்டும்?
  • விடுதியில் சேர்ப்பதற்கான காரணத்தின் நன்மைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
  • அவரவர் வயதுக்கேற்ற பக்குவத்தோடு விளக்கங்கள் அமைய வேண்டும்.
  • விடுதியின் நடைமுறைகளை உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு முடிவெடுப்பதற்கான சரியான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
  • பெற்றோர் இருவருக்கும் இவ்விஷயத்தில் பரஸ்பரக் கருத்து வேறுபாடு அல்லது உறுதியற்ற தன்மை நிலவினாலும், அதைத் தனிமையில் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, குழந்தை முன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையைக் குழப்பாமல் இருக்க இது உதவும்.
விடுதி மற்றும் சூழல்:

  • விடுதியின் சூழல், விதிமுறைகள், வசதிகள் எல்லாமே பிறர் மூலம் தெரிய வந்திருந்தாலும், சரியான முறையில் விசாரித்து நாம் தெளிவு பெற வேண்டியது மிகவும் முக்கியம்.
  • பிறர் சொன்னார்கள் என்பதற்காக, சரியாக விசாரிக்காமல் சேர்த்து விடக்கூடாது.
  • விடுதியின் விதிமுறைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் பக்குவமும் பெற்றோர்க்கு மிகவும் அவசியம்.
  • எந்தத் தேவைக்காக / காரணத்துக்காகச் சேர்க்கிறோமோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகும் வண்ணம் சூழல் இருக்கிறதா என்று அவ்வப்போது நேரடியாகக் கண்காணித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அந்தத் தேவைகள் பூர்த்தியாகாத பட்சத்தில் நம் முயற்சிகள் அனைத்தும், பட்ட / படும் சிரமங்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

முடிவுரை:
  • பலவிதக் கோணங்களில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
  • நம் தேர்வு / முடிவு தவறாகிவிடவும் கூடும். எதிர்பார்ப்புகள் பலிக்காமல் போகும்போது, சற்றும் தயங்காமல் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்.
  • சில பெற்றோர்க்கு அருகில் இருந்து, அவர்கள் அனுமதிக்கும் வேளையில் குழந்தைகளைச் சென்று பார்க்க, கூட வந்து வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இன்றிப்போகும். அப்போதுதான் உறவினர்களின் உறவு தேவைப்படும். பெற்றோர் கூட இருக்க முடியாத சூழலில் விடுதியில் இருந்து வெளிவரும் வேளையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
  • நிறைய முயற்சிகள், நிறைய ஒத்துழைப்பு பெற்றோர் தரப்பில் இருந்தால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
முயற்சி நல்லபடியாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்

பகுதி -2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்

விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும்.

குழப்பங்கள் - குழந்தைகளுக்கு:
  • அப்பா அம்மாவைவிட ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்களோ?
  • நண்பர்கள் எவ்விதமாக இருப்பார்கள்?
  • உணவு எப்படி இருக்கும்?
  • என் வேலை அனைத்தையும் நானே எப்படிச் செய்து கொள்வேன்?
  • புதிய மொழி எனக்குப் புரியுமா? என் பேச்சை அவர்கள் புரிந்து கொள்வார்களா?
  • எப்போதெல்லாம் வீட்டுக்கு வர முடியும்?
  • எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுப்பார்கள்?
  • இங்கே கொண்டு வந்து சேர்க்க அப்பா அம்மா ஏன் முடிவெடுத்தார்கள்?
குழப்பங்கள் - பெற்றோர்க்கு:
  • நாம் செய்வது சரிதானா?
  • நம் குழந்தையால் சமாளிக்க முடியுமா?
  • உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?
  • பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்துமா?
  • உடல்நிலை சரியில்லையென்றால் சரியாகக் கவனிப்பார்களா?
  • உணவு சரியாகக் கொடுப்பார்களா?
  • இப்படிச் செய்வதால் நம்மை வெறுத்துவிடுவானா?
  • உணர்வுப் பாதுகாப்பு (Emotional security), சூழல் பாதுகாப்பு (Physical  security) எப்படியிருக்கும்?
இது போலப் பலவிதமான குழப்பங்கள் வந்து போகும். அவரவர் சூழலுக்கேற்றவாறு வந்து போகும் குழப்பங்கள்.

இக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன?
  • உற்றார் உறவினர் நண்பர்கள் ஆலோசனைகளைக் காதும், மனமும் கொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...ஆனாலும் இதுகுறித்த முடிவை நீங்கள் இருவர் மட்டும் எடுங்கள்.
  • அம்மாவும் அப்பாவும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசி இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுங்கள்.
  • குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
  • குழந்தையையும் மனம் திறந்து பேசச் செய்யுங்கள்.
  • எந்தக் காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதற்கான நியாயத்தை விளக்குங்கள்.
  • விடுதியைப் பற்றிய, பாதுகாப்பு பற்றிய தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • அத்தகவல்களை உள்ளது உள்ளவாறே குழந்தைகளிடம் சொல்லுங்கள்...கூடுதலாகவோ குறைவாகவோ எதுவும் சொல்ல வேண்டாம்.
  • குழந்தையின் நிறைகுறைகளைச் சரிவர மதிப்பிட்டு அதற்கேற்றவாறு அணுகுங்கள்.
  • விடுதியில் சேர்ப்பதற்கான காரணம் உங்கள் இருவருக்கும் நியாயமாகத் தோன்றும் என்றால், இதையும் ஒரு பொறுப்பாகக் கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
குழந்தைகளை அணுகும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன?

அடுத்த பகுதியில்...

பேரன்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்துப் பதிவிடுகின்றேன்....


சில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...

அந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள். இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே. கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

பள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..இந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:
  • கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..
  • பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...
  • அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..
  • தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...
  • டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...
  • இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..
  • நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...
  • குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..
  • வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..
  • அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறுவித காரணங்கள்:
  • இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...
  • இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக  இல்லை...
  • வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..

இப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.

ஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..
அடுத்த பகுதியில்..

ஸ்கூல் திறக்க போவுது, சிலருக்கு திறந்திருக்கும்.
நேற்றுவரை அம்மாவின் துப்பட்டாவை கட்டிக்கொண்டு
அலைந்த பிள்ளை ,”புது யூனிஃபார்ம், புது டிபன் பாக்ஸ்,
புது பேக், புது வாட்டர் பாட்டில் கலக்கறே சந்துரு””!!
என்று பள்ளிக்கு செல்ல தயராக இருக்கும்.

எல்லாம் புதுசாதான் வாங்கிக் கொடுத்திருக்கோம்.
பையன்/பொண்ணு அழுகாம ஸ்கூலுக்கு போயிடுவாங்கன்னு
நினைச்சிருப்போம். அப்படியே கவுத்து ரகளை செஞ்சு
நம்மளை, டீச்சரை ஒரு வழி ஆக்கிடுவாங்க.

அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு தொங்கிய என்
கிளாஸ் பையன் ஞாபகத்துக்கு வர்றான். ஆரம்பப்பள்ளி
ஆசிரியைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே
குழந்தையை முதலில் அழாமல் வகுப்பில் உட்கார
வைப்பதுதான். ஒரு குழந்தை அழுகை நிப்பாட்டிய
நேரத்தில் இன்னொன்று மூலையில் உட்கார்ந்து
அழுவதைப் பார்த்து மத்ததுக்கும் பொங்கும்.

கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும் இந்த நிலை மாற.
அப்புறம் நாம் ஸ்கூல் கேட்கிட்ட போறவரைக்கும்தான்.
கையை ஒதறிட்டு டாடா காட்டக்கூட மறந்துட்டு
பிள்ளை ஓடிடும்.

வீட்டிலேயே நாம் குழந்தையை இந்தப் பிரிவுக்கு
தயார் படுத்த வேண்டும்.

சொல்லாதீங்க பதிவை படிச்சிருக்கீங்களா!

இதுவும் முக்கியம்:

சரி பிரிவுக்கு தயார் செய்வது எப்படின்னு பாக்கலாம்.

டே கேர் செண்டரிலோ/பள்ளியிலோ விடுவதை
ஆரம்பத்தில் குழந்தை விரும்பாது. பிரிவை தாங்க
இயலாத இந்த சுபாவம் ரொம்ப இயற்கையானது.
பெற்றோரின்  அணுகுமுறை ரொம்ப முக்கியம்.

அடிப்பதோ, திட்டுவதோ கோபப்படுவதோ சுத்தமாக
உதவாது. பொறுமை, பொறுமை, முறையாக கையாளுதல்
தான் உதவும். கீழே கொடுத்திருக்கும் முறைகள்
உளவியலாளர்களின் கருத்துக்களும் கூட. 


1. முத்த மழை பொழிந்து:
அன்னையின் அரவணைப்பு பிள்ளைக்கு தரும்
இதம் சொல்ல முடியாது. அழும் குழந்தையை
ஏதும் சொல்லமால் பக்கத்தில் இருத்தி
முத்தம் கொடுப்பது நல்லது. இப்பொழுதெல்லாம்
1 வாரம் வரை பெற்றோர்களும் வகுப்பிலேயே
உடன் இருக்க அனுமதிக்கிறார்கள்.

2. குழந்தையின் பையில் ஒரு நோட்டிலோ
அல்லது பள்ளி டயரியிலோ குடும்ப
புகைப்படம் ஒன்றை வைத்து அனுப்புவதும்
உதவுமாம். ஞாபகம் வரும் பொழுது
புகைப்படத்தை எடுத்து பார்த்து குழந்தை
கொஞ்சம் திருப்தி பட்டுக்கொள்ளும்.

3.  நல்லபிள்ளை விளையாட்டு:

நீ அழாம நல்ல பிள்ளையாய் ஸ்கூலுக்கு
ரெடியாகும் ஒவ்வொரு நாளும் பாயிண்ட்ஸ்
கொடுப்பேன், அதை வைத்து உனக்குத்
தேவையான விளையாட்டு சாமான்கள்
வாங்கிக்கொள்ளலாம், என்றோ ஹாப்பி
ஃபேஸ் சார்ட் ஒட்டி அதில் எத்தனை ஹாப்பி
ஃபேஸ் வருகிறதோ அதுக்குத் தகுந்த மாதிரி
பிள்ளை விரும்பும் சாமான் அல்லது தின்பண்டம்
என்றும் வைக்கலாம்.

4. பேசாமல் இருத்தல்:
அழும் குழந்தையோடு “டூ” விடுவதல்ல.
சில சமயம் குழந்தை அழும் பொழுது
நாம் உடன் ரியாக்ட் செய்யாமல் 10 நிமிடம்
போல நம் வேலையை அருகிலேயே
உட்கார்ந்து செய்து கொண்டிருந்தால்
தன் நடவடிக்கையை கவனிப்பார் இல்லாமல்
தானே சமாதானமாகி விடும். சில சமயம்
அழும் குழந்தையை சமாதானம் செய்கிறேன்
என்று பெற்றோர் செய்யும் ஆட்டம் அதிகமாக
இருக்கும்.

5. உறுதி மொழி:

எங்கே நம்மை அப்படியே விட்டுவிடுவார்களோ!
எனும் பயம் குழந்தைக்கு இருக்கும். அதனால்
ஸ்கூல் 11 மணிக்கு முடிஞ்சிடும், வீட்டுக்கு
வந்திடலாம், உனக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சு
வெச்சுகிட்டு அம்மா ரெடியா காத்திருப்பேனாம்!/
ஸ்கூல் பெல் அடிச்சதும் வெளியே யார் இருப்பாங்கன்னு
பாரு!போன்ற  உறுதிமொழிகள் பயத்தை குறைக்கும்.

6. நேற்று என்பது வரலாறு அதைப்பற்றி பேசலாம்:
தான் சாதித்தவற்றைப் பற்றி பேசுவது குழந்தைகளுக்கு
ரொம்ப பிடிக்கும். நேத்து எவ்வளவு குட் பாயா எந்திரிச்சு
ரெடியான!, ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும்
நாம பைக்ல ஒரு ரவுண்ட் கூட போனோம்ல என
பேசுவது  தான் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவோம்
என்ற எண்ணமும் நல்லபடியாக கிளம்பி போனால்
ட்ரீட் கிடைக்கும் என்பதும் புரியும்.

7.  பிள்ளை விரும்பும் பூ, பொம்மை, மிக விரும்பும்
வகை உணவு, போன்றவற்றை மறைத்துவைத்து
சர்ப்ரைஸாக கொடுக்கலாம்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர் ரிலாக்ஸ்டாக
இருக்க வேண்டும். இந்த மாறுதலை குழந்தை புரிந்து
கொள்ளும் வரை நாம் புரிய வைக்க முயற்சி செய்து
கொண்டே இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் நம் கோபத்தையோ டென்ஷனையோ
குழந்தை மீது காட்டினால் அது நிலமையை இன்னும்
மோசமாக்கும். “அழாதே! அழுகையை நிப்பாட்டு”
போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவது நலம்.
நம் முன்னால் ஏதும் நடவாத மாதிரி பொறுமையாக
சிரித்த முகத்துடன் இருந்தாலே போதும். குழந்தையை
பிரிகிறோமே, பிரிக்கிறோமோ என்று தேவையில்லாமல்
குழம்பாமல் நிம்மதியாக குழந்தையை பள்ளியில்
விட்டுவிட்டு வரவேண்டும்.

ஆசிரியை, பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சியினால்தான்
ஒரு குழந்தையின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
பெற்றோரும் சிலவற்றைச் சொல்லிக்கொடுத்து
பிள்ளையை வளர்த்தால்தான் பள்ளியில் மேலும்
கற்க அது உதவும்.

புதுகை மாவட்டம் ராயவரம் ஒன்றியத்தைச் சேர்ந்த
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்
பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

பள்ளி செல்ல விரும்பு
பாடம் நல்லக் கரும்பு
படித்து விட்டுத் திரும்பு
பண்ண வேண்டாம் குறும்பு;
அரும்பு போல சிரிப்பாய்
  எறும்பு போல இருப்பாய்!




தோழியரே! கல்வி கண் போன்றது.நமது அறிவைத்தீட்டி,நம் வாழ்க்கையை ஒளிபெறச்செய்வது கல்வி ஒன்றே! கற்றோருக்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு.கல்வியின் துணை கொண்டு கண்டம் விட்டு கண்டம் சென்று,உலகெலாம் பயணித்து, செல்வம் தேடி சிறப்புறுகிறார்கள்.உண்மை.இதில் இரு வேறு கருத்தோ,நம் குழந்தைகளும் கல்வியில் தேறி,அந்நிய நாடுகளில் மின்னி வலம் வரக் கனவு காணும் தாயின் சிந்தனைகளில் தவறோ கிடையாது.ஆனால் எல்லாக்குழந்தைகளும் ஒன்று போல் படிக்க முடியாது என்கிற கருத்தை தயவு செய்து பெற்றோர்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ளுங்கள்.அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் ஆரம்பிக்க இருக்கிறது.குழந்தைகளுடன், பெற்றோரும் மன அழுத்ததிற்கும்,படபடப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.ஆசிரியர்களோ ஒரு படி மேல்.தனது பாடத்தில் குழந்தைகள் 100 சதவிகித வெற்றி பெற வேண்டி அவர்கள் கடைசி நேரம் வரை சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றனர்.பள்ளி,வீடு,நண்பரகள் அனைவரும் தேர்வுப்பபடப்பில் இருக்க குழந்தைகள் இன்னும் நெருக்கடியாய் உணர்கிறார்கள்.

தாய்மார்களே! குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுங்கள்.எந்த நேரமும் புத்தகத்தோடு இருக்கும் படி அறிவுறுத்தாதீர்கள்.எதிர்மறையான எண்ணங்களை அல்லது அவர்களின் நம்பிக்கை தகர்ந்து போகும் படி திட்டுவதோ,பேசுவதோ கண்டிப்பாகக் கூடாது.அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வரும்படி மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது மற்றும் குறைந்த மதிப்பெண்களைச்சுட்டிக்காட்டி குத்திப்பேசுவது கண்டிப்பாகக்கூடாது. நமது மூளையானது தொடர்ந்து 45 நிமிடம் தான் படிப்பதை ஏற்கும்.அதன் பிறகு நமது சிந்தனைகள் தானே ஊர் சுற்றக்கிளம்பிவிடும்.பிறகு 10 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குப்பிறகு தான் மறுபடி மனம் ஒருமுகப்படும்.ஆகவே குழந்தைகள் படிக்கும் போது இடையிடையே கொஞ்ச நேரம் விளையாட விட்டு அல்லது தொலைக்காட்சியில் பிடித்த நிகழ்ச்சி அல்ல்து பாடல் கேட்பது அல்லது கொஞ்சம் வெளியில் உலாத்திவிட்டு வருவது நல்லது.உடலுக்கும் கொஞ்சம் பயிற்சி.மனதிற்கும் நன்றாக இருக்கும்.கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவச்சொல்லுங்கள்.கொஞ்ச நேரம் பச்சைச்செடி,கொடிகளைப்பார்ப்பது கண்களுக்குக் குளுமையாக இருக்கும்.செல்லப்பிராணிகள் நாய்கள்,பூனைகள் இருந்தால் விளையாட விடுவதும் நல்லது.

தோழியரே! குழந்தைகளின் தேர்வு நேரங்களில் வீடுகளில் வாக்குவாதங்கள்,சண்டைகள்,அக்கம்பக்கம் அரட்டைகளைத் தவிர்ப்பது நலம்.குழந்தைகளுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நலம்.அவர்களுக்கு மன உளைச்சளைத் தரும் நிகழ்வுகளைத் தவிருங்கள்.விருந்தாளிகள் முன் குழந்தைகளைத் தரக்குறைவாகப்பேசுவதைத்தவிருங்கள்.விருந்தாளிகள் குழந்தைகளை கிணடலடிப்பது ஆகியவற்றை அனுமதிக்காதீர்கள்.நல்ல சத்தான ஆகாரம்,பழங்களில் ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை காய்களில் உருளைக்கிழங்கு,வெண்டைக்காய்,வெள்ளரி,காரட்,பீட் ரூட், கீரைகள்,பருப்பு சேர்ப்பது நல்லது.மசாலா அதிகமுள்ள உணவு,செயற்கை பானங்கள்,சிப்ஸ், எண்ணெயில் பொரித்த உணவு ஆகியவற்றைத்தவிர்ப்பது நல்லது.உடல் நலமும்,மன நலமும் எப்போதும் அவசியமென்றாலும் தேர்வு நேரங்களில் இன்னும் அதிமுக்கியம்.அது போல் உடல்,மன ஆரோக்கியத்தில் தூக்கத்திற்கு முக்கியப்பங்கு உண்டு.ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.குறைந்தது 6 மணி நேரத்தூக்கம் அவசியம்.

குழந்தைகளின் தேர்வு அட்டவனையை வெள்ளைக்காகிதத்தில் வண்ணப்பேனாக்களை உபயோகித்து பெரிய எழுத்தில் எழுதி,தேதி,பாடங்களை மறுபடி சரிபார்த்து, அனைவரின் பார்வையில் படுமிடத்தில் ஒட்டி வையுங்கள்.தேர்வைத்தவறவிடுவது தவிர்க்கப்படுவது மட்டுமல்ல,குழந்தைக்கும் இன்னும் நான்கு நாள்,மூன்று நாள் என்று தன்முனைப்பை ஏற்படுத்தவும் உதவும்.கடந்த வருடம் இங்கு நிறையக்குழந்தைகள் இடையில் நிறைய விடுமுறை இருப்பதால் தேர்வு எழுதாமல் தவற விட்டு அழுதனர்.குழந்தைகளின் தேர்வு அனுமதிச்சீட்டை (Hall ticket) படியெடுத்து வைத்துக்கொள்வது நலம்.எனது மகனும் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.நான் கடைபிடிக்கும் சில குறிப்புகளைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நம் நாட்டின் கல்வி முறையை விமர்சிப்பவர்கள் பலர்.ஆனாலும் எல்லாக்குழந்தைகளும் பந்தயத்தில் ஓடத்தயாராய் இருக்கும் போது நம் குழந்தைகளும் ஓடி வெற்றி பெற வேண்டுமென்பது ஒவ்வொரு பெற்றோரின் ஆசையும்,குறிக்கோளும்.அன்போடும், அக்கறையோடும் பயிற்சியளித்து அவர்களையும் தயாராக்குவது நமது கடமை.குழந்தைகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று,நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துங்கள் நண்பர்களே!.

பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை. 

குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத் திறமைகள் எனக்கு ரொம்ப பயன்பட்டது. ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பயன் படுத்தினேன்.என் பையனுக்கும் அதைக்கற்றுத் தந்திருக்கிறேன்.


வாழ்க்கை ரொம்ப சுலபம் இல்லை.திடீர் திடீர் என்று கிறுக்கல் அடித்து நம்மை வேடிக்கைப் பார்க்கும்.

பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால படிப்பாளி.திறமைசாலி அல்ல. நூற்றுக்கு நூறு மார்க் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தரும். பள்ளி படிப்பில் முதலில் இருக்கும் சில பேர் பொரோபஷனல் (professional) வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒளியற்று இருப்பார்கள்.மக்குத்தனம் இருக்கும்.படிப்பு வேறு.புத்திசாலித்தனம் வேறு.


குழந்தைகள் நூற்றுக்கு நூறு பார்டியாக இல்லாவிட்டாலும் “உஷார் பார்ட்டி”யாக (சாமர்த்தியசாலியாக..) இருக்கவேண்டும்.இப்போது இருக்கும் உலக நடப்புக்கு அதுதான் யதார்த்தம்.“உஷார் பார்ட்டி” with நேர்மை/ஒழுக்கம்/பக்தி/அன்பு. Be practical. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வர வேண்டும்.


அது என்ன வாழ்க்கைத் திற்மைகள்(Life Skills):-




உதாரணம்- 1
பக்கத்துவீட்டுப் பையன் படிப்பில் கில்லாடி.ஆனால் தன் சைக்கிளின் செயின் கழண்டால் அதை சரி செய்யக் கூடத்தெரியாது.தள்ளிக்கொண்டுதான் வருவான்.ஆறு கிலோ மீட்டர்.காற்று கூட அடிக்கத் தெரியாது. அடிப்பது அவன் அப்பா.இழப்பு யாருக்கு?


உதாரணம்- 2
பல வலைப்பதிவர்கள் மெது மெதுவாக தங்கள் திறமைகளை(skills) பயன்படுத்தி வலையை ஜொலிக்க வைக்கிறார்கள்.எல்லாம் ரெடிமேடாக கிடைத்தாலும் அதை நிறுவும் பொழுதில் கிடைக்கும் அனுபவம் அடுத்த முயற்சிக்கு தூண்டுகிறது.அறிவு /அனுபவம் வளருகிறது.திறமைகள் வளர்கிறது.


உதாரணம்- 3
நடிகர் கமல் நாலாவதுதான் படித்திருக்கிறார்.புகழின் உச்சியில் இருக்கிறார்.அவர் கால கதாநாயகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.காரணம் கமல் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். தொலை நோக்குப் பார்வையில் சினிமாவை எடைப்போட்டு காணாமல் போகாமல் தன்னை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய சிவப்பு நிறம் அழகான முகம் ரொம்ப நாள் “தாக்குப்பிடிக்காது” என்று தெரியும்.


உதாரணம்- 4
பக்கத்து வீட்டுப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டி நின்று விட்டது.காரணம் தெரியவில்லை மெயின் ரோட்.ஆள் நடமாட்டம் கம்மி.மெக்கனிக் ஆறு கிலோ மீட்டர் தள்ளி.எப்படி நடுரோடில் விட்டு வருவது. ஐடியா! பக்கத்து பங்களாவின் மாடியில் நின்றவரைக் தையரிமாக கூப்பிட்டு ”excuse me, if you don't mind" சொல்லி புன்னகைத்து வண்டியை  உள்ளே விட்டு விட்டாள்.சாமர்த்தியம்!
பிறகு ரிப்பேர்.


உதாரணம்- 5
பிளாட் லிப்டில் கரெண்ட் போய் ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான்.எமர்ஜென்சி அலாரம் வேலைச் செய்யவில்லை.”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”என்று பெரும் குரலில் கத்தினான். ஷூவைக் கழட்டி லிப்ட் கதவில் அடித்தான். அடுத்த கணத்தில் உதவி வந்தது.அலாரம் வேலைச் செய்யா விட்டால்”அய்யோ அம்மா, அய்யோ அம்மா”..கதவைத் தட்டுதல்...” போன்றவற்றை செய்யவேண்டும் என்று சொன்னது அவன் அப்பா.அப்பா கே.ரவிஷங்கர். பையன் ஆதித்யா.


உதாரணம்- 6
பக்கத்து வீட்டு மாமிக்கு காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் புதுசு மாட்டத் தெரியாது.வாட்ச்மேன் அல்லது எதிர்வீடுதான் உதவி செய்யவேண்டும்.அந்த இரண்டு பேர் இல்லாவிட்டால் என்ன செய்வார்?


இந்த திறமைகளைப்(skills) பற்றிச்சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.


நான் கடையில் ஒரு நாள் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தேன்.அப்போது என் மகன்
(வயது 10) என்னைக் கடந்து சைக்கிளில் போய் சிக்னலில் நின்றான்.என்னை கவனிக்கவில்லைஅப்போது எதிரில் வந்த தண்ணீர் லாரி சடன் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி தண்ணீர் பீச்சியடித்து அவன், சைக்கிள்,புத்தகப்பை எல்லாம் அருவியில் குளித்த மாதிரி ஆகிவிட்டது.


வாழ்க்கையைப் பச்சையாக (raw formஇல்) சந்திக்கிறான்.என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்னசெய்யப்போகிறான் என்று பார்த்தேன்.


நனைந்ததால் உடலோடு ஆடைகள் ஒட்டி கட் பனியன்,ஜட்டி ஷேப் தெரிந்தது.(வெள்ளை யூனிபார்ம்).அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது. வாழ்க்கையின் ஒரத்தில் இருந்தான்.(பொது ஜனங்கள் “உச்” கொட்டிவிட்டு ”பாத்துத் தம்பி” என்று நகர்ந்தார்கள்).


தண்ணீரில் நனைந்ததிலிருந்து வீடு வந்து சேரும் வரை அவனுடைய திறமைகள்:-


1.அடுத்த வினாடி முக்கியமான புத்தகங்களை பையின் பின் அறைக்கு மாற்றினான்.(அங்கு ஈரமில்லை). (மெயிண்டனென்ஸ்/வாழ்வாதாரம்(survival)


2.TNEB Junction Boxலிருந்து தள்ளி நின்று கொண்டு தலையை கர்சீப்பால் தவிட்டிக்கொண்டான். (பாதுகாப்பு)


3.அடுத்து வேறு சந்தில் நுழைந்து சில நிமிடம் காத்திருந்து கிளாஸ் டீச்சரை ரோடில் சந்தித்து “see my position" என்று லேட்டாக வருவேன் என்று பர்மிஷன் வாங்கினான். (முன் யோசனை/சமயோசிதம்/பயம்)


4.PCOக்குப் போய் எனக்கு செல்லடித்தான்.(உதவி/தகவல்) நான் செல் எடுக்கவில்லை காரணமாக. (இவனுக்கு பணம் எப்படி? இதை தனியாக கவனிக்க வேண்டும்)


திறமையின்மை:


1,வண்டியை ஓட்டாமல் தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தான். உலகமே தன்னைப் பார்த்து பரிதாபப் பட வேண்டும்.(சுய பச்சாதாபம்)


2.பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று லாஜிக் யோசிக்கமால் செல்லடித்தது. (முன் யோசனையில்லாமை)


3.ஸ்கூலுக்கு மறுபடியும் திரும்பி போகும்போது வேற சுத்து ரூட்.ஏன்? திரும்பவும் தண்ணீர் லாரி வந்து விட்டால்? (பயம்/வெறுப்பு/உஷார்)


4.அவன் என்னை வரச் சொல்லியிருந்தான்.செக்யூரிட்டி/லேட் மிஸ் என்று வாசலில் இருப்பவரிடம் நான் விளக்கிச் சொல்லி உள்ளே அனுப்ப.அவன் தன் சொந்த திறமையில் இதை சமாளிக்க வேண்டும்.செய்யவில்லை. (தன்னம்பிக்கையின்மை)


எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்‌ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.


”என் பையன் மாதிரி கம்பூயட்டர் கேம்ஸ் விளையாட.....என்றும் செல்போனக் கொடுத்துட்டா போதும் அதுல பூந்து விளையாடுவான்...அவன மாதிரி..” என்று மற்றவர்கள் முன்னால் குழந்தைகளை செல்லம் கொஞ்சுவார்கள்.இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை காமெடி. ஏனென்றால் 99% சதவீதம் குழந்தைகளுக்குத் இதெல்லாம் தெரியும்.


”கண்ணே...செல்லம்...உச்சு புச்சு..”என்று கொஞ்சிக் கொண்டு இருக்காமல் வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அடிப்படை எதார்த்தங்களை (ground realities) கற்றுக் கொடுங்கள்.


குழந்தையை வளர்ப்பதும் ஒரு பெரிய(life skill) திறமைதான். (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவதில் என்ன நன்மைகள்:-


1.சுயசிந்தனை
2.அடுத்தவரை சாராமை
3.அனுபவம்
4.அனுபவத்தில் பெறப்படும் அறிவு
5.சுறுசுறுப்பு
6.பொது அறிவு
7.பிரச்சனை எதிர் நோக்கும் துணிவு
8.ஒரு வித சுய சந்தோஷம்(நானே செய்தேன்!)
9.சமயோசிதம்
10.கெளரவம் பார்க்காமை



ஒரு தலைமுறை குழந்தைகளுக்குக்கு(நகர்புறம் சார்ந்த) இருக்கும் lifeskills அடுத்த தலைமுறைக்கு இல்லை.இப்போது இருக்கும் தலைமுறைக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.


பாதுகாக்கபட்ட சுழ்நிலையில் வளர்கிறது.(highly protected zone).போனதலைமுறை மாதிரி அல்லதுஅதற்கு முந்திய தலைமுறை அலைந்துதான் எல்லாம் பெற வேண்டும் .கையில் எதுவும் தொப்பென்று விழாது.


கடைசியாக... மிருகங்கள தங்கள் வாழ்வாதர திறமைகளை எப்படி பயன்படுத்துகிறது என்று டிஸ்கவரி சேனல்,அனிமல் பிளானெட்டில் பாருங்கள். Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொருந்தும்.






.

எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் இவனுக்கு புரியமாட்டேன் என்கிறது என்று சலித்துக் கொள்ளும் பெற்றோர் பலர். புரிய வைப்பதற்காக நாம் செய்யும் முயற்சிகள் பல தோல்வியையே தழுவுகின்றன. அதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வோம்.

பொதுவாக புரிதல் எப்படி நடக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்வோம். நமக்கு ஏற்கெனவே தெரிந்த அல்லது புரிந்த ஒரு விசயத்தை வைத்தே புதிய விசயங்களை தெரிந்துகொள்கிறோம் அல்லது புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு குச்சியைப் (அல்லது கம்பி) பற்றி நன்றாக தெரியும். அது ஒரு சாதாரண பொருள். அதனால் அதை பார்த்திருக்கும், பயன்படுத்தியும் இருக்கும். ஒரு பேனாவை அதன் கையில் கொடுக்கும்பொழுது, அதை ஒரு குச்சியாகத்தான் குழந்தை பார்க்கும். நாம் மூடியை திறந்து எழுதிக் காண்பிக்கும்போது குச்சி எப்படி எழுதுகிறது எனும் வியப்போடே பார்க்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கீழ்க்கண்டவற்றை புரிந்துகொள்ளும்.
1. குச்சி மாதிரியே இருக்கிறது ஆனால் எழுதுகிறது.
2. ஒரு பக்கம்தான் எழுதுகிறது, இன்னொரு பக்கம் எழுதமாட்டேன் என்கிறது.
3. எழுதுகிற பக்கம் கூராக இருக்கிறது. அதுதான் எழுதுகிறது.
4. குச்சியை ஒடிக்க முடியும் பேனாவை ஒடிக்க முடியவில்லை.
இப்படி பேனாவைப் பற்றிய புரிதல் படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். இவை எல்லாம் முதல் பார்வையிலேயே புரிந்துவிடும் என்றும் சொல்ல முடியாது, இதே வரிசையில் நிகழும் என்றும் சொல்ல முடியாது. குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.

நாம் சொல்லித் தரும்போது என்ன நிகழ்கிறது? குழந்தை குச்சியுடன் ஒப்பிட்டு பேனாவை புரிந்துகொண்டிருக்கும் வேளையில், நாம் Lead penடன் (பந்து முனைப் பேனா) விளக்கிக் கொண்டிருப்போம். அதனால் குழந்தை ஒரு முரண்பட்ட மன நிலையில் இருக்கும். நாம் ஒப்பிடும் Lead penஉடனேயே குழுந்தையும் ஒப்பிட்டாலும் கூட, முதல் கருத்தை குழந்தை புரிந்து உள்வாங்கிக் கொண்டிருக்கும்போதே நாம் நான்கைந்து கருத்துக்களை ஒப்பித்துக்கொண்டிருப்போம். சரி மெதுவாக ஒவ்வொரு கருத்தாக சொல்லலாம் என்றால், குழந்தைகள் வேகமாக புரிந்துகொண்டிருக்கும் வேளையில் சலிப்படைய செய்துவிடும். இப்படி பல காரணங்களால் நாம் சொல்லித் தரும்போது முரணபாடான சூழ்நிலையை உருவாக்கி புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறோம்.

சரி நாம் என்னதான் செய்வது. உங்களுக்கு தெரிந்த வழியில் ஒரு முறை சொல்லிவிட்டு புரிந்தாலும் புரியாவிட்டாலும் அடுத்த பாடத்திற்கு சென்றுவிடுங்கள். புரிய வைத்து விட்டுத்தான் அடுத்த பாடம் செல்வேன் என்று அடம் பிடிக்காதீர்கள். சொல்லித் தரும்போது சிறிது நேரம் இடைவேளை விடுங்கள். அந்த நேரத்தில் அவர்கள் விளையாண்டாலும் படித்ததை புரிந்தகொள்ள முயற்சிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் சிறிது நாள் கழித்து அவன் புரிந்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

உதாரணத்திற்கு எனது மகனுக்கு கல்-கால், பல்-பால், படம்-பாடம், படி-பாடி என்று உச்சரிப்பை வைத்து எங்கே கால் வரும் என்ற வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன். அவனுக்கு புரிந்தது போல் இருந்தது. Test வைத்தால் ஒன்று சரியாக எழுதினான், சிலவற்றை தவறாக எழுதினான். மறுபடியும் விளக்க முயற்சித்தேன். அவன் முகத்தில் ஒரு சலிப்பு தெரிந்தது. Rest என்று சொல்லி, விட்டு விட்டேன். நான் கணினியின் முன் அமர்ந்திருந்தேன். அவன் ஒரு சிறிய கார் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். விளாயாடிக்கொண்டே கல் கால் வராது, கால் கால் வரும் (குழப்பிக் கொள்ளாதீர்கள் ஹி! ஹி!) பல் கால் வராது பால் கால் வரும் என்று அவனாகவே பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ‘அப்பா பல்லுக்கு கால் வராது, பாலுக்கு கால் வரும் correct தானே’ என்றான். ‘very good சிபி correct ஆ சொல்றே’ என்று பாராட்டிவிட்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன், அவன் விளையாட ஆரம்பித்து விட்டான். இந்த நிகழ்ச்சி எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. நாம் புரிய வைக்க பல முறை முயற்சி செய்யும்போது நடக்காத புரிதல், பிறகு எப்படி நடந்தது என ஆராயும்போதே மேற்கண்ட கருத்துக்கள் எனக்குத் தோன்றின.

எனக்கு புரிந்தும் புரியாமலும் இருந்த ஒரு விசயத்தை உங்களுக்கு புரியவைத்து விட்டேன் என நினைக்கிறேன். புரிந்தால் புரியுதுன்னு சொல்லுங்க.புரியலைனா புரியலைனு சொல்லுங்க. புரியாம புரிஞ்சதுன்னு சொன்னா எப்பவுமே புரியாம போகும். புரிஞ்சத புரியலன்னு சொன்னா புரிஞ்சதும் புரியாம போகும். நான் சொல்றது புரிஞ்சுதா, புரியலையா? உங்களுக்கு புரிஞ்சிதா இல்லை புரியலயான்னு எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க.



வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.

காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று குழந்தைகளுக்கு விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...


அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.


அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.


பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.


சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.


சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.


எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.


உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.


எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.


எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
குழந்தைகள் மட்டுமல்ல அனைவரும் கடைபிடிக்க வேண்டியவையே.
நன்றி: வெப்துனியா

குறும்புக்காரக் குழந்தைகள் நமது பார்வையில் வால் குழந்தைகள், அடங்காபிடாரிகள், முந்திரிக்கொட்டைகள், சொல்பேச்சு கேளாதோர், உருப்படாதது.....

ரஷ்ய ஆசிரியர் அமனஷ்வீலி அவர்களின் பார்வையில்:
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக்கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்.

குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள், விளையாட்டுத்தனமற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள், கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்ப்பார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் நன்கு கலந்து பழக க் கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரையெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும்போதுதான் குறும்புகள் பிறக்கின்றன.

குறும்புக்காரக் குழந்தைகள் செயல்முனைப்பான கற்பனையாளர்கள். இவர்கள் சுற்றியுள்ளவற்றை சுயமாக அறியவும், மற்றியமைக்கவும் விழைகின்றனர்.

குழந்தைகளின் குறும்புகள்- வாழ்க்கையின்மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.

குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையான குழந்தைகள். குறும்புக்காரக் குழந்தைகளை தண்டிக்கலாம், ஆனால் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.

குழந்தைகளைப் பற்றிய உங்களது பார்வையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

இது ‘குழந்தைகளின் எதிர்காலம்’ எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர்.ஷ.அமனஷ்வீலி.

தவறு.17.
சிறு குழந்தையிடம் கத்தி, பிளேட் போன்ற அபாயகரமான பொருட்களை கொடுப்பதைத் தவிர்ப்பது

காரணம்
1. எந்த பொருட்களைக் கொடுக்காமல் தவிர்க்கிறோமோ, அந்த பொருட்களின்மீது குழந்தைக்கு ஈர்ப்பு உண்டாகும். ஆகவே நாம் இல்லாத நேரங்களில் அப்பொருளை பயன்படுத்த முயற்சித்து தீங்கை விளைவித்துக் கொள்ளலாம்.
2. எல்லா நேரங்களிலும் அந்தப் பொருளை அவர்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பது என்பது இயலாத காரியம்.
3. அபாயகரமான பொருட்களைப் பற்றிய அறிவு பெறுவதை தடுக்கிறோம்.

தீர்வு
அந்தப் பொருளை எடுத்துக்கொண்டு, அது ஏன் அபாயகரமானது? தவறாகப் பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும்? என்பதை விளக்க வேண்டும். பின் அந்தப் பொருளில் என்ன என்ன பாகங்கள் உள்ளன, அவற்றில் எது ஆபத்தை விளைவிக்கக் கூடியவை, அப்பொருளின் பயன் என்ன என்பதை விளக்கலாம். நம் மேற்பார்வையில் 2 அல்லது 3 முறை பயன்படுத்த சொல்லலாம். பயன்படுத்தும்போது ‘அபாயகரமான பகுதியில் கையை வைக்காமல் நன்றாக பயன்படுத்துகிறீர்கள்’ என்று பாராட்டுவதன்மூலம் அபாயத்தை மீண்டும் நினைவு கூறலாம். அதிக குறும்பு செய்கிற குழந்தையாக இருந்தால் அதிக கவனம் தேவை.

தவறு.18.
கம்பி கேட்டில் ஏறினால் திட்டுவது.

காரணம்
நாம் இல்லாதபோது ஏறி தீங்கை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

தீர்வு
நாம் இருக்கும்போதே ஏற அனுமதிக்க வேண்டும். 2 அல்லது 3 முறை ஏறும்போது உடலை சமநிலைப்படுத்துவது (Balance) எப்படி எனக் கற்றுக்கொள்வார்கள். அதன்பிறகு ஆபத்து ஏற்படாது. கீழே விழுந்தால் எப்படி ஆபத்து விளையும் என்பதை விளக்கி, ஏறும்போது கவனம் தேவை ஆகவே மெதுவாக ஏறவும் என்பதை விளக்கி விட வேண்டும்.

-மரு.இரா.வே. விசயக்குமார்

தவறு.14..
கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை கேலி/கிண்டல் செய்வது.
காரணம்
கேலி செய்வதால் நம்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு வரும். அதனால் அந்தத் தீய பழக்கத்தை மேலும் தீவிரமாக செய்யலாம். கை சூப்பும் பழக்கம் பொதுவாக மிரட்டி வளர்க்கப்படுகின்ற, பெரியவர்கள் யாரும் உடன் இல்லாத குழந்தைகளிடமே காணப்படும். இப்பழக்கம் பொதுவாக பொழுது போகாமல் இருப்பதினாலும், கோப உணர்ச்சியின் வடிகாலாகவும் ஏற்படுகிறது எனலாம்.
தீர்வு
குழந்தையை ஏதாவது ஒரு விளையாட்டில் /பணியில் ஈடுபடுத்திக்கொண்டே இருங்கள். பெரியவர்கள் யாராவது உடன் விளையாடிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருப்பது நல்லது. மேற்கண்ட சூழ்நிலை இல்லாதவர்கள் நிறைய விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிப் போடலாம். கணினி விளையாட்டை அறிமுகப்படுத்தலாம். வரைகலை drawing கற்றுக் கொடுக்கலாம். வண்ணம் தீட்டும் புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம். நாம் உடன் இருக்கும் வேலையில் சிறு சிறு வீட்டு வேலைகளையும் கொடுக்கலாம். பலவித வழிகளையும் ஏற்படுத்தி குழந்தை ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

தவறு.15.
மகாத்மா காந்தியின் பென்சில் கதையை நினைத்துக்கொண்டு சிறிய பென்சிலை எழுதக் கொடுப்பது.
காரணம்
சிறிய பென்சிலைக் கொண்டு எழுதும்போது எழுத்துக்கல் அழகாக வராது.
தீர்வு
சிறு குழந்தைகளிடம் எழுதுவதற்கு பெரிய பென்சில்களையே கொடுக்க வேண்டும்.

தவறு.16.
பள்ளியில் பென்சில், ரப்பரைத் தொலைத்து விட்டு வரும் குழந்தையைத் திட்டுவது.
காரணம்
அதிகம் திட்டினால் அடுத்த நாள் பள்ளியில் பென்சில், ரப்பர் மீது தான் கவனம் இருக்குமே தவிர பாடத்தில் இருக்காது. மேலும் பென்சில் தொலைந்துவிட்டால் இன்னொருவன் பென்சிலை திருட வேண்டும் என்ற எண்ணம் வரும். பின் திருடனாகவும் மாறலாம்.
தீர்வு
1.வகுப்பிலேயே தேவையான பென்சிலையும், ரப்பரையும் பொதுவில் கொடுக்க சொல்லலாம்.
2.நிறைய பென்சில், ரப்பரை வாங்கி வைத்துக்கொண்டு தொலைந்தபோதெல்லாம் 'இதற்கே நிறைய செலவாகிரது, முடிந்த வரை தொலைக்காமல் கொண்டு வாருங்கள்' என்று சொல்லலாம்.
3.பென்சில், ரப்பரை இரண்டாக உடைத்துக் கொடுக்கலாம். (மிகச் சிறியதாக அல்ல).
மரு.இரா.வே.விசயக்குமார்

46. குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது, வெளியில் உள்ள விசயங்களளப் பற்றி விவாதியுங்கள். கட்டிட அமைப்பு, போக்குவரத்து விதிகள், வெவ்வேறு வகையான வாகங்கள், விலங்குகள் முதலியன.

47. நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது குழந்தைகளை இடைமறிக்க அனுமதிக்காதீர்கள். “தொந்திரவுக்கு மன்னிக்கனும் அல்லது அப்பா ஒரு நிமிடம்”, என்று கூறிவிட்டு நாம் பேசி முடிக்கும் வரை காத்திருக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

48. குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பழக்கங்களைக் கவனித்து சரிப்படுத்துங்கள். உதாரணத்திற்கு சில குழந்தைகள் கதவை இழுத்து வேகமாக சாத்தும், அவர்களுக்கு கதவை எப்படி மூடுவது எனக் கற்றுக்கொடுங்கள். வீட்டுக்குள் ஓடும் குழந்தைகளுக்கு, வீட்டிற்குள் எப்படி நடக்கவேண்டும் எனவும், மூக்கிள் சளி வரும்பொழுது கைக்குட்டையை எப்படிப் பயன்படுத்துவது எனவும் கற்ற்க்கொடுங்கள்.

49. குழந்தைகளை எல்லாவிதமான் வயதினருடனும் பழக பழக்குங்கள்.

50. மத சம்பிரதாயங்களைப் போதியுங்கள், அவற்றில் பங்கேற்கச் சொல்லுங்கள்.

51. பலவித (மதம், சாதி, மொழி, நம்பிக்கைகள்) மக்களைப் பற்றியும் நல்லவிதமாக நினைக்க குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கல்.

52. நகைச்சுவையாகப் பேசுங்கள் நன்றாக சிரிக்கட்டும், வார்த்தை விளையாட்டு விளையாடுங்கள், மனித நேயத்தைக் கற்றுக் கொடுங்கள்.

53. குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுங்கள். மிக இளம் வயதில் கற்றுக் கொடுப்பது நல்லது.

54. உங்கள் தொழிலைப் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உலகில் வெவ்வேறு தொழில்கள் எப்படி நடக்கிறது என்பதைக் காண்பியுங்கள்.

55. வீட்டில் உலக உருண்டை அல்லது உலக வரைபடம் அல்லது அட்லஸ் வைத்து, எப்பொழுதெல்லாம் நாம் பேசும் விசயத்தில் ஊர் பெயர் வருகிறதோ, உடனே வரைபடத்தில் அந்த ஊர் எங்கு உள்ளது எனக் காண்பியுங்கள்.

56. குழந்தைக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் பயன்படுத்த வசதியான வடிவத்தில் துடைப்பான், பழைய துணி முதலியன.

57. குழந்தைகள் விரும்பாதவற்றை வேண்டாம் எனச் சொல்லும்போது கோபமின்றிச் சொல்லப் பழக்குங்கள்.

58. குழந்தைகள் வேண்டாம் எனச் சொல்லுவதைவிட வேண்டும் எனச் சொல்லும்படி சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள் மற்றும் நீங்களும் நடத்துகொள்ளுங்கள்.

59. குழந்தைகளைப் பார்த்துக் கேலியாக சிரிக்காதீர்கள்.

60. அடுத்து வரும் நிகழ்வுகளைப் பற்றி ஞாபகப்படுத்துங்கள். உதாரணத்திற்கு “இன்னும் பத்து நிமிடத்தில் படுத்து தூங்க வேண்டும்” எனக் கூறுவது.

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில் பேரன்ட்ஸ் க்ளப்புக்காக எனது சில கருத்துக்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அக்கரையில் இருந்தபடி அக்கறையில் சொல்லும்...
அன்பு
ராமலக்ஷ்மி


-------------------------------------------------------------------------------------
உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான்.
ஆனால் அதுவே போட்டி என்ற பெய(போ)ரில் தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும் களமாக மாறிப் போக வேண்டுமா?


சமீபத்தில் கல்கத்தாவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பெண் அதன் நடுவர்களின்
கருத்துக்களால் அங்கேயே கண்ணீர் சிந்தி வருத்தத்துடன் வீடு திரும்பியவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பெற்றோரால் குற்றம் சாட்டப் பட்டு, பத்திரிகைகளில் பரபரப்பாக்கப் பட்டு பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆனார். பின்னர் ஏற்கனவே அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்ததால்தான் இத்தகைய மன உளைச்சல் ஏற்பட்டதென்றும் நிகழ்ச்சி நடுவர்கள் மேல் எந்தத் தவறுமில்லை எனவும் மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிரூபணமாகியதும் பலரும் அறிந்திருக்கக்கூடும். சேனல்,நிகழ்ச்சி, பெண்ணின் பெயர் எதுவும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.


பொதுவாகப் பார்த்தால் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் தோல்விகளை குழந்தைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வண்ணம் ஒரு ஸ்போர்டிவ் ஸ்ப்ரிட் இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் வெகு கவனமாக இருக்கிறார்கள். நமது காலத்தை விட இக்காலத்தில் அதைப் பல பள்ளிகள் ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளார்கள். ஐந்தாவது வகுப்பு வரை படிப்புக்கு கூட ரேங்கிங் சிஸ்டம் இருப்பதில்லை. அதுபோல ஒரு ஆண்டு விழா என்றால் குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவரவருக்கு ஏற்ற வேடங்களாகக் கொடுத்து அத்தனை பேரையும் மேடையேற்றி அழகு பார்க்கிறார்கள். இந்த மாதிரியான தளங்களையும் தாண்டி தனித் திறமை வாய்ந்த குழந்தைகளின் பெற்றோர் மேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளை நாடுவதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.


சில நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் தவறுகளை மென்மையாகச் சொல்கிறார்கள். சிலவற்றில் குழந்தைகள் சரிவரச் செய்யாமல் தடுமாறுகையில் அவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் மாறி மாறிக் காட்டி டென்ஷனை அதிகரிப்பார்கள். இது இரு சாராருக்கும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒரு பிரபல சேனலின் ஜூனியர் பாட்டுப் போட்டி முதல் கட்டத் தேர்வுச் சுற்றிலே தேர்வாகாத குழந்தைகள் தேம்பி அழுதபடி கீழிறங்க இந்தப் பக்கம் ஏங்கி அழுதபடி பெற்றோர். அவ்வளவு ஏன்? அதே சேனலில் பெரியவர்களுக்கான ஜோடி ஆட்டபாட்ட நிகழ்ச்சியில் கூட தன் மகள் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாது தாயார் நடந்து கொண்ட விதம் பலரும் அறிந்திருக்கக் கூடும்.


தோல்வியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தோற்று நின்றால் அதுவே "வெற்றிக்கு முதல் படி" எனச் சொல்லித் தேற்றி அரவணைக்கும் முதிர்ச்சி முதலில் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள் 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விடாமல். இந்தப் பக்குவமும் முதிர்ச்சியும் மிஸ்ஸிங் என்றால் இந்த நிகழ்ச்சிகளின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்.
ஒரு சென்சேஷனை உண்டு பண்ணுமாறு நிர்ப்பந்திக்கும் விளம்பரதாரர்களுக்காகவும் அவர்கள் மூலம் கிடைக்கிற வருமானத்துக்காகவும் சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது.


பி.கு: 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அளவுக்கு யாரும் இருப்பதில்லை என சிலர் சொல்லக் கூடும். விதி விலக்காய் இருக்கும் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படவே இப்பதிவு. மற்றொரு பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பமாக போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சுற்று பெற்றோரில் ஒருவர் க்ளூ கொடுக்க பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பதிலளிப்பார்கள். சில குழந்தைகள் தடுமாறி சரியான பதிலையும் கூடவே தங்கக் காசுகளையும் தவற விட்டு விட்டு குடும்பத்திடம் திரும்பி வருகையில் கடுகடு சிடுசிடுவென அவர்களை எதிர்கொள்ளும் தாய்மாரைக் காமிராக் கண்கள் கவரத் தவறியதில்லை. அவர்களுக்கு அவர்தம் வியாபாரம் முக்கியம் என்றால் நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல்

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக
நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை
நல்ல படியாக வளர்க்க முடியும்.

சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு
என்ற ரீதியில் இருப்பார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே பெரும்
மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்
தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும்,
அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில்
பெருமை.



சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே
மனைவியை திட்டுவது, அடிப்பது,
சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள்.
மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர்
ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில்
தாயின் மரியாதையை குறைத்து விடும்.



மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள்
பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள்.
அதாவது,” நான் இல்லாத போது அம்மா என்ன
செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னா
நான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று
சொல்வார்கள். இது மிக மிகத் தவறு.

இப்படி பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின்
எதிர் காலம் என்னவாகும்.


மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள்.
பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால்
சில சமயங்களில் பிள்ளையை காக்க
தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல்
இருந்து விடுவாள்.

”அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க.
அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு
அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு”
சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்ட
பிள்ளையல்ல”.


சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச்
செல்லும் போது, கணவன் திட்டுவார்
என்று தெரிந்தும் ஒரு பொருள் தான்
ஆசைப் பட்டதை வாங்கியிருப்பார்.
பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!!

“இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ.
அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!”
என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தை
நீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான்
செய்வதை நீயும் சொல்லாதே” என்று
பிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.


மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி
இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்த
கருத்து உடையவர்களாக இருந்தால் தான்
வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக,
அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம்
கொண்ட தலைமுறையாக உருவாகும்.

உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா
என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல்
பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்று
எனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும்.

அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன்
வாங்கிக்கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல்
அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோ
குழந்தை நடந்துகொள்கிறது என்றால் இருவரும்
சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.

என்னுடைய நன்பர்(ண்) ராஜேசை இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன்.பேச்சினூடே எங்கள் குழந்தைகளைப் பற்றிய பேச்சு வந்தது. அவனுடைய 4 வயது மகனுடைய சேட்டைகளைப் பற்றி மகிழ்வோடும்,பெருமையோடும் சொல்லிக்கொண்டு வந்தவன் அவனுடைய பிடிவாதத்தைப் பற்றிச் சொல்லும் போது சற்று வருத்தத்தோடு பேசத்துவங்கினான். அவனுக்கு ஏதேனும் ஓரு பொருளை வேண்டும் என்று நினைத்து விட்டால் மிகவும் பிடிவாதமும்,அழுகையும் பிடித்து அது கிடைத்தவுடன் தான் சமாதானம் ஆகிறான். அவன் விரும்பியதைக் கொடுக்காமல் அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று குறிப்பிட்டான்.

என்னுடைய செல்ல மகள் ஓருமுறை அவள் விரும்பிய ஓன்றைக் கேட்டு அழத்துவங்கிய போது அதைக்குடுத்து சமாதானம் செய்யலாம் என யோசித்தேன். அப்போது எனது மனைவி கூறிய வார்த்தைகள் வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் என் நினைவில் உள்ளது..... "இன்று இந்த அழுகைக்காக இதை செய்தால் அழுதால் எதுவும் நடந்துவிடும் என்ற எண்ணம் அவளுக்கு ஆழமாகப் பதிந்துவிடும்" எனவே கண்டுக்காம விடுங்க. அப்படி ஓரிரு முறை நாங்கள் அவள் அழுகையை சகித்துக் கொண்டு கண்டு கொள்ளாமல் போக இப்போது அவள் நிறைவேறாத எந்த விருப்பங்களுக்காகவும் அழுவதோ ஆர்ப்பாட்டம் செய்வதோ இல்லவே இல்லை. அதேபோல் குழந்தை கேட்கின்ற எந்த விஷயத்தையும் உடனடியாக நிறைவேற்றுகின்ற நிலையில் இறைவன் வைத்த போதும் இன்னோரு பழக்கமும் வைத்து இருக்கிறேன். அவள் ஏதேனும் அவளுக்குத் தேவை எனக்கூறினால் அப்பாவுக்கு சம்பளம் ஓன்னாம் தேதிதான் கிடைக்கும்,எனவே அப்போது வாங்கித் தருகிறேன் எனச் சொல்லிவிடுவேன். இதனால் அவளுக்கு உண்மையிலேயே என்ன தேவையோ அது மட்டுமே அவளுக்கு ஓன்னாம் தேதி வரை நினைவில் இருக்கின்றது.மூன்று நான்கு விஷயங்களாக சொன்னால் ஓருவேளை எதுவும் நடக்காமல் போய்விடுமோ என நினைத்தே பெரும்பாலும் அவளுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்கிறாள். இதோ இப்பொழுது எனது இரண்டாம் மகளும் பிறந்து விட்டாள். அவளுக்கும் இதே ஃபார்முலாதான் :))

சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது.

ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு “அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை” என எண்ண வைத்துவிடும்.

இதையே ஜான் ஹோல்ட் என்பவர் “ பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார். குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

பதில் தெரியாத இடத்தில் “தெரியாது” என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.

முறை.1.
“அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்” என்று கூறலாம்.

பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.

முறை. 2.
“இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்” என்று சொல்லலாம்.

பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.

முறை.3.
குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், “நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்” எனலாம்.

பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.

முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து “இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது” எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து “இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா” என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.

மரு. இரா. வே. விசயக்குமார்.

தவறு.8.
குழந்தை விரைவில் பேச வேண்டும் என்று நினைப்பது. அதற்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்வது.
காரணம்
விரைவாக அதாவது 1-2 வயதில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் அதிக நாள் 4-5 வயது வரை கூட தெளிவாக பேசாமல் உளறும். மெதுவாக அதாவது 3-4 வயதில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் ஆரம்பத்திலேயே தெளிவாக பேச ஆரம்பிக்கும். ஆகவே மெதுவாக பேச ஆரம்பிப்பதே நல்லது.
தீர்வு
குழந்தையை மருத்துவரிடம் எப்பொழுது அழைத்துச் செல்ல வேண்டும்.
1. நாம் சொல்லும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாத குழந்தைகள். அதாவது 1 வயதில் ஒரு பொருளை எடுத்து வர சொன்னால், அதைக்கூட புரிந்துகொள்ளாத குழந்தைகள்
2. 1 வயதில் ஏதேனும் 2 உறவுப் பெயர்களைக்கூட (உதாரணம்: அம்மா, அப்பா) சொல்ல முடியாத குழந்தைகள்.
நன்றாகவும் விரைவாகவும் பேச வைப்பதற்கு சில யோசனைகள்
1. மற்ற குழந்தைகளுடன் அதிக நேரம் பழக விடுங்கள்.
2. 2 அல்லது 3 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை அதிகம் சொல்லிக் கொடுங்கள்.
3. பாடல்களை சொல்லிக் கொடுங்கள்.
(எதையும் அவர்கள் விரும்பும் நேரத்தில் செய்யுங்கள், நீங்கள் விரும்பும் நேரத்தில் அல்ல. ஆரம்பிக்கும்போதே ‘செய்யலாமா, வேண்டாமா’ என்று அவர்கள் விருப்பத்தை கேட்டுவிடுங்கள்.)

தவறு.9.
குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உச்சரிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவது.
காரணம்
இது வரை பேசாமல் இருந்த குழந்தை பேச ஆரம்பிக்கும்போது உச்சரிப்புகள் சரியாக வராது. அக்குழந்தை மிகுந்த ஆசையுடன் தான் பேச ஆரம்பிக்கும். அப்பொழுதே தவறுகளை சுட்டிக் காட்டினால், அது பேசுவதை குறைத்துக்கொள்ளும் அல்லது நிறுத்தி விடும்.
தீர்வு
பேச ஆரம்பிக்கும்போது உச்சரிப்புகள் சரியாக இல்லை என்றாலோ? தவறாக பேசினாலோ கண்டுகொள்ளாதீர்கள். “அருமையாக பேசுகிறீர்கள்” என்று பாராட்டுங்கள். ஒரு நாளைக்கு ஒரு correction என்று வேண்டுமானால் செய்யுங்கள்.

தவறு.10.
பேச ஆரம்பிக்கும்போதே மரியாதை கற்றுக் கொடுக்கிறோம் என்று நினைத்து “வாங்க, போங்க என்று சொல்லுங்கள்” என்று அடிக்கடி நினைவூட்டுவது.
காரணம்
முதலில் பேசும் குழந்தைகளுக்கு 1 அல்லது 2 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளையே பேச ஆரம்பிக்கும். ‘ங்க’ என்று மேலும் 2 எழுத்துக்களை சேர்ப்பது கற்றுக்கொள்ளும் வேகத்தைக் குறைக்கும்.
தீர்வு
ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் குழந்தைகளிடம் 'வாங்க, போங்க' என்று மரியாதையாக பேசிக்கொண்டு இருங்கள். 4 அல்லது 5 எழுத்து கொண்ட வார்த்தைகளை சரளமாக குழந்தைகள் பேசும்போது “நீங்க வாங்க, போங்க என்று பேசினால் இன்னும் அழகாக இருக்கும். மற்றவர்களும் உங்களை விரும்புவார்கள்” என்று ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் நினைவூட்டுங்கள்.
- மரு.இரா.வே.விசயக்குமார்

"இவனைக் கட்டுப்படுத்தவே முடியலை...

விஷமம் தாங்கலை. இரு இரு ஸ்கூல் திறக்கட்டும்.
உன்னை முதலில் கொண்டுபோய் தள்ளிவிடறேன்."

"இருடி! அடிக்கிற டீச்சரா கிடைக்கணும்.
அப்பத்தெரியும்."

" இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாதான் நிம்மதியா இருக்கும்"

"ஸ்கூல் திறக்கட்டும். தரத் தரன்னு இழுத்துகிட்டுபோய்
ஸ்கூலில் சேத்துட்டுதான் மறுவேலை"

இதை எல்லாம் கேட்ட பின்னாடி பிள்ளை ஸ்கூல்
போக விரும்புமா?

பள்ளி என்றாலே ஏதோ பூச்சாண்டி இருக்கும் இடம்
என்பது போல் ஆகிவிடாதோ...

இப்படி சொல்வதை கேட்டு வளரும் பிள்ளைக்கு
பள்ளி ஒரு ஜெயிலாகவும், ஆசிரியர்கள் பூதங்களாகவும்,
படிப்பு எட்டிக்காயகவும் அல்லவா ஆகிவிடும்.

மாறாக, "ஹை பப்பு குட்டி ஸ்கூல் போகப்போறாளே!
ஜாலி, ஸ்கூலுக்கு போனா நிறைய ஃபெரண்ட்ஸ்
கிடைப்பாங்க" என்றோ,

சுரேஷுக்கு ஜாலி, புது ஸ்கூல், புது டீச்சர்,
போரடிக்காம எஞ்சாய் செய்யலாம் என்றோ சொல்வதனால்

புதிதாக பள்ளி செல்லும் குழந்தைக்கு பள்ளியின் மீதும்
பாடத்தின் மீதும் நல்ல அபிப்ராயம் ஏற்படும்.

ஜூன் மாதத்தில் டீச்சர்களே பயப்படும் அளவிற்கு
அழுது, ஆராட்டம் செய்து, பல சமயம், "என்னை
விடு!" என்று டீச்சரை அடிக்கவும் செய்யாமல்
குழந்தை தன்னை புது சூழலுக்கு தயார் செய்து
கொள்ளும்.
அதற்கு வீட்டில் நாம் தரும் பாசிடிவான
கமெண்டுகள் மிக முக்கியம்.

குழந்தையைக் கவர கடைக்கு அழைத்துச்சென்று
புது பேக், வாட்டர் பாட்டில், ஷூ, யூனிபார்ம்
போன்றவை, வாங்கிக் கொடுக்கலாம்.

முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தன் கணவருடன்
திரைப்படம் பார்க்கச் செல்வதை ஊர் மொத்தம்
சொல்லிக்கொண்டு செல்வார். அது மாதிரி
"எங்க சுஜா ஸ்கூலுக்கு போகப்போறா.
அவளுக்கு தேவையானது எல்லாம் வாங்கப்போறோம்"
என்று குழந்தையின் காதுபட 4 பேரிடம் சொல்லாம்
தப்பில்லை.

அதனால் ஏதோ நல்லது நடக்கபோகிறது போன்ற
அபிப்ராயமே பிள்ளையின் மனதில் ஏற்படும்.

பிள்ளைக்கு கல்வியின் அவசியத்தை அறிந்த நாமே
அவர்களுக்கு அதை எட்டிக்காயக்ககூடாது.

நாம் குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் இங்கே தர முயன்றிருக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க விமர்சனத்தை எதிர்நேக்கி,

தவறு.1
கீழே விழுந்த குழந்தையை உடனே சென்று தூக்குவது. உடனே அழுகையை அடக்குவதற்காக ‘இந்த இடம் தானே, தள்ளி விட்டது’ என்று கீழே விழுந்த இடத்தை உதைப்பது அல்லது அடிப்பது.
காரணம்
உடனே தூக்கும் பெற்றோரது குழந்தையே அதிகமாக அழும். அந்த இடத்தை அடிப்பது, தன் தவற்றிற்கு அடுத்தவர்தான் காரணம் என்கிற பழி போடும் மனோபாவத்தை வளர்க்கும்.
தீர்வு
கீழே விழுந்த இடம், விழும்போது ஏற்பட்ட சத்தம் ஆகியவற்றைக்கொண்டு அதிகமாக அடி பட்டிருக்குமா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். குறைவாக அடி பட்டிருக்கும்பட்சத்தில் கண்டுகொள்ளாமல் நம் வேலையை கவனிப்பது நல்லது. அதிகமாக அடி பட்டிருக்கும் என்று உணரும் பட்சத்தில் உதவிக்கு செல்லலாம். அடிபட்ட உடல் பாகத்தை நன்கு தேய்க்க சொல்ல வேண்டும். ‘சிறிது நேரம்தான் வலிக்கும் பிறகு சரியாகிவிடும்’ என்று ஆறுதல் கூறலாம்.

தவறு.2
குழந்தை அடம்பிடித்தால் அப்போதைக்கு பிரச்சினையில் இருந்து விலக கேட்டதை வாங்கிக் கொடுப்பது.
காரணம்
அடம்பிடித்தால் எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்று குழந்தை உணர்ந்துகொள்கிறது. பிறகு எதற்கெடுத்தாலும் அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
தீர்வு
குழந்தை பொருளை முதல் முறை கேட்கும்பொழுதே வாங்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்து விட வேண்டும். வாங்க சம்மதமானால் “இன்று இந்த ஒரு பொருள் மட்டும்தான் அல்லது இன்னும் ஒரு பொருள் மட்டும்தான்” என்று சொல்லி விட்டு உடனே வாங்கிக்கொடுத்து விட வேண்டும், வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டல் அதற்கான காரணத்தை குழந்தையிடம் விளக்க வேண்டும். ஒரு முறைக்கு இரு முறை விளக்க முயற்சிக்கலாம். அதற்கு மேல் எவ்வளவு அடம் பிடித்தாலும் வாங்கிக்கொடுக்கக் கூடாது. சில நேரங்களில் அழுது வாந்தி எடுக்கும் நிலை வரை கூட அடம் பிடிக்கும்.

தவறு.3
குழந்தைகள் சொல்லும் சிறு சிறு செயல்களையும் குழந்தைதானே கேட்கிறது என்று செய்யாமல் இருப்பது.
காரணம் & தீர்வு
குழந்தைகள் கேட்கும் ஒவ்வொரு சிறு சிறு செயலையும் உடனே செய்யும்போது, குழந்தையும் நாம் சொல்லும்போது உடனே கேட்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதை நாம் மறுத்தால், நாம் சொல்லும்போதும் கேட்கத் தேவையில்லை என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதில் அதிகம் எளிதாக செய்யக்கூடிய காரியங்களாக இருக்கும். சில நேரங்களில் மட்டும் செய்யவே முடியாத காரியங்களாக இருக்கும். அந்நேரத்தில் ஏன் செய்ய முடியவில்லை என்ற விளக்கமும் கொடுத்து விட வேண்டும். நாம் அதிக தடவை அவர்கள் பேச்சைக் கேட்டுவிடுவதால், சில நேரங்களில் கேட்காமல் இருப்பது அவர்களுக்கு பெரிதாகத் தெரியாது.

(ரத்னேஷ் அவர்களின் பதிவு படித்து அங்கே பின்னுட்டமாய்ப் பகிர்ந்து கொண்ட செய்தியைச் சற்றே விரிவாகப் பதிவிடுகிறேன்..)

"மாமாவுக்கு ரைம்ஸ் சொல்லிக் காட்டு.."

"ABCD சொல்லிக்காட்டு.."

"திருக்குறள் மொத்தமும் நேர்வரிசை, தலைகீழ் வரிசையில் தப்பு விடாமச் சொல்லுவா.."

"நீயுந்தான் இருக்கியே..கணக்கு வாய்ப்பாடு ஒழுங்காச் சொல்லத்தெரியுதா..அந்தப் பொண்ணைப் பாரு...உலக நாடுகளின் கரன்ஸி, தலைநகரம் எல்லாம் ஒண்ணு விடாமச் சொல்றா..

இப்டிக் கதைகள் கேட்பது/ நிகழ்வுகள் பார்ப்பது நமக்கெல்லாம் சகஜமான ஒன்றுதான். குழந்தைகளின் கற்றல் திறன் மிகவும் கூர்மையானது. சில குழந்தைகளின் செயலாற்றல் சற்றே வயதுக்கு மீறியதாய் இயல்பிலிருந்து வித்தியாசப்பட்டு தனித்து நிற்கும்.

ஒரு மணி நேரத்தில் 617 ஆசனங்கள் செய்யும் குழந்தை, நீச்சலில் புகழ்பெற்ற குற்றாலீஸ்வரன் என்று சாதனைகள் கேள்விப்படும்போது வியப்பு மட்டுமல்ல..ஒருவித கனமும் மனதைக் கவ்விப் போகிறது..Child Prodigy தான்..என்றாலும் இயல்பான குழந்தைத்தனங்கள் மறுக்கப்பட்ட குழந்தைகளின் சாதனையை மிஞ்சி நிற்கும் வேதனை அந்தக் குழந்தைக்கு மட்டும்தானே முழுமையாய்ப் புரியும்..

இங்கே எனக்கு அறிமுகமான ஒரு குழந்தையின் கதை இது..பெற்றோருக்கு ஒரே குழந்தை..நீண்ட நாள் குழந்தையின்றி இருந்த பெற்றோருக்கு மருத்துவ உதவிகள் மூலம் கிடைக்கப்பெற்ற குழந்தை..நினைவாற்றல் சற்றே அதிகம்..எப்போதும் ஒரு புத்தகம் கையில்..திருக்குறள், தலைநகரம், பொது அறிவு தொடங்கி ஷேக்ஸ்பியர் வரிகள், வரலாற்று நிகழ்வுகள் என்று மனனப் பயிற்சி நாள்தோறும்.. ..நண்பர்கள் கூட்டத்தில் இது போன்ற அவள் பங்களிப்பு காணும்போது வியப்பையும் மீறிய ஒரு கனம் இருக்கத்தான் செய்தது..

இயல்பாக வந்தால் பரவாயில்லை..வலிந்து வரவழைக்கப்பட்ட செயலென்று கேள்விப்பட்டபோது..கஷ்டமாகவே இருந்தது..

ஆனாலும் சோகம் சிந்தும் கண்கள்..மற்ற குழந்தைகளுடன் ஒட்ட முடியாத இயல்பாகிவிட்ட தனிமை...கூட்டங்களில் இருக்கும் போதுகூட ஒரு புத்தகம் கைகளில்..தாய் ஆசிரியை, தகப்பனும் கணக்காளர் பணியில்..பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்ற போதும் ஆசிரியர்களை மட்டும் வரச் சொல்லும் தினங்களில், என் தோழியின் வீட்டில் அந்தக் குழந்தையை விட்டுப் போவார்கள்..தோழியின் குழந்தையும் சம வயதினள்தான்..அந்தக் குழந்தை அப்போதும் பை நிறையப் புத்தகங்களுடன் தான் வருமாம்..வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் அவ்வப்போது பொம்மைகளுடன் விளையாடும் தோழியின் குழந்தையின் பக்கம் வெறுமையான பார்வை ஒன்றை வீசிவிட்டு மீண்டும் புத்தகத்துக்குத் தாவும் கண்கள்..(இது நடந்தது அவளின் ஆறு வயதில்)

கணினியிலும் எப்போதும் இதுபோன்ற அக்கறைதான் அவளுக்கு...படிப்பிலும் படுசுட்டிதான்..

ஆனால் சமீபத்தில்(இப்போது அவளுக்கு வயது 11..) சற்றே மந்தமான நிலை..படிப்பிலும் சரி..இது போன்ற விஷயங்களிலும் சரி..மற்ற குழந்தைகளை விட அதிகப்படியாகச் சாதித்த குழந்தை..இன்று பல படிகள் கீழே..இயல்பான நினனவாற்றல் மங்கிவிட்ட நிலையில்..மருத்துவ சோதனைக்குட்படுத்தினார்கள்..ஒரு ப்ரச்னையுமில்லை உடலில் நல்லவேளையாக..இன்று அவள் பாடப் புத்தகத்தை எடுத்தாலே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெற்றோரின் நிலையும் பரிதாபத்துக்குரியது..

இது போன்ற நிகழ்வுகள் பெற்றோர் சமூகத்தில் அத்திப் பூத்தாற்போல் நடப்பதுதான்..

சாதனைக் குழந்தைகள் பலரின் பின்னும் இது போன்ற வேதனைகள் இருக்குமோ?

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்